சனி, 31 ஜனவரி, 2015

பாரம்பரிய கிறிஸ்தவர்கள் சிந்திக்க!





பாரம்பரிய கிறிஸ்தவர்கள் சிந்திக்க!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் மீது வைக்கப்படும்,பல தரப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி,பிறப்பால் ஒரு கிறிஸ்தவனான எனக்குள் ஏற்படும் சிந்தனை என்னவென்றால்,

கடந்த ஐந்து ஆண்டுகளாய் மட்டுமே இயேசுவை ஏற்றுக் கொண்ட உமாசங்கர் அவர்கள்,இந்த அளவுக்கு ஆழமாய் வேதாகமத்தை வாசித்து,வேதம் சொல்லும் சத்தியங்களை தெளிவாய் புரிந்து கொண்டு,இயேசுவுக்காய் அவரது சித்தம் செய்ய,அவரது பரலோக ராஜ்ஜியத்துக்காய் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு,அதற்கு எதிரான அனைத்தையும் துணிச்சலோடு எதிர்கொள்வேன் என்று செயல்படும் அவரது தீவிரம், உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சர்யத்தையும்,மெய் சிலிர்ப்பையும் நமக்குள் ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

உமாசங்கர் அவர்கள் எந்த அளவுக்கு,எத்தனை முறை வேதாகமத்தை முழுமையாக வாசித்து அதில் தெளிவுற்று இருந்திருந்தால்,இந்த அளவுக்கு அவரால் வேதாகமத்தின் ஒவ்வொரு அதிகாரத்தையும், வசனத்தையும் போதிக்க முடியும் என்பதை கிறிஸ்தவ நண்பர்கள் மிக உன்னிப்பாக சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.

பிறப்பால் பாரம்பரிய கிறிஸ்தவர்களாக,சமூகம் சொல்கின்ற மிகப் பெரிய படிப்பெல்லாம் படித்தவர்களாக,பதவிகளில் இருப்பவர்களாக, மிகப்பெரிய அனுபவம் வாய்ந்தவர்களாக,உலக விடயங்கள் எல்லாம் அறிந்தவர்களாக,உலக செய்திகளையும், தகவல்களையும் நுனி விரலில் வைத்திருப்பவர்களாக,உலக விடயங்கள் குறித்து எத்தனையோ புத்தகங்களை வாசிக்கும் புத்தக விரும்பிகளாக இருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு,உமா ஷங்கரைப் போன்ற வேதாகம அறிவு இருக்கிறது?

முப்பது ஆண்டுகளாக, நாற்பது ஆண்டுகளாக நான் கிறிஸ்தவன் என்று சொல்லும் நாம்,நம் வாழ்வில் எத்தனை முறை இந்த வேதாகமத்தை முழுமையாக படித்து தியானித்து இருக்கிறோம். அதற்கான விளக்கங்களைத் தேடித் தேடி படித்து இருக்கிறோம்? அனுதின வேத வாசிப்பும் அது குறித்த தியானிப்பும் நமக்கு இருக்கிறதா? அப்படி இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியே!

உமாசங்கர் கத்தோலிக்க கிறிஸ்தவரா, சி.எஸ்.ஐ கிறிஸ்தவரா, பெந்தெகொஸ்தே சபை கிறிஸ்தவரா என்ற ஆராய்ச்சிகள் தேவை அற்றவை.

இந்த கத்தோலிக்கம், சி.எஸ்.ஐ, பெந்தெகொஸ்தே என்று தனித் தனியான கிறிஸ்தவ பிரிவுகளை கட்டிக் கொண்டு அழுவதோ, வக்காலத்து வாங்குவதோ,அதைக் குறித்து பெருமை பேசுவதோ நமது வேலையும் அல்ல,அதில் நமக்கு எந்த உடன்பாடும் இல்லை.

கிறிஸ்துவை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்வதற்கான வழிகளைத் தவிர,இந்த மத அடையாளங்கள் மீது நமக்கு எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை.

