வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பாதிரியார் "லேனார்ட்” என்ற “அரிமா வளவன்”


“பாதிரியார் லேனார்ட்” என்ற “அரிமா வளவன்” சில உண்மைகள்!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்ட பல்வேறு அமைப்புகளில், இந்த தமிழர் களமும் ஓன்று.தமிழர் களம் என்பது எதோ ஒரு தமிழர் நலன் சார்ந்த இயக்கம் போல என்று தான் ஆரம்பத்தில் எண்ணி இருந்தேன்.ஆனால் அவர்களின் கொள்கைகள், மற்றும் செயல்பாடுகள் எவற்றின் மீதும் நமக்கு உடன்பாடு இல்லை எனினும் கூட, கடுமையான விமர்சனங்கள் வைத்தது இல்லை.

முதலில் இப்படி ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதே பலருக்கு தெரியாது என்பது வேறு விடயம். ஆனாலும் கூட ஒட்டுமொத்த தமிழகமும் இவர்களால் தான் இயங்குகிறது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால் யார் என்ன சொன்னாலும் எது எதார்த்தம் உண்மை என்பது எல்லோருக்கும் புரியும்.நமக்கு இவர்கள் ஒவ்வாததற்கு காரணம் இவர்களின் அடிப்படையே கொள்கையான மரபணு பரிசோதனை. வைகோவை இன்றும் நேசிப்பவன் நான். ஆனால் வடுகரான வைகோவை நேசிக்கும் நீ எப்படி தமிழனாக இருக்க முடியும் என்று நமக்கும் தமிழனா இல்லையா என்று சான்று வழங்கும் இந்த மன நோயாளிகளை நாம் எப்படி ஏற்க முடியும்? இது ஒருபுறம் இருக்கட்டும்.

இன்னொருபுறம் இடிந்தகரை அணு உலை எதிர்ப்பு போராட்டத்திலும் நாங்கள் தான் அனைத்தையும் செய்தோம் என்று ஊரெல்லாம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தேர்தல் அரசியலில் பங்கு பெற்றால் தமிழர் களம் தலைப்பில் தேர்தலை எதிர்கொள்ளட்டும், அப்படி செய்வது தான் சரி என்பது போல இவர்கள் பேசி வருகிறார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு சரி தவறு என்பதை போராட்டத்தை,போராட்ட குழுவினரை நன்கு அறிந்தவர்களுக்கு ஓரளவுக்கு தெரியும்.

அதாவது வருடத்தில் ஒரு ஐந்து நாள் போராட்டக் களத்துக்கு போய் வந்தவர்கள் எல்லாம் எங்களால் தான் இந்த போராட்டமே என்று மார் தட்டினால், மூன்று வருட காலம் அந்த களத்திலேயே முடங்கி கிடந்தும், லட்சக்காணக்கான பொய் வழக்குகளை சுமந்து கொண்டு, சிறை வாழ்க்கை அனுபவித்து, உயிரைத் தியாகமாய் தந்த சாதாரண மக்கள், மற்றும் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் இந்த போராட்டத்தை மிகுந்த கட்டுக்கோப்போடு கொண்டு செல்லும் போராட்ட குழு உறுப்பினர்கள் எல்லாம் எந்த அளவுக்கு மார் தட்ட வேண்டும்?ஆக இங்கே எல்லாரும் தேவை. நம் எல்லோரின் கூட்டு முயற்சி என்ற மனப்பக்குவத்துக்கு வந்து விட வேண்டும். இங்கே யார் பெரியவன் என்று தங்கள் சுய பெருமை பேச ஆரம்பித்தால், அசிங்கப்படப் போவது நிச்சயம். போராட்டத்தை நன்கு அறிந்த நண்பர்கள் பலர் இந்த சமபவங்களை எல்லாம் அறிந்திருக்க கூடும். எனவே தங்களால் தான் இந்த உலகமே இயங்குவதாக கற்பனை செய்து கொள்ளும் அறிவாளுகளுக்கு அல்லது தற்குறிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அது என் வேலையும் அல்ல.

ஆனால் தமிழர் களம், தமிழர் களம் என்று சொல்கிறார்களே இதன் அமைப்பாளர் யார் என்பதை கொஞ்சம் தோலுரிக்க வேண்டிய நேரம் இது. என் கேள்விகளுக்கு பதில் சொல்லத் திராணி உள்ளவர்கள் பதில் சொல்லலாம். சவாலாகவே சொல்கிறேன்!

தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் அரிமா வளவன் என்று பலர் அறிந்திருக்க கூடும். கட்சிக் கொடி, சுவரொட்டி, மாநாடு என்று தூத்துக்குடி சார்ந்த பகுதிகளில் அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். இது ஒரு தேர்தல் அரசியல் இயக்கம்.

சரி அரிமா வளவன் என்பது இவரது உண்மையான பெயரா?

கிடையாது.அப்படியானால் இவரது உண்மையான் பெயர் லேனார்ட்.

இவரது சொந்த ஊர்? 


நெல்லை மாவட்டம் உவரி. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வார்த்தை சித்தர் வலம்புரி ஜானின் சகோதரர் மகன்.

இவரது பணி அரசியலா? அல்லது வேறு பணி செய்கிறாரா?

இவரது உண்மையான பணி அரசியல் இல்லை. இவர் தற்போதும் ஒரு கத்தோலிக்க கிறித்துவ பாதிரியார்.

இவருக்கு திருச்சபை பணி எங்கே ?

தற்போது திருச்சி மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணி புரிகிறார்.

தற்போது என் கேள்விகள் மிக எளிது!

உலக மகா வெண்ணை வெட்டி நியாயங்கள், மரபணு பரிசோதனை, கொள்கை, கோட்பாடு, ஊருக்கு உபதேசம் எல்லாம் சொல்லும் பாதிரியார். லேனார்ட் என்ற அரிமா வளவன், எப்படி தான் ஒரு பாதிரியாராக இருந்து கொண்டே,ஒரு தேர்தல் அரசியல் கட்சியை நடத்த முடியும்? அந்த கட்சியின் பொது செயலாளராக பதவி வகிக்க முடியும்? அப்படி அரசியல் கட்சி நடத்துவதற்கு கத்தோலிக்க பாதிரியார்களுக்கு அதிகாரம் கிடையாது. அது அவர்களின் பணியும் அல்லவே!

அப்படி கட்சி நடத்துவது தான் முதன்மைப் பணி என்றால்,தன் பாதிரியார் பணியை உதறி விட்டு வெளியே வந்து, அதன் பின்னர் அரசியல் கட்சி நடத்துவது தானே முறையாகும்.பாதிரியாராக இருந்து கொண்டே அரசியல் கட்சி நடத்துவது தவறு என்பது இவருக்கு தெரியாதா?

அரசியலுக்கு ஒரு பெயர், ஆலயத்துக்கு ஒரு பெயர் என்ற ரெட்டை வேடம் எதற்கு? நான் சொல்லும் இந்த உண்மைகள் எத்தனை பேருக்கு தெரியும்?

தற்போதும் பாதிரியாராக இருக்கும் இவரால், எப்படி சாதியம் சார்ந்த பாகுபாட்டை, ஒரு சாதிய வெறுப்பை/வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு, யார் தமிழன் என்று மரபணு பரிசோதனை செய்து கொண்டே,பல சமுதாய மக்கள் வாழும் பகுதியில்,அவர்களுக்கு மத்தியில் இறைப் பணி செய்ய இயலும்?

வைகோ என்ற மனிதனை நேசிக்கும் என்னைப் பார்த்து,எப்படியடா ஒரு வடுகனை நேசிக்கும் நீ தமிழனாக இருக்க முடியும் என்று கேட்கும் ஒரு இயக்கத்தை சேர்ந்த நபர், இறைப்பணி செய்யும் ஊரில் பல சமுதாய மக்கள் ஆலயத்துக்கு வந்தால் என்ன மன நிலையோடு ஏற்கும்?

அதாவது இவரது சாதிய வன்மத்துக்கு ஒரு சின்ன உதாரணம். இவர் நடத்தும் வேர்கள் பத்திரிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழன் அல்லாத பேரறிவாளனின் தூக்குதண்டனைக்காக தமிழர்கள் எல்லோரும் பாடுபடுகிறார்கள், ஆனால் தமிழர் அல்லாதவர்கள் அந்த அளவுக்கு நன்றியோடு நடந்து கொள்வதில்லை என்ற பொருளில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து அவர் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்தன. உடனே, யாரோ எனக்கு தவறான தகவல் தந்து விட்டார்கள் என்று பம்மினார், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இது குறித்து ஆதாரத்தோடு ஒரு பதிவை நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இங்கே அவர் மன்னிப்பு கேட்டாரா கேட்கவில்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் ஒரு பாதிரியாருக்கு இது போன்ற மக்களைப் பிளவு படுத்தும், கேவலமான அரசியல் தேவையா? இதை செய்வது முறையா? என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கிறித்துவர்கள் சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்று இருக்கும் போது, கிறித்துவப் பாதிரியார் எப்படி சாதிய துவேஷத்தை மக்கள் மத்தியில் விதைக்கலாம்? இது ஒரு தவறான முன் உதாரணம்.

இன்னும் சில ஆச்சர்யங்கள் உண்டு. அது என்ன?

இவர் கிறித்துவப் பாதிரியாராக இருக்கிறார் என்று கணக்குக்கு சொன்னாலும் கூட நான் இவரது எழுத்துக்களைப் படித்து புரிந்து கொண்ட வகையில் இவர் ஒரு கிறித்துவர் அல்ல. இது இன்னும் வேடிக்கை அல்லவா! எதனால் இவர் கிறித்துவர் அல்ல என்று சொல்கிறேன்? இவரது பல்வேறு பதிவுகளை நான் முன்பே படித்து இருக்கிறேன். இயேசு கிறித்து ஒரு கடவுள் அல்ல, அவர் யூத மக்களுக்காக போராடிய ஒரு போராளி மட்டுமே! அதாவது எப்படி பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய மாபெரும் போராளியோ, அப்படித் தான் இயேசு கிறித்துவும் யூத மக்களுக்காக போராடிய ஒரு மாபெரும் போராளி மட்டுமே என்பது தான் இவரது தத்துவம்.அவர் அப்படி எழுதிய பதிவுகளை நான் படித்திருக்கிறேன்.அவரது முகநூல் பக்கத்திலேயே அந்த பதிவுகள் இன்னும் இருக்கலாம்.

பிரபாகரனை போராளி என்று ஏற்பது போலவே, இயேசு கிறித்துவும் ஒரு போராளி மட்டுமே என்று ஏற்கும் மன நிலை கொண்ட மனிதர் எப்படி கிறித்துவராக இருக்க முடியும்?

