புதன், 29 ஜனவரி, 2014

பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்களா?


பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்களா? 

பொதுவாகவே மதம் சார்ந்த விவாதங்கள்,அனைத்து மதங்களின் மத குருமார்கள் செய்யும் தவறுகள் சார்ந்த விவாதங்களில் பங்கு பெறுவதில்லை.அதில் எவ்வித விருப்பமும் இல்லை. 

ஆனால் கடந்த பல மாதங்களாக மோடி மீதும்,பாரதியஜனதா மீதும் வைக்கும் விமர்சனங்களில்,அது சார்ந்த விவாதங்களில் நம் கேள்விகளுக்கு நியாயமான பதிலை சொல்ல இயலாத பலர்,அடுத்த அஸ்திரமாய் நம்மீது கிறித்துவர்கள் எல்லாம் அந்நிய கைக்கூலிகள் என்றும்,பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி மதம் மாற்றுபவர்கள் என்றும்,அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்றும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து போய் விடுவதுண்டு! 

பொதுவாகவே நேர்மையான வாதங்களில் பங்கு கொள்ள விரும்பாதவர்கள் அல்லது இயலாதவர்களின் அடுத்த அஸ்திரம் ஒன்று சாதியாகவோ, அல்லது மதமாகவோ தான் தொடர்ந்து இருந்து வருகிறது!

எதோ வெளிநாடுகளில் இருந்து அரசு சாரா உதவி நிறுவனங்கள் அனுப்பும் பணத்தால் தான், இங்கே கிறித்துவர்கள் வாழ்வது போலவும், அந்த பணத்தை எல்லாம் மதம் மாற்ற பயன்படுத்தப்படுவது போலவும்,அப்பாவி மக்களை மூளை சலவை செய்து ஏமாற்றித் தான் கிறித்துவ மதத்துக்கு மாற்றுகிறீர்கள் என்றும், சம்மந்தம் இல்லாமல்,தொடர்ந்து சிலர் நம்மை நோக்கி விமர்சனம் வைப்பதால்,ஒன்றிரண்டு விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்.

எனக்கு இந்த காசு கொடுத்து மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விடயத்தில் உடன்பாடு இல்லை.அப்படி யாராவது செய்தால் அது தவறு.வெறுமனே எண்ணிக்கையில் **பெயர்* கிறித்துவர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று வேதாகமம் எதையும் சொல்லவில்லை.
அப்படியான கட்டாயம் எதுவும் இல்லை.நீங்கள் போய் உலகத்தில் உள்ள சகல மனுஷர்களுக்கும்,சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று தான் வேதாகமத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்,அப்படி ஏற்றுக் கொள்பவன் தான் உண்மையான கிறித்துவன் என்பது தான் கிறித்துவத்தின் அடிநாதம்.அப்படி சொந்த ரட்சகாராக ஏற்றுக் கொள்வதும் கூட,எவருடைய நிர்பந்தமும் இன்றி,முழு மனதோடு ஏற்றுக் கொண்டதாய் இருக்க வேண்டும். இது தான் கட்டளை!

அப்படியானால் பிறருடைய நிர்பந்தத்தின் பேரிலோ அல்லது பணம் கொடுத்து எங்களை மதம் மாற சொல்கிறார்கள் என்பதாலோ,ஒருவேளை சிலர் மதம் மாறுகிறார்கள் என்று வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, அப்படியான மனிதர்கள் எல்லோரும் கிறித்துவர்கள் ஆகி விட மாட்டார்கள்.காரணம் உள்ளத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கிறவர் தேவன் என்றே வேதாகமம் சொல்கிறது.

மற்ற மதங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவற்றின் மதிப்பீடுகள் குறித்தும் எதுவும் தெரியாது.ஆனால் நான் அறிந்த கிறித்துவத்தின் மதிப்பீடுகள் உயரமானவை என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்,உணர்கிறேன்.! காரணம்,ஒவ்வொரு மனிதனின் செயல்பாட்டையும் விட, அதை செய்யும் போது அவன் மன நிலை என்னவாக இருந்தது,அதாவது அதை மகிழ்வோடு செய்தார்களா இல்லாவிட்டால்,வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக செய்தார்களா என்பதைப் பொறுத்தே அதன் பலன் அல்லது உள்ளத்தின் உண்மையான, நிலைப்பாட்டை தான் தேவன் பார்க்கிறார் என்றே வேதாகமம் சொல்கிறது!

