செவ்வாய், 23 ஜூன், 2015

கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள்


சாலை விபத்துகள் நடக்க,நம்மூரில் உள்ள மிக மோசமான சாலைகள் தான் முக்கிய காரணமே தவிர, தலைக்கவசம் எல்லாம் ரொம்ப சாதாரண காரணம் தான் என்று பலர் வியாக்கியானம் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டு சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஒரு போதும் மாறப் போவதில்லை.அதற்காக அப்படியே சாலையின் குழியில் விழுந்து செத்துப் போகப் போறீங்களா?
ஐயோ பாவம் தலைக்கவசம் மட்டும் அணிந்திருந்தால் அந்த பையன் கட்டாயம் பிழைத்து இருப்பான்,தலையில் மட்டும் தான் அடி,உடம்புல வேற எந்த ஒரு சிராய்ப்பு கூட இல்லை என்று நாம் கேள்விப்பட்ட, நேரடியாக பார்த்த எத்தனையோ நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் சாலை விபத்து மரணங்கள் பல உண்டு.
போலீஸ்காரர்கள் சம்பாதிக்க தான் இந்த திட்டம் என்று வெட்டிப் பேச்சு பேசாமல்,உங்க உசிரு உங்களுக்கு முக்கியம்னா தலைக்கவசம் அணியுங்கள். வெட்டி விவாதங்கள் வேலைக்கு ஆகாது.நல்லத சொன்னா கேட்டுக்கோங்கடே!
அடிக்கிற நம்மூரு வெயிலுக்கு இந்த தலைக்கவசம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. வேர்வையில் தலை முடி கொட்டிப் போகும் என்று நீங்கள் வருந்தினால், ஒருவேளை தலைக்கவசம் இல்லாவிட்டால் உங்கள் முடி மட்டும் அல்ல, மண்டையும் சேர்த்தே சிதறிப் போகும் வாய்ப்பு இருக்கு பரவா இல்லையா?
விபத்து எப்போ நடக்கும்,எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியாது..நம்ம தப்பா , எதிராளி தப்பா என்றெல்லாம் பேசி பயன் இல்லை.இன்னும் சொல்லப் போனால், நியாயம் பேச நம்ம உசிரோட இருப்போமா என்பதே தெரியாது. நொடிப் பொழுது தான். அதற்குள் எல்லாம் முடிஞ்சு போகும்..போனது போனது தான்..
தலைக்கவசம் என்பது அரசாங்கம் சொல்லாமலே, சட்டம் போடாமலே நாமாக முன் வந்து செய்ய வேண்டிய விடயம்.காரணம் உன் உசிரு உனக்கு தான் முக்கியம்.சாலை விபத்தில் செத்துப் போனா அரசாங்கத்துக்கு மக்கள் தொகையில் ஒன்று குறைவு அவ்வளவு தான். அதிகம் கவலைப்பட உங்க ஊட்டுக்காரங்க தான் இருப்பாங்க. ஊர்க்காரன்,உலகத்துக்காரன் இல்ல.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார்த்தீர்களா, அண்டார்டிகாவைப் பார்த்தீர்களா என்று உதாரணத்துக்கு எடுக்கும் மேதாவிகள், ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.வெள்ளைக்காரன் சாதாரண சைக்கிள் ஓட்டுவதற்கே தலைக்கவசம் இல்லாமல் ஓட்டமாட்டான்.
-ஆன்டனி வளன்

அனைத்துக்கும் தடை சரி தானா?


அனைத்துக்கும் தடை என்று போய்க் கொண்டே இருந்தால் இங்கே சாப்பிட எதுவும் கிடைக்காது! பரவா இல்லையா?
மாகியில் கலப்படம் அல்லது உடலுக்கு கெடுதலான ரசாயனம் என்று தடை பண்ணிட்டீங்க(அதற்குள் எவ்வளவு அரசியல் என்பது யார் கண்டார்) சரி தான்.
உணவுகளில் இருக்கும் தவறான விடயங்களை,சரியான நேரங்களில் கண்டு பிடிப்பதையும்,அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் விட்டு விட்டு, தடை என்று இப்படியே தடை பண்ணிட்டு போனால், நமக்கு சாப்பிட என்ன தான் மிஞ்சும்?
விளைய வைக்கும் நெல்லுக்கு மருந்து மற்றும் ரசாயன உரங்கள். சாப்பிடும் காய் கறிகள், பழங்கள் அனைத்தும் மருந்துகளாலும், ரசாயன உரங்களாலும், கார்பைடுகளாலும் கையாளப்பட்டே நமக்கு வந்து சேருகின்றன.தடை பண்ணலாமா?
தர்பூசணி போன்ற பல பழங்களுக்கு நிறத்திற்காக நேரடியாக ஊசி மருந்துகள் என்று பல புகார்கள்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் கடுகு, மிளகு, பருப்பு வகைகளும் கலப்படமே.மசாலா மற்றும் மஞ்சள் தூள் என்று அனைத்து தூள்களும் அப்படியே.
நாம் சாப்பிடும் பிராய்லர் கோழி மற்றும் இறைச்சிகள் ஊசி மருந்துகளாலே வளர்க்கப்படுகின்றன.
கடல் உணவுகளை சாப்பிடலாமா என்றால்,தொழிற்சாலை கழிவுகள் முதற்கொண்டு,அணு உலை கதிர்வீச்சு,மற்றும் தடை செய்யப்பட்ட பல பொருட்களை கரைக்கும் இடமாக தான் கடல் இருக்கிறது. மீன்களில் நச்சு?
பாலில் கலப்படம் மட்டுமா? அதிக பால் கறக்க வேண்டும் என்பதற்காகவே மாடுகளுக்கு பல வித ஊசிகள், மருந்துகள் என்று செயற்கையான பல வைத்தியங்கள்.மாடுகள் சாப்பிடும் செடிகள், கொடிகள் அனைத்துக்கும் ஏற்கனவே பூச்சுக் கொல்லி மருந்துகள் அடிச்சாச்சு.
நாம் குடிக்கும் குடிநீர் சுத்தமானதா? வெளியே உணவகங்களில் நாம் உண்ணும் உணவுகள் தரமானதா?
எந்த கலப்படமும் இல்லை என்று உறுதியாகக் கூற இயலுமா? பல வியாதிகளை உருவாக்கும், நிறமூட்டிகள் மற்றும் மணமூட்டிகளை பயன்படுத்தாமல் இருக்கிறார்களா? உணவகங்களின் சமையலறைகள் சுத்தமாக இருக்கின்றனவா?பார்த்தால் சாப்பிடவே முடியாது என்கிறார்கள்.
ஆக எல்லாவற்றுக்கும் தடை என்றால் இங்கே என்ன தான் மிஞ்சும்?
குளிர்பானங்கள் அனைத்தும் உடலுக்கு கெடுதி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் உடலுக்கு கெடுதி, மாகி போன்ற துரித உணவுகள் உடலுக்கு கெடுதி.எங்க பாட்டி கால சமையல் முறை தான் சிறந்தது,அது போலவே நாமும் மாறுவோம் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றால் அது நடைமுறை சாத்தியமா?
காலங்கள் வெவ்வேறு.பாட்டி காலம் என்பது கூட்டு குடும்ப காலம். அதெல்லாம் மலையேறி போயாச்சு.இன்றோ கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் சூழல், இரண்டு மூன்று குழந்தைகள், உதவிக்கு எவரும் இல்லாத பெரு நகரத்து சூழல்,இங்கே பாட்டி சமையல் எல்லாம் சாத்தியமா?
வெளிநாடுகளிலும் அனைத்து குளிர்பானங்களைப் பயன் படுத்து கிறார்கள். வெள்ளைக்காரர்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே உண்கிறார்கள்.துரித உணவகங்கள் ஏராளம் அங்கு உண்டு.வார இறுதியில் வணிக வளாகங்களுக்கு சென்று பார்த்தால், அவர்கள் வாங்கும் பொருட்கள் அனைத்துமே பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தான்.
எந்திரமயமான உலக சூழலில், உதவிக்கு எவரும் இல்லாத தனிக் குடும்ப வாழ்வியல் முறைகளில், இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழலில்,நேரமின்மை சிக்கல்களில் துரித உணவுகளை தடை செய்வது சரியா? சாத்தியமா?
என்னங்க பொறுப்பில்லாமல் பேசுறீங்க? துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் தான் அனைத்து உடல் உபாதைகளும் என்றால்,வெள்ளைக்காரன் அம்புட்டு பயலும் அம்பது வயசுக்குள்ள போய் சேரணும். ஆனால் வெளிநாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கிச் செல்லும் எண்பது வயது தாத்தா பாட்டிமார் களை அதிகம் பார்த்ததுண்டு.
மாகி இல்லாவிட்டால் மோடி என்ற பெயரில் ஏதாவது நூடுல்ஸ் வரலாம், அதானி என்ற பெயரில் நூடுல்ஸ் வரலாம் என்பது தான் எதார்த்தம். அவ்வளவு தான்.
சரி என்ன தான் தீர்வு?
நம் உணவுக் கட்டுப்பாட்டு துறை,இங்குள்ள உணவுப் பொருட்களின் தரத்தை சரி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் குறைந்தால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்குமானால் கடுமையான அபராதம்( வெளி நாடுகளைப் போல)விதிக்க வேண்டும். எதற்கும் ஒத்து வரவில்லையென்றால் வேண்டுமானால் கடைசியாக மூடுவிழா நடத்தலாம்.
வெளிநாடுகளில் உணவுக் கட்டுப்பாட்டு துறை மிக மிக சரியாக செயல்படுகின்றன.உணவு விடயத்தில் மிகக் கவனமாக இருக்கும் உலக பல நாடுகள்,உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் உணவில்/ குளிர்பானங்களில் இருக்குமென்றால், குளிர்பானங்களை அந்தந்த நாடுகளில் அனுமதிக்குமா? கட்டாயம் இல்லை.அப்படியானால் நாம் விளங்கிக் கொள்வது அங்குள்ள குளிர்பானத்தின் தரம் வேறு. இங்குள்ள தரம் வேறு.
உணவின் தரத்துக்கு அவர்கள் வைத்திருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், அபராதங்கள் கடுமையானவை.ஆகவே அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது.
நாமும் கூட விதிகளையும்,கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் கடுமையாக்காமல்,உணவில் கூட அரசியல் லாப நட்டங்களை மட்டுமே கணக்குப் பார்ப்பதால் தான் இங்கே சிக்கல்கள்.
வெளிநாடுகளில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டுத்துறை,அங்குள்ள உணவகங்களை அடிக்கடி ஆய்வு செய்யும் பல நிகழ்வுகளை நான் நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். அப்படியான அடிக்கடி நிகழ்வுகளை நம்மூரில் நீங்கள் பார்த்ததுண்டா? அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு நிகழ்வுகள் நீங்கள் கேள்விப்பட்டு இருக்க சின்னதா ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். அவ்வளவு தான்.
கோக் குளிர்பானம் கழிவறைகள் கழுவத் தான் என்று பலர் பகிர்கிறார்கள். மேற்கத்தியர்களும் கழிவறை கழுவும் கோக்கைத் தான் எவ்வித புரிதலும் இன்று குடிக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?
பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் நேரம் நெருக்கடியான வாழ்க்கை சூழலில் துரித உணவகங்கள் மற்றும் உணவுகள் தவிர்க்க முடியாதவை.பாட்டி சமையல் முறைகளுக்கு வாய்ப்பே இல்லை. ஆகவே தீர்வு எதுவாக இருக்க முடியும் என்றால், கூடுமானவரை தரத்தை சரி செய்வது தான்.
அட நாங்க சொல்வது போல பாட்டி சமையல் முறைகளை காது கொடுத்து கேட்காவிட்டால்,துரித உணவுகளை சாப்பிட்டு வியாதிகளை இலவசமாய் வாங்கிக் கொண்டு,மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்பது சரியான பதிலாக இருக்க முடியாது.
அனைத்தும் தரமாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நமக்கான அரிசியை நாம் தான் விளைய வைக்க வேண்டும், நமக்கான காய்கறிகளை நம் வீட்டு தோட்டத்தில் தான் விளைய வைக்க வேண்டும், நம் வீட்டு கிணற்றில் தான் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கான இறைச்சிக்கான கோழிகளை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.நமக்கான பால் தேவைக்கு நாம் தான் மாடு வளர்க்க வேண்டும். நமக்கான தானியங்களை நாம் தான் விளைய வைக்க வேண்டும்.
அது சாத்தியம் இல்லாத இல்லாத பட்சத்தில், வெளியே இருந்து நாம் வாங்கும் உணவு பொருட்கள் ஓரளவுக்கு தரமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றால்,அதற்கு காரணம் நம் உணவுக் கட்டுப் பாட்டு துறை அல்லது அரசு மீதான மிகக் சிறிய நம்பிக்கை தான்.ஆக சரி செய்ய வேண்டிய முக்கிய இடம் இந்த தரக்கட்டுப்பாட்டு துறை தான்.
கட்டாயம் குளிர்பானங்களுக்கும்,பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும், துரித உணவுகளுக்கும்ஆதரவான பதிவோ, அல்லது பதிவில் சொல்லப்பட்ட விடயங்கள் தான் சரியான தீர்வோ என்பதல்ல பதிவின் நோக்கம்.உணவுத் தர கட்டுப்பாட்டு துறை சரியாக செயல்பட வேண்டும். மட்டுமல்ல தற்போதைய சூழலில் இது தான் எதார்த்தம், சாத்தியம் என்பதற்காக எழுதப்பட்ட பதிவு. மாற்றுக் கருத்துகள் தாராளமாய் வரவேற்கப்படுகின்றன.
**நாம் எதிர்க்கும் அணு உலை போன்ற மற்ற விடயங்களோடு இந்த பதிவை ஒப்பிடுவது சரியாக இருக்க முடியாது.**
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