அது மட்டும் தானா இவரது கருத்தியல் என்றால் கட்டாயம் இல்லை. இவர் உருவாக்கிய தமிழர் களம் கட்சி நபர்களிடம் இவர் உருவாக்கி வைத்திருக்கும் கருத்து என்னவென்றால், மீனவர்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து போக காரணம், அவர்கள் கிறித்துவர்களாக மதம் மாறியது தான்.ஆக இந்த கிறித்துவ மதம் தான் மீனவர்களின் அரசியல் அதிகாரங்களை சீரழித்துப் போட்டது. அப்படியானால் இதற்கு தீர்வு என்ன? மீண்டும் தாய் மதமாம் இந்து மதத்துக்கு மாறுவது தான், மீனவர்களின் அரசியல் அதிகாரத்துக்கு தீர்வு என்று ஒரு அரை வேக்காட்டு தீர்வையும் சொல்லி வருகிறார். இதே கருத்தைத் தான் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.க்ரூசும் சொல்லி வருகிறார். இவர்கள் இருவரின் ஊரும் ஒன்றே, சித்தாந்தமும்,

சிந்தனைகளும் ஒன்றே!

ஜோ.டி.க்ரூசைப் பொறுத்தவரையில் அவர் கிறித்துவ மதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் உளறலாம். காரணம் கிறித்துவ மதத்தில் இருந்து வெளியேறி தன் தாய் மதத்துக்கே திரும்பி விட்டார். அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுக்காக, ஜெயமொகன் களுக்காக, சாகித்திய விருது போன்ற பலவற்றுக்காக அவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இந்துத்வாவைப் பற்றி பேசலாம்.அது தான் மீனவர்களுக்கான ஒரே தீர்வு என்று சொல்லலாம்.ஆனால் அதை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பதை கடலோர மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

ஜோ.டி.க்ரூஸ் பேசுவதைப் போன்றே பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா பேசலாமா என்றால் பேசக் கூடாது. அப்படி கிறித்துவ மதம் தான் மீனவர்களை சிதைத்தது, மீண்டும் இந்துக்களாக மாற வேண்டும்,அது தான் மீனவர்களுக்கான தீர்வு என்று பேசும் ஒரு நபர், பாதிரியாராக இருக்க தகுதி அற்றவர். இதை இந்த பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா உணரவில்லையா? அல்லது இதற்கு முன் இந்த கேள்விகளை யாரும் இவரிடம் கேட்கவில்லையா? கிறித்துவத்துக்கு முரணாக நின்று போதிக்கும்,கிறித்துவை கடவுளாக ஏற்காத ஒரு மனிதர் எப்படி பாதிரியாராக இருக்க இயலும்?

பாதிரியாராக தன்னைக் காட்டிக் கொள்ள "லேனார்ட்" என்ற பெயரும், வெள்ளை அங்கியும், அதே நேரத்தில் அரசியல்வாதியாக வலம் வர அரிமா வளவன் என்ற பெயரும்,வெள்ளை வேட்டியுமாக திரியும் இந்த மனிதர், ஏதாவது ஒரு பணியை செய்வது மட்டும் தான் சரியாக இருக்க முடியும். இந்த ரெட்டை வேடம் ஒருபோதும் இவருக்கு பொருந்தாது என்பதை விட தவறு!

அரசியல் என்று முடிவெடுத்த பிறகு, உழைத்து சம்பாதித்து, தன் சொந்த பணத்தில் அரசியல் செய்ய வேண்டும். பாதிரியாராக இருக்கும் ஒரு நபருக்கு, இத்தனை நாள்,எப்படி ஒரு அரசியல் கட்சி நடத்த பணம் வருகிறது? எங்கிருந்து வருகிறது? அவர் என்ன வேலை செய்கிறார்?அப்படியானால் அரசியல் கட்சி நடத்த, அதற்கான பணத்துக்காக பாதிரியாராக நடிக்கிறாரா?

என்னைப் பொறுத்தவரையில் நல்ல மனுஷனாக இருப்பவன் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும். தன் மனசாட்சிக்கு மிஞ்சுன நீதிபதி இந்த உலகத்தில் எவரும் இல்லை.

கடந்த பல ஆண்டுகளாக பாதிரியாராகவும், அரசியல்வாதியாகவும் ரெட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா வளவன் கத்தோலிக்க பாதிரியார் என்ற நிலையை வகிப்பதற்கு தகுதி அற்றவர்.எனவே நியாயமான மனிதராக, மனசாட்சியோடு, குருத்துவப் பணியில் இருந்து விலகிய பிறகு, அரசியல் செய்வது தான் சரி.

ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், அரசியல்வாதியாகவும் தொடரும் அரிமா வளவன் நியாயப்படி நடந்து கொள்வாரா?

இந்த பதிவு பாதிரியார் லேனார்ட் என்ற அரிமா அவர்களுக்கு மட்டுமல்ல, தமிழர் களம் கட்சியில் பொறுப்புகளில் இருக்கும்,தூத்துக்குடி மறை மாவட்டத்தை பாதிரியார்களுக்கும் சேர்த்தே தான். புரிய வேண்டிய நபர்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன். அவர்களும் தங்கள் பாதிரியார் பொறுப்புகளில் தானாகவே விலக வேண்டும். ஊருக்கெல்லாம் உலக நியாயம் பேசும் நபர்கள்,முதலில் தாங்கள் அதைக் கடை பிடிக்க வேண்டும் அல்லவா!

குறிப்பு:

எந்த மதத்தின் பிரதி நிதிகளையும் அவர்களின் தனி மனித தவறுகள் குறித்து கேள்வி கேட்கவோ விமர்சனம் செய்யவோ எனக்கு விருப்பம் கிடையாது.அப்படி செய்ததும் இல்லை. ஆனால் இங்கே இப்போது இவர்கள் செய்வது அடிப்படைத் தவறு. ஒரு மத போதகர் என்பவர் ரெட்டை வேடம் அணிந்து, ஒரு பக்கம் பாதிரியாராகவும், இன்னொரு பக்கம் அரசியல்வாதி, கட்சிக் கொடி, தேர்தல் என்று செயல்படுவதும் ஏற்க முடியாதது. அரசியல் ஆசைகளை வைத்துக்கொண்டு இருக்கும் இவர்கள்,தங்கள் அன்றாட வாழ்க்கை சவுகரியங்களுக்காக மட்டுமே கத்தோலிக்க பாதிரியார்களாக இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சாதிய வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் பேசும் இவர்கள்,என்ன கிறித்துவத்தை போதிக்கப் போகிறார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்விக் குறி!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

வியாழன், 20 பிப்ரவரி, 2014

"த்ரிஷ்யம்" மலையாளத் திரைப்படம்!


"த்ரிஷ்யம்" மலையாளத் திரைப்படம்!

முந்தைய கால கட்டங்களில்,நாம் பார்த்த மலையாளப் படங்களில் உள்ள,எதார்த்தமான கதைக் களம் மற்றும் எதார்த்தமான மனிதர்களால் ஆன கதாபாத்திரங்கள்! படம் முழுக்க ஒரு சின்ன கிராமமும், வீடும் தான் என்றே சொல்ல வேண்டும்!

ஆதரவற்ற ஜார்ஜ் குட்டி நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்.விவசாயம்செய்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அந்த கிராமத்தில் கேபிள் டிவி நடத்துகிறார்.அன்பான மனைவி, அழகான இரண்டு பெண் குழந்தைகள் என்று மகிழ்வான வாழ்க்கை. அவரது மூத்த மகள் குளிக்கும் காட்சியை மறைந்திருந்து தனது செல்போன் காமெராவில் பதிந்து விட்டு அதையே காட்டி அந்த பெண்ணை மிரட்டுகிறான் ஒரு இளைஞன்.பாலியல் இச்சைக்கு உடன்பட அவன் அழைக்க,இந்த பெண் மறுக்க தள்ளு,முள்ளு நடந்ததில்,மிரட்டியவனின் மண்டையில் கட்டையை வைத்து ஓங்கி ஒரு அடி அடிக்க அவன் இறந்து போய் விடுகிறான்.

இறந்து போனவன் தவறானவன் தான் என்றாலும் அவன் காவல்துறை உயர் அதிகாரியின் ஒரே மகன். எதிர்பாராத இந்த கொலையில், சட்டத்தின் பிடியில் சிக்காமல்,தடயங்கள் எதுவும் இல்லாமல்,எப்படி ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஜார்ஜ் குட்டி மீட்டெடுக்கிறார் என்பதே கதை. படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பானவை.

கதைப்படி ஜார்ஜ் குட்டி ஒரு சினிமா பைத்தியம். எந்நேரமும் சினிமாவே கதி என்று இருக்கும் நபர். கேபிள் தொலைகாட்சி நடத்துபவர் அப்படி இருப்பது இயல்பு தானே என்று சொன்னாலும் கூட, தொழில் என்பதைத் தாண்டி, சினிமாவே உலகம், அதுவே தனக்கான பாடசாலை,
தன்னுடைய பிரச்சினைகள் அது சார்ந்த முடிவுகள், அனைத்தையும் தான் பார்த்த சினிமா காட்சிகளை ஒப்பிட்டு அவற்றில் எப்படி முடிவெடுத்தார்களோ அதைப் போலவே தன் வாழ்க்கை முடிவுகளையும் எடுக்கும் அளவுக்கு சினிமாவோடு பின்னிப் பிணைகிறார். மோகன்லால் இந்த கதாபாத்திரத்தை ஏற்கும் போது ரசிக்கும் படியாகவே இருக்கிறது. 

ஜார்ஜ் குட்டி கதா பாத்திரத்தை மிக அற்புதமாக செய்திருக்கிறார் என்று மோகன்லாலை புதிதாகவா பாராட்ட வேண்டும்? ஆனாலும் மிக அற்புதமாக செய்திருக்கிறார்.சூப்பர் ஹீரோ போன்று எவ்வித அலட்டல்களும் இல்லை.

எதிர்பாராமல் நடந்த இந்த கொலையில் இருந்து எப்படி தப்புவது என்று முடிவெடுக்க ஜார்ஜ் குட்டி தான் இதுவரை பார்த்த அத்தனை படங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
அப்படி தான் ஏற்கனவே பார்த்த திரைப் படங்களில் நடந்த கொலைகளில், அது சார்ந்த விசாரணைகள், நீதிமன்றங்கள், காவல்துறை கேட்கும் கேள்விகள் அனைத்தையும் உள்வாங்குகிறார்,தான் பார்த்த சினிமாக்களின் படியே, தற்போது நடந்த கொலையை அதன் தடயங்களை மறைக்கும் வேலையை செய்கிறார் என்று சினிமாவோடு பின்னிப் பிணைந்த ஒரு கதாபாத்திரம். 