வேதாகமம் சொல்லும் அளவீட்டின் படி,எது சரி, எது தவறு, எது சத்தியம், எந்த வழிபாட்டு முறை சரி, எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும், வேதாகமம் சொல்லும் முறைகளுக்கு முரணான விடயங்கள் எவை என்பனவற்றைக் கற்றுக் கொள்வது தான்,நமக்கான சரியான வழிமுறைகளையும்,வழிபாட்டு முறைகளையும் தீர்மானிக்கின்றன.

மற்றபடி நீ கத்தோலிக்க கிறிஸ்தவனா,பெந்தெகொஸ்தே கிறிஸ்தவனா, அல்லது சி.எஸ்.ஐ கிறிஸ்தவனா என்றால் “ கிறிஸ்தவன்” என்பது மட்டுமே நமது பதில்.

உமாசங்கர் அவர்களின் வேதாகம அறிவைப் பார்த்து, நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது நமது கடமை.

மிகப் பெரிய அரசனும்,சங்கீதக்காரனுமான தாவீது இப்படியாக சொல்கிறார்.

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.( சங்கீதம் 119:72)

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு இப்படியாக எழுதுகிறார்.

I கொரிந்தியர் 9:16:

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

கிறிஸ்தவம் என்பது வேதாகம அறிவு மட்டும் அல்ல.மாறாக வாசிக்கும் வேதாகமத்தின் படி நாம் வாழும் வாழ்வியல் என்பதை மறந்து விடக் கூடாது.

**(கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு)**

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கிறிஸ்தவம் சொல்லும்,வியாதியை சுகமாக்கும் வரம் உண்மையா?


