ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

கத்தியை வைத்து முதலில் சொருக வேண்டியது எதிரிகளை அல்ல,துரோகிகளைத் தான்!


கத்தியை வைத்து முதலில் சொருக வேண்டியது எதிரிகளை அல்ல,துரோகிகளைத் தான்! 

கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா மொபைல் என்றும் அதன் முதலாளி சுபாஸ்கரனின் பின்புலம் என்ன என்பதும் தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

காரணம் லைக்கா மொபைல் சேவை தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் பலவற்றுக்கு செல்பவர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்கும். மிகக் குறைந்த விலையில் உலக நாடுகள் பலவற்றுக்கும் அலைபேசி சேவையை அளிக்கும் நிறுவனம் தான் இந்த லைக்கா மொபைல்.கூடவே இதன் உரிமையாளர் இவர் ஈழத் தமிழர் என்று பெருமையாக சிலர் சொல்லிக் கொள்வதும் உண்டு.

இந்த தகவல்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.தவறில்லை. ஆனால் இனப்படுகொலையை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்று உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்தியாவிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் ஈழத் தமிழன் என்று சொல்லிக் கொண்டு பிரித்தானியாவில் வசிக்கும் இந்த லைக்கா மொபைல் நிறுவனமோ/நிறுவனரோ , கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த காமன் வெல்த் மாநாட்டுக்கு முழுமையான நிதி உதவி செய்ததோடு, மிகப்பெரிய விளம்பரதாரராக இருந்தது என்பதை எவரும் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள்.

அதெப்படி ஈழத் தமிழன் வாழ்க்கையை சிதைத்த ராஜபக்சே குடும்பத்துக்கும், அரசாங்கத்துக்கும் ஒரு ஈழத் தமிழன் ஆதரவாக இருக்க முடியும்? அப்படியானால் அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருப்பான் என்பதைக் கூட உங்களால் யூகிக்க முடியாதா?

இலங்கையில் ராஜபக்சே குடும்பம் நடத்தாத தொழில்கள் இல்லை. ஹோட்டல் தொழில், தொலைத் தொடர்பு தொழில், விமான சேவை, பல்வேறு சேவைத் தொழில்கள், சுற்றுலா சார்ந்த பல தொழில்கள் என்று ராஜபக்சே நடத்தும் அத்தனை தொழிலுக்கும் லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இவை அனைத்திலும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.எப்படி ஒரு கொலைகாரனோடு ஈழத் தமிழன் பங்குதாரராக இருக்க இயலும்? ஏன் கருணா அமைச்சராக இல்லையா? அவன் ஈழத் தமிழன் இல்லையா?இலங்கையில் உள்ள பெரும்பாலான தொழில்களில் லைக்கா மொபைல் முன் நிற்கிறது. கொன்றவனோடு தொழில் முனை பங்குதாரராக இருப்பவன் என்பவன் இழவு வீட்டில் கிடைத்ததை சுருட்டும் மனநிலை கொண்டவனை விட மிகவும் கேவலமானவன். ஆனால் அவன் தொழிலதிபராம்.

இங்கே ஈழத் தமிழனா அல்லது வேறு தமிழனா என்பது பிரச்சினை இல்லை. ஈழத் தமிழனிலும் எண்ணற்ற துரோகிகளை பார்த்த வரலாறும் நாம் அறியாதது அல்ல. அதுவும் ஈழப் போரில் உள்ள துரோகிகள் பட்டியலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இப்படிப் பட்ட ஒரு கேவலமான மனிதன் தான் முருகதாஸ் இயக்கம் விஜய் நடிக்கும் கத்திப் படத்தை தயாரிக்கிறான். ஈழம் ஈழம் என்று மேடைகளில் உணர்வுப் பூர்வமாக பேசும் இயக்குனர் முருகதாசின் அயோக்கியத்தனத்தை அறிந்து கொள்ள இதை விட வேறென்ன வேண்டும்? ஏழாம் அறிவில் ஈழப் போரின் மீதான கவலையை, கோபத்தை ஒரு பாடலில் சொன்ன போது, பரவா இல்லையே இந்த பய நல்ல பயலா இருக்கானே என்று எண்ணத் தோன்றியது. அப்படி பல மேடைகளில் ஈழம் குறித்து பேசிய போது சினிமா உலகிலும் உண்மையான உணர்வோடு உள்ள மக்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி கொண்டேன்.

ஆனால் இந்த கத்தி திரைப்படத்தை தயாரிக்க ஆரம்பித்த போதே, லைக்கா மொபைல், ராஜபக்சே குடும்பத்துக்கு நெருக்கமான உறவுகளைக் கொண்ட குடும்பம் என்பது தெரிந்தும், அது குறித்து பல விவாதங்கள் நடந்த போதும் கூட, எதையும் கண்டு கொள்ளாமல், எனக்கு வியாபாரம் தான் முக்கியம், மற்றவை எல்லாம் அடுத்து தான் என்று நடந்து கொண்டு,சினிமா வேலை அனைத்தையும் முடித்த பிறகு இன்றைக்கு பல அரசியல் தலைவர்களை சந்தித்து என் படம் எப்படியாவது வெளி வர வேண்டும் என்று கெஞ்சுவது வெட்கமாக இல்லையா? அசிங்கமாக அருவருப்பாக இல்லையா?

சினிமாவில் இருக்கும் பல பயலுக தங்கள் வியாபாரத்துக்காக ஈழத் தமிழர் பிரச்சினையை ஊறுகாய் போல தொட்டுக் கொண்டு உணர்வு பூர்வமாக பேசுவது போல நடித்து மேடைகளில் அசிங்கம் செய்வது அருவருக்கத் தக்கது.

இல்லப்பா லைக்கா மொபைல் பற்றிய பின்புலம் முருகதாசுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் இல்லையா என்று சப்பையான விளக்க வியாக்கியானம் பேச ஒரு கூட்டம் கிளம்பி இருக்கும். இனி இந்தா நடிகர் சங்கள், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் எல்லாம், லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும், ராஜபக்சேவுக்கு சம்மந்தமே இல்லை. லைக்கா மொபைல் சுபாஸ்கரன் அக்மார்க் தமிழன் மட்டுமல்ல உணர்வுள்ள ஈழத் தமிழன் என்று வெண்ணை வெட்டி நியாயம் பேச ஒரு வெண்ணை வெட்டி கூட்டம் கோடம்பாக்கத்துல இருந்து கெளம்பி இருக்கணுமே!

ஈழத் தமிழனிலும் பல அயோக்கியனுங்களை நேரடியாக பார்த்திருக்கறேன்! ஏன் கருணா,டக்ளஸ், குமரன் பத்மநாபன்கள் போதாதா, துரோகத்தின் ஒரு பானை சோற்றுக்கு பதமா!

அதானே நாய் விற்ற காசு குறைக்கவா போகிறது? சினிமா தயாரிக்க, ஈழத் தமிழனின் உதிரம் குடித்த துரோகிகளின் காசு கசக்கவா போகுது!

நல்லா வருவீங்கடா!

நமக்கு என்ன கோபம் என்றால் ஈழத் தமிழனின் துன்பம் என்று ஓவரா உணர்வுப் பூர்வமா மேடைகளில் நடித்து விட்டு, அடுத்த பக்கமா வியாபாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இந்த கூத்தாடிப் பயலுக அட்டூழியத்தை நம்மால் சீரணிக்க முடியல! ஏற்கனவே ரொம்ப ஓவரா சவுண்டு விட்டு விட்டு அதை வைத்தே ஈழத் தமிழனின் பணத்தில் வாழும் சில கோடம்பாக்கத்து கோமான்கள் வைகுண்டராஜனிடம் அடியாள் வேலை பார்க்க போய் விட்டார்கள். அடுத்து இந்தா கத்தியாம்!

கத்தியை எடுத்து முதலில் சொருக வேண்டியது எதிரிகளை அல்ல,உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகிகளைத் தான்!

-ஆன்டனி வளன்

செவ்வாய், 29 ஜூலை, 2014

கடவுளைத் தேடுவதன் நோக்கம் என்ன?




நல்லது எது வேண்டுமானாலும் நம்பிக்கையோடு நீ கடவுளிடம் கேள், அவர் உனக்குத் தருவார் என்று சின்னஞ்சிறு வயதில்,ஆலயத்துக்கு அழைத்துப் போகையில் பெற்றோர் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆம்.ஒரு குறிப்பிட்ட வயதுவரை, நாமும் கூட நமக்கான தொடர் தேவைகளையும்,
ஏற்கனவே நம் வேண்டுதல்களுக்கு கிடைத்த பலன்களுக்கான நன்றிகளையும் மட்டுமே இறைவனுக்கு சொல்லிக் கொண்டு வந்தோம்.

காலம் செல்ல செல்ல மெதுவாக பல புதிய கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுவதைப் போலவே, நமக்குள்ளும் எழ ஆரம்பித்தது.அதாவது எதற்காக இந்த கடவுள்? கடவுள் என்பவன்,நம்முடைய வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டும் தானா?