ஒவ்வொரு காசையும் கணக்கு பார்த்து செலவு செய்யும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மனிதன் ஜார்ஜ் குட்டி.ஆனால் மனைவியோ மற்றவர்களைப் போல அப்படி இருக்க வேண்டும்,தன் பிள்ளைகள் உயர்ந்த பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று வேறு மன நிலை கொண்டவர். பள்ளி மற்றும் கலவித்தரம் குறித்து இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் விவாதங்கள் மிக அருமை.

தன் பிள்ளைகளை பெரிய பள்ளி ஒன்றில், ஆங்கில வழி கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஜார்ஜ் குட்டியின் மனைவி சொல்கிறார். காரணம் அப்போது தான் அவர்கள் பெரிய அறிவாளிகளாக வருவார்கள் என்பது அவரது வாதம்.

ஜார்ஜ் குட்டி நம்மைப் போன்ற கதாபாத்திரம், பெரிய பெரிய கட்டிடமும், நுனி நாக்கு ஆங்கிலமும், லட்ச ரூபாய் கல்விக் கட்டணமும், நூறு சதவிகிதம் தேர்ச்சி விகிதமும் வாங்கினால் தான் சிறந்த பள்ளி என்று யார் சொன்னது? நன்றாக படிக்க கூடிய பிள்ளைகள்,
மாநில அளவில் கல்வியில் சிறந்த குழந்தைகள் எல்லா பள்ளிகளிலும் ஏன் அரசு பள்ளிகளிலும் தான் இருக்கின்றன என்பது ஜார்ஜ் குட்டியின் வாதம். 

கல்வியில் மட்டும் அல்ல..மாறிவரும் நுகர்வு கலாச்சார மோகம்,நம் குடும்பங்களில், பயன்படுத்தும் பொருட்களில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை எல்லாம் கேலியாகவும்,அதே நேரத்தில் சிந்திக்கும் விதமாகவும் சொல்லி இருக்கிறார்கள். இப்படி ஒரு நடுத்தர வர்க்க மனநிலை கொண்ட குடும்பஸ்தனுக்கும், மாறி வரும் போட்டி கலாச்சாரத்துக்கு ஏற்ப,நாலு பேர் நம்மை பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காகவே நமக்கு தேவையான பொருளா அல்லது தேவையில்லாத பொருளா , தற்போது அதை வாங்கும் சூழல்/திறன் நமக்கு இருக்கிறதா என்பதைப் பற்றி கவலைப் படமால்(அந்த பொருள் கார்-ஆக இருக்கலாம்,
துவைக்கும் எந்திரமாக இருக்கலாம்,குளிர்சாதனப் பெட்டியாக இருக்கலாம்) கடனை வாங்கியாவது அந்த பொருளை உடனடியாக வாங்கி குடும்ப கவுரவத்தை காப்பாற்றியாக வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை செய்யும் குடும்ப பெண்ணாக ஜார்ஜ் குட்டியின் மனைவி (ராணி) கதாபாத்திரத்தில் மீனா நன்றாக நடித்திருக்கிறார்.குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் அருமை.

இறந்து போனவன் காவல்துறை அதிகாரியின் ஒரே மகன். சும்மா விடுவாங்களா? மோகன்லால் காவல்துறை அதிகாரிகளால் மிதிக்கப்படுகிறார், அடிக்கப்படுகிறார்..ஆனாலும் பாய்ந்து சண்டைகள் எதுவும் போடவில்லை:)காவல்துறையினரை பந்தாடவில்லை!ஒட்டுமொத்த குடும்பத்தையும், தன், மனைவி, சிறு குழந்தைகளை கன்னா பின்னாவென்று தாக்கியபோதும் கண்கள் சிவக்கவில்லை:) திருப்பி அடிக்கவில்லை. மாறாக இயலாத சாதாரண மனிதனின் கண்களில் வரும் கண்ணீர் என்ற எதார்த்தம் மட்டுமே:)

இப்படி படம் முழுக்கவே ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் எதாரத்தாமான நிகழ்வுகள்!

படத்துக்கான மொத்த செலவும் ஐந்து கோடியைத் தாண்டவில்லை.கேரளா அரசின் பல்வேறு விருதுகளையும், மிகப்பெரிய அளவில் பொருளாதார வெற்றிகளையும் குவித்து நிற்கிறதுபடத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் பாராட்டுக்கு உரியவர்!

கடந்த வாரத்தில் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இது ஒரு குடும்ப சித்திரம் என்று முந்தைய காலங்களில் திரைப்பட சுவரொட்டிகளில் எழுதி இருப்பார்களே,அப்படி இதுவும் எல்லோரும் பார்க்க கூடிய அளவிலான நல்லதொரு குடும்ப சித்திரம் தான்!

பார்க்க வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்!

-ஆன்டனி வளன்

புதன், 19 பிப்ரவரி, 2014

முதல்வரின் ரெட்டை வேடங்களையும் மறந்து விடாதீர்கள்!


முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், அவரது ரெட்டை வேடங்களையும் மறந்து விடாதீர்கள்!

முதலில் சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ஏழு பேரின் விடுதலைக்காக மனமார்ந்த நன்றிகள்!

அதே வேளையில், இங்க தமிழ்நாட்டுல,அம்புட்டு பயலும்(அ)டிமைகள் திமுக கரை வேட்டி கட்ட ஆரம்பிச்சுடுவாங்க போலேயே!காரணம் முகநூலில் எந்த பக்கம் திரும்புனாலும் ,அதிமுக, அடிமைகளை விட ரொம்ப அதிகமா பேசுறீங்களப்பா! ஜெயலலிதாவின் காலில் சரணாகதி ஆகிடுவீங்க போலேயே!

அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான்!, நாற்பதும் நமதே! ஜெயலலிதாவை அம்மா என்று அன்பாய் அழைக்கத் தோன்றுகிறது! இன்னும் என்னென்னவோ பித்து பிடித்தது போல பேசுகிறார்களே!....ச்..சீ... வெக்கமா இல்லையா!

அய்யா சதாசிவம் அவர்கள் தலைமையிலான நீதியரசர்கள் குழு இந்த வழக்கில், தூக்கு தண்டனையை ரத்து என்ற மாபெரும் பணியை செய்து இருக்கிறார்கள்.இருபத்து மூன்று வருட போராட்டம், என்னென்னவோ தியாகங்கள், உயரிழப்புகள், கண்ணீர்கள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள், என்று அம்மையார் அற்புதம் அம்மாள் மற்றும் தமிழ் நாட்டின் பெரும்பாலான இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் என்று இந்த வெற்றிக்கு காரணமாக இருப்பவர்கள் பட்டியல் பெரிது. இந்த வழக்கில் மாநில அரசு என்ன செய்யலாம்,என்ற அடுத்த பாதையையும் நேற்றே தெளிவாக சொல்லி உள்ளார் அய்யா சதாசிவம். அந்த அடிப்படையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்வதாக அறிவித்து இருப்பது உண்மையில் பாராட்டுக்குரிய முடிவு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மத்திய அரசு மூன்று நாளுக்குள் இதற்கான பதிலைத் தரவேண்டும் என்ற கெடுவும் வைத்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.அதற்காக ஜெயலலிதாவுக்கு தமிழர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்லலாம். பாராட்டலாம். தப்பே இல்லை. ஆனால் அதற்கான எல்லை என்று ஒன்று இருக்கிறது!

(அ)டிமைகள் திமுகவின் அடிமைகள் போல மாண்புமிகு அம்மா, இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மா என்ற அளவுக்கு தமிழர்கள் தரம் தாழ வேண்டியதில்லை! ஒருவேளை இந்த மாசம் தேர்தல் வைத்தால், ஜெயலலிதாவை நாற்பது தொகுதிகளிலும் ஜெயிக்க வைக்க இந்த ஒற்றைக் காரணம் போதும் என்று தமிழர்கள் பேசினால், அவர்கள் நிலைமை ஐயோ! தமிழனுக்கு பெரிய சாபக்கேடு எதுவென்றால் மறதி தான்! அது அவனது மிகப்பெரிய பலவீனம்!

இன்றைய சூழலை விட்டு விட்டு, இந்த வழக்கின் பல்வேறு கால கட்டங்கள், இடையில் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் அனைத்தையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.ஜெயலலிதா திடீரேனே எதோ அதீத நல்லவராகி விட்டதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டால் ஐயோ பாவம்! வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தனக்கு வரப்போகும் அரசியல் லாப நட்ட கணக்குகள் எதையும் பார்க்காமல்,இதை செய்யும் அளவுக்கு ஜெயலலிதா ஒன்றும் வெள்ளந்தியான ஆள் இல்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா அட்டூழியத்தின் அளவுகோல் என்ன,தமிழர் விரோதத்தில் அவரது கோர முகம் என்ன என்பதை எவரும் எளிதில் மறக்க முடியாத அளவில் சமீபத்திய உதாரணம் ஒன்றை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு நடந்த முள்ளி வாய்க்கால் முற்ற இடிப்பு சம்பவம். இது எதோ பத்து பதினைந்து வருடம் ஆன சம்பவம் ஒன்றும் அல்ல. கடந்த ஆண்டு என்று சொல்வதை விடசில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு.அந்த முற்றத்தை இடித்து, காவல்துறை அடக்கு முறையைப் பயன்படுத்தி, அய்யா நெடுமாறன் அவர்களை கைது செய்து, என்னவெல்லாம் பாடு படுத்தினார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இதோ இடிந்தகரை அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில்,மக்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று சொன்ன ஜெயலலிதா, சங்கரன் கோயில் இடைத்தேர்தலுக்கு பிறகு தன்னுடைய இன்னொரு முகத்தைக் காட்டினார். அணு உலை எதிர்ப்பாளர்கள், கோட்டையில் சென்று அவரை சந்தித்து பேசி, எல்லாவற்றையும் தெளிவாக பேசிய பிறகு கட்டாயம் என்னால் இயன்றவரை உங்களுக்கு நன்மை செய்வேன் என்று சொன்னவர், கடைசியில் அந்த மக்களுக்கு தந்த பரிசு காவல்துறை தடியடியும், ஒரு சிலரின் மரணமும்,கைதும், சித்ரவதைகளும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீது வழக்கும், அதிலும் சிலர் மீது கடுமையான தேச துரோக வழக்குகளும், ஒரு சில தனிப்பட்ட நபர்கள் மீது மட்டுமே நூற்றுக்கும் அதிகமான வழக்கும் பதியப்பட்டு இன்று வரை அந்த மக்களை கண்டு கொள்ளாத ஒரு ஆணவம் மிக்க முதலமைச்சராக இருந்து வருகிறார். இடிந்தகரை ஊருக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேருந்தை நிறுத்தினார். என்ன பாவம் செய்தார்கள் அந்த மக்கள்? பாசி விற்ற ஒரு முதியவரின் மீது தேச துரோக வழக்கு.இதை விட கேவலமான அரசு இருக்க முடியுமா? மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போராடும் மக்களை சந்திக்க நேரமில்லை. அவர்கள் குரலை கேட்க ஆர்வமில்லை. மக்கள் நலன் மீதான லட்சணம் இது தான்!