கிறிஸ்தவம் சொல்லும்,வியாதியை சுகமாக்கும் வரம் உண்மையா?
ஆம். உண்மை தான்.
பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாடு காலத்தைப் போலவே,இன்றும் தேவனுடைய வரங்கள் கிரியை செய்கின்றன!காலங்கள் மாறுபட்டாலும், வரங்களுக்கெல்லாம் காரண கர்த்தாவான,தேவன் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று அனைத்துக் காலத்திலும் ஒருவரே!
பெரும்பான்மையான வேளைகளில் சுகமாக்கும் வரம் என்பது கேலியாக பார்க்கப் படுகிறது.
உடனடி கேள்வியாக என்ன கேட்பார்கள் என்றால்,நீங்கள் சொல்லும் சுகமாக்கும் வரம் உண்மையென்றால்,கான்சர் வியாதி உள்ள நபரை நான் உங்களிடம் அழைத்து வருகிறேன்,உங்கள் கடவுள் இயேசு கிறிஸ்து அவரை சுகமாக்கினால் நான் நம்புகிறேன் என்று நிரூபிக்க சொல்லிக் கேட்கிறார்கள்.ஆம் கேள்வி நியாயமான கேள்வி தான்.
ஆனால் அப்படி கேள்வி கேட்பவர்கள்,அடிப்படையான சில விடயங்களை மறந்து விடுகிறார்கள்.
இன்றைக்கு ஒரு நோயாளியை,சாதாரண காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் கூட,மருத்துவமனைகளில் பல பரிசோதனைகள் நடக்கின்றன.சில வியாதிகளைப் பற்றி மருத்துவர்கள் குறிப்புகள் எழுதவதற்கு,நோயாளியின் பரம்பரை குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.
நோயாளியின் உணவுப் பழக்கம்,மது அல்லது போதை வஸ்துக்கள் பழக்கம் அல்லது வேறு ஏதேனும் கெட்டப் பழக்கங்கள் உண்டா,உங்கள் தந்தை அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது இது போன்ற வியாதிகள் உண்டா என்று பல கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டி இருக்கு.என்ன காரணம்?
எதற்கு மருத்துவரே என் வியாதிக்கு சம்மந்தமே இல்லாத இது போன்ற கேள்விகள் எல்லாம்?என் வியாதிக்கு சரியான வைத்தியம் செய்ய உங்களுக்கு தெரியுமா,தெரியாதா? நீங்கள் வைத்தியம் செய்தால் கட்டாயம் எனக்கு சுகம் கிடைக்கும் என்று உங்களால் நிரூபிக்க இயலுமா?என்றெல்லாம் நாம் எந்த மருத்துவரிடமும் கேட்பதில்லை.
நாடெங்கும் பல போலி மருத்துவர்கள் நடமாடுகிறார்கள் என்று அடிக்கடி செய்திகளைப் பார்த்த பிறகும் கூட,நமக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர், உண்மையில் மருத்துவம் படித்தவர் தானா என்ற ஆதாரங்களைக் கூட நாம் அவரிடம் கேட்பதில்லை.தான் உண்மையான மருத்துவர் தான் என்பதற்கான(அரசு பதிவு பெற்ற பதிவு எண்)ஆதாரங்களை பெரும்பாலான மருத்துவர்கள் வெளிக்காட்டுவதும் இல்லை.அப்படி வெளிக்காட்டினாலும் அது உண்மையான பதிவு எண் தானா என்பதை மக்கள் எல்லோரும் உறுதி செய்த பிறகு தான் அந்த மருத்துவரிடம் செல்வதாகவும் சொல்ல இயலாது.
ஒரு நோயை சுகமாக்க வேண்டும் என்றால், முதலில் நோய்க்கான கூறுகளை கண்டறிய வேண்டும்,அது முக்கிய வேலை.அதனால் தான் மருத்துவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு.
அடுத்து நோயை மிக சரியாக கண்டுபிடித்து விட்ட பிறகு, சரியான மருந்துகளை கொடுக்க வேண்டியது மருத்துவரின் கடமை. கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்ளும் போது,பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகள்,மது அருந்தும் நபர்களாய் இருந்தால்,மதுவுக்கு தடை என்று பல விடயங்களை நோயாளிகள் கடை பிடிக்க வேண்டி இருக்கிறது..