அப்துல் கலாமே சொல்லிட்டாரு!


தேனீ நியூட்ரினோ திட்டம் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஒன்று என்று அப்துல் கலாமே சொல்லிட்டாரு.அப்போ சரியாத் தான் இருக்கும்:)
ஏற்கனவே கூடங்குளம் அணு உலை தான் உலகத்தரம், அங்கே எல்லாம் சரியா இருக்கு என்று நேரடி ஆய்வு செய்த அப்துல் கலாம் சொல்லியே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஆனால் எல்லாம் சரியா இருக்கு என்று அப்துல் கலாம் சொல்லிய பிறகு,கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கே நடந்த விபத்துக்களும், பழுதுகளும் தினசரி பத்திரிக்கை செய்திகள்.
இன்னும் பதினைந்து நாளில் அணு மின்சாரம் வந்து விடும் என்று சொல்லி சொல்லி கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலான பதினைந்து நாட்கள் வந்தாயிற்று. ஆனால் அணு மின்சாரம் வந்தபாடில்லை.அணு உலை தயாரானதாய் எந்த தகவலும் இல்லை.
அணு விஞ்ஞானிகள் என்று சொல்லும் அம்புட்டு பயலும் வாயைத் திறந்தாலே பொய் பொய்யாத் தான் பேசுறான்.
இதுல வேற அணு உலையால், அணுக் கதிர்வீச்சால் ஒருபோதும் கான்சர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தலையில் அடிச்சு சத்தியம் செய்த அடையார் புற்றுநோய் மையத்தின் சாந்தா அம்மையாரின் பொக்கிஷமான பேட்டியை தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப ஒளி பரப்பிய காட்சிகளை எல்லாம் சிந்தித்து பார்த்தால்,படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் ஐயோன்னு போவான் என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
இப்படி எதையாவது நியாயமா கேட்டா,நீ என்ன அப்துல் கலாமை விட பெரிய புடுங்கியா என்ற தேசபக்தி கேள்விகள் முன் வந்து நிற்கும். அட அப்துல் கலாமே சொல்லிட்டாரு, ஆண்டிபட்டியாரே சொல்லிட்டாரு கட்டாயம் நம்பித் தான் ஆகவேண்டும் என்ற காலம் எல்லாம் மலையேறிப் போச்சு ஆபீசர்ஸ்.
வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்று கேலியாக சொல்வதைப் போல,விஞ்ஞானியா இருக்குறவன், பார்ப்பதற்கு ஞானி மாதிரி தெரியுறவன் எல்லாம் கட்டாயம் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புவோமாக!
அட என்னய்யா வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? சரிங்க பொய் சொல்ல மட்டார்ர்ர்ரர்ர்ர்ர் இது போதுமா:)