இதற்கு ஆதாரமாய் பல உதாரணங்களை சொல்லலாம். ஆயினும் ஒரு சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆலயத்தில் இருவர் காணிக்கை செலுத்துகிறார்கள். ஒருவர் வசதியானவர். இன்னொருவர் ஏழை விதவைப் பெண். பணக்காரர் காணிக்கை போடுகிறார். அவரைப் பொறுத்தவரையில் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார். ஏழை விதவையோ தன்னிடம் இருந்த சில்லறை காசுகள் அனைத்தையும் காணிக்கையாக போடுகிறார்.

தேவன் யாருடைய காணிக்கை பெரிது என்கிறார் என்றால்,ஏழை விதவையின் சில்லறை காசுகள் தான் பெரிது என்கிறார். அதற்கு காரணம் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் முழுமையாக தேவனுக்கு அர்பணிக்க வேண்டும் என்று எண்ணியே அவள் காணிக்கை செலுத்தினாள்.பணம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல.அதனால் அந்த காணிக்கை உயர்ந்தது என்று சொல்கிறார்.

சாதாரணமாக பார்த்தால் பணக்காரர் நூறு ரூபாய் போட்டு இருக்கிறார் என்று எண்ணிக் கொள்ளலாம்.ஏழைப் பெண் ஒரு ரூபாய் போட்டு இருக்கலாம். கணக்கின் படி பார்த்தால் பணக்காரர் தான் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார் என்றே நாம் சொல்ல இயலும். ஆனால் ஒரு செயலை அல்ல,அந்த செயலின் பல காரணிகளை,சூழல்களை, உள்ளத்தின் நினைவுகளை சீர் தூக்கி பார்த்து நியாயம் சொல்பவர் தேவன் என்று வேதாகமம் சொல்கிறது!

இப்படியாக பல மதிப்பீடுகளின் உயர்வை சொல்ல இயலும்.ஒரு தவறான பெண்ணோடு அல்லது ஒரு பெண்ணோடு வேசித்தனத்தில் ஈடுபட்டால் தான் அது விபச்சாரம் என்பதில்லை.
ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால், அதுவே விபச்சாரம் தான் என்கிறது வேதாகமம்.

ஆலயத்துக்கு போகிறோம், தேவனை தரிசிக்கிறோம் என்கிறோம். அப்படி உண்மையாக தேவனை தரிசிக்க விரும்பினால்,முதலில் சண்டை போட்டு இருக்கும் உன் சொந்த சகோதரனோடு போய் சமாதானம் ஆன பின்பு,என் ஆலயத்துக்கு வா, வந்து காணிக்கை செலுத்து அப்பொழுது நான் அதை ஏற்பேன். அது இல்லாமல் சும்மா நானும் ஆலயத்துக்கு போனேன், ஆண்டவரை தரிசித்தேன், காணிக்கை செலுத்தினேன் என்று சொல்வாய் என்றால் அதை தேவன் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார். சக மனிதர்களை, சொந்த சகோதரர்களை நேசிக்காத மனிதன் எப்படி கடவுளை நேசிப்பான் என்பதற்கான செய்தி அது!

பல நேரங்களில் நாம் உள்ளத்தில் என்ன எண்ணுகிறோம் என்பது வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் உள்ளத்தின் நினைவுகளை வைத்தே சரியா தவறா என்று பார்ப்பது தான் கிறித்துவத்தின் மதிப்பீடு.

ஆக வெறும் புற அடையாளங்களை வைத்து 
மனிதனை மதிப்பிடுபவர் அல்ல கிறிஸ்து. அப்படி இருக்கும் போது பணத்துக்காகவோ,அல்லது வேறு நிர்பந்தங்களுக்காகவோ மதம் மாறினால்,
அதை ஒரு போதும் கிறிஸ்து ஏற்கமாட்டார். அப்படி மாறுபவர்கள் கிறித்துவர்களும் அல்ல.
கிறித்துவம் என்பது வெறும் புற அடையாளங்களால் ஆனது அல்ல.அது வாழ்வியல்!