ஆக ஒரு நோயைக் கண்டு பிடிக்க,அதற்கான மருந்தை தேர்வு செய்ய, மருந்தை உட்கொள்ள என்று ஒவ்வொரு கட்டத்திலும் பல நிபந்தனைகள் உண்டு.இந்த நிபந்தனைகள் அனைத்தையும் ஒரு மருத்துவர் சொன்னால்,அப்படியே கேட்டு நடக்கும் நாம்,தெய்வீக சுகம் மட்டும்,நாம் போன உடனேயே எந்த கேள்விகளும் இல்லாமல், நிபந்தனைகளையும் ஏற்காமல் உங்கள் கடவுள் தன்னை நிரூபிக்கட்டும் என்று வாக்குவாதமும்,குதர்க்கமும் பேசுகிறோம்.
மருத்துவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கிறோம், அவரது அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறோம், அவர் சத்தம் போட்டாலும் வாங்கிக் கொள்கிறோம், அவர் சொல்லும் உணவுக் கட்டுப்பாடுகளை கடை பிடிக்கிறோம்,வியாதிக்காக பணத்தை நாம் அள்ளிக் கொடுத்தாலும், வியாதி சரியாக வேண்டும் என்றால், நமது இஷ்டத்துக்கு நடக்க இயலாது.மருத்துவர் சொல்லும் விதிமுறைகளை எல்லாம் கேட்டுத் தான் ஆக வேண்டும்.
காசு கொடுத்து வைத்தியம் பார்த்தால்,மருத்துவர் சொல்வதையெல்லாம் கேட்கும் மக்கள்,இலவசமான சுகம் என்று சொல்லப் படும் வியாதி சுகமாக்கும் வரத்தை மட்டும் எப்படி கேட்கிறார்கள் என்றால், நான் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப் பட மாட்டேன், நீங்கள் சொல்லும் எதையும் நான் காது கொடுத்துக் கேட்க மாட்டேன்.ஆனால் உங்கள் கடவுள் தன்னை நிரூபிக்கட்டும் என்கிறார்கள். உங்களின் வியாதி சுகமாக வேண்டியது உங்களுக்கு முக்கியமா? அல்லது கடவுள் தன்னை கடவுள் தான் என்று நிரூபிக்க வேண்டியது முக்கியமா?
இங்கே எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. இலவசமாய் வியாதி சுகமாக வேண்டும் என்றால் அந்த வியாதியை சுகமாக்கும் முன் கடவுள் நம்மிடம் விரும்பும் மாற்றங்கள்/ விடயங்கள்/ நிபந்தனைகள் பல உண்டு.அப்படி நாம் கடைபிடித்தோம் என்றால் தெய்வீக சுகம் சாத்தியமே!
ஆனால் எந்த விதிகளையும் கடைபிடிக்க மாட்டேன்,உங்கள் கடவுள் மட்டும் உண்மையில் பலம் வாய்ந்தவர் என்றால்,என் வியாதியை சுகமாக்கட்டும் என்றால்,நீங்கள் சொல்வது போல உங்களிடம் நிரூபித்து தான்,கடவுள் தன்னை கடவுள் என்று காட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் அவருக்கு இல்லை.
அது மட்டுமல்ல விசுவாசம்/நம்பிக்கை இல்லாதவனுக்கு இது போன்ற அற்புதங்கள் நடக்கும் என்ற கட்டாயம் இல்லை.காசே இல்லாமல் இலவசமாய் கிடைக்கும் அற்புத சுகத்துக்கு அடிப்படையே விசுவாசம் தான்.கடவுள் நம்மிடம் விரும்பும் மாற்றம்/செயல் என்று இன்னும் பல கூடுதல் காரணங்கள் இருக்கலாம்.
முதலில் வியாதி ஏன் வருகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு!
வேதாகமத்தில் இயேசுநாதர் வியாதிகளை சுகப்படுத்தும் போது, வியாதிக்காரன் எல்லோரையும் பார்த்து உடனே சுகமாகு என்று சொல்லி அனுப்பவில்லை. மாறாக அவர் நோயாளிகளிடம் சில கேள்விகள் கேட்டார்,அவர்களின் பதில்களை எதிர்பார்த்தார்.
சிலரை நீ இப்படி செய் என்று சொன்னார், சிலரைப் பார்த்து சுகமாக உனக்கு சித்தமா என்று கேட்டார்,சிலரிடம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன,நீ எழுந்து நட என்றார்.இன்னும் சிலரிடம் உன் விசுவாசம் உன்னை சுகமாக்கியது என்றார். ஆக வியாதிகள் ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