-ஆன்டனி வளன்

யோகா கிறிஸ்தவத்துக்கு முரணானது.விழிப்புணர்வு பதிவு 2


**எரேமியா 10: 2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்***
யோகாவை கிறிஸ்தவர்கள் செய்யலாமா என்ற நம்முடைய முந்தைய பதிவில், யோகாவுக்கும் இந்து மதத்திற்கும் சம்மந்தமே இல்லை என்று ஒரு சாராரும்,அட இது வெறும் உடற்பயிற்சி தானே இதில் மதத்தை கலக்கலாமா என்றும், சிலர் திரும்ப திரும்ப பின்னூட்டம் இட்டுக் கொண்டே இருந்தார்கள்.
நகைச்சுவை என்னன்னா, சில கிறிஸ்தவ பெயர் அடையாளங்களைக் கொண்டவர்களும் கூட,வரிந்து கட்டிக் கொண்டு இந்து மதத்திற்கும், யோகாவிற்கும் சம்மந்தம் இல்லை என்று நம்மோடு வாதிட்டார்கள்.
திரும்ப திரும்ப இது வெறும் உடற்பயிற்சி என்றே பலர் சொன்னாலும் கூட,உண்மையில் அது இந்து மதத்தின் முக்கியமான ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதையும்,இந்து மதத்தில் கடவுளை அடையும் ஒரு வழியாகவும், யோகாவுக்கும் இந்துக் கடவுள்களுக்கும் கட்டாயம் நெருங்கிய சம்மந்தம் இருக்கிறது என்பதையும்,யோகா குறித்து நாம் பல தளங்களில் வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையும்,இந்திய வேதங்களும் யோகா குறித்து என்ன சொல்கின்றன என்பதும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது..
யோகா குறித்து, ஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகளை மட்டும் இங்கே பதிகிறேன்.முழுக் கட்டுரையும் படிக்க வேண்டுமானால் அவரது தளத்தில் படித்துக் கொள்ளலாம்.
அவரது கட்டுரைக்கு ஆதாரமாக இந்து மதம், ரிக் வேதம் ,சுவாமி விவேகானந்தர் எழுதிய ராஜயோகா இன்னும் பல புத்தகங்களை ஆதாரமாக சொல்லி இருக்கிறார்.சந்தேகம் இருப்பவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
*****ஸ்ரீதர் சுப்ரமணியன்:
யோகா என்கிற வார்த்தை ரிக் வேதத்திலேயே இருக்கிறது (கிமு 1500). ஆனால் அந்த வார்த்தை குதிரை அல்லது மாடுகளை வண்டியில் பூட்டுவதற்கு பயன்படுத்தும் கட்டையைக் குறிக்கும் வார்த்தை. (ஆங்கிலத்தில் இதற்கு பயன்படுத்தும் yoke என்னும் வார்த்தை இதில் இருந்துதான் வந்தது.) இதில் இருந்துதான் யோகம் என்னும் வார்த்தையும் வந்திருக்கிறது. அதாவது மனதை அடக்கி, சமனப் படுத்தி, பிரம்ம சக்தியிடம் பூட்டுவது.
பகவத் கீதையிலும் யோகா வருகிறது (கிமு 400-500) ஞானத்தை அடைய (enlightenment) கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்கிற மூன்று பாதைகள் கிருஷ்ணரால் குறிப்பிடப் படுகின்றன. இந்த மூன்றிலும் கூட ஆசனங்கள் கிடையாது.
யோகா உபநிடதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (கிமு 300-கிபி 100). ஆனால் அதிலும் யோகா அதாவது ‘யோகம்’ என்பது ஒரு தியான நிலையில் மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் கடவுளை அடைவது என்கிற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.*******
ஒருவேளை ஸ்ரீதர் சொல்வது போல பகவத் கீதையும்,இந்திய வேதங்களும் யோகா குறித்து எதுவும் பேசவில்லை என்றோ,அல்லது யோகா கடவுளை அடைவதற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சி என்று சொல்லவே இல்லை என்றும்,நீங்கள் வாதிட விரும்பினால், ஸ்ரீதர் சுப்பிரமணியம் அவர்களது வலைப்பூவில் வாதிடுங்கள்.
யோகா நல்லதா,கெட்டதா என்பதல்ல என் வாதம்.
என்னுடைய பதிவின் நோக்கமே பிற மதங்கள் செய்யும்/பின்பற்றும் ஆன்மீகப் பயிற்சியை,கிறிஸ்தவர்கள், பின்பற்றலாமா, கூடாதா என்பதே!
வேதாகமத்தின் படி கட்டாயம் இந்த பயிற்சியை செய்யக் கூடாது என்பதே நமது தீர்க்கமான முடிவு.
தேவன் கொடுத்த அற்புதமான உடலை, உடற்பயிற்சிகள் மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் கடமை.ஆனால் அதே வேளையில் கிறிஸ்தவர்களின் ஆன்மீகப் பயிற்சிக்கு,கல்வாரி சிலுவையை மிஞ்சியது எதுவும் இல்லை.
உன் ஆயுசு நாட்கள் கர்த்தர் கரத்தில் இருக்கிறது.அன்றாடம் அரை மணி நேரமாவது கல்வாரி சிலுவையின் தியாகத்தை,வேதத்தை வாசித்து தியானிப்பதை விட,பெரிய ஆன்மீகப் பயிற்சி எதுவும் கிறிஸ்தவர்களுக்கு வேண்டுமா என்ன?
**உடற்பயிற்சி வேறு, ஆன்மீகப் பயிற்சி என்பது வேறு**
இந்த எல்லாக் கடவுளும் ஒண்ணு தான், இயேசுநாதர் தான் கடவுள் என்று எங்கே சொன்னார், இயேசுநாதர் ஒரு போராளி போன்ற வாதங்களைக் கொண்டு,கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் நம்மிடம் வாதிட வராதீர்கள்.
**கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு**

-ஆன்டனி வளன்

கிறிஸ்தவர்கள் யோகா செய்யலாமா? விழிப்புணர்வு பதிவு 1



யோகா நல்லது தானே! அது ஒரு உடற்பயிற்சி தானே! அதை செய்வதில் என்ன தவறு? மக்களுக்கு எவ்வகையிலாவது நன்மை பயக்குமாயின்,மன நிம்மதி தருமாயின் அந்த உடற்பயிற்சியை எல்லோரும் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?மதங்களை இதில் இணைக்கலாமா என்றெல்லாம் மேலோட்டமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். யோகா என்பது இந்து மதத்தின் மிக தீர்க்கமான தியான முறை.அதில் சொல்லப்படும் ஆசனங்கள் ஒவ்வொன்றும் இந்து மத கடவுள்களை வழிபடும் வழிமுறைகளே என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை.சூரிய நமஸ்காரம் தொடங்கி...
யோகா உருவான கதையை வாழும் கலை ரவிஷங்கரின் இணைய தளத்தில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
யோகாவின் குருவாகிய பதஞ்சலி என்னும் ஆதிசேஷன் யார் என்றால்,ஆயிரம் தலைகள் கொண்ட பாம்பு தான் ஆதிசேஷன் என்கிறார்கள். ஆக யோகா உருவான கதையில் இருந்தே அது கிறிஸ்தவத்துக்கு முரணானது என்பதை எளிதாய் விளங்கிக் கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
சுமார் கி.மு. 150 இல் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம், நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு.
ஆனால் பின்னாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.
மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும்,அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து.
ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் படியோ ம‌னித‌னின் பாவ‌நிலைமையே அவன‌து பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.
எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது. பின்னர் அதிலென்ன தவறு; பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்து விட்டு, வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே என்கிறார்கள் சிலர்.அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.
அனைத்து வகையான யோகாவுமே ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது.
இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April -June 2003) த‌ன‌து க‌ருத்தாக‌ "க‌தா யோகாவை இந்து ம‌தத்திலிருந்து பிரித்துப் பார்ப்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக‌ யோகா ஆசிரிய‌ர்க‌ள் அத‌ன் வேர் இந்து மத‌த்தில் இருப்பதையும் அத‌ன் ஆன்மீக‌ நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்" என்று கூறி த‌னது ஆத‌ங்கத்தை வெளிப்ப‌டுத்தியுள்ள‌து.
சில நட்சத்திர கிறிஸ்தவ ஊழியர்களும், சில அருட்தந்தையர் களும்,சில பாதிரியார்களும்,கொஞ்சம் கிறிஸ்தவர்களும் கூட யோகாவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களாமே?
அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை, புத்தகங்களில் தேடி உண்மை எது என்பதைக் கண்டுபிடிக்க ஆர்வமில்லை. கால்டுவெல்லும், ரேனியஸும், ஏமி கார்மைக்கேலும், வில்லியம் கேரியும் வற்புறுத்தாததை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற உணர்வுகூட இல்லை. சிலர் விழிப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?
எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும் என்பதை வேதத்தை ஆதாரமாகக் கொண்டே கிறிஸ்தவர்கள் முடிவு செய்ய வேண்டும்.
எரேமியா 10-ஐ முழுமையாக வாசிக்கலாம்.
எரேமியா 10:2 இப்படியாக சொல்கிறது. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்.
கிறிஸ்தவர்களே! இந்த யோகா மாய்மாலங்களில் விழுந்து விடாதீர்கள். மிகவும் எச்சரிக்கை.
**நன்றி டாக்டர் பேதுரு மற்றும் சகோதரர் பெஞ்சமின் தாமஸ்.
**கிறிஸ்தவ நண்பகளுக்கான பதிவு**

-ஆன்டனி வளன்

திங்கள், 23 பிப்ரவரி, 2015

சீக்கிரம் வாருங்கள் சகாயம் சார்!


சீக்கிரம் வாருங்கள் சகாயம் சார்!
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களால் நடத்தப்படும்,கிரானைட் ஊழல் அதிரடி விசாரணை செய்திகளை பார்க்கும் போது,மனதுக்கு ரொம்ப மகிழ்வா இருக்கு.
மனசாட்சியுள்ள மனிதர்களும்,அதிகாரிகளும் இந்த மண்ணில் இன்னும் மிச்சம் இருக்கிறார்களே என்று.

கிரானைட் ஊழலை,வெறும் பொருளாதார இழப்பு என்று மட்டுமே பார்க்காமல்,இயற்கை அழிப்பு,மலைக் குன்றுகள்,ஆறு, குளம், கண்மாய்கள் சிதைப்பு, குவாரிகளுக்குள் நடந்த கொடூர படுகொலைகள் என்று ஒரு மர்ம நாவல் போலவே விசாரணையை முன்னெடுத்து செல்வது சிறப்பு.
சகாயம் அவர்களுக்கு பெரிய காவல்துறை பாதுகாப்புகள் இருந்தது போல தெரியவில்லை.வெட்டி ஆபீசர் சுப்ரமணியசாமிக்கு கூட,கருப்புபூனை படை எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் பல லட்சம் கோடி முறைகேடுகளை விசாரிக்கிறார்,பெரும் பெரும் பண முதலைகளின் அட்டூழியங்களை சந்தி சிரிக்க வைக்கப் போகிறார், எனும் போது,என்னென்ன மிரட்டல்கள்,உயிர் ஆபத்துகள் எல்லாம் அவருக்கு இருக்கும் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு,அவருக்கு அதீத பாதுகாப்பை அரசு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் இங்கே அரசும்,அரசு அதிகாரிகளுமே திருடர்களுக்கு உடந்தை மற்றும் திருட்டு/ஊழல் பணத்தில் பங்கு எனும் போது,இவர்களிடம் என்ன பெரிய பாதுகாப்பை எதிர்பார்த்து விட முடியும்?.
ஒற்றை மனிதனாக களத்தை கலக்கும்,இயற்கையின் எதிரிகளுக்கு கிலி ஏற்படுத்தும் சகாயம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை சகாயம் சார் !
கிரானைட் வேட்டையை சீக்கிரம் முடிச்சுட்டு,அப்படியே எங்கள் தென்மாவட்ட கடற்கரைகளை,நீண்ட காலமாக கற்பழித்து,களேபரம் செய்யும் காமுகர்களையும்,அயோக்கியர்களையும் களை எடுக்க சீக்கிரம் வாருங்கள்.
தாது மணல் கொள்ளை என்ற பெயரில்,கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக,எங்கள் கடற்தாயின் மீது நடத்தப்படும் வன்புணர்வை தடுத்து நிறுத்த,உங்களைப் போன்ற வேட்டைக்காரர்களால் தான் முடியும்.
என்னைப் போன்ற ஒரு அதிகாரியால் இதைத் தடுக்க முடியும் என்று நம்பும் நீங்கள் ஏன்,ஒட்டு மொத்த நெய்தல் மக்களால் இதை செய்திருக்க முடியாது என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம்.நியாயம் தான்.நெய்தல் மக்களால் கூட இந்த வன்புணர்வை தடுத்திருக்க முடியும்.ஆனால் நெய்தலின் குழந்தையாய் இருந்து கொண்டே,கடல் தாய்க்கு துரோகம் செய்யும் துரோகிகளாலும்,காசுக்கு விலையாய் போன அடிமாடுகளாலும், உழைக்காமல் அடுத்தவனின் ஊழல் காசில் கறி வளர்க்கும் மானம் கெட்ட சில ஜென்மங்களாலும், ஒற்றுமையின்மையாலும் தான் அது இயலாமல் போனது என்பதை வருத்தத்துடன் பதிவு பண்ண வேண்டி இருக்கு சகாயம் சார்.
நெய்தல் நிலத்தை காத்திட சீக்கிரம் வாருங்கள்.
ஆவலாய் காத்து நிற்கிறோம் சகாயம் சார்!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