சரி அந்த மக்களை அடித்து, துன்புறுத்தி, களேபரம் செய்து, வழக்கும் பதிவு செய்தாகி விட்டது. போராட்டக்குழுவினர் சார்பில், உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை மாநில அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆணை பெற்று வந்து மாதங்கள் பல ஆயிற்று. ஆனால் ஜெயலலிதா என்ன செய்கிறார்? இன்று வரை உச்ச நீதிமன்ற ஆணையை கண்டுகொள்ளவே இல்லை. ஜெயலலிதா நீதிமன்றங்களை மதிக்கும் லட்சணம் நமக்கு தெரியாததா என்ன? ஜெயலலிதாவின் இன்னொரு பிரபலமான பெயர் " வாய்தா ராணி" என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவோமா என்ன?

நம்ம ரொம்ப பெரிய வீராப்பா கேள்வி எல்லாம் கேப்போம். காவிரியில் தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற ஆணையை கர்நாடக அரசு உடனே அமுல்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் நடப்பதே வேறு. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கிறது என்று வீர வசனம் எல்லாம் பேசும் ஜெயலலிதா, தன் சொந்த மாநில மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொன்ன உச்ச நீதி மன்ற ஆணையை மட்டும் குப்பையில் தூக்கி போடுவாராம்..இது சாத்தான் வேதம் ஓதும் என்று சொல்வார்களே அது போலல்லவா இருக்கிறது.

ஆக ஜெயலலிதாவின் அராஜகங்களை, ஆட்சி விரோதங்களை. வரைமுறையற்ற மது விற்பனையினால் இந்த சமூகத்தையே சீரழிக்கும் போக்கை, சட்டத்தை மதிக்காத அகங்காரத்தை, அவரது அளவுக்கு அதிகமான சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளை, ஆயிரத்து நூறு கோடி ரூபாயில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தை, எதோ கருணாநிதி தன் சொந்தப் பணத்தில் கட்டியது போலவும், இவர் எதோ அந்த கருணாநிதி வீட்டுக்குள் காலடி வைக்க மாட்டேன் என்று செய்த அட்டூழியங்களும், ஆசியாவின் புகழ்பெற்ற சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவ மனையாக்கியே தீருவேன் என்று சொல்லி அடம்பிடித்து வழக்கு போட்டு, ஒரு மன நோயாளியைப் போல நடந்து கொண்டதை, சமச்சீர் கல்வியை ஒழிப்பேன் என்று கேவலமாக நடந்து கொண்ட முறையை, அண்ணா நூலக விடயத்தில் மட்டுமா அட்டூழியம் செய்தார்? அண்ணா பல்கலைக் கழகத்தின் பெரும்பகுதியை பிடுங்கி, தலைமை செயலகத்தை அங்கு தான் கட்டுவேன் என்று கல்வியாளர்கள் பலரின் எதிர்ப்பையும் தாண்டி, ஆணவமாக அங்கு அடிக்கல் நாட்டியது, எத்தனையோ கலவரங்கள்,பரமக்குடி போன்று காவல்துறை நடத்திய ஜாதிய படுகொலைகள்,ஜெயலலிதாவின் பினாமி என்று சொல்லப்படும் மணல் கொள்ளை வைகுண்டராஜன் போன்ற சமூக விரோதிகளோடு நட்பு,இப்படி எந்த விடயத்திலும் மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது!

என் அகங்காரத்துக்கு பின்னால் தான்,ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் என்றே இன்றுவரை நடக்கும் அவரது செயல்பாடுகளை எல்லாம் எழுதினால் பக்கங்கள் போதாது.

ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டங்களையும், கஷ்டங்களையும் புறம் தள்ளிவிட்டு , ஜெயலலிதா தான் இந்த விடுதலைக்கு ஒட்டு மொத்த காரணம் என்பது போல கோஷங்கள் கிளம்பும்:)

இந்த ஏழுபேரின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்களைப் போன்றே ஜெயலலிதாவுக்கு நானும் நன்றி சொல்கிறேன்.ஆனால் அதற்காக ஜெயலலிதாவிடம் ஒட்டுமொத்தமாக அரசியல் சரணாகதி அடைந்து விடாதீர்கள்:) ரொம்ப புகழ்வதாக சொல்லிக் கொண்டு, ஜெயலலிதா செல்லும் வாகனத்தின் சக்கரத்தை தொட்டுக் கும்பிடும் பன்னீர் செல்வம் போல ரொம்ப குனிஞ்சுடாதீங்க மக்ளே:)
பார்த்து நிதானம்:)

தேர்தல் நேரத்தில் நமது வாக்கு என்பது ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு நடந்து கொண்ட முறையை சரியாக அலசி, ஆராய்ந்து பார்த்து, மிகை எதுவென்று உணர்ந்து அறிவுப் பூர்வமாக வாக்களியுங்கள். மீண்டும் உணர்ச்சி வயப்பட்டு அம்மா வாழ்க, ஆட்டுக் குட்டி வாழ்க என்று கோஷம் போட்டு திரியாதீர்கள்!

உன்ன பெத்தவ மட்டும் தான் அம்மா..மத்ததெல்லாம் சும்மா:)

-ஆன்டனி வளன்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அறுக்கப்பட்ட தூக்கு கயிறு!


அறுக்கப்பட்ட தூக்கு கயிறு! 

பிப்ரவரி 18 தமிழர்களின் பொன்னான நாள்!

மரண தண்டனை ஒழிப்பை நோக்கி இந்தியா நகரும் நகர்வாக,அதன் தொடக்கப் புள்ளியாக இந்த தீர்ப்பு அமையட்டும்!

தூக்கம் தொலைத்து வெகு நாட்களாகிப் போன, தாயார் அற்புதம்மாள் இனி வரும் இரவுகளிலாவது சற்றே நிம்மதியாக தூங்கட்டும்!

அதைப் போலவே அண்ணன் முருகன் மற்றும் சாந்தனின் உறவினர்களும் மரண பயத்தை விட்டு சற்றே நிம்மதியாக தூங்கட்டும்!

நீதிபதி அய்யா சதாசிவம் அவர்களின் ஓய்வுக்கு முன், இந்த தீர்ப்பு வந்து விடுமா வராதா என்று ஏங்கிய உள்ளங்கள் அனைத்தும் கொஞ்சம் இளைப்பாரட்டும்!

தமிழர்கள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நபராக நீதிபதி அய்யா சதாசிவம் இருப்பார்கள்!

செங்கொடியின் தியாகம் எந்நாளும் போற்றப்படட்டும்!

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னெடுத்த அய்யா வைகோ மற்றும் ராம்ஜெத் மலானிக்கு தமிழினம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கும்!

வழக்கை முன்னெடுத்தது அய்யா வைகோவாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அதன் தோழர்கள் என அனைத்து தரப்பினரின் ஓங்கி ஒலித்த குரல்களும், போராட்டங்களின் கூட்டு முயற்சியே இந்த வெற்றி என்பதை மறந்து விட கூடாது!

தமிழினம் ஒன்று பட்டு நின்றால் இது மட்டுமல்ல, நம்மால் எல்லாமே சாத்தியம் தான்!

ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை கூர்ந்து விடுதலையாக மாற்ற தொடர்ந்து பாடுபடுவோம்!

மறுக்கப்பட்ட நீதியால்,தங்கள் வாழ்நாளின் இளமை முழுவதையும் சிறையில் கழித்து விட்ட அண்ணன்மார்கள், சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் வெகு சீக்கிரம் என்று உறுதியாக நம்புகிறோம்!

மனித நேயம் இந்த மண்ணில் தழைக்கட்டும்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யுவன்சங்கர் ராஜா!


இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யுவன்சங்கர் ராஜா!

எவர் மதம் மாறினாலும் அவர் பணத்துக்காகத் தான் மதம் மாறுகிறார்!மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள். படிப்பறிவு இல்லாத அப்பாவி மக்களை மட்டுமே இவர்களால் மதமாற்றம் செய்ய முடியும்.இப்படி ஒரே குற்றசாட்டை மட்டுமே,எப்போதும் சொல்லும் நபர்களிடம் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் மதம் மாறி இருக்கிறாரே! அவருக்கு அறிவு இல்லையா அல்லது பணத்துக்கு சிக்கலா? ஏழையா ? என்று கேட்டால் பதில் கிடையாது. இன்னும் எத்தனையோ அரசியல் பிரபலங்கள்,அரசு அதிகாரிகள்,
ஆட்சியாளர்கள்,சினிமா பிரபலங்கள் தங்கள் மத அடையாளங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அமைதியாக மதம் மாறி இருக்கிறார்கள். பெயர்களை சொல்ல நான் விரும்பவில்லை.

மதம் மாறுதல் என்றால் கிறித்துவத்துக்கு மட்டுமே மாறுவதா என்றால் கட்டாயம் இல்லை. இங்கே இந்துக்களாய் இருந்து பௌத்தத்துக்கு மாறியவர்கள் உண்டு. கிறித்துவர்களாய் இருந்து, இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு. இறைமறுப்பாளர்களாய் இருந்து பின்பு இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் வேறு மதங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உண்டு.

இப்படி இங்கே அவரவருக்கு பிடித்த மதங்களுக்கு மாறுவது என்பது தனி நபர்களின் விருப்பம். யாரய்யா கிறித்துவத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால் இங்கே சமீபத்திய பிரபலம் ஜோ.டி.க்ரூஸ் மாறி இருக்கிறார். எங்கள் ஊர் பக்கங்களில் பலர் இப்படி இந்துக்களாக மாறி இருக்கிறார்கள்.

சரி இதையெல்லாம் விட, பிரபல இந்து சாமியார்கள் நடத்தும் மத வழிபாடுகளில் எண்ணற்ற வெள்ளைக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஆசிரமங்களில் தங்கி இருக்கிறார்கள்.இப்படி எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.
இந்துக்களில் இருந்து வேற்று மதங்களுக்கு மாறக் கூடாது,அப்படி மாறினால் பல இடங்களில் பல தண்டனைகள், இடைஞ்சல்களை எல்லாம் கொடுக்கும் நபர்கள்,அடிப்படையில் கிறித்துவர்களான வெள்ளைக்காரர்கள்,இந்து மதத்துக்கு மாறக் கூடாது என்று சொல்ல இயலுமா?

அப்பாவிகள் தான் மதம் மாறுகிறார்களே ஒழிய அறிவாளிகள் இல்லை என்று சொல்லும் போது யார் அறிவாளிகள்? அறிவாளிகளுக்கு அளவுகோல் என்ன? அறிவாளிகள் என்றால் மெத்தப் படித்தவர்களா? அல்லது மூன்று நான்கு பட்டம் வாங்கியவர்களா?