வியாதிக்காரன் ஒருவன் ஆண்டவரே என்னை சுகமாக்கும் என்று இயேசுநாதரிடம் கேட்டால்,அவரோ உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன என்கிறார்.அப்படியானால் இயேசுநாதர் சொல்லிய பாவம் மன்னிக்கப் பட்டதற்கும், மனிதனுடைய வியாதிக்கும் சம்மந்தம் இருக்கிறதா என்றால் கட்டாயம் இருக்கிறது.
உன் விசுவாசம் உன்னை சுகமாக்கியது என்று சொல்லும் போதே,வியாதி சுகமாவதற்கும், விசுவாசத்திற்கும் சம்மந்தம் உண்டா என்றால் கட்டாயம் உண்டு என்பது நமக்கு விளங்குகிறது.
வியாதியுடன் வந்த எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று அவர் சொல்லவில்லை.சிலருக்கு மட்டுமே சொன்னார். அதனால் தான் சொல்கிறேன் முதலில் வியாதிக்கான பல காரணங்களை நாம் விளங்கிக் கொள்ளாமல், வியாதியை சுகமாக்க முடியாது.நோய் சுகமாக வேண்டும் என்றால் நோயாளி மருத்துவர் சொல்வது போல கேட்டு மருந்து உட்கொள்ள வேண்டும்.
மருத்துவர் சொல்லும் ஆலோசனையை கேட்காதவர்கள்,வியாதி சுகமாகவில்லை என்று சொல்வது எப்படி அபத்தமோ,அதைப் போலவே இலவசமாய் தெய்வீக சுகத்தை எதிர்பார்க்கும் நபர்களிடமும், தேவன் விரும்பும் காரியங்களை அவர்கள் செய்யாமல்,எங்களுக்கு சுகமாகவில்லை என்று சொல்வதும் அபத்தம்.
இதெல்லாம் சும்மா கட்டுக் கதை என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் உங்களுக்கு அது கட்டுக் கதையாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
நமக்கு அவ்விதமான நேரடியான அனுபவங்கள் கிடைக்காதவரை,பல விடயங்கள் நமக்கு கட்டுக் கதையாகத் தான் தோன்றும்.உலக வரலாற்றிலே கூட, பல கால கட்டங்களில் அறிஞர்கள் பலர் சொன்ன பல விடயங்களை,உடனடியாக உலகம் நம்பவில்லை.ஆனால் மக்கள் அதை உண்மை என்று உணரும் காலம் வந்த பிறகு அதை ஏற்றுக் கொண்டார்கள்.
வியாதியை சுகமாகும் வரம் இன்றும் நடக்கிறது,அது உண்மை தான் என்று அனைத்து கிறிஸ்தவர்களும் நம்புகிறார்களா? அல்லது அப்படியான சுகமாக்கும் வரத்தை நேரடியாக உணர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகமானோர் இருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
இயேசு நாதரை முழுமையாக விளங்கிக் கொள்ளாமல்,அவரை வெறும் புரட்சியாளர் என்று மட்டுமே சொல்லிக் கொள்ளும்,கிறிஸ்தவ பெயரை மட்டுமே வெறும் அடையாளமாக தாங்கி நிற்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
பரிசுத்த வேதாகமத்தை தன் வாழ்வில் ஒருமுறை கூட முழுமையாக வாசிக்காமல்,கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்(வாசித்தால் தான் அவர்கள் கிறிஸ்தவர்களா என்ற வாதம் வேறொரு தலைப்பு).
இந்த வியாதி சுகமாகும் வரம் என்பது எதோ இயேசுநாதர் காலத்தில்,அவர் செய்த அற்புதம்.மற்றபடி இப்போதெல்லாம் எங்க சார் நடக்கிறது என்று, வெறுமனே வேதாகமத்தை கதை போல படித்து விட்டு கடந்து போகிற கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். உண்மையில் இது போன்ற அனுபவங்கள் கிடைத்த நண்பர்களும் இருக்கிறார்கள்.