சனி, 21 பிப்ரவரி, 2015

வாழ்வியல் கணக்கீடு


இந்த வாழ்வியல் கணக்கீடு ஓரளவுக்கு சரியா வருமா?
கல்யாணத்துக்கு பிறகு, மனைவியின் எதிர்பார்ப்புகளையும் சரி,தாய் தந்தையரின் எதிர்பார்ப்புகளையும் சரி, நூறு சதவிகிதம் பூர்த்தி செய்வதென்பது இயலாத ஒன்று.
காரணம் சூழல் வேறு, புரிதல்கள் வெவ்வேறு,கூடுதல் பொறுப்புகள்.
சிக்கல் எங்க வருகிறதென்றால்,அம்மாகிட்டயும் நூறு மார்க் வாங்கணும், பொண்டாட்டி கிட்டயும் நூறு மார்க் வாங்க வேண்டும் என்று சிலர் மல்லுக் கட்டி,முடியாத பட்சத்தில் மன உளைச்சல்.
இரு தரப்பிடமும் நூறு, நூறு மார்க் என்பது அரிதிலும் அரிது.சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம்.விதி விலக்குகள் இருக்கலாம்.
சில ஆட்கள் அம்மா பக்கம் மட்டும் நூறு மார்க் வாங்குனா போதும், மனைவியிடம் மார்க்கே வாங்கலைன்னாலும் பரவாயில்லை என்று தவறா எண்ணிக் கொண்டு, கல்யாணத்துக்கு பிறகும் அம்மா பக்கம் மட்டுமே நிற்க நினைக்கிறான்.அது வேலைக்கே ஆகாது!அதுக்கு கல்யாணமே பண்ணாம இருந்திருக்கணும்:)
இன்னும் சிலர், மனைவி வந்த பிறகு,படிக்க வெச்சு ஆளாக்கின பெத்த,அப்பன் ஆத்தாளை மறந்து பொண்டாட்டி தாசர்களாக மாறி விடுகிறார்கள்.மனைவி என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டிகிட்டு, அப்பன் ஆத்தாளை மறப்பதைப் போன்ற நன்றி கெட்ட தனம் உலகத்துல வேற எதுவும் இருக்க முடியாது. அது பெரிய சாபம்.
சரி, அப்ப என்ன தான் செய்யலாம்?
அம்மா,மனைவி இந்த இரண்டு பேரிடம் இருந்தும், ஒரு அறுபதுல இருந்து எழுபது மார்க் மட்டுமே இலக்காக வெச்சுகிட்டா போதும். இருநூறு மார்க்குக்கு, நூற்று இருபது அல்லது நூற்று நாற்பது மதிப்பெண் கணக்கு தான்.போதும். முதல் வகுப்பில் பாஸ்:)
என்னாகும்? சும்மா விடுவாங்களா?
நூறு சதவித திருப்தி இல்லாத இவிங்க,ரெண்டு பேருமே நம்மளை கண்டபடி அப்பப்போ நாலு திட்டு திட்டுவாங்க.வாங்கிக்க வேண்டியது தான்.திட்டு வாங்காத திருமண தம்பதிகளா:)
அம்மாமார் சொல்லுவாங்க,இந்த பய முன்னாடி மாதிரி இல்லை, மனைவி வந்ததுல இருந்து தான்,இந்த பய இப்படி ஆயிட்டான். மனைவியோ, உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு. ஹ..ஹா..ரெண்டு பேரோட திட்டுற ஆசையை நம்ம ஏன் கெடுப்பானேன்:)
இவிங்களோட வசவுகளுக்கு பயந்து,இவிங்க ரெண்டு பேர்கிட்டயும் நூறு மார்க் வாங்கணும்னு நெனச்சா,நம்மளோட தனி மனித சுதந்திரங்களை பறி கொடுத்து விட்டு,மனைவி மற்றும் பெற்றோரின் சந்தோசத்துக்காக மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
நமக்கான தனி மனித சுதந்திரத்தை,நமக்கு பிடித்த பொழுது போக்குகளை,நமக்கு பிடித்த நண்பர்களை சந்திப்பதை போன்றவற்றை எல்லாம் எப்ப தான் செய்வது?மனைவியைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் நாம் அவர்களோடு செலவிடுகிறோம் என்பது ஒரு முக்கிய கணக்கீடு.
நம்மை நாம் மகிழ்வாய் வைத்துக் கொள்ள,நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்கும் போது,அதற்காக சில வசுவுகளையும் மனைவியிடம் வாங்கிக் கொள்ள வேண்டியது தான்.வசவுகள் இல்லாத வாழ்க்கையா:)
ஆக மனைவி,குழந்தைகள்,பெற்றோர் மற்றும் நம் தனி மனித சந்தோஷங்கள் எல்லாவற்றையும்,ஓரளவுக்கு சமன் செய்யும் வாழ்க்கை முறையே சரியானதாக இருக்கும்.
எல்லாவற்றிலும் சரியாக இருந்து,எல்லோரையும் நூறு சதவிகிதம் திருப்தி படுத்த வேண்டுமென்றால், இந்த ஒரு வாழ்க்கை போதாது என்றே தோன்றுகிறது:) முடிந்த வரை முயற்சிக்கலாம்!
வாழ்க்கையின் வெற்றிக்கும்,மகிழ்ச்சிக்கும் இது தான் சூத்திரம் என்று அறுதி இட்டு சொல்ல முடியாது.ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் அவ்வளவு தான்.
***எனவே மூத்தவர்கள் ஆலோசனைகள் சொல்லலாம்:)
**உறவுகளின் சமநிலை என்ற ஒற்றை விடயத்தை மட்டும் முக்கிய தலைப்பாக எடுத்துக் கொண்டதால்,இறைத் தேடலுக்கான நேரம் பற்றியெல்லாம் இங்கே பேசவில்லை.
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்.

மனைவியை நேசிப்போம்.


மனைவியோடு பேசுங்கள்,அவர்களின் ஏக்கங்களையும், விருப்பங்களையும் அறிந்து கொள்ள முயலுங்கள்.அவர்களின் நியாயமான விருப்பங்களை அங்கீகரியுங்கள்.உணர்வுகளை மதியுங்கள்.
மனைவி பேசுவதெல்லாம் பிடிக்குதோ, பிடிக்கலையோ, குறைந்த பட்சம் மொதல்ல அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்பதை,காது கொடுத்துக் கேட்கும் பொறுமையைக் கற்றுக் கொள்ளுங்கள், அவர்களுக்காக பிரத்தியேக நேரம் ஒதுக்குங்கள்.

அப்பாடா நம்ம சொல்றதையெல்லாம் நம்ம வீட்டுக்காரர் செய்கிறாரோ,இல்லையோ அது ரெண்டாம் பட்சம். ஆனால் குறைந்த பட்சம் நம்ம சொல்றத,பொறுமையா காது கொடுத்து கேட்க ஒரு ஆள் இருக்கு என்ற நம்பிக்கைக்காகவாவது சந்தோஷப்படுவார்கள்.
மனைவியை கணக்கில் கூட எடுத்துக் கொள்ளாமல்,திருமணத்துக்கு முன்பு இருந்ததைப் போன்றே,ஆண்கள் தன் பெற்றோர், உடன் பிறப்புகள்,நண்பர்களிடம் மட்டுமே கருத்து கேட்பதும்,முடிவுகள் எடுப்பதும் நியாயம் அற்றவை.
திருமணத்துக்கு பிறகு ஒரேடியாய் பொண்டாட்டியின் முந்தானையை மட்டுமே பிடித்துக் கொள்வதும் தவறு,அதைப் போலவே,அம்மாவின் முந்தானையை,திருமணத்துக்கு பிறகும் கூட விடாமல்,இறுக்கமாய்
பிடித்துக் கொண்டே நகர்வதும் தவறு.சம நிலைக்கு வருவதே சாலச் சிறந்தது.
அம்மா,அப்பா,உடன் பிறப்புகள் எல்லோரும் முக்கியம் தான்,அதே வேளையில் நம்மை மட்டுமே நம்பி வந்த மனைவிக்கு,உரிய அங்கீகாரமும், அவர்கள் உணர்வுகளை மதிக்கும் தன்மையும் சேர்த்தே பேணப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மனைவியை விட்டுக் கொடுக்க கூடாத இடங்களில் மனைவியையும்,பெற்றோரை விட்டுக் கொடுக்க கூடாத இடங்களில், பெற்றோரையும் விட்டுக் கொடுக்காமல் சமாளிப்பதென்பது கொஞ்சம் இல்ல,ரொம்பவே சிரமம் தான்.ஆனால் இனிமையான இல்லறத்துக்கு,அனைத்தையும் சமாளிக்கும் தாரக மந்திரம் கட்டாயம் வேண்டும்.
இந்த வித்தையில் பிஹெச்டி வாங்குன புண்ணியவாளர்கள் பலர் இங்கே இருக்கலாம். நமக்கு அனுபவம் ரொம்ப குறைவு தான்:) ஆனாலும் சொல்லணும் என்று தோன்றியது.
பேச வேண்டிய இடங்களில்,பேச வேண்டிய தருணங்களில்,பேச வேண்டிய வார்த்தைகளை பேசாமல் போனால்,அந்த வார்த்தைககளுக்கான அர்த்தமோ,பயனோ எதுவும் இல்லை.
மனசு விட்டுப் பேசினா நாட்டுல இருக்குற, பாதி குடும்ப பிரச்சினை தீர்த்து போய்டும்! தனி மனித ஈகோக்களை உடைத்து,செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க தெரிந்தால்,முக்கால்வாசி சிக்கல் தீர்ந்து போகும்!
மனைவியை நேசிப்போம்!
**விதி விலக்குகள் எல்லா விதிகளுக்கும் உண்டு:)
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

எது பாசிசம்?