நம்முடைய நெருக்கடியான கால கட்டங்களில்,சூழல்களில் நமக்கு உதவிட மட்டும் தானா? நம்முடைய பொருளாதார தேவைகளை சந்திக்கத் தானா? மனம் ஒடிந்து போகும் நேரங்களில்,நம்மை தேற்றுவதற்கும் நம்பிக்கை தருவதற்கும் தானா? இவை எல்லாவற்றுக்காகத் தான் நாம் இறைவனைத் தேடுகிறோமா?இதைத் தாண்டி இறைத்தேடல் என்பதன் நோக்கமோ, தேவையோ வேறு எதுவும் இல்லையா?

உலகத்தில் இறைவனை நம்புபவர்கள் மட்டும் தான் அன்றாட வாழ்வியல் ஆசிர்வாதங்களை,பொருளாதார வசதிகளை,பட்டம் பதவிகளை பெறுகிறார்களா?இறை மறுப்பாளர்கள் எவரும் இந்த உலகத்தில் ஆசிர்வதிக்கப்படவில்லையா?


உண்மையான பக்தியோடு,இறைவனை நாடும் மனிதர்களை விட, கல்வி, வசதி வாய்ப்பு, உயர்ந்த பதவிகள், பெரும் பணக்காரர்களாக இறை மறுப்பாளர்கள் எவரும் இல்லையா?என்றால் கட்டாயம் இருக்கிறார்கள்.அப்படியானால் கல்வி,பட்டம்,பதவி, வசதிவாய்ப்புகளோடு,உயர் பதவிகளில் இறை மறுப்பாளர்கள் இருக்கிறார்கள் எனில் கடவுள் இல்லையா? இப்படி பலப் பல கேள்விகள் எல்லோருக்கும் எழுவது உண்டு.

உலகின் மிகப்பெரும் விஞ்ஞானிகள், அறிவாளிகள், மருத்துவர்கள்,அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், மிகப் பெரும் பதவிகள் மற்றும் அதிகாரங்களில் இருப்பவர்கள்,நோபல் பரிசு போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர்கள், பல மதங்களை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும் அல்லது இறை மறுப்பாளர்களாக கூட இருக்கலாம்.இவர்கள் அனைவரும் பல கடவுள்களை வணங்குகிறார்கள் என்றால்,இவர்கள் வணங்கும் கடவுள்களில் எந்த மதத்தின் கடவுள் பெரியவர்? அல்லது உயர் பதவிகளை வகிக்கும் இறைமறுப்பாளர்கள் சொல்வது போல கடவுள் இல்லை என்பது தான் சரியா?

இப்படியான அறிவார்ந்த கேள்விகள் எல்லாதரப்பு மக்கள் மத்தியிலும் இருக்கிறது.நவீன காலத்தில் இறை மறுப்பாளன் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆக இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதன் அளவுகோலே, இன்றைய வாழ்வியல் அல்லது பொருளாதார மற்றும் அறிவார்ந்த சூழலைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.வசதியான,புத்திசாலி ஆத்திகன் ஒருவன் கடவுள் இருக்கிறான் என்று நம்புவதைப் போலவே, வசதியான புத்திசாலி நாத்தீகன் கடவுள் இல்லை என்று ஏற்கிறான். ஆக பொருளாதார வசதிகளையும்,தேவைகளையும் வைத்தே கடவுள் இருக்கிறானா இல்லையா என்று விவாதிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தைத் தாண்டி அடுத்த கட்டம் போனால் வியாதி, துன்பம், நெருக்கமான உறவுகளின் மரணம்,போர்க் கொடூரங்கள், இனப்படுகொலைகள் போன்ற கொடூர மரணங்கள், இயற்கைப் பேரழிவுகள் போன்ற சிக்கலான நேரங்களில் நம் மனதில் ஏற்படும் சாதக பாதகங்களை/அதிர்வலைகளை வைத்து இறைவன் இருக்கிறான், இல்லை என்று பலர் ஏற்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்.

அட என்னய்யா இந்த கஷ்டமான நேரத்தில் கூட என்னைக் காப்பாற்றாத கடவுள் எனக்குத் தேவையே இல்லை என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் மன இயல்புகளுக்கு ஏற்ப இந்த நிலை மாறும். இதை தவறு என்று எளிதாக சொல்லி விட முடியாது. அந்த அளவுக்கு விரக்தி. காரணம் இழந்து போன மனிதனின்/பொருளின் மீதான அதீத அன்பாக இருக்கலாம்.இப்படி இறைவனை ஏற்கவும் மறுக்கவும் ஏராளமான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதனுக்கும் இன்ப,துன்பங்கள் பொதுவானவை.இறைவனை ஏற்றுக் கொண்ட ஆத்திகனுக்கும்,இறைவனை ஏற்காத நாத்தீகனுக்கும் இது பொருந்தும்.இன்ப துன்பங்களுக்கான அளவுகோல் ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் மாறலாமே ஒழிய இன்பம் துன்பம் பொதுவானவை.

அதாவது பிறப்பும் இறப்பும் எல்லா மனிதனுக்கும் பொதுவானதைப் போலவே இன்பமும், துன்பமும் பொதுவானவை. அப்படியானால் கடவுளின் தேவை எதற்கு? பழி பாவம் தண்டனை என்று கடவுளுக்கு பயந்து பயந்து வாழ்வதை விட, இந்த உலக வாழ்க்கையை நாங்கள் விரும்புவது போலவே மனம் போன போக்கில் வாழ்ந்து விட்டுப் போகலாமே!இப்படியான கேள்விகள் பலருக்கும் உண்டு.

சமீபத்திய சினிமா ஒன்றில் கூட வரும் வசனம் இப்படியாக இருக்கிறது. நல்லவனாக இருந்தால் மரணத்துக்குப் பிறகு தான் நீ சொர்க்கத்தைப் பார்க்கலாம். ஆனால் கெட்டவனாக இருந்தால் இந்த உலகத்திலேயே நீ சொர்கத்தைக் காணலாம்!
எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்:)

ஆண்டவனே எனக்கு அதைத் தா, ஆண்டவனே எனது அடுத்த தேவை இது, இதை நீ முடித்து தா என்று நாள் தோறும் கோரிக்கை/ விண்ணப்பம் வைக்கும் மன நிலையோ அல்லது அதற்கான இறைத் தேடலாகவோ நமக்கு இல்லை. இந்த மனநிலையில் இருந்து வெளிவந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.அதாவது படிப்பு தா, பணம் தா, வீடு தா, பெரிய கார் தா, பெரிய பங்களா தா, பெரிய பதவிகள் தா இப்படி தா தா என்று கேட்கும் மன நிலையில் இருந்து வெளிவந்தாயிற்று.பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தா தா என்று கேட்பதை விட்டு விட்டு, அன்றாடம் அவன் என்னை நடத்தும் அற்புதமான வழிகளுக்காக நன்றி மட்டுமே சொல்லும் முறைமையை கற்றுக் கொண்டாயிற்று.

எல்லா மனிதர்களைப் போலவும் இன்பம், கடுமையான துன்பம், துயரம், பொருளாதார சிக்கல்கள், ஏமாற்றங்கள், மரணங்கள் என்று எல்லாவற்றையும் கடந்து கொண்டு தான் வருகிறேன். அப்படியான வெகு சில தருணங்களில்,இன்னுமா நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று ஒரு சிலர் நேரடியாகக் கேட்டதுண்டு. அறிவுரை சொன்னதுண்டு.

அப்படியானவர்களிடம் எவ்வித வாக்குவாதங்களையும் செய்து, அவர்களை சங்கடப்படுத்த விரும்பியதில்லை.காரணம் இறைவனின் தேடலுக்கான எனக்கான தேவை வேறு. அனுபவப் பாடம் படித்தவன்,வேறு எவன் சொன்னாலும் நம்ப மாட்டான். அப்படிப்பட்ட அனுபவப் பாடங்கள் நமக்கு ஏராளம்.

பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் நான்காம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் வருகிறது. அதாவது ஆதாம் பெற்றெடுத்த குமாரர்களில் காயின்,ஆபேல் என்று இருவர். காயின் தன் சொந்த சகோதரனான ஆபேலைக் கொன்று போடுகிறான்.ஆண்டவர் காயீனைப் பார்த்து உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்று கேட்கிறார். எனக்கு தெரியாது ஆண்டவரே என்கிறான் காயின்.உன் சொந்த சகோதரனைக் கொன்ற 
இரத்தப்பழிக்காக, பூமியில் நீயும் உன் சந்ததியும் சபிக்கப் பட்டவர்களாய் இருப்பீர்கள் என்று சாபம் கொடுக்கிறார்.ஐயோ ஆண்டவரே சபிக்கப்பட்ட என்னை, இந்த உலகம் கொன்று போடுமே என்று காயீன் ஆண்டவரைப் பார்த்துக் கேட்க, உன்னை எவனும் கொன்று போட மாட்டான், காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று ஆண்டவர் அவனுக்கு வாக்குக் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் காயீனால் கொன்றுபோடப்பட்ட ஆபேலுக்கு பதிலாக, ஆண்டவர் ஆதாமுக்கு இன்னொரு மகனை கொடுக்கிறார். அவனுக்கு சேத் என்று பெயரிடுகிறார்.