மக்களில் பலருக்கு இந்த அனுபவம் கிடைக்கவில்லை அல்லது அது குறித்த சிந்தனையோ, அதற்கான சரியான இடங்களோ, வழிமுறைகளோ தெரிவதில்லை. சரியான கிறிஸ்தவ போதனைகள் பலருக்கு கிடைப்பதில்லை.காரணம் கிறிஸ்தவத்தை போதிப்பவர்களுக்கே சரியான கிறிஸ்தவம் புரியாத போது, அவ்விதமான அனுபவங்கள் கிடைக்காத போது, வரங்கள் இல்லாத போது, வரங்களுக்கான மெனக்கெடல் அல்லது ஆர்வம் இல்லாத போது,நம்பிக்கை இல்லாத போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு இதை சொல்லி புரிய வைப்பார்கள்.
இன்னொரு பக்கம்,வெகுஜன மக்கள் கேலியாக சொல்வதைப் போல,தமிழ்நாட்டில் இயேசுநாதர் பெயரை சொல்லி வியாதிகளைக் குணமாக்குகிறோம் என்று,பலர் நடத்தும் சுவிசேஷக் கூட்டங்களிளெல்லாம்,வியாதிகள் உண்மையில் சுகமாகிறதா என்பதற்கு நான் உத்தரவாதம் இல்லை.காரணம் இன்றைக்கு இயேசுநாதரை அப்பட்டமான வியாபாரமாக்கி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
அதற்காக தெய்வீக சுகம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொல்பவர்களின் கூற்றை கட்டாயம் மறுக்கிறேன்!
ஏன் அனைத்து கிறித்துவக் கூட்டங்களிலும் தெய்வீக சுகம் கிடைக்கிறது என்று சொல்ல நான் விரும்பவில்லை என்றால், உலகத்தில் எவ்வாறு நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்களோ அதைப் போலவே,போலி மருத்துவர்களும் அல்லது மருத்துவம் படித்திருந்தாலும்,முறையான வைத்தியம் செய்யாமல் உயிர்களைக் கொல்லும் மருத்துவர்கள் இருப்பதைப் போலவே,இங்கே உண்மையான கிறித்துவ ஊழியர்களும் இருக்கிறார்கள், போலியான கிறித்துவ ஊழியர்களும் இருக்கிறார்கள்.
எப்படி யார் நல்ல மருத்துவர்,உண்மையான மருத்துவர்,சரியான மருத்துவர் என்பதை பகுத்தறிந்து,சரியான வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது நோயாளிகளின் கடமையோ,அதைப் போலவே தெய்வீக சுகம் வேண்டும் நபர்களும், சரியான வழியை தேர்ந்தெடுக்க வேண்டியது அவரவர் கடமை.தேவன் நம்மிடம் விரும்பும் விதிமுறைகள், நிபந்தனைகள், கீழ்ப்படிதல், விசுவாசம் அனைத்தும் இருந்தால் சுகமாக்கும் வரம் என்பது சாத்தியமே.
சிலவற்றை நாம் அனுபவித்து உணராதவரை அது உண்மையா அல்லது பொய்யா என்பதை நம்மால் நம்ப இயலாது.
நம்மைப் பொறுத்தவரை தெய்வீக் சுகம் என்ற வரத்தை வேதாகமத்தில் படித்ததோடு நாம் நின்று விடவில்லை.அந்த வரத்தால் பலமுறை தெய்வீக சுகம் பெற்ற அனுபவப் பாடம் நமக்கு உண்டு.
தெய்வீக சுகம் என்பது கட்டாயம் பெரிய பெரிய கான்சர் வியாதியில் இருந்து மீண்டதாகத் தான் இருக்க வேண்டும்,அல்லது ஒரு இருதய நோயாளியாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல.
ஏன் உங்களால் சகித்துக் கொள்ள முடியாத, மிகக் கடுமையான ஒற்றைத் தலைவலியாக கூட இருக்கலாம், முதுகுவலியாக இருக்கலாம்,மருத்துவர் ஆலோசனைப் படி சரியான மருந்து உட்கொண்டும் கூட,பத்து நாள் சரியாகாத காய்ச்சலாக இருக்கலாம்,வேறு வியாதிகளாக இருக்கலாம்.
ஏன் அப்படியானால் பெரிய பெரிய வியாதிகளுக்கு எல்லாம் சுகம் கிடைக்காதா என்று கேட்பீர்கள் என்றால்,கட்டாயம் உண்டு.அப்படி வியாதிகள் சுகமான பலரை,அவர்களது சாட்சிகளை ஆதாரங்களை நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். ஆனால் இங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை .மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.