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன்.என்னுடைய முகநூல் பக்கத்தில் இது குறித்த பல செய்திகளை, விமர்சனங்களை, பாராட்டுகளை எல்லாம் பல ஆண்டுகளாக பதிவு செய்து இருக்கிறேன் என்பதை நண்பர்கள் அறிவார்கள்.
“தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்” என்று தலைப்பு வைத்துக் கொண்டு, இங்கே பாடுபவர்களில் பெரும்பான்மை அந்நிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்,தமிழ் தெரியாதவர்கள் என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு.
தலைப்பை மாத்தி வைங்கடா என்றால் அதையும் செய்ய மாட்டேங்குறானுங்க! “தமிழகத்தின்” என்ற உங்க மாயாஜால வார்த்தை வியாபாரத்தை விட்டுடுங்க என்று சொன்னாலும் கேட்க மாட்டேங்குறானுங்க!
கேரளா,ஆந்திரா,கர்நாடகா என்று தென் இந்திய மாநிலங்களில் இது போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகள் இல்லாமல் இல்லை.
இங்கே நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் பலர்,ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் இது போன்ற போட்டிகளில் கலந்து பரிசுகளைப் பெற்றுக் கொண்டு,சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்ற பிறகும் கூட,இங்கே வந்து பாடுகிறார்கள்.இதற்கு ஆதாரங்கள் பல உண்டு.
தங்கள் பணி நிமித்தமாக தமிழ்நாட்டில் தங்கி இருப்பவர்கள் கூட இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்ளட்டும், வேறு மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து,நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் கலந்து கொள்வதில் கூட எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே,வேறு மாநிலங்களில் இருந்து படையெடுத்து வரும் மக்களை தடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. காரணம் இங்குள்ள குழந்தைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன.
இறுதிப் போட்டியில் ஐந்து பேர் ஆறு பேர் என்று வரும் போது, தமிழ்நாட்டு பிள்ளைகள் ஐம்பது விழுக்காடு இருந்தாலே அபூர்வம் தான்.
உடனே இங்கே சிலர் சொல்லுவார்கள்,திறமை இருக்கிறவர்கள் வெற்றி பெறப் போகிறார்கள், அதில் உங்களுக்கென்ன சிக்கல்? அதற்காக எப்படி தடை செய்ய இயலும்? அது நியாயம் கிடையாது என்பார்கள்.
ஏண்டா! உன் நிகழ்ச்சிக்கு வாடிக்கையாளனா தமிழன் இருக்கணும். நீ போட்டி நடத்துவது சென்னையில், பாடும் பாடல்கள் தமிழ் பாடல்கள். உன் நிகழ்ச்சியின் வியாபாரம்,விளம்பரம் முழுக்க தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர்களிடமும்.
போட்டி இறுதியில் ஒரு குறுந்செய்திக்கு ஐந்து ரூபாய் என்று கோடிக்கணக்காக ரூபாயை வசூல் செய்வது தமிழர்களிடம் இருந்து. இரண்டு கோடி பேர் குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்றால் அதில் ஒன்றரை கோடிக்கு மேல் தமிழர்களின் குறுஞ்செய்தி!
ஆக உன் நிகழ்ச்சிக்கு பணத்தை தருபவன்,ஆதரவு தருபவன் தமிழன் எனும் போது,வெளி மாநில மக்கள் இங்கே வந்து பாடுவதை தடுக்க வழி செய் என்று கேட்டால்,இது பாசிசம் என்றால் அதெப்படி நியாயம்?என் மண்ணில், நான் மட்டும் ஏமாளியாகவும், இளிச்சவாப் பயலாகவும் தொடர்ந்து இருக்கணுமா?
இதுல பெரிய நகைச்சுவை என்னன்னா, நம்ம ஊர்க் காரனே நம்மைப் பார்த்து கேட்பான், நீங்க கேட்குறதெல்லாம் நியாயமாங்க, திறமையை மட்டும் பாருங்கன்னு!
இல்ல நான் தெரியாம கேட்கிறேன்,தமிழ்நாட்டு அரசு, அரசு உதவி பெரும் மருத்துவ,பொறியியல் கல்லூரிகளில் திறமை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு,மற்றபடி மாநில எல்லைகள் எல்லாம் எங்களுக்கு ஒரு தடையே இல்லை, இந்தியாவில் இருக்கும் திறமை உள்ளவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் வந்து படிக்கலாம் என்று சொன்னால், இங்கிருக்கும் தமிழன் பலருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் என்பதை ஏற்கிறீர்களா?
அப்புறம் எதுக்கு வெச்சிருக்கோம்,இந்த மாநில எல்லை விதிகள்?உடனே வருவான் அதுவும் இதுவும் ஒன்றா? ஒரு சாதாரண இசை நிகழ்ச்சியை இப்படி எல்லாம் எடுக்க வேண்டுமா? இதற்கு பெயர் பாசிச வெறி என்று நீ எண்ணினால் அப்படியே வைத்துக் கொள்.
நான் சொல்வதை பாசிச வெறி என்று சொல்பவன் மற்ற மாநிலங்களில் போய் வாழ்ந்து பார். யார் பாசிச வெறி பிடித்தவன் என்று! தமிழனைப் போன்று சகிப்புத் தன்மை வேறு எவனுக்கும் கிடையாது!
இன்னொரு கேள்வி கேட்பான் பாருங்க! ஆமா மற்ற மாநிலத்தவர்கள் வந்து பாடுவதற்கு தடை விதிக்கணும் என்று சொல்கிறாயே, அப்புறம் எப்படி கனடா, பிரான்ஸ் நாடுகளில் இருந்து மட்டும் ஈழத் தமிழர்கள் வந்து இங்கு பாடலாமா, அது மட்டும் எப்படி சரியாகும்?கேள்வி நியாயம் தான்.
நான் கேக்குறேன்,தமிழன் தமிழ்பாட்டை கனடாவிலும், பிரான்சிலுமா போய் பாடுவான்? அந்த நாட்டு மக்களிடமா போய் நிரூபிப்பான்,தன் தமிழ் இசை ஞானத்தை?
தமிழ் பாட்டு,பாடும் களம் அவனுக்கு எங்கே இருக்கிறது? இங்கே தமிழ்நாட்டில் தாண்டா இருக்கிறது.ஆனால் மற்ற மாநில மக்களுக்கு அப்படியா? தங்கள் மாநிலங்களில் பாடும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் இல்லையே!
அகதிகளாய்,நாட்டையும் வீட்டையும் இழந்து,வலிகளையும் ரணத்தையும் சுமந்து நிற்கும் என் சொந்த சகோதரர்களுக்கு, நான் என்ன செய்ய வேண்டும், எது அவர்களின் உரிமை என்பதை எனக்கு எவனும் சொல்லித் தர வேண்டியதில்லை. உன் வேலைகளை மட்டும் பார்!
கடுப்புகள கெளப்பிகிட்டு.
-ஆன்டனி வளன்

சூப்பர் சிங்கர்


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்து மக்கள் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்காங்க போலேயே!
விடைகொடு எங்கள் நாடே என்ற பாடலை, ஜெசிக்கா பாடக் கேட்டதும் உணர்ச்சிப் பிளம்பால்,உங்கள் உள்ளங்களில் எழுந்த உணர்ச்சி குவியலை மட்டும் அப்படியே தேக்கி வையுங்கள். தேவைப்படும் நேரங்களிளெல்லாம் அந்த வலியையும், உணர்ச்சியையும் களத்துக்கு கொண்டு வாருங்கள்.