வேதாகமத்தில் காயீனுடைய வம்ச வரலாறும் இருக்கிறது. சேத்தின் வம்ச வரலாறும் இருக்கிறது.ஆதியாகமம் நான்காம் அதிகாரத்தை தொடர்ந்து வாசித்தால் கடவுளால் சபிக்கப்பட்ட காயீன் வம்சத்தில் வந்த அவனுடைய பிள்ளைகள் மிகப் பெரிய ஞானிகள்,அறிவியலாளர்கள்,பொறியாளர்கள்,கட்டடக்கலை வல்லுனர்கள்,இசை ஜாம்பவான்கள், தொழிலதிபர்கள் என்று பலர் உருவாகிறார்கள்.

அப்படியே இன்னொரு பக்கம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட சேத்தின் வம்ச வரலாற்றைப் பார்த்தால்,காயீன் வம்சத்தைப் போன்ற பெரிய ஞானிகள்,
தொழிலதிபர்கள்,பொறியாளர்கள், இசை ஜாம்பவான்கள்,வசதியானவர்கள் போன்ற வரலாறு இல்லை.ஆனால் சேத்தின் வம்சம் இறைவனோடு நெருங்கி இருந்தார்கள் என்றும்,அந்த வம்சத்தில் வந்த ஏனோக்கு, நோவா போன்றோர் கடவுளுக்கு பிரியமான மனிதர்களாக இருந்தார்கள் என்றும் அந்த வம்ச வரலாறு சொல்கிறது.அப்படியானால் கடவுளால் சபிக்கப்பட்ட ஒரு வம்சம் அறிவில் சிறந்தும்,வசதியுடனும் ஆதாம் காலத்திலேயே வாழ்ந்து இருக்கிறது.

இப்படியாக இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்,அதாவது அவன் கடவுளை ஏற்பவன், ஏற்காதவன் என்பவற்றுக்கு அப்பாற்ப்ட்டு இறைவன் பல வகையான திறமைகளை, ஞானத்தை கொடுத்து இருக்கிறார்.எப்படி மழை என்பது நல்லவன் கெட்டவன் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதோ,
அதைப் போலவே இந்த உலகத்தின் ஆசிர்வாதங்களும் ஆத்திகன் நாத்தீகன் என்று எவ்வித பாகுபாடும் இன்றி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை.

பெரிய ஞானவான்களாக, அதி புத்திசாலிகளாக, மாபெரும் பணக்காகர்களாக, மிகப் பெரிய அதிகாரத்தில் சிறந்தவர்களாக வந்த காயீனின் வம்சம் ஆசிர்வதிக்கப்பட்ட வம்சமா அல்லது இவை எதுவுமே இல்லாமல், கடவுளுக்கு பிரியமாய் அவரோடு நடந்த சேத்தின் வம்சம் ஆசிர்வதிக்கப்பட்ட வம்சமா? எது ஆசிர்வாதம் என்ற கேள்வி ஒவ்வொருவரையும் பொறுத்தது.நம்மைப் பொறுத்தவை சேத்தின் வம்சம் ஆசிர்வதிக்கப்பட்ட வம்சம்.

அப்படியானால் இந்த உலகத்தில் வாழ தேவையான ஆசிர்வாதங்களை நீங்கள் விரும்பவில்லையா? அல்லது அவை ஆசிர்வாதமே இல்லை என்று ஒதுக்கி விட முடியுமா? இதற்கான பதில் இந்த பதிவில் இருக்கிறது.

சரி. இறைவனைத் தேடுவதற்கான நம் நோக்கம் தான் என்ன?

இந்த உலகத்தின் பொருளாதார, வாழ்வியல் தேவைகளை எல்லாம் தாண்டி, இவ்வுலக வாழ்வுக்கு பின் அல்லது மரணத்துக்கு பின்னான ஒரு மறு வாழ்வு இருக்கிறது. இந்த உடலில் இருந்து உயிர்/ஆத்மா பிரிந்த பின்பு இந்த உடல் மண்ணுக்கு போகும். அப்படியானால் ஆன்மா? அந்த ஆன்மாவுக்கு மறு உலக வாழ்வு ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தான் இறைத்தேடலுக்கான நமது தேவை.அந்த மறு உலக வாழ்வுக்கு அடிப்படை, இந்த உலக வாழ்க்கையில் நாம் எப்படி நடந்து கொண்டோம், நியாயம், நீதி, உண்மை இப்படிப்பட்ட ஓராயிரம் விடயங்கள் இருக்கின்றன. கடவுளுக்கு உண்மையாக, அவர் விரும்பியபடி நாம் வாழ்ந்தோமா என்று நியாயத் தீர்ப்பு நாளில்,இறைவனிடம் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற அடிப்படை நம்பிக்கை தான் இறைத் தேடலுக்கான நமது தேவை.

ஆதாம் காலத்திலேயே சபிக்கப்பட்ட ஒரு சந்ததி, உலகத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும்,ஆசிர்வாதங்களையும் பெற்றது எனும் போது,கடவுளைத் தேடினால் தான் இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கும், அற்புதங்களும், அடையாளங்களும் நமக்கு கிடைக்கும் என்று மட்டுமே எண்ணிக் கொண்டு,நம் சுய நல நோக்கங்களுக்காக,வாழ்வியல் தேவைகளுக்காக மட்டுமே கடவுளைத் தேடி நாம் ஓடுவதே தவறு.

அப்படி ஓடினாலும் கூட,நம் தேவைகள் சந்திக்கப்படாத என்றாவது ஒரு நாளில் கடவுள் இல்லை என்றும், என் தேவையை பூர்த்தி செய்யாத கடவுள் எனக்கு எதற்கு என்றும் எண்ணத் தோன்றும். இந்த தேவைகளுக்கு அப்பாற்பட்டு நம் தேடலுக்கான தேவை இருக்கும் என்றால் ஏமாற்றங்கள் இல்லை.

காரணம் மனிதனின் ஆசைகள் அப்படி!இன்றைக்கு வேலை வேண்டும் என்று கேட்பவன், நாளைக்கு வீடு,ஒரு வீடு ஆசை முடிந்தால் இன்னொரு வீடு, சொகுசு பங்களா, அடுத்து சொகுசு கார் என்று நம் தேவைகளும் ஆசைகளும் அன்றாடம் பெருகிக் கொண்டே தான் போகுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை. கூடவே அவனை விட,இவனை விட நான் வசதியானவனாக வேண்டும் என்ற போட்டி பொறாமைகள்.இந்த போட்டியும் பொறாமையும் வந்து விட்டால் சாகும் வரை நிம்மதி இருக்காது.

நம் தேவைகளையும் ஆசைகளையும் அளவுக்கு அதிகமாக பெருக்கிக் கொண்டு,ஆண்டவனே நீ அதை தா இதை தா என்று சாகும் வரை நாம் ஓடிக் கொண்டே இருக்கும் சூழலில்,ஆன்மீகத் தேடலுக்கான நேரமும், சிந்தனையும் ஒருபோதும் நமக்கு வராது!

அளவுக்கு அதிகமாக தேவைகளை பெருக்கிக் கொள்ளாமல், இந்த வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து கொண்டு,இயல்பான வாழ்வில் அன்றாடம் இறைவனோடு இணைந்து வாழ்வதை விட மேலான மகிழ்ச்சி எதுவும் இல்லை. நம்மைப் பொறுத்தவரை காயீனின் வம்ச வழி வந்த ஞானிகளை விட, தொழிலதிபர்களை விட,புத்திசாலிகளை விட,இவை எதுவும் இன்றி இறைவனோடு நடந்த சேத்தின் வம்சமே ஆசிர்வதிக்கப்பட்ட வம்சம்!

இந்த உலகத்தில் கஷ்டப்படும் மனிதர்கள் எல்லாம் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்றோ அல்லது மிக வசதியான புத்திசாலிகள் எல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றோ உறுதியாக சொல்லி விட இயலாது.வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் யோபு என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. ஆபிரஹாம், மோசே,தாவீது என்ற கடவுளுக்கு மிகவும் பிரியமான மனிதர்களின் நீண்ட பட்டியலில், யோபுவும் ஒருவர்.

அதனால் தான் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல(யோபுவைப் போல) பூமியில் ஒருவனும் இல்லை என்று கடவுளே அவனைக் குறித்து சாட்சி சொல்லும் அளவுக்கு உத்தமன்.

ஆனால் கடவுள் அப்படி சாட்சி கொடுக்கும் போது,சாத்தான் வந்து ஆண்டவரிடம் சொல்கிறான். சும்மாவா ஆண்டவரே யோபு உம்மை நேசிக்கிறான். நீர் அவனை அளவுக்கு அதிகமாக ஆசிர்வதித்து இருக்கிறீர். அதனால் தான் அவன் ஆண்டவரே ஆண்டவரே என்று உமக்கு துதி பாடுகிறான் என்று ஏளனம் செய்கிறான். ஆண்டவர் சாத்தானிடம் சவாலாக சொல்கிறார். அவனது உயிரை மட்டும் எடுக்காமல் நீ அவனை எப்படி வேண்டுமானாலும் சோதித்துப் பார். ஆனாலும் அவன் என்னை விட்டு விலகிப் போக மாட்டான் என்று ஆண்டவர் சொல்ல,சாத்தான் சவாலோடு கிளம்பிப் போய் யோபுவின் குடும்பத்தை சின்னா பின்னம் ஆக்குகிறான். அவனது குழந்தைகள் இறந்து போகிறார்கள். தொழில் எல்லாம் நஷ்டம். அவனும் வியாதியாலும், குஷ்டரோகத்தாலும் பாதிக்கப்பட்டு கடும் துன்பத்துக்கு ஆளாகிறான். உயிர் போனால் கூட நலம் எனும் அளவுக்கு கொடூரம்.