அது மட்டும் அல்ல,தலைவலியும்,முதுகுவலியும் மிகச் சாதாரண வியாதிகள் என்று ஒதுக்கி விட முடியாது.காரணம் cluster headache எனப்படும் ஒற்றைத் தலைவலியால் துடிக்கும் நபர்களிடம் போய் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய கொடூரம் என்று.
cluster headache என்பது பிரசவ வலியைப் போல பத்து மடங்கு வலி என்று விக்கிபீடியா தகவல் சொல்கிறது. அந்த வியாதியால் அவதிப்படும் நெருங்கிய நண்பர் எனக்குண்டு.
இன்றைக்கு முதுகுத் தண்டுவட வலி எனப்படும் கொடூர வலியால் நடப்பதற்கே அவதிப்படும்,எத்தனையோ நடுத்தர வயதுக்காரர்களை நான் அறிவேன். ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய முடியவில்லை, அல்லது அது ஒரு தற்காலிக வைத்தியம் மற்றும் பக்கவிளைவுகள் நிறைந்தது எனவே நிரந்தர தீர்வு வேண்டும் என்று சொல்லி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆயுர்வேத வைத்தியசாலைகளில், முதுகுவலிக்காக மாதக்கணக்காக வைத்தியம் செய்யும் பலரை நேரடியாக பார்த்து இருக்கிறேன்.ஆக இங்கே எந்த வியாதியையும் மிக சாதாரண வியாதி என்று ஒதுக்கி விட முடியாது,அது நமக்கு வராதவரை.
ஆக இயல்பான வாழ்வில் நமக்கு வந்த எந்த ஒரு சின்ன வியாதியாகவும்,பெரிய வியாதியாகவும் அதில் கிடைத்த தெய்வீக சுக அனுபவமாகக் கூட இருக்கலாம். அப்படிப்பட்ட நேரடியான அனுபவங்களைத் தான் நான் சொல்கின்றேன்.
கடந்த இருபது,முப்பது ஆண்டுகளாக, நோய்களுக்கான எந்த வைத்தியமும் செய்யாமல், மருந்து,மாத்திரை சாப்பிடாமல் தெய்வீக சுகம் ஒன்றை மட்டுமே நம்பி காத்திருக்கும் பலரை நேரடியாக நான் அறிவேன்.
முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஈழை நோய் எனப்படும் ஆஸ்துமா வியாதியால்(ஈழை நோய் எனபது எவ்வளவு கொடிய நோய் என்பதை விக்கிபீடியாவில் படித்து தெரிந்து கொள்ளலாம்)அவதிப்பட்ட ஒருவர்,தெய்வீக சுகத்தால் சுகமான பின்பு, இன்று வரை (அதாவது கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாக)அவருக்கான எந்த ஒரு வியாதிக்காகவும்,மருத்துவமனைகளுக்கு சென்றதில்லை. மருந்துகளையே அவர் உட்கொண்டதில்லை.
அவரது உடலில் வரும் வியாதிகளுக்கு,இன்று வரை தெய்வீக சுகம் ஒன்றையே நம்பி இருக்கிறார்.சாட்சி வேண்டும் என்றால் என்னோடு வாருங்கள்.நான் அவரிடம் கூட்டி செல்கிறேன்.அதற்காக எல்லோரும் தெய்வீக சுகத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்றோ,மருந்து மாத்திரைகள் சாப்பிடக் கூடாது என்றோ அவர் யாரையும் அவர் கட்டாயப் படுத்துவதில்லை.கடவுள் மீதான அவரது விசுவாசம், நம்பிக்கை அந்த அளவுக்கு அதீதமாய் இருக்கிறது. (ஐயோ சித்தர்கள் அப்படி மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் தான் ஒரு காலத்தில் இங்கே இருந்தார்கள் போன்ற உதாரணங்கள் தற்போதைய நடைமுறையில் அரிது மட்டும் அல்ல,இன்றைக்கு சாதாரண மனிதர்கள் வாழ்வில் அது எதார்த்தம் அல்ல)
வியாதி சுகமாகுறது எல்லாம் சும்மா டுபாக்கூர், அதெல்லாம் நடக்காத ஒன்று, நிரூபிக்க முடியுமா என்று இறை நம்பிக்கை அற்றவர்கள் கேட்பதைக் கூட,ஒரு வகையில் அவர்களின் கேள்வி நியாயம் என்று ஏற்கலாம்.