ஈழ விடுதலை எனக்கான விடுதலை, என் இனத்துக்கான விடுதலை என்ற ஒற்றை செய்தியை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்!புலம் பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் ஜெசிக்கா குடும்பம்,முதல் பரிசான வீட்டை கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்ற பொருளாதார சூழலில் இல்லை.
நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம்,திறமையான பலரை இசை உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதும்,பின்னணி பாடகர்களாக உருவெடுக்க ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவதும் தானே.ஜெசிக்காவுக்கு அந்த வாய்ப்பு கட்டாயம் உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகவே வெற்றி தான்.எனவே கடுமையான விவாதங்கள் தேவையற்றவை!
வாழ்த்துகள் ஜெசிக்கா!
தமிழர் மட்டும் தான் பாடணுமா, ஏன் வேறு மாநிலத்தவர் பாடக் கூடாதா, திறமை இருக்கும் யார் வேண்டுமென்றாலும் நிகழ்ச்சியில் பங்கேற்றால் உங்களுக்கு என்ன சிக்கல் என்றெல்லாம் பல கேள்விகளை நியாயவான்கள் பலர் எழுப்புவார்கள்.நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இது “தமிழகத்தின்” செல்லக் குரலுக்கான தேடல் அல்ல,மாறாக வெறுமனே “செல்லக் குரலுக்கான தேடல்” மட்டுமே என்று.விஜய் தொலைக்காட்சி தங்களின் கவர்ச்சியான வியாபாரத்துக்காக “தமிழகத்தின்” என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டு நம்மை மடையனாக்குவார்கள். அவ்வளவே!
தனியார் தொலைக்காட்சிகளைப் பொறுத்த வரையில் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்து மட்டுமே சிந்திக்க கூடியவர்கள், அங்கே எல்லோரும் விரும்பும் நியாயம், தர்மம், தமிழ் உணர்வு எல்லாம் எதிர் பார்க்கக் கூடாது!
தமிழன்/தமிழச்சி வெல்ல வேண்டும் என்று,இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாய்,ஒரு இசை நிகழ்ச்சிக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை,கொஞ்சம் மாற்று அரசியல்,நல்ல அரசியல் தலைவர்கள்,மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்ப்பு, நல்ல திட்டங்களுக்கு ஆதரவு என்று சிந்திப்பதிலும், ஆதரவளிப்பதிலும், வாக்களிப்பதிலும் சேர்த்து செய்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி!
அரசியல் வெற்றி இல்லாமல்,சரியான அரசியல் தலைமைகள் இல்லாமல் இங்கு எதுவும் சாத்தியம் இல்லை!
ஈழமே ஒரு மாபெரும் அரசியல் தானே!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

புதன், 18 பிப்ரவரி, 2015

இயல்பான மனிதர்கள்!


இயல்பான மனிதர்கள்!
ஒபாமாவே ஓட்டுப் பட வந்தாலும், ராசா ஓட்டுப் போடுறதுக்கு முன்னால,ஒங்க அடையாள அட்டையைக் காண்பியுங்கள் என்று இயல்பாக கேட்கும் தேர்தல் அதிகாரிகள்.நீ எப்படி என்னைப் பார்த்து அடையாள அட்டை கேட்கலாம் என்று முறைக்காமல், அங்கயும் ஒரு காமெடியை குடுத்து சிரிக்க வைக்கும் ஒபமா என்று பார்க்கவே இயல்பா இருக்கு.ஏற்ற தாழ்வுகள் ஏதும் இன்றி எல்லாதரப்பு மக்களோடும் இயல்பாய் பேசும் ஒரு தன்மை. காரணம் இவன் என் நாட்டின் குடிமகன் என்ற மரியாதை.
ஜெர்மனியில் காவல்துறை அதிகாரிகளை நக்கல் நையாண்டி செய்யும் இளைஞர்கள் பலரைப் பார்க்க முடிந்தது.இவிங்க நக்கல் பண்ணுறானுங்க என்று தெரிந்தாலும், அவிங்களும் சிரிச்சுகிட்டே எதிர் நக்கல் பண்ணுற சுவராஸ்யம் சொல்லி மாளாது. கடமையில் இருந்தாலும் மக்களோடு இயல்பாய் பேசுகிறார்கள்.
விசா குறித்த விசாரணைகளுக்கோ, அல்லது நாம் தங்கி இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிவிக்கவோ அரசு அலுவலகங்களுக்கு போனால், எந்த வித விதிமுறைகள்,நடைமுறைகளும் இல்லாமல் உயர் அதிகாரிகள் வரை எளிதாய் சந்திக்கலாம்,இயல்பாய் பேசலாம். ஏய் யாரைக் கேட்டு உள்ளே வந்தாய் போன்ற முறைப்புகள் இருக்காது. அய்யா இருக்காங்களா என்று வெளியே நிற்கும் பியூனிடம் எல்லாம் கேட்க வேண்டியதோ பம்ம வேண்டியதோ இல்லை.
மொத்தத்தில் வெள்ளைக்காரர்கள் வெளி இடங்களில் இயல்பாய் இருக்கிறார்கள். நான்கு யூரோ டிக்கட்டுக்கு, சில்லறை இல்லாமல் நூறு யூரோவை கையில் வைத்துக் கொண்டு, ஜெர்மானிய பாஷையும் தெரியாமல், மியூனிக் விமான நிலையத்தில் இருந்து, மியூனிக் நகரத்துக்கு உள்ளே போக ரயில் டிக்கட் எடுக்க நின்று கொண்டிருந்தேன்.
சில்லறை இல்லை என்று டிக்கட் கொடுப்பவர் சொல்ல, என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற போது, சில்லரையும் மாத்தி, டிக்கட்டும் எடுத்து தந்து, கூடவே மியூனிக் ரயில் வரும் தண்டவாளம் வரை நம்மோடு வந்து, இறங்கும் நிறுத்தம் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி வழியனுப்பி வைத்த,ஜெர்மானிய அம்மையாரை வாழ்நாளில் மறக்க முடியாது. அந்தம்மாவுக்கு பத்து நிமிடம் நம்மால் வீண். அம்புட்டு நல்லவங்களா இருக்காய்ங்க:)
மக்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என்று பெரும்பான்மை இயல்பாய் இருக்கிறார்கள். விதி விலக்குகள் இருக்கலாம்.
இங்கே ஒரு காவலரிடம் கேலியாகப் பேசினால்,ஈகோ தலைக்கேறி, என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.கேலி பேசுறத விடுங்க, இயல்பாய் பேசுவதே இங்கு இயலாத காரியம். காவல் நிலையம் சென்றால் உட்கார கூட இடம் தர மாட்டார்கள், மரியாதையா பேச மாட்டார்கள். தெனாவட்டு தலைக்கேறி நிற்கும்.
மோடியிடமோ, ஜெயலலிதாவிடமோ(மோடி,ஜெயலலிதாவை விடுங்க, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடம் கூட)ஓட்டுப் போட உங்கள் அடையாள அட்டையைக் காண்பியுங்கள் என்று கேட்க அதிகாரிகளுக்கும் துணிச்சல் இருக்காது. அதையும் மீறி கேட்டால், ஆளை விட்டு தூக்கும் அளவுக்கு வெறி கொண்ட ஆட்சியாளர்கள்.
இந்த ரசிக மனப்பான்மையில் இருந்தும்,வாழ்க வாழ்க கோஷத்தில் இருந்தும்,அதிகார போதை மற்றும் தெனாவட்டில் இருந்தும் இயல்பான நிலைக்கு என்று மாறும் இந்தியாவும், தமிழ்நாடும்?
-ஆன்டனி வளன்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஊழியத்தின் மீதான தொடர் குறைபாடுகளும், நம் இலக்கும்!