அந்த நேரத்தில் யோபுவின் மனைவி யோபுவைப் பார்த்து சொல்கிறார். என்னய்யா ஆண்டவர் ஆண்டவர் என்று சொல்கிறீர். அந்த ஆண்டவர் இல்லை என்று சொல்லும் அய்யா. அப்படி ஒரு ஆண்டவர் இருந்தால் உமக்கெதுக்கு இந்த துன்பம். கடவுளை அவமதித்து விட்டுப் போம் என்று சொல்லும் போது கூட,அட போடி பயித்தியக்காரி! எல்லா வசதி வாய்ப்புகளும், பிள்ளை செல்வங்களும், சொத்து பத்துக்களும் இருந்த போது கடவுளே கடவுளே என்று சொன்னோம். இவை அனைத்தும் இல்லை என்றவுடன் கடவுள் இல்லை என்றாகி விடுமா?நன்றி கெட்டவளே! என் தாயின் வயிற்றில் இருந்து நான் நிர்வாணியாக தான் இந்த பூமிக்கு வந்தேன். மீண்டும் நிர்வாணியாகவே இந்த மண்ணுக்கு திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார். அவருடைய நாமத்துக்கு மகிமை உண்டாகட்டும் என்று சொல்கிறான்.

அந்த அளவுக்கு உலகத்தின் நன்மை தீமைகளுக்கு அப்பாற்ப்பட்டு தேவனோடு கூடிய நெருங்கிய சிநேகம்.இறுதியில் யோபுவின் முன் நிலையை விட அதிகமாய் தேவன் அவனை ஆசிர்வதித்தார் என்பது வேறு.வேதாகமத்தில் மிகவும் பிடித்த ஒரு மனிதன் இந்த யோபு.ஆனால் நம்மைப் பொறுத்தவரையோ, நமக்கு கொடுத்துக் கொண்டே இருந்தால் கடவுள் உண்டு. இல்லை என்றால் கடவுள் இல்லை அல்லது கடவுள் இருக்கிறானா என்ற சந்தேகம்!

அப்படியானால் என்னுடைய அன்றாடத் தேவைகளுக்காக இறைவனை நான் தேட வேண்டியதில்லையா? அன்றாடம் அவரிடம் முறையிட வேண்டியதில்லையா என்றால்,முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும் என்ற வாக்கியமே நமக்கு நினைவுக்கு வருகிறது.

அதையும் மீறி மிகவும் துயரமான நேரங்களில்,மனித சுபாவத்தில் ஆண்டவரே என்று கதறி முறையிடும் போது, தன் மகன் அப்பம் கேட்டால் எந்த தகப்பனாவது கல்லைக் கொடுப்பானா, மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா, ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்ற வாக்கியமும், இன்னும் அநேக வாக்குத்தத்தங்களும் நம் மனதில் வந்து போகிறது. வெறும் உபதேசத்துக்காக அல்ல! அனுபவப் பாடங்கள்!

இறைவனைத் தேடி ஓடுவதன் நோக்கம், இந்த உலகத்தின் ஆசிர்வாதங்கள் என்று சொல்லப் படுபவைகளுக்காக அல்ல! நித்திய மறுவாழ்வு என்ற நம்பிக்கையினால் மட்டுமே!கடவுளே அதைத் தாரும், கடவுளே இதைத் தாரும் என்று சாகும் வரை கோரிக்கை மட்டுமே வைப்பதற்காக அல்ல கடவுள் என்ற புரிதல் வேண்டும்!

ஆம் எப்படி கடவுள் ஒரு அன்பான தகப்பன் போலவோ,அப்படியே அவர் இந்த உலகத்தை நியாயம் தீர்க்கும் நீதியுள்ள நியாயாதிபதியும் கூட!

***நியாயத் தீர்ப்பு நாள், நித்திய மறுவாழ்வு போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட கிறித்துவர்களுக்கான பதிவு மட்டுமே! **

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

வியாழன், 3 ஏப்ரல், 2014

முன்னாள் டிஜிபி அய்யா நடராஜ்!


அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்த,முன்னாள் டிஜிபி அய்யா நடராஜ் அவர்களின் பணி சிறப்பாகவே இருந்தது!

தமிழக முன்னாள் டி.ஜி.பி அடிமைகள் திமுக வில் சேர்ந்தாரோ அல்லது வேறு எந்த கட்சியில் சேர்ந்தாரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.

டிஜிபி நடராஜ் அவர்களின் காவல்துறை பணி ஓய்வுக்கு பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது!

ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின்னரும்,அவருக்கு அரசுப் பணியில் நீடிக்க வாய்ப்புண்டா என்றால் கட்டாயம் உண்டு. இந்தியாவிலும் சரி, இந்திய மாநிலங்களிலும் சரி, பணி ஓய்வு வயதைத் தாண்டிய பின்பும் கூட, பத்து பதினைந்து ஆண்டுகள் அரசுப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றும் பலரை நாம் அறிவோம்.

அரசாங்கத்தில் அதற்கான சிறப்பு வழிமுறைகள் இருக்கிறது!

உதாரணமாக மாநில அரசில் பணி மூப்பு வயது 58 என்றும், மத்திய அரசில் பணி மூப்பு வயது 60 என்றும் இருக்கின்ற இந்த நேரத்திலும்,அரசின் அனுமதி பெற்று அல்லது ஒப்புதலோடு. எழுபது வயது வரை அரசுப் பணியில், நம் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

ஆக நடராஜ் அவர்களின் பணி ஓய்வுக்கு பின்னர்,அவருக்கு வழங்கப்பட்ட அரசு பணியாளர் தேர்வு மையத்தின் தலைவர் பதவி என்பது விசித்திரமான அல்லது இது வரை எவருமே வகிக்காத பதவி ஒன்றும் அல்ல.

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப்படுகிறதா அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறதா? அப்படி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் ஏன் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது,அதில் இருக்கும் அரசியல் என்ன என்பதெல்லாம் கட்டாயம் விவாதத்துக்கு உட்பட்டது என்பதை மறுக்க இயலாது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியில் இருந்த, நடராஜ் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது, சிறப்பாக செயல்பட்டாரா என்றெல்லாம் விவாதித்தால்,
கட்டாயம் அவரது பணி மிக சிறப்பாகவே இருந்தது என்பதை எவரும் மறுக்க இயலாது.

அவர் தலைவராக வந்த பின்பு தான், தேர்வு முடிவுகள் ஒரு சில வாரங்களிலும்,அதற்கான விடைகள் இணையத்திலும்,தேர்வு முடிவுகள் வெளி வந்து ஒரு சில வாரங்களிலேயே நேர்காணல் நடத்தி,பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டன. இந்த பணிகள் எல்லாம் மிக மிக வேகமாக நடை பெற்றன என்பதை அரசு தேர்வுகள் எழுதும் பலரும் அறிவார்கள்.மிக முக்கியமாக அவர் கால கட்டத்தில், அனைத்து தேர்வு முறைகளிலும் ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது.

அரசு தேர்வில் உள்ள பல விடயங்களை, சிக்கல்களை எளிதாக்கினார், உண்மையில் சொல்லப்போனால்,அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் பலருக்கு, நடராஜ் அவர்கள் மீது கடுமையான கோபமும்,கடுப்பும் உண்டு என்பதை மறுக்க இயலாது. காரணம் தூங்கி வழியும் பல அரசு அதிகாரிகளை துரிதப் படுத்தி வேலை வாங்கினார்! அந்த வகையில் அவருக்கு எதிராக ஒரு குழுவே உருவாகியது என்பதை பலர் அறிவார்கள்.

ஒன்றும் வேண்டாம்.

நடராஜ் அவர்கள் தலைவராக இருந்த போது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டுக்கும், தற்போது புதிதாய் தலைவாராக் நியமிக்கப்பட்டு இருக்கும்,
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற, தமிழ்நாடு அரசு வழக்குரைஞராகவும், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடையாணை வாங்க கடுமையாக முயற்சித்த வருமான,நகைச்சுவை நாயகன் வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன் அவர்களின் செயல்பாட்டுக்கும்,உள்ள வித்தியாசத்தையும், கடந்த சில வருடங்களாக அரசு தேர்வு எழுதி வரும் மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.அவர்கள் சொல்வார்கள் நடராஜ் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு துரிதமாகவும், அருமையாகவும் இருந்ததென்று.

இன்னும் சொல்லப் போனால் நடராஜ் அவர்கள் வந்த பிறகு தான் அரசுப் பணியாளர் தேர்வு முறையாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை.
தேர்வுகள் எழுதும் நம் நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்.