அதைப் போலவே பணக்காரன் எல்லாம் மதம் மாற மாட்டான் என்றால் யார் இந்த உலகில் பணக்காரன்? என்னைப் பொறுத்த வரையில் மூன்று வேளை உணவும்,,உடுத்த நல்ல உடையும், தங்குவதற்கு ஒரு வீடும் இருப்பவன் பணக்காரன் எனலாம். இன்னும் சிலருக்கு, கார் இருந்தால் தான் பணக்காரன் என்பார்கள், சிலருக்கு கார் என்பதை விட , என்ன வகையான விலை மதிப்புள்ள கார் இருந்தால் மட்டுமே அவர்கள் பணக்காரன் எனலாம், இன்னும் சிலருக்கு பல வீடுகள், சொத்துக்கள் இருந்தால் மட்டுமே பணக்காரன் எனலாம். ஆக படித்தவன், பணக்காரன் என்பதெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல் இருக்கிறது.

பிரபலங்கள் மதம் மாறினால், இவர்கள் எல்லாம் விதி விலக்கு என்று சொல்லும் நபர்கள், கிராமங்களில் உள்ள ஏழைகள், பட்டப் படிப்பு பெறாதவர்கள் எல்லாம் மதம் மாறினால் அறிவில்லாதவர்கள், பணத்துக்காக மாறுகிறார்கள் என்கிறார்கள். இதென்னய்யா நியாயம்? ஏழைகளின் ஏழ்மையை,அவர்களின் கல்வியறிவை  இப்படியா கொச்சைப் படுத்துவது?. எல்லோரும் அவரவர் அறிவுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கிறார்கள். இதுல யார் அறிவாளி, யார் பணக்காரன் என்று யார் வரையறுப்பது?

இப்படி அறிவாளிகளை,பணக்காரர்களை எல்லாம் இவர்கள் வரையறை செய்தாலும் கூட, மெத்தப் படித்த பட்டதாரிகள் எண்ணற்ற பேர் மதம் மாறி இருக்கிறார்கள்.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை நாத்திக மேடைகளில் செலவு செய்த, பெரியார் மீதுள்ள பற்றால் அவரது கருத்துக்களில் உள்ள ஈர்ப்பால், தன் பெயரையே மாற்றிக் கொண்ட அய்யா பெரியார் தாசன் பௌத்தத்தை ஏற்றார். இறுதி நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நன்கு படித்தவர்.முனைவர் பட்டம் பெற்ற நபர். அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றிவர். உளவியலில் பட்டம் பெற்றவர். அறிவில்லாத நபரா? ஏழையா?ஏமாளியா இருப்பாரோ:)

எவராவது பணம் கொடுத்து மதம் மாற்றினால் கட்டாயம் அது தவறு. அதே வேளையில் மதம் மாறும் எல்லோருமே பணத்துக்காக மதம் மாற்றப் படுகிறார்கள் என்ற ஒற்றை வாதம் முற்றிலும் தவறு!

இசைஞானி இளையராஜா இந்து மதத்தை ஏற்றவர். பக்தி மார்க்கத்தில்,இறை வழிபாடுகளில் தீவிரமாக இருப்பவர். எத்தனையோ இந்து பக்தி பாடல்களை தந்தவர்.திருவாசகத்துக்கு இசை அமைத்தவர்.இன்று அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை இவரும் வெறும் பணத்துக்காக தான் மதம் மாறி இருப்பாரோ:) ரொம்ப ஏழையோ! என்ன சொல்வார்கள்?

அன்பார்ந்த நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மதம் மாறுவது தனி நபர் விருப்பங்கள். அதற்கு அளவுகோல் வேண்டியதில்லை. அதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க வேண்டியதும் இல்லை. விமர்சனங்களும் தேவையில்லை.

பிறப்பால் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்த்தவர் என்றாலும் கூட, இன்றைக்கு தங்கள் மத நம்பிக்கைகளை விட்டு விட்டு, இறை மறுப்பாளர்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் ஏராளமான இளைஞர்களை இணையத்தில் பார்க்க முடிகிறது! இப்படியான இளைஞர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். இறை மறுப்பாளர்களாக இருப்பது அவர்களின் உரிமை என்பது போலவே,யாரை கடவுளாக ஏற்பது என்பதும் தனி மனிதர்களின் உரிமை.

இந்து மதத்தில் இருந்து கிறித்துவம் அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். மதம் மாறியதற்காக அவர்களுக்கு இழைக்கபப்டும் அரசியல் அநீதியை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தலித்துக்கள்,இந்துக்களாக இருந்தால் பட்டியல் இனத்தில்(SC) சேர்க்கப் படுவதும், அவர்களே கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால், பட்டியல் சாதிப்பிரிவு மறுக்கப்பட்டு, நேரடியாக பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு(BC) மாற்றப்படுவதும் ஒரு மாபெரும் அநீதி!இது காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.இது எப்படி என்பது மட்டும் இன்று வரை விளங்கவில்லை.

ஆனால் இந்த அநீதிகளையும் மீறி,தலித்துக்கள் மற்ற மதங்களை ஏற்காமல் இல்லை.அப்படிப் பார்த்தால் என்னைப் பொறுத்த வரையில் மதம் மாறுவதால் ஏகப்பட்ட பொருளாதார இழப்பு தான் அவர்களுக்கு!

ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால், நன்றாக படிக்கும் ஒரு தலித் மாணவன் கிறித்துவனாக இருந்தால்,அவனுக்கு கிடைக்க வேண்டிய அரசு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்காமல் போகலாம். காரணம் பட்டியல் சாதிக்கு பதில் அவன் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு திணிக்கப் படுகிறான். அவன் கட்டாயம் மருத்துவம் படிக்க விரும்பினால்,இன்றைக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு மருத்துவ இடத்தின் விலை நாற்பது ,ஐம்பது லட்சத்துக்கு மிகாமல்! இந்த ஐம்பது லட்ச நட்டத்தை,அவனது இலட்சியத்தை யார் ஈடு செய்வது?

மதம் மாறுவதால் ஏற்படும் இந்த சாதிய பாகுபாட்டு அநீதி என்பது கல்வியைப் பொறுத்த வரையில்,அரசு பணிகளைப் பொறுத்த வரையில் தலித்துக்களுக்கு ஒரு மாபெரும் இழப்பு என்றே சொல்ல இயலும்!

பட்டப்படிப்பு படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளும் இல்லை,படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.அவரவர் அறிவுக்கு ஏற்ப எடுக்கும் தனி நபர் சார்ந்த முடிவுகளில்,

உரிமைகளில் தலையிட நமக்கு உரிமை இல்லை.

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

சனி, 8 பிப்ரவரி, 2014

திருக்குறளைப் போற்றும் அய்யா சகாயம்!


திருக்குறளைப் போற்றும் அய்யா சகாயம்!

அய்யா சகாயம் குறித்து ஒவ்வொரு முறையும் வாசிக்கும் தகவல்கள், அவர் குறித்த பேச்சுக்கள் எல்லாம் உண்மையில் மிகுந்த மகிழ்வைத் தருகிறது.தமிழ் நாட்டு மாவட்ட ஆட்சியர்களில் பெரும்பான்மை அய்யா சகாயம் போல இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அய்யா சகாயம் போல நூறு சதவிகிதல் இல்லாவிட்டால் கூட ஒரு ஐம்பது விழுக்காடு அய்யா சகாயத்தின் குண நலன்கள் உள்ள ஆட்சியாளர்கள் இருந்தால் தமிழ்நாட்டில் விவசாயம், நெசவு தொழில் மற்றும் அனைத்து சிறு தொழில்களும் செழிக்கும். நமக்கு உணவளிக்கும் விவசாயிகளும்,உடை அளிக்கும் நெசவாளர்களும் மகிழ் வேண்டும் என்றால் கட்டாயம் அதற்கு சகாயம்கள் தான் சரியான நபர்களாக இருக்க முடியும்.

தமிழ் படிச்சு என்ன செய்யப் போறீங்க? தமிழ் உணர்வால் என்ன செய்து விடப் போறீங்க? தமிழ் தமிழ் என்று ஏன் எப்போதும் கூச்சல்?இப்படியான கேள்விகளை அடிக்கடி கேட்க முடியும்.

இன்னும் பலருடைய பேச்சுக்களில்,உரைகளில் எல்லாம் உதாரணத்துக்கு அவர்கள் அழைப்பது ஆங்கில அறிஞர் அவர் இப்படி சொல்லி இருக்கிறார், பிரெஞ்சு அறிஞர் இவர் இப்படி சொல்லி இருக்கிறார் என்றே உதார் உதாரணங்களை எல்லாம் மக்கள் மத்தியில் சொல்லுவார்கள். அறிஞர்கள் எந்த மொழியில் இருந்தாலும் போற்றப் பட வேண்டியவர்களே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நம்ம பயலுக அப்படியான உதார் உதாரணங்களை அவ்வப்போது சொல்வதற்கு ஒரு காரணம் தான் அப்படியான உலக அறிஞர்களின் புத்தகங்களை மட்டுமே வாசிப்பது போல ஒரு பாவனையும்,விளம்பரமும் என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.உலக அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படியுங்கள் நல்லது தான், ஆனால் தமிழில் எவருமே அப்படியான கருத்துக்களை இதுவரைசொல்லவில்லை என்று மட்டும் கண்ணை மூடிக் கொண்டு கனவு காணாதீர்கள். ஒருவேளை நீங்கள் அப்படியானவற்றை படிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் எண்ணிக் கொள்ளுங்கள்.எல்லோரையும் அப்படி சொல்லவில்லை! ஆனால் இப்படியும் ஒரு பெரும்பான்மை கூட்டம் இருக்கிறது!

உலக அறிஞர்கள் சொன்ன பல விடயங்களை ஒன்றே முக்கால் அடியில் மிகத் தெளிவாக சொல்லி விட்டு போய் இருக்கிறார் அய்யன் திருவள்ளுவன்! எதைப் பற்றி உங்களுக்கு விளக்கம் வேண்டும், தெளிவு வேண்டும்? பெரும்பான்மயான பல விடயங்களுக்கு விளக்கம் தருகிறது திருக்குறள். ஆனால் அதைப் படித்துப் பார்க்கத் தான் நம்மவர்களுக்கு நேரம் இல்லை! அல்லது அதன் மீதான மரியாதை தெரியவில்லை.

நாளை யாரோ ஒரு வெளிநாட்டு அறிஞன், தன்னுடைய பேச்சில் திருக்குறளை குறிப்பிட்டால், வள்ளுவரை சிலாகித்து பேசினால், அப்புறம் நம்ம ஊரில் இருந்து கொண்டு வள்ளுவனை கண்டு கொள்ளாமல், உலக அறிஞர்களை பற்றி மட்டுமே பேசும் அம்புட்டு பயலும் திருக்குறளை படிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்.யார் கண்டா?