ஊழியத்தின் மீதான தொடர் குறைபாடுகளும், நம் இலக்கும்!
கிறிஸ்தவ ஊழியங்களில் அல்லது பிரபல ஊழியக்காரர்களின் மீதான குறைபாடுகளை தொடர்ந்து பலர் சொல்வதுண்டு.அதில் பெரும்பான்மை பொருளாதாரம் சார்ந்த ஒன்றாகவே இருக்கும்.பல விடயங்கள் மறுக்க இயலாதவை என்பதை அறிவேன்.ஆனால் அது குறித்து விவாதித்து, அவர்களுக்கு ஆதரவு,எதிர்ப்பு என்று வாதாடுவதில் நமக்கு எந்த நாட்டமும் இல்லை.
ஊழியத்தில் விழுந்து போகும் பலரை உதாரணமாக வைத்து பார்த்து,பேசிக் கொண்டிருந்தால்,நம் தனி மனித கிறிஸ்தவ ஓட்டம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகி விடும்.
ஆத்மீக ஜீவியத்தில் நம் இலக்கு என்ன, நம் உதாரண புருஷன் யார் என்பது தெளிவாகி விட்டால், சில்வண்டுகளைப் பார்த்து சிணுங்கிக் கொண்டே இருக்க வேண்டியதில்லை.
எவ்வளவு பெரிய சபை, எவ்வளவு பேர் கூடுகிறார்கள், மிக பிரமாண்டமான பாடல் குழு,அப்படி இப்படி என்று பிரமாண்டத்தின் மீது அப்படி ஒரு விதமான ஈர்ப்புள்ள மக்கள் இருக்கிறார்கள்.ஆனால் அடிப்படையில் தேவையானது ஒன்றே! அது ஒவ்வொரு மனிதனின் சுத்தமான இருதயமும்,அதில் கிறிஸ்துவினால் ஏற்படும் நல்ல மாற்றமும், அன்பும், சமாதானமும், தேவனுக்கான வைராக்கியமான வாழ்வும் தான்.
மாதம் பத்து லட்சம் சம்பளம்,கம்பனி கார், வீடு என்று சகல வசதிகளோடு வாழ்ந்த,ஒரு மிகப்பெரிய வெளிநாட்டு கார் உதிரிபாக நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்த மனிதர் நமக்கு நல்ல நண்பர்.
காலையில் அலைபேசியில் அழைத்தால்,சென்னையில் என்பார், மதியம் அழைத்தால் டெல்லி என்பார்,மாலை அழைத்தால், பெங்களூர் விமான நிலையம் என்பார். ஆம் மிக பரபரப்பான மனிதர்.அவரது சிறந்த பணிக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார்.உள்ளூர் மட்டுமல்ல,அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள்.
அப்படி ஒருநாளில் அவரோடு உரையாடிய போது அவர் சொன்ன சீன நாட்டு அனுபவங்கள் தான்,நான் ஏற்கனவே எழுதி முப்பதாயிரம் பேருக்கு மேல் முகநூலிலும்,பல இணைய தளங்களில் படித்தும் பகிர்ந்ததுமான “வல்லரசு சீனா” கட்டுரை.
திடீரென்று ஒருநாள் என்னிடம் சொன்னார்,சகோதரன் நான் என்னுடைய வேலையை ராஜினமா செய்யப் போகிறேன்.அப்படியா? ஏன் என்னாச்சு சகோதரன்?இல்ல ஆண்டவருக்காய் முழு நேர ஊழியம் செய்யப்போறேன் என்றார். பக்குன்னு இருந்துச்சு எனக்கு.வயது நாற்பத்து ஐந்து தான்.
இயல்பான மனித மூளை கணக்கீட்டின் படி,இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் அவர் உழைத்தால்,குறைந்த பட்சம் இன்னும் பத்து கோடி ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்க முடியும்.ஆனால் வேண்டாம் என்கிறார்.
அவர் இந்த நிறுவனத்தில் ராஜினமா செய்கிறார் என்றதும்,சென்னை முருகப்பா குழுமம்,மாதம் பதினைந்து லட்சம் சம்பளம் தருவதற்கு தயாராய் இருந்தது, இன்று வரை அழைத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வேண்டாம் என்று இருக்கிறார். வேலையை விட்டு ஆறுமாதம் ஆகிறது.
என்ன எதுவும் சபை நடத்தப் போகிறீர்களா?இல்லை சகோதரன். இளைஞர்களுக்கு கிறிஸ்தவ ஊழிய பயிற்சி வகுப்பு நடத்தும், ஊழியத்தை செய்யப் போகிறேன்.மற்றபடி சபை கட்டும் ஊழியம் ஆண்டவர் எனக்கு தரவில்லை என்றார்.
இவர் இப்படி என்றால் இவரது சகோதரர், எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், அவரோ ஊழியம் செய்தால்,நான் வட மாநிலங்களில் மிஷனரி ஊழியம் தான் செய்வேன் என்று,பீகாரில் கடினமான ஊழியத்தை செய்து கொண்டு இருக்கிறார்.பீகார் போன்ற வட மாநில மிஷனரி ஊழியம் என்பது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இருவரும் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல.மாறாக ஒரு பாரம்பரிய இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்து,பின்பு இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள்.
அதைப் போலவே, நான் செல்லும் சபைக்கு வரும் ஒரு சகோதரன், மாதம் ஐந்தாறு லட்சத்துக்கு குறையாமல் சம்பளம் வாங்குவார், பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் நல்லதொரு பொறுப்பில் பணியாற்றுகிறார். எம்.டெக் பட்டதாரி,நாற்பத்து ஐந்து வயதுக்காரர். அவரும் இரண்டு மாதங்களுக்கு முன்,விரும்பியே தன வேலையை ராஜினமா செய்து விட்டு முழு நேர ஊழியம் செய்ய கிளம்பிட்டார்.
இவர்களின் ஊழியங்களும், இப்படிப்பட்ட எனக்கு நெருக்கமான சாதாரண மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் தான் கிறிஸ்தவத்தில் எனக்கான ஊக்கமருந்துகள்.கிறிஸ்துவின் மீதான இவர்களின் வைராக்கியம்,என்னை இன்னும் அதிகமாய் சிந்திக்க வைக்கின்றன.
கிறிஸ்தவ ஊழியத்தைப் பொறுத்தவரையில்,தனி மனிதர்களின் நல்ல விடயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்.அதற்காக அவர்களின் தவறுகளை ஏற்பதாக அர்த்தம் இல்லை.
தவறானவர்களையும், அதுபோலவே பலரது தவறான போதனைகளையும் பகுத்தறிந்து புறக்கணிப்பு செய்கிறேன். அவர்களிடம் நான் கற்றுக் கொள்ள விரும்புவதும் இல்லை.
அவர்களோடு அக்கப்போர் நடத்துவதை விட,அந்த நேரத்தில் கிறிஸ்துவின் மேலான அன்பை இன்னும்,அதிகமாய் நாடுவதற்கான வழிமுறைகளை கற்றுக் கொள்வதும்,சரியான ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்வதும், முன்னேறுவதுமே நமது ஆர்வம்.
தனிமனிதர்களைப் பார்த்து விழுந்து போகாதீர்கள்.எல்லாவற்றிலும் இன்னும் இயேசுவை அதிகமாய் பற்றிக் கொள்வதற்கான, வழிமுறைகளை நோக்கியே நமது தாகம் இருக்கட்டும்!
எது சரி எது தவறு என்று வாதிட வரவில்லை.ஆனால் நம் தனிப்பட்ட கிறிஸ்தவ ஜீவியத்தின் முன்னேற்றத்திற்கு,எது முக்கியம் என்பதே நான் சொல்ல வரும் செய்தி! நம் இலக்கும், ஓட்டமும்,சரியான ஒப்பீடுகளும் தான் மிக முக்கியம்!
***கிறிஸ்தவர்களுக்கான பதிவு***
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

ஆம் ஆத்மி தமிழ்நாட்டில் வெற்றி பெற இயலுமா?


ஆம் ஆத்மி தமிழ்நாட்டில் வெற்றி பெற இயலுமா? வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய ஆம் ஆத்மி தமிழ்நாட்டு அமைப்புக்குள் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்று சுப.உதயகுமார் போன்ற ஆம்ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் சொன்னால்,அதில் இருக்கும் நியாயமான விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!
அதெப்படி அவர் விமர்சனம் செய்யலாம்,கட்சித் தலைமை அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததை அவர் மறந்து விட்டார், நன்றி இல்லாமல் போய் விட்டார்,உதயகுமார் ஒரு ராசியில்லாதவர் என்றெல்லாம் பலர் சொல்லுவது தான் மிகப் பெரிய காமெடி.
என்னவோ ஆம் ஆத்மி கட்சிக்கென்று,தமிழ்நாட்டில் மிகப் பெரிய வாக்கு வங்கி இருந்ததைப் போன்றும்,அல்லது அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மற்ற ஆம் ஆத்மி வேட்பாளர்களெல்லாம் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு குறையாமல் வாங்கியது போலவும்,எதுக்கு இந்த தேவை இல்லாத பில்டப். அடிப்படை கட்டமைப்புகள் எதுவும் இன்றி,அதை ஸ்திரப்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றி,அவசர அவசரமாக நாடாளுமன்ற தேர்தலை ஆம்ஆத்மி சந்தித்தது என்பது தானே உண்மை.
சுப.உதயகுமார் ஆம் ஆத்மி தலைமையோடும், அதில் இருக்கும் பலரோடும் பல ஆண்டு காலமாக ஒரு நெருங்கிய தொடர்பு கொண்டவர்.கட்சிக்குள் நடக்கும் அதன் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர். டெல்லி செல்லும் போதெல்லாம் அவர்களை சந்தித்து மணிக்கணக்காக விவாதம் செய்பவர்.
அவர் சொல்வதில் உள்ள முக்கியமான விடயமே,டெல்லியில் உள்ள வெற்றியை மட்டுமே வைத்து,அதே சூத்திரம் மற்ற மாநிலங்களில் செல்லுபடியாகும் என்று நம்பாதீர்கள்.அது கைகூடாது.சூத்திர வடிவங்களை மாநிலங்களுக்கு ஏற்ப மாற்றி அமையுங்கள்.
பிராந்திய சிக்கல்களிலோ அல்லது முடிவுகளிலோ டெல்லி தலைமைகள் கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் தனிப்பட்ட முடிவுகளை திணிக்காமல், மாநில தலைமைகள் சொல்லுவதை பொறுமையோடு காது கொடுத்துக் கேட்டு அங்கீகரிக்கும் அளவுக்கு அந்த கட்சி செயல்பட வேண்டும்.
பல மாநிலங்களில் தேசிய கட்சிகள், புதிதாக அதுவும் முதல் முறையாக ஆட்சியையே பிடிக்கின்றன.ஆனாலும் அவர்கள் பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகுவதில்லை. 1967 இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மத்தியில் இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போதிலும் கூட,தமிழ்நாட்டுக்குள் மீண்டும் வர இயலவில்லை.
ஐம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட வேறு சில தேசிய கட்சிகள் கூட, இங்கே தமிழ்நாட்டுக்குள் காலடி வைப்பது சாதாரண காரியம் அல்ல.
எதை செய்தால் இங்கே ஆட்சியைப் பிடிக்க முடியும்,எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று,கண்விழி எல்லாம் பிதுங்கி தான் நிற்கிறார்கள் தேசிய கட்சிக்காரர்கள்.ஆனால் சூத்திரம் அவர்களுக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை.காரணம் இந்த மண்ணின் மகத்துவம் அப்படி.
மற்ற மாநிலங்களில் செய்யும் தேர்தல் உத்திகளைப் போன்று சும்மா மதத்தைக் காட்டி, கலவரங்களைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு காண்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்,அவர்களின் கேவலமான பழைய சூத்திரத்தை வைத்துக் கொண்டு,தமிழ்நாட்டில் ஆட்சியை அல்ல,ஆச்சியைக் கூட பிடிக்க முடியாதென்று.
மிகக் குறிப்பிட்டு சொல்வதென்றால் மீனவர் சிக்கல்,ஈழ சிக்கல்,நதி நீர் சிக்கல், மாநில எல்லைகளில் புதிய அணைகள் கட்டுவதில் சிக்கல், வளர்ச்சி என்ற பெயரில் அழிவுக்கென்று தமிழ்நாட்டில் புகுத்தப்படும் பலதரப் பட்ட புதிய திட்டங்களான அணு உலை,மீத்தேன், நியூட்ரினோ என்று ஒவ்வொன்றிலும்,தேசிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கும், பிராந்தியக் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இவற்றிலெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் ஆம் ஆத்மி தலைமை நியாயமான முடிவெடுக்கும் அளவுக்கு,சரியான ஆட்களை, டெல்லி தேசிய தலைமை நியமிக்க வேண்டும், அதைப் போலவே மாநிலத் தலைமைகள் சொல்வதை,தேசிய தலைமை ஏற்கும் அளவுக்கு அதிகாரம் வழங்கப் பட வேண்டும்.
ஊழல் என்பதை மட்டுமே ஆம் ஆத்மி முன்னிறுத்தி பேசினாலும் கூட,மக்களின் அழிவுக்கான தமிழ்நாட்டின் முக்கிய சிக்கல்களில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன என்று கருத்து கேட்கும் போது,மாநில மக்கள் நலனுக்கு ஏற்ப தெளிவான முடிவுகளை எடுக்காவிட்டால் அதீத சிக்கல் தான். பதில் சொல்லாமல் நழுவி செல்லவும் இயலாது.
தேசிய நலனை மட்டுமே கணக்கில் கொண்டு முடிவுகள் இல்லாமல், மாநில மக்கள் நலன் சார்ந்த முடிவுகளே முதன்மையாக இருக்க வேண்டும்,அதுவே தமிழ்நாட்டு அரசியலுக்கு சரியாக இருக்க முடியும் என்பதே அடிப்படையான விடயம்.
உதாரணமாக கேரளா இந்த விடயத்தில் மிகச் சரியாக இருக்கிறது. அங்கே தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று எது வந்தாலும், தேசிய நலன் என்றெல்லாம் பார்க்காமல் அல்லது பார்க்க இயலாமல், கேரள நலன் சார்ந்து மட்டுமே இயங்கும். அப்படி இயங்கினால் மட்டுமே அங்கே அவர்களால் அரசியல் செய்ய முடியும்,நிலைக்க முடியும். அதே நிலையைத் தான் தமிழ்நாட்டிலும் மாற்றம் விரும்பும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..
அப்படி வரும் கட்சிகள் தான் இங்கே அரசியல் செய்ய இயலும். சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற நேர்மையான மனிதர்களை சேர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டில் ஆம் ஆத்மியை வளர்த்து விடுவோம் என்று பலர் சொன்னாலும் கூட,சகாயம் போன்றவர்கள் மாநில நலன் போன்ற விடயங்களில் ஒருபோதும் சமரசம் செய்யாத மனிதர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அவரது சிந்தனையும் சித்தாந்தமும், தமிழ், தமிழன், தமிழர் நலன் என்று இன்னும் தீவிரமாகத் தான் இருக்குமே ஒழிய, டெல்லி சொல்வதைக் கேட்டு, தேசிய நலன் என்று எல்லாவற்றுக்கும் தலையாட்டும் மனிதராக இருக்க மாட்டார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் அவரது அனைத்து பேட்டிகளையும், அவர் குறித்த செய்திகள் பலவற்றையும் படித்தவர்களுக்கு தெரியும்,அவர் எந்த அளவுக்கு தமிழர் நலன் மீது அக்கறை கொண்டவர் என்று.
ஆக தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் விரும்பும் எல்லோருடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருக்கிறது.ஊழல், லஞ்சம் என்பதையும் தாண்டி,மாநில நலன் சார்ந்து,இயங்கினால் ஒழிய தமிழ் நாட்டில் புதிய கட்சிகள் பிரகாசிக்க வாய்ப்பு இல்லை என்ற செய்தியை உள்வாங்கிக் கொண்டு,தீவிர செயல்பாட்டுடன் கட்சியை வளர்ப்பது நல்லது.
அதை விட்டு விட்டு, அவர் எப்படி எங்கள் கட்சியை விமர்சிக்கலாம், அவருக்கு நன்றி இல்லையா போன்ற விடயங்களை பேசுவது புதிதாக வளர ஆரம்பிக்கும் ஒரு கட்சிக்கு ஆரோக்கியமானது அல்ல.டெல்லி தேர்தல் முடிவை மட்டுமே பார்த்ததும், இங்கே பலருக்கு வரும் அதீத தெனாவட்டு உடம்புக்கு ஆபத்து.
அதுமட்டும் அல்ல, ஐம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட, தமிழ்நாட்டு மாநில,தேசிய கட்சிகளுக்குள் பல கோஷ்டிகள் இருப்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் மாற்றம் விரும்பும் கட்சி என்று சொல்லி, புதிதாகத் தொடங்கப்படும் கட்சிகளாவது வித விதமான கோஷ்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புரியும் என்று எண்ணுகிறேன்.
நன்றி!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