அவர் அடிமைகள் திமுகவில் சேர்ந்து விட்டார் என்றால் அதை விமர்சியுங்கள். அதற்காக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக அவர் இருந்த போது,அவரது செயல்பாடு சரி இல்லை என்று சிலர் பொத்தாம் பொதுவாக குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் சொல்வதை நம்மால் ஏற்க இயலாது. கடந்து நான்கு ஐந்து ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஓரளவுக்கு தகவல்கள் தெரியும் என்பதால் தேர்வு எழுதுபவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கருத்தை வலுவாக பதிவு செய்கிறேன்.

நன்றி!

ஆன்டனி வளன்

புதன், 2 ஏப்ரல், 2014

டம்ளர் பாய்ஸின் காமெடியும்,அவர்களின் ஜெயலலிதா ஆதரவும்!


டம்ளர் பாய்ஸின் காமெடியும்,அவர்களின் ஜெயலலிதா ஆதரவும்!

செபாஸ்டின் சைமன் கட்சி நாடாளுமன்ற தேர்தல் குறித்த தங்களின் நிலைப்பாட்டை விவாதிக்க பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியதா கவும், இறுதியில் அறிக்கை ஒன்றை தந்திருப்பதாகவும் நண்பர்கள் செய்தி பகிர்ந்து இருக்கிறார்கள்.

சரி இவர்கள் முடிவு என்ன தான் என்று சும்மா வாசித்துப் பார்த்தால்,சுத்தி சுத்தி, அதுவும் ஒரு முன்னூற்று அறுபது டிகிரி கோணத்தில் சுத்தி, கடைசியா (அ)டிமைகள் திமுக வை இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆதரிக்கப் போவதாகவும்,(அ)டிமைகள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிக்கையை முடித்து இருக்கிறார்கள்.என்னா ஒரு காமெடி! ஏன் காமெடி? 

செய்வதெல்லாம் மரபணு பரிசோதனை! ஆனால் தமிழர் ஒருவர் பிரதமராக வருவதை ஆதரிக்கிரார்களாம். ஜெயலலிதா தமிழரா? 

ஏண்டா ஐம்பது ஆண்டு காலமா தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் வைகோவை தமிழன் பட்டியலில் சேர்க்காத கூட்டம்,ஜெயலலிதாவை எப்படி தமிழர் பட்டியலில் சேர்த்தது? 

வைகோவைப் பற்றி சொல்லியதும், இங்கே வைகோவின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. தனி மனித வைகோவின் போராட்டங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.
தமிழன் பிரச்சினைகளுக்கு போராடாத ஜெயலலிதா தமிழச்சியா? 

கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக இருந்த ஜெயலலிதா செய்த போராட்டங்கள், தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் எதையாவது சொல்ல முடியுமா கொடநாட்டில் ஓய்வு ஓய்வு ஓய்வு என்று ஐந்து ஆண்டுகளும் ஓய்வெடுத்ததைத் தவிர?

ஜெயலலிதாவின் எதிர்க்கட்சி காலத்தை விட்டு விடுவோம்.ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவும் வெகு சமீபத்தில், முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு, கூடங்குளம் அணு உலைப் போராளிகள் மீதான அடக்குமுறைகள், தமிழ்நாட்டில் இருக்கும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு,
ஜெயலலிதா கையில் வைத்திருக்கும் காவல்துறையின் கடுமையான அடக்கு முறைகள்,
அண்ணன் கொளத்தூர் மணி மீது போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டம், தமிழ்நாட்டு மக்களை சீரழிக்கும் மதுக்கடைகள்,மாநிலம் முழுவதும் நடக்கும் மணல் கொள்ளை, கிரானைட் மலைக்கொள்ளை, ஜெயலலிதாவின் அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகள், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை, தமிழர் நலனுக்கு எதிராக ஜெயலலிதா தொடர்ந்து செய்து வரும் மக்கள் விரோதப் போக்கு இப்படி தமிழர் நலனில் அக்கறை இல்லாத,தகுதியே இல்லாத  ஆத்தாவுக்கு செபாஸ்டின் சைமன் ஆதரவு அளிக்க என்ன காரணம்? 

செபாஸ்டின் சைமனின் ஒன்றுக்கும் உதவாத புரட்டுவாத போலி தமிழ் தேசிய தேர்தல் அறிக்கையை வைத்துக்கொண்டு, பெரிய விவாதம் எல்லாம் செய்கிறார்கள்.தமிழ் தேசியம், அது இதுவென்று என்னென்ன ஆராய்சிகள் எல்லாமோ நடத்துகிறார்கள் நண்பர்கள்.அந்த அளவுக்கு பெரிய ஆராய்சிகள் எதுவும் நடத்த தேவையே இல்லை. 

காரணம் மிக எளிது.செபாஸ்டின் சைமனின் திருமண செலவை ஏற்றுக் கொண்ட புண்ணியவான் மணல் கொள்ளை நாயகன் வைகுண்டராஜன். சென்னையில் செபாஸ்டின் சைமன் வாங்கிய புதிய வீட்டுக்கு தேவையான அனைத்து மர வேலைப்பாடுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களின் அன்பளிப்பு நாயகன்,செபாஸ்டின் சைமனுக்கு திருமண விருந்து கொடுத்து மகிழ்வித்த  புண்ணியவாளன் இவை எல்லாவற்றுக்கும் காரணம் யாரென்று பார்த்தால் சமூக விரோதி வைகுண்டராஜனாமே மெய்யாலுமா? பத்திரிக்கையாளர்கள் பலர் நம்மிடம் அப்படித் தான் சொல்கிறார்கள்:)

யார் இந்த வைகுண்டராஜன் என்றால் ஜெயலலிதாவின் பினாமி! (அ)டிமைகள் திமுக கட்சியின் ஒவ்வொரு தேர்தல் செலவையும்  ஏற்பதே வைகுண்டராஜன் தானாம். செபஸ்டின் சைமனுக்கும் வைகுண்டராஜனுக்கும் என்ன உறவு? 

செபஸ்டின் சைமன் வைகுண்டராஜனின் பங்காளி:) கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும். ஆனால் கேட்டா காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் ஒழிக்க தான் இவர்கள்  பாடுபடுகிறார்களாம்:) நம்பிட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரசை அழிக்க இன்னும் யாராவது பாடு பட வேண்டுமா என்ன? அதுவே செத்த பாம்பு:) அதை அடிச்சு வேற பேரு வாங்கணுமா:) 

மத்தபடி இவிங்க பேசுற தமிழ் தேசியம், வெளக்கெண்ணை வெங்காய தேசியம் எல்லாம் சும்மா ஊரை ஏமாத்துறதுக்கு! 

இந்த சினிமாக்காரன் ஒரு பெரிய பித்தலாட்டக்காரன் என்றும் இவன் என்னென்ன தமிழ்தேசியம் மரபணு பரிசோதனை பேசினாலும் இவனை ஒருபோதும் நாம் நம்புவதற்கும் இல்லை.

சரி! தமிழ்நாடு முழுவதும் (அ)டிமைகள் திமுகவை ஆதரிக்கப் போவதாக செபாஸ்டின் சைமன் சொல்லி இருக்கிறாரே! 

கன்னியாகுமரியில் அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் நிற்கிறார்களே!அங்கே செபாஸ்டின் சைமனின் நிலைப்பாடு என்ன என்றால் அங்கேயும் அடிமைகள் திமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை தான் ஆதரிக்கப் போகிறார்களாம். இன்னும் சொல்லப் போனால் செபாஸ்டின் சைமன் கூட்டத்தின்  பரப்புரை குமரியில் இருந்து தான் தொடங்கப் போகிறதாம்! நல்ல காமெடி!

ஏன் அண்ணன் சுப.உதயகுமார் என்னும் மாபெரும் போராளியை கன்னியாகுமரி தொகுதியில் ஆதரிக்கலாமே என்று கேட்டால், அண்ணன் சுப.உதயகுமாருக்கு அளிக்கும் வாக்குகள், மொத்த வாக்குகளை பிரிக்கும் உத்தியாகத் தான் இருக்குமே ஒழிய, மாறாக வெற்றிக்கான வாக்குகளாக இருக்காதாம். மாறாக இந்த வாக்குகள் பிரிவதால்,அது பாரதிய ஜனதாவின் பொன்.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற எளிதாகி விடுமாம். இப்படி ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் செபாஸ்டின் சைமனின் தம்பிமார்கள்:) சுருக்கமா சொன்னால் அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் வெற்றி வேட்பாளராக வர இயலாது என்று, இவர்களே முடிவு செய்து இருக்கிறார்கள்.

அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற மாட்டார்கள் என்று இவிங்களுக்கு எவன் சொன்னது? எவனாவது இவிங்களுக்கு சொன்ன தகவலா?அல்லது அண்ணன் உதயகுமார் அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விடக் கூடாது என்பது செபாஸ்டின் சைமனின் ஆசையா என்பது கேள்வியாக நிற்கிறது! 

என் பார்வையில், அண்ணன் சுப.உதயகுமாரை வெற்றி பெற விடக்கூடாது என்பது தான் செபாஸ்டின் சைமனின் ஆசை! ஆனால் அந்த ஆசி பலிக்காது என்பது வேறு.

(
அ)டிமைகள் திமுகவுக்கு ஆதரவு என்று முடிவெடுத்த பிறகு, சமூக விரோதி வைகுண்டராஜனோடு சேர்ந்து அரசியல் செய்வது என்று முடிவெடுத்த பிறகு, இங்கே என்ன தமிழ் தேசிய கொள்கைகளும் வியாக்கியானங்களும் பேச வேண்டி இருக்கு? 