ஆனால் சிறு குழந்தைகளுக்கு திருக்குறளை, அதன் விளக்கத்தை எப்படி சொல்லி கொடுக்கலாம் என்று சிந்தித்து கோ ஆப் டெக்ஸ் படுக்கை விரிப்புகளிலும்,தலையணை உரைகளிலும் திருக்குறளை பதிக்க சொல்லி வியாபாரத்தில் புதிய உத்திகளை புகுத்தும் அய்யா சகாயத்துக்கு எப்படி நன்றி சொல்லுவது?

இது வெறும் வியாபார உத்தி அல்ல. வெறும் வியாபார உத்தியாக மட்டுமே இருக்கும் என்றால்,படுக்கை விரிப்புகளில் அழகான இயற்கை காட்சிகள், பிரபலங்களின் புகைப்படங்கள்,ஆங்கிலப் பொன்மொழிகள் (காரணம் பொன் மொழிகளைக் கூட ஆங்கிலத்தில் தான் பிள்ளைகள் படிக்க வேண்டும் அது தான் பெருமை என்ற மோகம் உள்ள காலம் இது) என்று சிந்தித்து இருக்கலாம்.ஆனால் வியாபாரம் ஒரு புறம் இருந்தாலும் கூட, நம் குழந்தைகள் திருக்குறளை படிக்க வேண்டும் என்ற உயரிய சமூக சிந்தையும், அதைப் போலவே திருக்குறளை நாம் பெருமைப் படுத்தா விட்டால் எவன் பெருமைப் படுத்துவான் என்ற அவரது எண்ணமும்,உண்மையில் அய்யா சகாயத்தின் மீதான மதிப்பை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே செல்லுகிறது!

ஒருவேளை வெறும் திருக்குறளை மட்டும் படுக்கை விரிப்புகளில் எழுதி இருந்தால் நம்மவர்கள் புறக்கணித்திருக்க கூடும். மாறாக மக்கள் விரும்பும் வகையில் திருக்குறள் வாசகத்தோடு,மக்கள் ரசனைக்கு ஏற்ப அதற்கு பொருத்தமான நல்ல காட்சிப் படுத்தலையும் சேர்த்தே தந்திருக்கிறார்!

சரி! அய்யா சகாயம் அவர்கள் எப்படியான நபர் என்றால் ஒரு செவ்வியில் அவரே சொல்லியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.மதுரையில் இருந்து சென்னைக்கு பணி மாற்றம். குடும்பத்தை மதுரையில் விட்டு விட்டு நான் மட்டுமே சென்னைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறேன். மாவட்ட ஆட்சியருக்கு வழங்கி இருந்த வீட்டில் தங்கி இருந்தேன். முதல் நாள் காலையில் குளித்து விட்டு வெளியே வரும் போது போது தான் கவனிக்கிறேன்.
குளியலறையின் வெளியே போடப்பட்டு இருக்கும் கால் விரிப்பில், வெல்கம் என்ற ஆங்கில வரவேற்பு வாசகம் எழுதி இருந்தது. எனக்கு ஒரே சிரிப்பு!அதென்னடா! நம்ம வெள்ளைக்கார துரையா என்ன? நம்மை ஏன் ஆங்கிலத்தில் வரவேற்க வேண்டும்?உடனே உதவியாளரை அழைத்தேன். இங்கே விரிக்கப்பட்டு இருக்கும் அத்தனை கால் விரிப்புகளையும் உடனே மாற்றி விட்டு, தமிழில் நல்வரவு என்று எழுதப்பட்ட விரிப்புகள் வேண்டும் என்று சொன்னேன் என்றார்.இது தான் சகாயம். அவரது மொழிப்பற்றுக்கு இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு!

நம் குழந்தைகளுக்கு கட்டாயம் திருக்குறளை சொல்லிக் கொடுப்போம்!முதலில் அதைப் படிக்கட்டும் அவர்கள்.!


படுக்கை விரிப்பில் உள்ள குரள், மிகச் சிறந்த திருக்குறள்! சிறு குழந்தைகளுக்கு மட்டும் அல்ல.இது அனைத்து சிறிய,பெரிய குழந்தைகளுக்கும் பொருத்தமான குறள்:)

வாழ்த்துக்கள் அய்யா சகாயம்!
வாழ்க தமிழ்!


அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

சவுக்கு சங்கருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!


சவுக்கு சங்கருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

கிட்டத்தட்ட நான்கு,ஐந்து ஆண்டுகளாக சவுக்கு தளம் எனக்கு பரிச்சயம். இன்னும் சொல்லப்போனால் சவுக்கு தளம் ஆரம்பித்தே ஐந்து ஆண்டுகள் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.ரொம்ப மிரட்டலாக,அசாத்திய துணிச்சல் மிக்க தளமாக தான், நான் சவுக்கு தளத்தை முதலில் பார்த்தேன்.அந்த அளவுக்கு அதி நுட்பமான பல தகவல்கள்.எந்த வெகு ஜன ஊடகங்களிலும் வராத செய்திகள் அவை.நண்பர்கள் பலரிடம் அந்த தளத்தைப் பற்றி சிலாகித்து பேசியதுண்டு.
பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததுண்டு.என்னைப் போன்றே நீண்ட நெடிய காலமாக சவுக்கு தளத்தை வாசிக்கும் ஏராளமான என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

காவல்துறை, நீதித் துறை ,லஞ்சம் ஊழல் சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் அங்கே நான் படித்ததுண்டு. பல்வேறு அரசியல் தலைவர்களின் அட்டூழியங்களை,அயோக்கியத்தனங்களை எல்லாம் புட்டு புட்டு வைப்பார் சங்கர்.என்னால் மறக்க முடியாத ஒரு வாக்கியம் எதுவென்றால், தளம் ஆரம்பித்த புதிதில்,தளத்தின் ஒரு பக்கம் கருணாநிதியின் ஆட்சி முடிய எத்தனை நாட்கள் என்று ஒரு வாசகத்தோடு கூடிய நாட்காட்டி இருக்கும்.ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இப்போது நினைத்து பார்த்தாலும் எனக்கு சிரிப்பு வரும்,அந்த அளவுக்கு நக்கல் நையாண்டியோடு கூடிய தீர்க்கமான சிந்தனை அது.

கருணாநிதியுன் குடும்பத்தை கடுமையாக சேதப்படுத்தியில், அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேய்ந்ததில், ஊழல்கள் , அட்டூழியங்களை எல்லாம் வெளிக் கொண்டு வந்ததில் சவுக்குக்கு முக்கிய பங்கு உண்டு,ஜாபர்சேட்டுக்கும், சவுக்குக்கும் ஏற்பட்ட பழி தீர்க்கும் படலம் ஆரம்பித்த நாட்களை எல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.அந்த பதிவுகள் எல்லாம் ஆண்டுகள் பல ஆன போதும் கூட,மனதில் அப்படியே பதிந்து விட்டது.ஜாபர்சேட் கட்டிய புதிய அடுக்கு மாடி வீடு எப்படி, பணம் எப்படி வந்தது என்று எங்கெல்லாமோ துருவி துருவி தகவல்களை எல்லாம் புட்டு புட்டு வைத்தார் சங்கர்.

நீதிபதிகள் செய்யும் அட்டூழியங்கள், ஊடகத்துறை அட்டூழியங்கள், காவல் துறை அட்டூழியங்கள், போலி என்கவுண்டர், காவல்துறை உயர் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம், பெரும் முதலாளிகளின் கொள்ளைகள்,அரசு ஊழியர்கள் வாங்கும் லஞ்சம், தேர்தல் அதிகாரிகளின் முறைகேடுகள், மோடி போன்ற பல பிரபலங்களின் முகத்திரையை கிழித்தல் இப்படி எல்லா தரப்பு தகவல்களையும் ஆதாரத்தோடு திரட்டி எழுதுவார்.லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றியதால்,காவல்துறை மற்றும் நீதித்துறை சம்மந்தப்பட்ட பதிவுகள் ஏராளம்.இன்னும் சொல்லப் போனால் காவல்துறை மற்றும் நீதித்துறை சார்ந்த நபர்களின் பணி இடமாற்ற தகவல்களை இணையங்களில் ஆதாரப் பூர்வமாக முதலில் வெளியிடும் நபர் சங்கராகத் தான் இருக்கும்.

எண்ணற்ற சர்ச்சைகள் இவர் மீது உண்டு. சன் தொலைக்காட்சி ஊழியர் குறித்த சமீபத்திய பதிவுகள் ஏகப்பட்ட சர்ச்சைகளை உருவாக்கியது. மற்றபடி எப்போதும் கருணாநிதி குடும்பத்து சிக்கல்களை,ஊழல்களை சந்தி சிரிக்க வைப்பதில் சவுக்கு என்றைக்குமே சவுக்கு தான்! சவுக்கை அடிச்சுக்க ஆளே இல்லை. கருணாநிதி வீட்டு சமாச்சாரங்கள் சவுக்குக்கு லட்டு திங்கிற மாதிரி:)

அலைக்கற்றை புகழ் கனிமொழி மற்றும் ஜாபர் சேட்டின் உரையாடல்களை எல்லாம் சமீபத்தில் முழுமையாக கேட்ட பிறகு அப்படியே ஆடிப் போயிட்டேன்!ஜாபர்சேட்டின் பேச்சுக்களை பார்த்தால்,காவல்துறை என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.கருணாநிதி மகள் கனிமொழியா! எப்பா சாமிகளா கருணாநிதியையே வித்துட்டு வந்து விடுவாள் போலிருக்கிறது கனிமொழி!

ஸ்டாலின், அழகிரி எல்லாம் இவளிடம் தான் ஊழல் வியாபாரம் படிக்க வேண்டும் போலிருக்கிறது. கனிமொழியின் ஆத்தா ராசாத்தி அம்மா கொள்ளை அடிக்க சரியான ஆளாகத் தான் இருப்பார் போலிருக்கிறது!ஆத்தாளையும் மகளையும் விட்டா,ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே விற்று விடுவார்கள் போல இருக்கிறது! முன்னொரு காலத்தில் சவுக்கு எழுதிய தொழிலதிபர் ராசாத்தி அம்மாள் கட்டுரை எல்லாம் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து போகிறது, அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ்-இன் முன்னூறு கோடி சொத்தை முழுசாக முழுங்க வேண்டும் என்று ராசாத்தி அம்மாள் செய்த அட்டூழியங்கள், வியாபார பேரங்களை எல்லாம் சவுக்கு எழுதியதை எண்ணிப் பார்த்து விட்டு, அதோடு அலைக்கற்றை ஊழலை பொருத்திப் பார்த்தால் ரொம்ப சரியாத் தான் இருக்கு. ஒன்னும் சொல்வதற்கு இல்லை.ஒட்டு மொத்த குடும்பமும் கழிசடை பய குடும்பமா இருக்கும் போலேயே!