சனி, 14 பிப்ரவரி, 2015

எதுக்கு சார் இந்த மேற்கத்திய கலாச்சாரம்?


எதுக்கு சார் இந்த மேற்கத்திய கலாச்சாரம்?
அன்னையர் தினம், தந்தையர் தினம், பெற்றோர் தினம்,மகளிர் தினம், காதலர் தினம்,குழந்தைகள் தினம் என்று,வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
ஏதோ பதினெட்டு வயதுக்கு மேல், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிக சம்மந்தமோ,உறவுகளோ,சந்திப்புகளோ இல்லாத மேற்கத்தியர்கள்,தங்கள் தாயை சந்திக்க,தந்தையை சந்திக்க வருடத்தில் ஒருநாளை தேர்ந்தெடுத்து அன்னையர் தினம் தந்தையர் தினம் என்று கொண்டாடுகிறார்கள் என்றால் அது நியாயம்.
ஆனால் நாம் அப்படியா? பெற்றோர்களை நாம் அன்றாடம் மதிக்கிறோம், சந்திக்கிறோம், அடிக்கடி பேசிக் கொள்கிறோம்,கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்( அப்டியா?) நமக்கெல்லாம் ஆண்டு முழுவதுமே அன்னையர் தினமும், தந்தையர் தினமும் தானே! என்கிறார்கள் பலர்.
இப்படியே பெருமை பேசி பேசியே,நமக்கே தெரியாமல் வீணாப் போய்கிட்டு இருக்கிறோம் என்பதையும் ஏற்றுத் தானே ஆக வேண்டும். மறுக்க முடியுமா?
மேற்கத்தியர்கள் என்று மட்டுமல்ல, இன்றைக்கு நாம் எந்த அளவுக்கு பெற்றோர்களை அன்றாடம் மதிக்கிறோம்,அல்லது அந்த அன்பின் அளவு குறைந்து இருக்கிறது என்பதற்கு நம் ஊர்களில்,சிறு நகரங்களில், பெருநகரங்களில் இருக்கும் முதியோர் இல்லங்களே சாட்சி.
தூத்துக்குடியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று இருந்த போது, அந்த இல்லத்தை கவனித்துக் கொள்ளும் அருட் கன்னியரிடம் கேட்டேன், இங்கே இருக்கும் முதியவர்கள் எல்லோருமே ஆதரவற்றவர்களா,வசதி அற்றவர்களா என்று.
அவர்கள் சொன்னார்கள் இங்கே பல தரப்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். நல்ல வசதியான வீட்டுப் பெற்றோர்களும் இருக்கிறார்கள். மருமகளுக்கும், மாமியார், மாமனாருக்கும் ஒத்துப் போவதில்லை, அல்லது இவர்களை தங்களால் கவனிக்க இயலாது என்கிறார்கள்.ஆக பிள்ளைகள் அந்த பெற்றோர்களை இங்கே கொண்டு வந்து விடுகிறார்கள்,அவர்களைக் கவனித்துக் கொள்ள நாங்கள் மாதா மாதம் பணம் தந்து விடுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த பெற்றோர்களின் மனம் படும் வேதனை அவர்களுக்கு புரிவதில்லை.
பிறந்த நாள்,திருமண நாள் போன்ற முக்கியமான சில தருணங்களில் அந்த வயதான தாத்தா பாட்டியிடம் நாங்கள் பேசும்போது, உங்கள் பிள்ளைகளை பார்க்க விரும்புகிறீர்களா, வர சொல்லட்டுமா என்று கேட்டால், சாகும் வரை நான் அவர்களை பார்க்க விரும்பவில்லை, செத்தாலும் நீங்கள் நீங்கள் அவர்களுக்கு தகவல் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார்கள், அப்படியானால் எந்த அளவுக்கு மனம் உடைந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்பதாக சொன்னார்.
ஆக அன்னையர் தினம்,தந்தையர் தினம், காதலர் தினமெல்லாம் மேற்கத்தியம் அது நமக்கு தேவை இல்லை என்றெல்லாம் இன்றைக்கு பேச இயலாது.காரணம் மேற்கத்தியம் பின்பற்றுகிற பெரும்பாலான விடயங்கள் இங்கேயும் வந்தாயிற்று.என்ன ஒன்று விகிதாச்சாரம் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம்.
ஆக தமிழனுக்கு எல்லா நாளும் அன்னையர் தினம் தான்,எல்லா நாளும் காதலர் தினம் தான்,உலகத்துக்கே அன்பை சொன்னவர்கள் தமிழர்கள் தான் போன்ற வியாக்கியானங்களை விட,இந்த மானுடத்தின் சிறப்பே அன்பைப் பகிர்வதும்,கொண்டாடுவதும்,அந்த மகிழ்வான தருணங்களை அசை போடுவதும் தானே.
எதோ ஒன்றை காரணம் காட்டி,இந்த விழாக்களை கொண்டாடிட்டு தான் போகட்டுமே!இந்த மானுடமும்,ஒட்டு மொத்த உலகமும் ஏங்குவதும், இயங்குவதும் இந்த அன்புக்காகவும்,அன்பாலும் தானே!
இது போன்ற விழாக்களை வருடத்தில் குறிப்பட்ட சில நாட்களை தேர்ந்தெடுத்து கொண்டாடுவதால்,சமூகத்துக்கு எந்த கேடும் ஏற்படப் போவதில்லையே! எந்த கலாச்சாரமாக இருந்தால் என்ன, அன்பை வெளிப்படுத்த,கொண்டாட இது போன்ற நல்ல தருணங்களை உருவாக்கும்,புதிய சூழல் விழாக்கள் எங்கிருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று தானே!
செல்லும் இடமெல்லாம் அன்பை விதைப்போம்!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்