சரி! அப்படி என்ன கடுப்பு செபாஸ்டின் சைமனுக்கு அண்ணன் உதயகுமார் மீது?

என்னப்பா! போன மாசம் கூட இடிந்தகரைக்கு வந்து அண்ணன் உதயகுமார் அவர்களோடு சிரிச்சு பேசிட்டு தானே போனாப்ல! இடிந்தகரை மேடையில் வேற வீராவசாமாக பேசுனாப்ல:)அதெல்லாம் சும்மா:) 

பிரச்சினை இது தாங்க!

செபாஸ்டின் சைமன் திருமணத்துக்கு பிறகு, வைகுண்டராஜன் வீட்டு விருந்துக்கு செபாஸ்டின் சைமன் போனதும், கொஞ்சி குலாவி யதுமான ஒரு சில புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளி வந்தன.புரட்சி, தமிழ்தேசியம் பேசும் செபாஸ்டின் சைமனுக்கு,சமூக விரோதி  வைகுண்டாரஜனோடு என்ன வேலை என்று கண்டித்தார் அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள். இதை தனது முகநூல் பக்கத்திலும் எழுதி இருந்தார்கள். நண்பர்கள் பலருக்கு இந்த செய்திதெரிந்திருக்கும். அதாவது சமூக விரோதிகளோடும், மணல் மாபியாக் களோடும்,மக்கள் விரோதிகளோடும் செபாஸ்டின் சைமன் கொஞ்சி குலாவுவது நல்லதல்ல.ஒரு அண்ணனாக செபாஸ்டின் சைமனுக்கு அறிவுரை சொல்கிறேன்,இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து விலகி இருங்கள்  என்றும் வெளிப் படையாக எழுதி இருந்தார்கள். நல்ல விடயம் தானே. ஆனால் இது தான் சிக்கல்.அதிலும் அண்ணன் சுப.உதயகுமார் அவர்களின் இந்த வெளிப்படைத் தன்மையான பேச்சு தான் பல அரசியல்வாதிகளுக்கு சிக்கல்.

பொறுப்பாரா செபாஸ்டின் சைமன்? என்னை எப்படி, இப்படி கேவலப் படுத்தலாம்! நான் ஒரு அரசியல்வாதி.எல்லோருடனும் பேசுவேன், பழகுவேன், அதற்காக என்னை சந்தேகப்படுவதா! நான் அப்படிப்பட்ட ஆளா என்றெல்லாம் பொங்கி எழுந்தார் செபாஸ்டின் சைமன்.கூடவே இடிந்தகரைப் போராட்டத்துக்கும் வெளிநாட்டுப் பணம் வருகிறது என்று குற்றம் சொல்கிறார்கள், நான் அதை நம்புகிறேனா என்றெல்லாம் பொங்கினார்.ரொம்ப அறிவா,லாஜிக்கா பேசி மடக்குறாராம்:)

செபாஸ்டின் சைமன் லாஜிக்கா கேட்பது போல,வைகுண்டராஜன் வீட்டு திருமணத்துக்கு அரசியல்வாதிகள் எல்லோருமா அழைக்கபட்டார்கள்?அல்லது போனார்களா? அப்படியானால் அரசியல்வாதி செபாஸ்டின் சைமனுக்கு மட்டும்,வைகுண்டராஜனிடம் என்ன சிறப்பு:) என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன்:)

உண்மையில் யோக்கியனா இருந்திருந்தா, பொறுமையாகவும், உரிமையோடும் அண்ணன் உதயகுமார் அவர்களிடம்,அந்த செய்தியில் உண்மை இல்லை.நான் அப்படி எந்த சமூக விரோதி களோடும் தொடர்பில் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். 

ஆனால் பல லட்சம் கோடிகள் ஊழல் நடக்கும்,மணல் கொள்ளைக்கு எதிராகவோ,அதை செய்யும் வைகுண்டராஜனுக்கு எதிராகவோ எந்த போராட்டத்தையும் செய்யாத செபஸ்டின் சைமன் வைகுண்டராஜன் வீட்டில் கறிவிருந்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்! ஊரறிந்த ஒரு விடயத்தை சைமன் எப்படி மறுக்க முடியும்?

ஆக அண்ணனின் அந்த கண்டிப்பு நாளில் இருந்து,இடிந்தகரைப் போராட்டத்தை செபாஸ்டின் சைமன்,முன்பு போல பெரிதாக கண்டு கொள்வதும் இல்லை.போராட்டம் சார்பாக ஏதாவது பேச வேண்டும் என்றால் கூட போராட்டக் குழுவினரின் அலை பேசி அழைப்புக்களை ஏற்பதும் இல்லை! இன்னும் சரியாக சொல்லப் போனால், கிட்டத்தட்ட ஒரு மூன்று மாத காலம்,செபாஸ்டின் சைமன் போராட்டக் குழு வினரின் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருந்தார்.இதைப் போராட்டத்தில் ஈடுபடும் பலரும் நன்கு அறிவார்கள். 

யோக்கியனா இருந்திருந்தா,தனி மனித ஈகோக்களை விட்டு விட்டு,இந்த மக்கள் போராட்டம் பெரிது என்று மக்கள் பக்கம் அல்லவா நின்று இருக்க வேண்டும். 

இதெல்லாம் சேர்ந்து தான் அண்ணன் சுப.உதயகுமாருக்கு எதிராக களம் காணவும், கன்னியாகுமரி தொகுதியில் அண்ணன் சுப.உதயகுமாருக்கு எதிராக செபாஸ்டின் சைமன் கூட்டம் வேலை செய்ய கிளம்பி இருக்கிறது.  

நீங்கள் மணல் கொள்ளையன் வீட்டில் போய் நல்ல கறிவிருந்து சாப்பிடுவீங்க. அவன் தரும் விலை உயர்ந்த அன்பளிப்புகளை எல்லாம் வாங்கிக் கொள்வீர்கள், அவன் செய்யும் மாபெரும் மணல் கொள்ளை பற்றி வாயே திறக்க மாட்டீர்கள், ஈழம் தமிழ் தேசியம் பேசும் புரட்டு வாய்களில்,கண்ணுக்கு முன் நடக்கும் பல லட்சம் கோடி மணல் கொள்ளை மட்டும் கண்ணுக்கு தெரியாது. உங்கள் புரட்டு வாய்களில் ஈயத்தை தான் காய்ச்சி ஊற்ற வேண்டும் பிராடு, பித்தலாட்டக்கார பயலுகளே!

கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி வேட்பாளராய்,அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்லும் நாளை, நாம் டம்ளர் பாய்ஸ்-க்கும், கூட்டத்தின் தலைவன் செபாஸ்டின் சைமனுக்கும் பரிசாகத் தருவோம்! கவலைப் படாதீங்க!  

டம்ளர் பாய்ஸ்,நீங்க அரசியலா பண்றீங்க அரசியல்!அயோக்கியத்தனமான அரசியல்!வைகுண்டராஜனையும், ஜெயலலிதாவையும் ஆதரிக்க, தமிழ் தேசிய அரசியலும், வெளக்கெண்ணை அரசியலும்! 

தஞ்சாவூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தபோது, வீரவசனம் பேசுன டம்ளர் பாய்சும், செபாஸ்டின் சைமனும் கபட வேடதாரிகளா?முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு உங்களுக்கு பொழுதுபோக்கு அரசியலா? அயோக்கியப் பயலுகளா?  

என்னடா! செபாஸ்டின் சைமன் செய்யும்,அட்டூழியத்துக்கு எப்படி ஒட்டு மொத்த டம்ளர் பாய்சையும், நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் செபாஸ்டின் சைமன் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காத தொண்டர்கள்,செபாஸ்டின் சைமனின் தவறான முடிவுகளுக்கும் ஜால்ரா தட்டும் மேதாவிகள் இருப்பதால் தான் மொத்தமாக டம்ளர் பாய்சைக்  கேள்வி கேட்க வேண்டிஇருக்கு:) 

-
ஆன்டனி வளன்

சனி, 29 மார்ச், 2014

ஈழ விடுதலையை தொடர்ந்து கொச்சைப்படுத்தும்,இந்திய மற்றும் தமிழ் சினிமா!


இனம் திரைப்படம்,ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாக, இணையம் எங்கும் கடும் கோபக்கணைகளை பார்க்க முடிகிறது. படத்தை இயக்கியவர் சந்தோஷ் சிவன் என்னும் மலையாளி.படத்தை தயாரித்தவர் லிங்குசாமி என்னும் தமிழன்.சந்தோஷ் சிவன் இந்த படத்தை ஓரளவுக்கு நியாயமாக எடுப்பார்,காரணம் அவர் இதற்கு முன் அவர் எடுத்த சில படங்கள் நன்றாக இருந்திருக்கின்றன,விருதுகள் வாங்கி இருக்கின்றன என்று தான் எண்ணி இருந்தேன்.ஆனால் இணையங்களில் வரும் விமர்சனங் களால்,அது தவறு என்று புரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த கலைஞர்கள் சரியான மற்றும் நியாயமான மனிதர்களாக இருக்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை.