இவிங்க அடிக்கிற கொள்ளைப் பணத்தை எல்லாம் சாகும் போது இவிங்களோட கட்டி அனுப்பியா விடப் போறானுங்க? எத்தனை தலைமுறைக்கு சேர்த்து வைக்கிறார்கள்? மானம் கெட்ட பயலுக! பேராசைக்கு ஒரு அளவு வேண்டாமா? இதுல கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்ட இருநூறு கோடி ரூபாயை வட்டியோடு திருப்பி கொடுத்து விட்டோம் என்று செய்தி கொடுப்போம்.மக்கள் நம்புவார்களாம்.தமிழ்நாட்டு மக்கள் நல்ல இழிச்சவாய் பயலுகன்னு நெனச்சுகிட்டு மக்கள் நம்புவாங்கள் என்று நக்கல் நையாண்டி வேற!

அரசியல் களத்துல இருந்து இந்த பயலுக ஒழிக்காமல் விடக் கூடாது! திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்த கூட்டம் இன்றைக்கு ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முக்கிய இடம். எங்க போய் சம்பாதித்து கழட்டினார்கள்? அரசியலைத் தவிர வேறென்ன வியாபாரம் செய்தது இந்த குடும்பம்,ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் வருவதற்கு?

பல நேரங்களில் சவுக்கு ஒரு சார்பாக செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றும். சவுக்கின் எண்ணங்கள் சிலவற்றில்,முரண்பட்ட கருத்துக்கள் நமக்கு உண்டு. அதற்கு ஒரு காரணம் ஜெயலலிதாவின் மூன்று முறை ஆட்சியில் நடந்த கொள்ளைகள்,அட்டூழியங்கள் குறித்த தீர்க்கமான கட்டுரைகளை நான் அதிகம் படித்ததில்லை. சசிகலா குடும்பம் மற்றும் மன்னார்குடி மாபியா என்று பிரித்து மேய்ந்தது எல்லாம் ஞாபகத்தில் உண்டு. அய்யா நடராசன் அவர்களை விளாசு விளாசு என்று விளாசித் எல்லாம் ஞாபத்தில் உண்டு. கருணாநிதி குடும்பம் அளவுக்கு, ஜெயலலிதாவின் மீதும் ஏகப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள் கட்டாயம் உண்டு. கருணாநிதி குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்தது போலவே,கூடிய விரைவில் ஜெயலலிதா ஆட்சியின் அட்டூழியங்களை எல்லாம் சங்கர் புட்டு புட்டு வைப்பார் என்று நம்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாதிரியான கட்டுரைகளை எழுத ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். உயிர் பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் எல்லாம் இருக்கின்றன.

உண்மைகளை, ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை எல்லாம் சாதாரணமாக வெளியில் சொல்ல முடியாத சூழல் தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் நிலவுகிறது.வெகு ஜன காட்சி ஊடகங்கள், பத்திரிக்கை ஊடகங்கள் கூட இது போன்ற ஊழல்களை எழுத மாட்டார்கள். காரணம் ஊடகங்களே அயோக்கியத் தனங்களை தான் செய்கின்றன.ஊடக முதலாளிகளில் பெரும்பான்மை அயோக்கியனும் மொள்ளைமாறியும் தான். அப்புறம் எப்படி அவன் ஊடகம் மட்டும் ஊழல், லஞ்சம் பற்றி பேசும்?வெகு ஜன ஊடகங்களில் வராத,பல அரிய தகவல்களை எல்லாம், சவுக்கு தளத்தின் மூலமாக என் போன்ற பலர் அறிந்திருப்பார்கள்.

தவறாக தற்காலிக பணி இடை நீக்கம் செய்ப்பட்டு இருக்கும் சங்கருக்கு, மீண்டும் அதே அரசு லஞ்ச ஒழிப்பு துறையில் வேலை கிடைக்க வேண்டும். அதற்காக அவர் தொடர்ந்திருக்கும் வழக்கில் அவர் வெல்ல வேண்டும்.

தற்போதைய தமிழ்நாட்டு வெகு ஜன ஊடகங்களில்,பெரும்பான்மை பத்திரிக்கையாளர்களுக்கு இல்லாத வலுவான முதுகெலும்பு சங்கருக்கு இருப்பதற்காக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

பத்திரிக்கையாளர்கள் பலர் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விடயங்கள் உண்டு!இறைவன் சங்கருக்கு நீடிய ஆயுளைத் தரட்டும்!

வாழ்த்துக்கள் சங்கர்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

வியாழன், 6 பிப்ரவரி, 2014

மொழிப்பற்றும்,இனப்பற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் மட்டும் தானா?


மொழிப்பற்றும்,இனப்பற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் மட்டும் தானா?

கடந்த வாரம் நாம் எழுதிய ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்வு குறித்த பதிவு அதிகமான நபர்களால் கவனிக்கப்பட்டது. சிலரால் பாராட்டப் பட்டது. பலரால் விரும்பவும், பகிரவும் பட்டது. இன்னொரு முக்கியமான விடயம்,முகநூல் நட்பு வட்டத்தில் இல்லாத பலர் கூட, நம் பக்கத்துக்கு வந்து அந்த பதிவை விரும்பி இருந்தார்கள்.பகிர்ந்து இருந்தார்கள். நம் வலைப்பூவிலும் கூட,அந்த பதிவு பெரும்பாலான மக்களால் பார்க்கப் பட்டு இருக்கிறது!சின்ன மகிழ்ச்சி தான்! என்ன காரணம் தெரியுமா? நம் மன நிலையில் பலர் இருக்கிறார்களே என்பதால்!

அந்த பதிவுக்கான கவனிப்பு அல்லது விரும்பப் பட்டதற்கான காரணமாய் பல இருந்தாலும் கூட பெரும்பான்மை மக்களுக்கு திவாகர் என்ற ஒரு தமிழன் அந்த போட்டியில் வென்றான் என்பது தான் முதன்மை காரணம்.திவாகரின் திறமைக்கு குறைவே இல்லை. அதையும் தாண்டி அவரது குடும்ப சூழல் பலர் அறிந்திருக்க கூடும். அது மட்டுமல்ல, இறுதிப் போட்டியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர் அல்ல.இப்படி பல காரணங்கள்.

அதையும் தாண்டி பாடிய மலையாளி பெண்கள் இருவருக்கும் பரிசு கிடைக்க கூடாது என்ற கருத்தையும் பரவலாக காண முடிந்தது. அதற்கும் பல காரணங்கள் உண்டு. பொதுவாகவே சூப்பர் சிங்கர் நிகழ்வுக்கு வரும் நடுவர்களில் பெரும்பான்மை மலையாளிகள்.அவர்களுக்குள் இருக்கும் ஒரு வித நுட்பமான பிராந்திய அரசியல் மட்டுமல்ல இந்த பெண்கள் ஏற்கனவே கேரளாவில் பாடி பரிசு பெற்றவர்கள் தானே என்று பல காரணங்கள் இந்த வெறுப்பை கொண்டு வந்திருக்கலாம்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி எல்லோருடைய மனதிலும் ஒரு தமிழன் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது மட்டும் உண்மை என்பதை நம் பதிவுக்கு இருந்த ஆதரவை வைத்துஉணர்ந்து கொள்ள முடிந்தது.இந்த உணர்வு பாராட்டத் தக்கது தான்.மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் என்னுடைய கேள்வி மிக எளிது!

ஒரு கேளிக்கை நிகழ்வில் இருக்கும் தமிழன் என்கிற உணர்வு,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடக்கும் மட்டைப் பந்து போட்டியில் சிங்களன் தோற்க வேண்டும் என்ற உணர்வு(இந்தியன் என்ற பொது உணர்வைத் தாண்டிய தமிழன் உணர்வு)பிற மாநிலங்களில்,தமிழ் திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் அல்லது தடை என்றால் ஏற்படும் உண்மையான தமிழ் உணர்வும் இன உணர்வும் எங்கே வர வேண்டும் அல்லது வந்திருக்கக் வேண்டும்?

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நம் தமிழ் உணர்வு வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தமிழன் என்கிற உணர்வும் ஆவேசமும் வர வேண்டும்.

காவிரி நதி நீர் சிக்கலில் தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

ஈழத் தமிழர் சிக்கலில் தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பதில் தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

மரபணு பயிர் மாற்ற எதிர்ப்புக்கு தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

இயற்கை விவசாயத்துக்கும், விவசாயிகளின் போராட்டங்களிலும் வர வேண்டும் தமிழன் என்கிற உணர்வு!

அன்றாட மீனவர் படுகொலையில் வர வேண்டும் தமிழன் என்கிற உணர்வு.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் காட்ட வேண்டும் நம் இன உணர்வை!

மீத்தேன் எடுப்பதை,தடுக்கும் போராட்டங்களில் காட்ட வேண்டும் நம் தமிழ் உணர்வை!

மூவர் தூக்கை தடுத்து நிறுத்தும் போராட்டங்களில் காட்ட வேண்டும் நம் தமிழ் உணர்வை!

தமிழன் என்ற உணர்வு,எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் எது முக்கியம் என்ற தர வரிசைப் பட்டியல் ஒன்று இருக்கும் அல்லவா! அப்படிப் பார்த்தால் நம் இன உணர்வும் மொழி உணர்வும் தமிழர்களின் உண்மையான போராட்டங்களில் தான் அதீதமாக வெளிப்பட வேண்டும்!

ஆனால் வேடிக்கை என்னவென்றால்,இது குறித்து என்னென்ன பதிவுகள் யாரெல்லாம் எழுதினாலும், என்னென்ன தகவல்களை தேடித் தேடி எழுதினாலும் கேளிக்கை சார்ந்த பதிவுகளுக்கு வரும் ஆதரவில் பத்து இருபது விழுக்காடு கூட இந்த மாதிரி பதிவுகளுக்கு வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால் அப்படியான பதிவுகளை கவனிக்கவே மறுக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மை.சினிமா குறித்தும், மட்டைப் பந்து குறித்தும் , சினிமா நடிகன் குறித்தும் எழுதினால் அமோக ஆதரவு! எதை படிக்க வேண்டும், எதை ஆதரிக்க வேண்டும் என்பது அவரவர் சுய விருப்பம் சார்ந்தது தான். மறுப்பே இல்லை. ஆனால் எது சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்பதை சொல்வதும் நம் உரிமை.