வெறும் பெயர் மட்டுமே கிறிஸ்துவம் என்பதன் அடையாளம் ஆகி விடாது.இன்னும் சொல்லப்போனால் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை முழு மனதோடு ஏற்றவர்கள் தான் கிறிஸ்துவர்கள்.

ஒன்றும் தெரியாத ஏழை அப்பாவி மக்களைத் தான் இப்படி கிறித்துவர்களாக மதம் மாற்றுகிறார்கள் அல்லது பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு ஒரு சிறு உதாரணம்.

எல்லோருக்கும் நடிகர் சாருஹாசனைத் தெரிந்திருக்கும். யார் இந்த சாருஹாசன்? நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த சகோதரன். சுஹாசினி அவர்களின் தந்தை.மணிரத்தினத்தின் மாமனார். இவரது சிறப்பு அம்சம் என்னென்ன என்று கேட்பீர்கள் என்றால், சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நீதிமன்றங்களில் முப்பது** ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர்.அப்படியானால் ஒரு தலைமுறைக்கு முன்பே கல்வி அறிவு கொண்ட மூத்த கல்வியாளர். பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தால் வேதங்கள் நான்கையும் முறையாக கற்றுத் தேறியவர் மட்டுமல்ல சில காலங்களுக்கு முன்புவரை அதை பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தவர்.

சமஸ்கிரித மொழியை முறையாக கற்றுத் தேறிய பண்டிதர் மட்டுமல்ல நீண்ட நெடிய காலமாக சமஸ்கிரித ஆசிரியராக இருந்து வகுப்புகள் நடத்துபவர். கோயில் வழிபாடுகளில் உள்ள அத்தனை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் உண்மையான அர்த்தம் தெரிந்தவர். திரைப் படங்களில் அவர் ஏற்கும் வேடங்களில் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கோவில் அர்ச்சகராக அல்லது வேதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக,சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக எதோ ஒரு வகையில் மதம் சார்ந்த பாத்திரமாகவே ஏற்று நடிப்பார்.அப்படியான பாத்திரங்களையே அவர் விரும்புவார் என்றும் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். சிறந்த நடிப்புக்காக மாநில மற்றும் தேசிய விருது வாங்கியவர்.

இந்து மத வழிபாட்டை,வேதங்களை எல்லாம் முறையாக பயிற்றுவிப்பவர் என்று மட்டுமல்லாது அதையே வாழ்வியலிலும் கடைபிடித்து வந்த மனிதர். கமலஹாசனைக் குறித்தும் அவரது வாழ்வைக் குறித்தும் குறிப்பாக அவரது திருமண சச்சரவுகள் குறித்தும் எப்போதும் கடுமையான விமர்சனங்கள் கொண்ட மனிதர்.அதாவது அவரைப் பொறுத்த வரையில் ஒழுக்கம் என்பதற்கு ஒரு வரையறையை வைத்திருந்த மனிதர்.இவர் அடிப்படையிலேயே நல்ல வசதியானவர் தான். பணத்துக்கான தேவை என்பது அதிகம் இவருக்கு கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு பூர்வீகத்தை கொண்ட மனிதர்,அதுவும் ஒரு பிராமண குடும்பதை சேர்ந்த தீவிரமாக மத கோட்பாடுகளை கடைபிடிப்பவர், கொஞ்ச காலத்துக்கு முன்பு கிறித்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவரை யாராவது ஏமாற்றி மதம் மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது அப்படி யாராவது வித விதமாய் பேசி ஏமாற்ற நினைத்தாலும்,
ஏமாறும் மனிதரா அவர்?