எல்லா மனிதர்களுக்குள்ளும், ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு அரசியல் சந்தோஷ் சிவனுக்குள்ளும் ஒளிந்து இருக்கிறது! வெளிப்படையாக சொல்வதென்றால், மலையாளிகள், தமிழர்களைப் பற்றியோ அல்லது அவர்களது நியாமான பிரச்சினைகள் பற்றியோ,சரியான புரிதலோடு படம் எடுக்க வாய்ப்பு உண்டா?அல்லது கன்னடர்கள் தமிழர்களைப் பற்றி உயர்வாகவோ, அல்லது உண்மையாகவோ பதிவு செய்வார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமே!

ஏற்கனவே அந்த சந்தேகத்தை,ஜான் ஆப்ரகாம் என்ற மலையாளி,மெட்ராஸ் கபே என்ற படத்தை எடுத்து, தன் தமிழர் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தினான். சிங்களன் கொடுத்த பணத்தை வைத்து படம் எடுத்து, தமிழர்களின் இன விடுதலை சார்ந்த பிரச்சினையை கொச்சைப்படுத்த முயன்றான்.

சோகன் ராய் என்ற மலையாளி, டாம் 999 என்ற படத்தை எடுத்து, முல்லைப் பெரியாறு பிரச்சினையை, தன் நய வஞ்சகத்தை பயன்படுத்தி, மலையாளிகள் நியாயவான்கள் போல காட்ட முனைந்து மூக்குடைபட்டான்.

ராவண தேசம் என்ற படத்தை எடுத்தவர அஜய் நுத்தகி ஆந்திராவை சேர்ந்தவர். படத்தில் நிறைகள் பல உண்டு என்று பலரால் சொல்லப் பட்டாலும் கூட, தவறான புரிதல்களோடு எடுக்கப் பட்ட காட்சிகளை யும் மறுப்பதற்கில்லை என்று ஆதங்கப்பட்டார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

இதோ அடுத்து இனம் என்ற படத்தில் விடுதலைப் புலிகளையும், முப்பதாண்டு கால போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவது போன்று பல காட்சிகள் இருப்பதாகவும்,புலிகள் சிறு குழந்தைகளை வற்புறுத்தி தான் ஆயுதம் ஏந்த வைத்தார்கள், அவர்களுக்கு போர் மீது அலாதி பிரியம் என்பது போல, இந்த சினிமா இருப்பதாக அதைப் பார்த்தவர்கள் பதிகிறார்கள்.

ஆனால் இந்த படத்தில் ஒரு சுவராஸ்யம் என்னவென்றால் படத்தை தயாரித்தவர் லிங்குசாமி. ஒரு படத்தை தயாரிப்பவருக்கு,அதுவும் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவருக்கு இந்த சூட்சுமங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டா? படத்தின் நோக்கம் என்ன, படைப்பாளியின் நோக்கம் என்ன, காட்சிகளின் அர்த்தம் என்ன என்பது தெரியாத அளவுக்கு லிங்குசாமி சின்ன பாப்பாவா என்ன?

மெட்ராஸ் கபே,டாம் 999, போன்ற படங்களை தமிழ்நாட்டில் தடை செய்தது போலவே, இந்த இனம் திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று இங்கே போராட்டம் நடத்தினால்,

ஈழத்துக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர் களும் போராட்டக்காரர்கள் பக்கம் நிற்பார்களா? அல்லது லிங்குசாமி என்ற திரைப்பட வியாபாரி பக்கம் நிற்பார்களா? கூடவே லிங்குசாமி பச்சைத் தமிழன் மஞ்சள் தமிழன் என்று சொல்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.அப்படி உண்மைக்கு புறம்பாக,லிங்குசாமி என்னும் நியாயம் இல்லாத வியாபாரிக்கு, இயக்குனர் களும் தயாரிப்பாளர்களும் வக்கலாத்து வாங்குவீர்கள் என்றால் உங்கள் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. இதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்றால் மலையாளிகள் எடுத்த டாம்999,மெட்ராஸ் கபே படத்தையும் அனுமதிப்பதில்,என்ன தவறு என்ற கேள்வி இயல்பாகவே எழத்தானே செய்யும்.நியாயம் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்!இல்லை என்றால், தமிழன் என்ன அயோக்கியத்தனம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தமா?

அது மட்டும் அல்ல. இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ஈழ விடுதலையை மலையாளி கொசைப்படுதுகிறான், தெலுங்கர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பேசிக் கொண்டே இருப்பது? உணர்வுள்ள தமிழ் இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து, ஈழப் போரின் சரியான உண்மைகளை சொல்லி படம் எடுக்கலாமே! திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் என்றால் குறும்படமாகவோ அல்லது குறுந்தட்டு வடிவிலோ எடுத்துத் தாருங்கள். உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எங்கள் கடமை.அப்படி ஒரு படம் எடுக்க நீங்கள் தயார் என்றால், தமிழர்கள் அனைவரும் அதற்கான செலவை ஏற்க தயாராக இருக்கிறோம்.

இது குறித்து,ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு எழுதிய ஒரு பதிவையும் சேர்த்தே இங்கே பதிவிடுகிறேன்.

முந்தைய பதிவு இதோ!

ராவண தேசம் படம் நன்றாக இருக்கிறதென்றும், சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், புலிகளின் பேராண்மை குறித்தும் பேசும் அதே வேளையில், பிரபாகரன் குறித்தும், இந்தியா செய்த உதவியை அவர்கள் மறுத்தார்கள் என்றும்,ஒரு சில விமர்சனங்களையும் சேர்த்தே இந்த படம் வைத்திருக்கிறது என்றும்,விமர்சகர்கள் பலர் சொல்கிறார்கள்.

படத்தை இயக்கிய அஜய் நுத்தகி தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நபர்.ஈழ விடயத்தை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பார்கள்.எல்லோருடைய பார்வைகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.ஈழத்தின் முழு அவலத்தையும், நியாயத்தோடும் உண்மையோடும் சொல்ல வேண்டும் என்று எண்ணும் அதே வேளையில், சினிமா என்ற வணிகத்தையும் சேர்த்தே நாம் கணக்கிட்டாக வேண்டி இருக்கிறது.நிறை குறைகள் இரண்டும் இல்லாமல் சினிமா இல்லை.

ஒரு பெரும் வணிக ஊடக சூழலில் இருந்து கொண்டு, வேறொரு மொழியை தன் தாய் மொழியாகக் கொண்ட அஜய் என்ற இயக்குனருக்கு,ஈழ மக்களின் அவலம் குறித்த ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்காக முதல் பாராட்டு!

ஒட்டுமொத்த சிங்களவனுக்கு ஆதரவாக,ராஜபக்சே கும்பலின் பேராதரவோடு மெட்ராஸ் கபே போன்ற சினிமாக்களை எடுத்து,ஒட்டு மொத்த இந்திய மக்களின் மனதிலும் விடுதலைப் புலிகளைத் தவறானவர்களாகவே காட்ட வேண்டும் என்று முழு வீச்சில் செயல் பட்ட ஜான் ஆபிரகாம் போன்ற அயோக்கியர்களுக்கு மத்தியில்,ஈழ மக்களின் நியாயத்தை பேசியதற்காக அஜய்க்கு இரண்டாவது பாராட்டு!

இந்தியாவில் வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பல இயக்குனர்கள் ஈழத்தின் அவலத்தையும், புலிகளைக் குறித்தும் சினிமா எடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாக இருக்கும். ஒரே விடயத்தை அவரவர் புரிதலுக்கேற்ப சொல்லும் போது, சில நேரங்களில் உண்மைகள் மறைந்து போகலாம்.அது திட்டமிட்டோ அல்லது புரிதலில் ஏற்பட்ட தவறுதலாகவோ கூட இருக்கலாம்.

இங்கே நம் தமிழ்நாட்டில் நல்ல திறமையான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் ஈழ போராட்டத்தையும், அங்கு நடந்த அவலத்தையும், விடுதலைப் புலிகள் மற்றும் வெகு ஜன போராட்டங்கள் பற்றியும் நன்கு புரிந்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்ட பலர் இருக்கிறார்கள்.ஏன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஈழம் பற்றிய ஒரு முழுமையான,அதே நேரத்தில் உண்மைகளை வலுவாகச் சொல்லும் ஒரு திரைப்படத்தை எடுக்க கூடாது?

தனித்தனியாகப் பார்த்தால் உணர்வுள்ள பல இயக்குனர்கள் வெற்றி இயக்குனர்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்படி ஒரு படம் எடுத்தால் கட்டாயம் பலர் அந்த படத்தை பார்க்கவும், மேடை போட்டு முழுங்கும் பலரது பேச்சை கேட்க விரும்பாதவர்கள் கூட திரைப்படம் என்றால் பார்த்தும் தெரிந்து கொள்வார்ககள்.இதை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். நம்மாலான அணைத்து முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டி இருக்கிறது!