பாடல் போட்டியில்,மலையாளி நடுவர்கள் சிலர் செய்யும் நுண்ம அரசியல் நம் கண்களுக்கு நேரடியாக தெரிந்து விடுகிறது. ஆனால் இந்திய அரசின் உயர் பதவிகளில் இருந்து கொண்டும்,இந்திய அயலுறவு உயர் அதிகாரிகளாக இருந்து கொண்டும்,சிங்களனுக்கு ஆதரவு தெரிவித்த,விடுதலைப் புலிகளை அழிக்க பெரிதும் உதவிய சிவ சங்கர் மேனன்கள்,
நம்பியார்கள் செய்யும் நுண்ம அரசியல் நம் கண்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.முல்லைப் பெரியாற்று சிக்கலில் மலையாளிகள் செய்யும் அரசியல் நம் கண்ணுக்கு தெரியாமல் போய் விடுக்கிறது.கன்னியாகுமரி, நாகர்கோயில் ரயில்களை கேரளா கோட்டத்தில் இருந்து பிரித்து அதை மதுரையுடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையில் அதைத் திட்டமிட்டே தடுக்கும் மலையாளிகள் அரசியல் நமக்கு புரிவதில்லை.அணு உலைகளை கேரளாவில் கட்டக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் மலையாளிகளுக்கு, கூடங்குளம் மின்சாரம் மட்டும் பங்கு வேண்டும் என்பதில் இருக்கும் மலையாளி அரசியல் நமக்கு புரிவதில்லை.உண்மையான தமிழன் என்கிற உணர்வு இப்படியான தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் இருக்க வேண்டும்.

ஆனால் பாவம்,நமது இன உணர்வை வெளிப்படுத்தும் இடம் கேளிக்கை நிகழ்வுகளாக மட்டுமே எப்போதும் இருப்பது தான் துரதிர்ஷ்டம். கூடங்குளம் அணு உலைப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் குறித்து எத்தனையோ பதிவுகள் வருகின்றன். ஆனால் அவையெல்லாம் பெரும்பாலானவர்களால் புறக்கணிக்கப்படுகின்றன.கேளிக்கை நிகழ்வுகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை கூட அப்படியான முக்கிய பதிவுகளுக்கு இருப்பதில்லை.

இடிந்தகரையை சுற்றி, ஐம்பது நூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களை சேர்ந்தவர்களில் எத்தனை பேர், எத்தனை படித்த இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை நேரடியாக போய் பார்த்து இருக்கிறோம்? இடிந்தகரைக்கு ஒருமுறையாவது நேரில் சென்றவர்கள் எத்தனை பேர்?இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் அன்றாடம் மக்கள் அந்த போராட்டத்தை பார்க்க வருகிறார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்களில் எத்தனை பேர் அந்த போராட்டத்தை நேரடியாக சென்று பார்த்து இருக்கிறோம்? மக்களுக்காக போராடும் அண்ணன் உதயகுமாரும், மற்ற போராட்ட உறுப்பினர்களும் யார் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்?

யாருக்காக இந்த மக்கள் போராடுகிறார்கள்இடிந்தகரைக்காக மட்டுமா? ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களுக்காகவும் சேர்த்து தான் அவர்கள் போராடுகிறார்கள்.படித்த அத்தனை இளைஞர்களும்,போய் பார்க்க வேண்டிய இடம் இடிந்தகரை. கடலோர மாவட்டங்களில் உள்ள படித்தவர்கள், இளைஞர்கள் போய் சந்திக்க வேண்டிய நபர்கள் அண்ணன். உதயகுமாரும், அணு உலை எதிர்ப்பு போராட்ட உறுப்பினர்களும்!

என் கோபம் நம் பதிவுகளை எத்தனை பேர் விரும்பி இருக்கிறார்கள்,எத்தனை பேர் பகிர்ந்து இருக்கிறார்கள் என்ற கணக்கு சார்ந்தது அல்ல.நம் பதிவுகள் அதிமான மக்களால் விரும்பப் படுவதாலோ அல்லது பகிரப்படுவதாலோ நமக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.ஒரே ஒரு சிறிய அங்கீகாரத்தை தவிர.இது நம் பதிவுகளுக்கு மட்டும் அல்ல. பரவலாக பலரது பதிவுகளிலும் கவனித்த விடயம் தான்!எந்த பதிவு மக்களால் அதிகம் விரும்பப் படுகிறது என்று பார்த்த போது,"ஊறுகாய்" போன்ற கேளிக்கை சார்ந்த பதிவுகளுக்கு இருக்கும் ஆதரவில் பத்து விழுக்காடு கூட,முக்கிய "சாப்பாடு" என்ற மக்கள் நலன் சார்ந்த, தமிழின போராட்டம் சார்ந்த பதிவுகளுக்கு இருப்பதில்லை என்பது தான் மிகவும் வருத்தம்!

பதிவுகள் மற்றவர்களின் விருப்பங்களுக்காக அல்லது மற்றவர்கள் விரும்ப வேண்டுமே என்று ஒருபோதும் எழுதப்படுவதில்லை.சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பாற்பட்டு,அவை எப்போதும் நம் விருப்பம் மற்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பு மட்டுமே!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

சாமி படங்களுக்கு பணிந்த மாமனிதர்கள்!


சாமி படங்களுக்கு பணிந்த மாமனிதர்கள்!

பெங்களூர் அழகிய பூங்கா நகரம் என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.பணி ஓய்வு பெற்ற முதியவர்களுக்கு ஏற்ற நகரம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட பெங்களூரை பலர் விரும்புவதற்கு முக்கிய காரணம் தட்ப வெப்ப நிலை.அதிக வெயில் கிடையாது.எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் என்று பல அம்சங்கள் உண்டு. ஆனால் சமீப காலங்களில் நகரத்தின் அமைப்பே மாறி போய் இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி கட்டிடங்கள், வாகன நெரிசல், குப்பைகள் என்று எல்லா வகையிலும் பெங்களூர் சிதைந்து போய் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கும் முன்பு இருந்த தட்ப வெப்ப நிலை இப்போது இல்லை. தட்ப வெப்ப நிலையில் ஒரு அதீத மாற்றம் என்றே சொல்லலாம். அனேக இடங்களில் குப்பைக் கூளங்களை பார்க்க முடிகிறது. சுத்தமற்ற நகரமாக மாறிக் கொண்டே இருக்கிறது.பூங்கா நகரம் குப்பை நகரமாக மாறி வருவதாக பெங்களூர் மக்கள் அலுத்துக் கொள்வதுண்டு!ஆனாலும் கூட இவை எல்லாவற்றையும் தாண்டி, எங்களைப் போன்றோர்களுக்கு பெங்களூர் இன்னும் அழகாகவே இருக்கிறது:) அது வேறு:)

பெங்களூரில் நாங்கள் வசிக்கும் பகுதியில்,இரண்டு மூன்று அழகிய பூங்காக்கள் உண்டு. ரொம்ப பெரிய பூங்கா இல்லை. ஒரு நானூறு மீட்டர் அல்லது ஐநூறு மீட்டர் நீளம் கொண்ட பூங்காக்கள். மக்கள் தங்கள் நடைப் பயிற்சி செய்ய, மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாட என்று இந்த பூங்காக்கள் ஓரளவுக்கு சுறு சுறுப்பாகவே இருக்கும்.பூங்காக்களை சுற்றி பெரிய பெரிய வீடுகள். பெரிய அரசியல்வாதிகள் பலர் குடி இருக்கிறார்கள், தொழிலதிபர்கள் என்று, வீடுகளையும், அவற்றில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர் பலகைகளையும் பார்த்தால் புரியும்.

நம் வீட்டுக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு பூங்காக்களின் ஓரத்தில்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வந்த வண்ணமே இருந்தார்கள்.நானும் தொடர்ந்து இதை கவனித்து வந்ததுண்டு. பல நேரங்களில் இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்கள் என்று அறிவிப்பு பலகைகள் இருக்கும்.ஆனால் நம்ம மக்கள் தான் சிக்கலானவங்க ஆச்சே....அறிவிப்பு பலகைக்கு மேலேயே குப்பையை கொட்டி தன்னுடைய அகங்காரத்தை பதிவு செய்வான்.

சில நேரங்களில் அறிவுப்போடு கூடிய எச்சரிக்கையும் இருக்கும். ஆனால் நம்மாளு என்ன செய்வான். அந்த அறிவிப்பு பலகையையே தூக்கி எறிவான்.இப்படியாக இந்த நகைச்சுவை காட்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அரசு துறையில் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களின் வீடுகள் எல்லாம் பூங்காவை சுற்றி இருந்தும் கூட சரியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு யாரோ ஒரு புண்ணியவாளன் அருமையான செயல் ஒன்றை செய்து இருக்கிறார். மக்களின் மன நிலையை சரியாக அறிந்தவன் அவன். அவனுக்கு தெரிந்திருக்கிறது. இவர்கள் அறிவிப்பு பலகைக்கோ எச்சரிக்கை அல்லது நடவடிக்கை என்ற எதற்குமே அஞ்சாதவர்கள்.எனவே குப்பைகளைக் கொட்டும் இடங்களில் இரண்டு மூன்று சாமி படங்களை வைத்து விட்டு போய் விட்டான். வேறு எந்த அறிவிப்போ, எச்சரிக்கையோ இல்லை.அந்த மூன்று சாமிப் படங்களில் இரண்டு நாட்காட்டியில் உள்ள படங்கள். ஒன்று மட்டும் பூஜை அறைகளில் பயன்படுத்தப்படும் சாமி படம்.

ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த பத்து நாட்களாக எந்த குப்பைகளும் அங்கே கொட்டப்படுவதில்லை. மிக சுத்தமாக மாறிவிட்டது பூங்கா பகுதி!

சுற்று புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற சுய புத்தியோ அக்கறையோ இல்லை. சரி அதையும் தாண்டி இங்கே குப்பை கொட்ட வேண்டாம் என்று அறிவிப்பு வைத்தாலும் கேட்கவில்லை.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தாலும் கண்டுகொள்வதில்லை.

இப்படி சக மனிதர்களின் எந்த ஆலோசனையையும் கேட்காத மதிக்காத மனிதர்கள் சாமிப் படத்தை பார்த்ததும் பம்முகிறார்கள்:)நம்ம மக்களுக்கு சில நேரங்களில் இந்த வைத்தியம் தான் சரியாக இருக்கிறது:)

சிறு குழந்தைகள், அவர்கள் வயதில்,பல விடயங்களை புரிந்து கொள்ள இயலாது என்பதால், எதையாவது செய்யாமல் அடம் பிடிக்கும் போது,பெரியவர்களின் பேச்சை கேட்காத போது, சாமி படங்களைக் காட்டி பயமுறுத்துவார்கள். ஆனால் எல்லாம் புரியும் ஏழு கழுதை வயசான பிறகும் கூட, நம்ம பெரியவர்களுக்கு சாமி படத்தை காட்டி தான் பயமுறுத்த வேண்டி இருக்கு:)

எப்படியோ, இரண்டு வருடத்துக்கும் மேலான சிக்கல் அம்பது ரூபாயில் முடிந்தது:)

சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது,நம் ஒவ்வொருவரின் கடமை!

-ஆன்டனி வளன்