கடந்த ஆண்டு இவர் எப்படி கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொண்டார் என்ற சாட்சி ஒன்றை பார்க்க்க நேர்ந்தது.உண்மையில் மிகுந்த நெகிழ்வான சாட்சியாக அது இருந்தது.வேதாகமத்தை மிக ஆழமாக வாசித்து வந்திருக்கிறார்.கிறித்துவத்தை உடனே எல்லாம் அவர் ஏற்கவில்லை. அதை ஏற்பதற்கு முன் பல ஆண்டுகளாக வேதாகமத்தை வாசித்து வந்திருக்கிறார். அதில் தெளிவு கிடைக்காமல் அவர் கிறித்துவத்தை ஏற்கவில்லை என்கிறார்.

சாதாரணமாக கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களுக்கு கூட இந்த அளவுக்கு வேதாகமத்தை குறித்த வாசிப்பு அனுபவம் இருக்குமா என்பது சந்தேகமே! அந்த அளவுக்கு ஆழ்ந்து வாசித்து, வேதகாம வார்த்தைகளை ஞாபகத்தோடு பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு பேசுகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஒரு தொலைக்காட்சி நாடகம் போலவே கதை வசனம் எழுதி தயாரித்தும் இருக்கிறார். கோவில்கள் சொல்லப்படும் சமஸ்கிரித ஸ்லோகங்கள் பலவற்றுக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்ன, அவை எதைக் குறிக்கின்றன,பரிசுத்த வேதாகமத்துக்கும் இந்த ஸ்லோகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை எல்லாம் மிக தெளிவாக விளக்கி சொல்கிறார்.பலவேறு ஆச்சயர்யமான விடயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஒருவேளை அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தெரிந்த நண்பர்கள், அவர் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் சரிதானா ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவராக மாறிவிட்டால் பெயர்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. அப்படி பெயர்மாற்றினால் தான் கிறித்துவர் என்ற நிபந்தனையும் கிடையாது.

அவரது சாட்சி குறுந்தகடாகவும் வெளி வந்து இருக்கிறது. யூடியூபிலும் கூட காணக் கிடைக்கிறது.பார்க்க வாய்ப்புள்ளவர்கள் பார்த்துக் கொள்ளலாம். இவரைப் போன்ற பலர் இப்படியாக கிறித்துவை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.பெரும் பெரும் பணக்காரர்கள்,
எவ்வித பொருளாதார நெருக்கடிக்கோ, துன்பங்களுக்கோ ஆட்படாத மனிதர்கள் பலர் மாறி இருக்கிறார்கள். சாருஹாசன் ஒரு பிரபலமான மனிதர் என்பதால் உங்களிடம் சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது!இந்த வயதில் அவர் கிறித்துவராக மாற வேண்டிய அவசியம் என்ன? பணத்துக்காகவா?

பிரபலம் இல்லாத பலர் இருக்கிறார்கள். சினிமாவில் இன்னொருவரை உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பழைய ஏ.வி.எம் ராஜனை சொல்லலாம். அவரும் கூட பல திரைப் படங்களில் கோவில் அர்ச்சகராக, அல்லது கடவுள் பயம் போன்ற விடயங்களை சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர். காசு பணத்துக்கு பஞ்சம் இல்லாத மனிதர் தான்.

ஆக நான் சொல்லவரும் செய்தி என்னவென்றால் இங்கே எல்லோரும் பணம் கொடுத்து தான் மதம் மாற்றுகிறார்கள்/மாறுகிறார்கள் என்ற குற்றசாட்டை முழுமையாக ஏற்க இயலாது.
அப்படி செய்வதாக இருந்தால் சாருஹாசன் போன்ற பின்னியை கொண்ட மனிதர்கள் எல்லாம், ஏசுவை ஏற்றுக் கொண்டிருக்க்கவே முடியாது. ஒருவேளை அப்படி யாராவது பணம் கொடுத்து மதம் மாற்றுவார்கள் என்றால் அது தவறு. அப்படி பணத்துக்காக மாறுபவர்கள் உண்மையான கிறித்துவர்களாகவும் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்!

இத்தனை நாள் இந்துவாக இருந்த போது,இந்தியராக கருதப்பட்ட சாருஹாசன், கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட படியால்,இனி அவரும் அந்நிய நாட்டு கைக்கூலி,அமெரிக்க அடிமை என்றெல்லாம் புதுப்பட்டம் வாங்குவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

இங்கே யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், மதமும் கடவுளை இல்லை என்றோ வேண்டாம் என்று கூட சொல்லலாம். அதுவல்ல பிரச்சினையும்,விவாதமும்!