அடுத்த கேள்வி எங்கு வரும் என்றால், இந்த படத்தை யார் தயாரிப்பது?பலர் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றால் அவர்களின் ஊதியம் எல்லாம் அதிகம் ஆகும்,செலவு நிறைய வரும் என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால் இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், தனிப்பட்ட விதமாக யாரும் தயாரித்து நஷ்டப்பட்டு போக வேண்டாம்.முள்ளி வாய்க்கால் முற்றம் கட்டுவதற்கு மக்களிடம் தான் பணம் வாங்கி கட்டி இருக்க வேண்டும்,தனிப்பட்ட நபர்களின் பணத்தால் அந்த வரலாற்று சின்னம் கட்டப்பட்டு இருக்க கூடாது என்று வருத்தப்பட்ட உணர்வுள்ள பல இளைஞர்கள், சிறு சிறு அமைப்புகள் மற்றும் வெகு ஜன மக்கள் இருக்கிறார்கள். எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. ஆனால் அப்படி ஒரு வலுவான படத்தை நம் தரப்பில் எடுக்க வேண்டும்.

அப்படி ஒரு பிரமாண்டமான படம் எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்று, இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து சொன்னால், தொகை முழுவதும் சேர்ந்த பிறகே கூட நீங்கள் படத்தை ஆரம்பிக்கலாம்.நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த தொகையை பிரித்து தர தயாராக இருக்கிறோம்.தற்போதைய சூழலில் இப்படியான ஆவணங்கள் கட்டாயம் நமக்கு தேவை.

அப்படி ஒரு வலுவான படத்தை வெளியிடுவதில் வரும் அரசு தரப்பு சிக்கல்கள் குறித்து இயக்குனர்கள் உங்களுக்கு வேறு எவரும் சொல்ல வேண்டியதில்லை.படத்தை வெளிக் கொண்டுவருவதற்காக, செய்யப்படும் சிறு சிறு சமரசங்கள் ஏற்கும்படியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி!

ஈழத்தை பற்றி அவன் அப்படிப் படம் எடுத்துவிட்டான், இவன் தப்பாக படம் எடுத்து விட்டான் என்று நாம் பலருக்கு எதிராக விமர்சிப்பதற்கும்,போராடிக் கொண்டே இருப்பதற்கும் பதிலாக(அது ஒரு பக்கம் வேண்டும்)வலுவான ஒரு நியாயமான,உண்மையான படத்தை ஈழ விடுதலையில் ஒன்று பட்டு நிற்கும் உணர்வுள்ள இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்தால் மகிழ்ச்சி!

ஏற்கனவே உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி போன்ற திரைப்படங்களை எடுத்த அய்யா புகழேந்தி தங்கராசுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

புகைப்படத்தில் இருக்கும் இயக்குனர்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்பதல்ல.வெளிப்படையாய் பலருக்கும் தெரிந்த,ஒரு சில உதாரணங்கள் மட்டுமே!

** சீமான் அப்படியாக்கும், அமீர் இப்படியாக்கும், ராம் கதை தெரியாதா போன்ற விமர்சனங்கள் இங்கு வேண்டாம்**

சிந்தியுங்கள்!

-ஆன்டனி வளன்

ஞாயிறு, 16 மார்ச், 2014

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அய்யா வைகோ!


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அய்யா வைகோ!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்,(ம)ற்றுமொரு திமுக வேட்பாளர்கள் அனைவரும் கூட தோற்றுப் போகட்டும்,கவலை இல்லை. ஆனால் விருதுநகரில் மட்டும்,வைகோ என்ற நல்ல மனிதன் ஒருபோதும் தோற்கக் கூடாது.அப்படி ஒருமுறை அவர் தோற்றுப் போனால் அந்த தோல்வி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கான தோல்வி.

நாடாளுமன்ற தேர்தலில் (ம)ற்றுமொரு திமுக வின் தோல்வி என்பது, அவர்களின் தவறான கொள்கை முடிவுகளுக்காக, தவறான கூட்டணி முடிவுகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் எப்போதும் நிற்க வேண்டிய,திராவிட இயக்க வழி வந்தவர்கள் அதிலிருந்து முற்றிலும் முரண்பட்டு,சந்தர்ப்பவாதமாக ஒரு இனப்படு கொலைக்காரனுடன் கரம் கோர்க்கும் தவறான கொள்கை முடிவுக்காக,மதவாத கூட்டணிக்காக, அந்த கட்சி இந்த தேர்தலில் சம்மட்டி அடி வாங்க வேண்டும், படுதோல்வி அடைய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் விருதுநகர் தொகுதியில் வைகோ என்ற தனி மனிதன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.அந்த மனிதனின் கொள்கை முடிவுகளில், அரசியல் கூட்டணி முடிவுகளில் ஏராளமான குறைகள் இருந்தாலும், உலகில் தமிழினத்துக்கு ஒரு சிக்கல் என்றால்,அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஓங்கி ஒலிக்கும் முதல் குரலாக இருப்பது அய்யா வைகோவின் குரல் தான் என்பதை எவரும் மறுக்க இயலாது.

வைகோவின் பொன் விழா காணும் ஐம்பது ஆண்டு பொது வாழ்வில், ஊழல் என்ற சொல்லின் சுவடே கிடையாது.முப்பது ஆண்டு கால ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,விடுதலைப் புலிகளுக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவன்.அதற்காக எண்ணற்ற துயரங்களையும்,இழப்புகளையும் தன வாழ்வில் சந்தித்த போதிலும் கூட, தான் கொண்ட கொள்கையில் ஒரு போதும் பின் வாங்காத லட்சிய மனிதன், மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கு இன்று வரை நம்பிக்கையாய் இருக்கும் பச்சைத் தமிழன்.

அணு உலை எதிர்ப்பு போராட்டம், ஸ்டேர்லைட் போராட்டம், கெயில் போராட்டம், மூவர் விடுதலை,விவசாயிகள் போராட்டம், ஈழத் தமிழர் போராட்டம் என்று அன்றாடம் அந்த மனிதன் நிற்காத போராட்ட களங்களே இல்லை.

எனவே (ம)ற்றுமொரு திமுக என்ற கட்சியின் தவறான கொள்கை மற்றும் கூட்டணி தவறுகளை எல்லாம் தாண்டி,ஒரு உண்மையான களப் போராளியான வைகோ விருதுநகர் மண்ணில் வெற்றி பெற வேண்டும். தமிழர்கள் நன்றி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில்,விருதுநகரில் மாணிக் தாகூர் என்ற காங்கிரஸ்காரனிடம் தோற்றுப் போகும் அளவுக்கா வைகோவுக்கு தகுதி இல்லாமல் போய் விட்டது?

மாணிக் தாகூர் என்ற கூமுட்டையனிடம் எல்லாம் வைகோ தோற்றுப் போனது அநியாயம். ஜீரணிக்க முடியாத கொடூரம். எந்த ஒரு பொது விடயமோ, வரலாறோ,மக்கள் பிரச்சினைகள் குறித்த சிந்தனையோ இல்லாத ஒரு கூமுட்டையன் தான் இந்த மாணிக் தாகூர். பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில்,இந்த மாணிக் தாகூரைப் பார்த்த போது, ஐயோ விருதுநகரில் இவனிடமா தோற்றுப் போகும் அளவுக்கு அய்யா வைகோவின் நிலை வந்தது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

மீண்டும் ஒருமுறை விருதுநகர் மண்ணில் வைகோ தோற்றால் அது தமிழ்நாட்டு மக்கள் அந்த போராளிக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

நல்ல அரசியல்வாதிகளை அங்கீகரிக்க வேண்டிய நேரத்தில் நீங்கள் அங்கீகரிக்காமல் போவீர்கள் என்றால்,அது இந்த இனத்தின் நன்றி கெட்டத்தனம் மட்டும் அல்ல,நல்லவர்களை தோற்கடிக்க வைப்பது இந்த இனத்தின் சாபக்கேடும் கூட.

காங்கிரஸ் தோற்கலாம்,(ம)ற்றுமொரு திமுக தோற்கலாம்.ஆனால் காமராஜரும்,வைகோவும் ஒரு போதும் தோற்கக் கூடாது.

விருதுநகர் மண்ணில் எந்த கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தினாலும், வைகோவை விட சிறந்த வேறு எந்த வேட்பாளனும் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்க மாட்டான் என்பதை சத்தியமாய் சொல்வேன்.

விருதுநகரில் கட்சி நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி,நல்லவர்களின் ஆதரவு வைகோவுக்கு மட்டுமே இருக்க வேண்டும்! அப்படி இருப்பது தான் நியாயம்!இந்திய நாடாளுமன்றத்தில்,மீண்டும் அந்த மனிதனின் குரல் தமிழர் நலனுக்காக ஒலிக்க வேண்டும்!

உடனே தூத்துக்குடியில் ஜோயலுக்கும்,காஞ்சிபுரத்தில் மல்லை சத்யாவுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று மற்றுமொரு திமுகவினர் கேட்பார்கள்:) ஆனால் யோக்கியன் யாரென்று மக்களுக்கு தெரியாதா என்ன?

வைகோவுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு:)மாறாக ஒட்டு மொத்த (ம)ற்றுமொரு திமுகவுக்கும் அல்ல!

(ம)ற்றுமொரு திமுக வின் மீதான என் விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன!

வாழ்த்துக்கள் அய்யா வைகோ! நீங்கள் வெற்றி பெற வேண்டும்! பெறுவீர்கள்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்