ஸ்லோகங்களும்,அதற்கான விளக்கங்களும் குறித்த சாருஹாசனின் காணொளி இணைப்பு ஒன்று கீழே!

http://www.youtube.com/watch?v=iqBtFoO7sFE

நன்றி !

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன் 

7 கருத்துகள்:

  1. Very well said brother. A million thanks to you. Holy sprit has spoken through you. God bless you.

    பதிலளிநீக்கு
  2. 90 % happening because of money - Go to southern tamil nadu , you will come to know

    பதிலளிநீக்கு
  3. ellam panathukkaha. ennaye panam koduthu matha paartha intha ayokkiyanuga.....

    பதிலளிநீக்கு
  4. பணம் கொடுத்தும் மறுக்கிறார்கள் என்பது உண்மை தானே ? மறுக்க முடியுமா ?

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. பொன்சிங் பாபு, அவர் சொன்னது பணம் கொடுத்தும்...

      கிறிஸ்தவ மதமாற்ற கும்பல்களின் இலக்கு நோய்வாய்ப்பட்டவர்கள் இருக்கும் வீடு, உள்ளே நுழைந்து பிரார்த்திக்கிறோம் என ஆரம்பித்து தேவனாலே எல்லாம் கூடும் என ஆரம்பித்து நீ கும்பிடுவது சாத்தான் என அவர்களை நம்பவைத்து வெளியே போங்கடா எனச் சொன்னாலும் உட்கார்ந்துகொண்டு அவர்களுக்கு கிடைக்கப்போகும் வெளிநாட்டுக் காசுக்காக கேவலமாக மதமாற்றம் செய்கிறார்கள். ( வெளிநாட்டில் இருந்து சேவைக்குத்தான் பணம் வருகிறது என அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் சொல்லுங்கள், நம்புவார்கள்)

      இப்போது நிறைய இடங்களில் விழிப்புணர்வு வந்துள்ளது. அத்துமீறி நுழைந்தால் போலிஸில் பிடித்துக்கொடுக்கும் அளவு.

      கட்சிக்கா ஆளெடுக்கிறார்கள்? இப்படி வீடு வீடாய்ச் சென்று குடும்பத்தில் யாரை மதமாற்றினால் மொத்த குடும்பத்தையும் மதமாற்றலாம் என திட்டம் போட்டு செய்யும் கும்பல்கள்.

      கோவையில் இருக்கும் என் சகோதரியின் மகள் அருகில் இருக்கும் கிறிஸ்தவ குடும்பத்துடன் நன்கு பேசுவாள். உங்க கோவில் மாதிரிதான் எங்க சர்ச்சும் எனச் சொல்லி தொடர்ந்து அழைத்துச் சென்று கடைசியில் கிறிஸ்தவராக மாற்றிவிட்டனர். என் சகோதரி குடும்பம் வயிறெரிந்து விட்ட சாபமோ, இல்லைகிறிஸ்துவின் தண்டனையோ, அந்த கிறிஸ்தவ குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது. மீண்டும் இப்போது கோவில், குடும்பம் என நிம்மதியாய் இருக்கிறாள், என் தங்கையின் மகள்.

      என்னமோ இன்றைக்கு கிறிஸ்தவனா மாறுபவன் எல்லாம் பைபிளை கரைத்துக்குடித்துவிட்டு, புரிந்துகொண்டுதான் மதம் மாறுகிறான் என்று புருடா விடாதீர்கள்.

      இதில் போட்டி வேறு, பெந்த கொஸ்தே ஒருபுறம், கத்தோலிக்கர்கள் ஒருபுறம் என.

      உண்மையான கிறிஸ்தவன் இந்த மாதிரி கும்பல்களைக் கண்டு வெட்குவான். ஆனால், இன்றிருக்கும் கிறிஸ்துவர்களில் பெருவாரியான மக்கள் அரசியல் கிறிஸ்தவர்கள். எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என எந்த கீழ்த்தரமான வேலைக்கும் தயாராக இருக்கிறார்கள்.

      நீக்கு