ஆனால் யாகம் வளர்ந்தால் மழை வரும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள், பாட்டு பாடினால் மழை வரும் என்று நம்புகிற மக்கள் இங்கே இருக்கிறார்கள், கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை வரும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள்,வீட்டில் சுப காரியங்கள் தடைபட்டால்,பரிகாரம் என்ற பெயரில் என்னென்னவோ செய்தால் சரியாகி விடும் என்று,யாராரோ சொல்வதை எல்லாம் கேட்டு அதன்படி சரியாகி விடுகிறது என்று நம்பும் மக்கள் இருக்கிறார்கள். கடவுளுக்காக தன் உடலைக் கிழித்துக் கொண்டால் நல்லது நடக்கும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள்.
முடி காணிக்கை (வேளாங்கண்ணி தேவாலயம் உட்பட)செலுத்தினால் நன்மைகள் நடக்கும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள் மண்சோறு சாப்பிட்டால் சரியாகி விடும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள். நிர்வாண சாமியார்களின் ஆணுறுப்புகளை வணங்கும் மக்கள் இருக்கிறார்கள்,குறிப்பிட்ட சில நதிகளில் குளித்தால் பாவங்கள் எல்லாம் நீங்கி அனைத்தும் சரி ஆகி விடும் என்று நம்பும் மக்கள் இருக்கிறார்கள்,இந்த நிறம் தான் தனக்கு உகந்தது,இந்த குறிப்பட்ட நேரத்தில் தான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்,இதை செய்யவேண்டும்,இது தான் நல்ல நேரம், இது கெட்ட நேரம் என்று ஒரு நாளின் அனைத்து வேலைகளையும்,ஏன் சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிப்பது வரை, ஜோஷியக்காரனை நம்பி அவன் சொல்வதைக் கேட்டு கேட்டு செய்யும் நம்பிக்கை கொண்ட மக்கள் இருக்கிறார்கள்.
உங்கள் நம்பிக்கையை நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை, பகுத்தறிவு வாதத்துக்கு உட்படுத்தவும் இல்லை,அப்படி செய்யவும் மாட்டேன்.அது உங்கள் நம்பிக்கை.நான் கேள்வி கேட்க இயலாது.
ஆனால் இப்படி மேலே சொன்ன விடயங்களை எல்லாம் கேள்வியே கேட்காமல் நம்பும், நடைமுறைப் படுத்தும் மக்கள் நம்மைப் பார்த்து பகுத்தறிவு இருக்கா என்று கேட்கிறார்கள், கிறிஸ்தவம் சொல்லும் வியாதி சுகமாகும் வரம் என்பது டுபாக்கூர் என்று கேலி செய்கிறார்கள். ஹ..ஹா..இது தான் உச்ச பட்ச காமெடியே!முதலில் உங்கள் நம்பிக்கையை, பகுத்தறிவை நீங்களே கேள்வி கேளுங்கள்.
இதென்னய்யா எங்க ஊரு கோடாங்கியும்,குறி சொல்லுகிறவனும் தான் இது போன்ற பல விடயங்களை செய்கிறார்கள். அதென்ன உங்க இயேசுநாதர் தான் இதெல்லாம் செய்கிறார் என்று எப்படி நம்புகிறீர்கள்?
பல விடயங்களை விளக்கி சொல்வதை விட அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்வதும்,வித்தியாசப் படுத்திப் பார்க்க தெரிந்து கொள்வதும் உத்தமம்!
மத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களை சுகமாக்குங்கள். குஷ்டரோகிகளை சுத்தம் பண்ணுங்கள்.இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்!
மத்தேயு 24:35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
***(இறை நம்பிக்கை உள்ள நபர்களுக்கான பதிவு)***
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

வெள்ளி, 30 ஜனவரி, 2015

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் செய்வது சரியா? தவறா?


உமாசங்கர் ஐ.ஏ.எஸ் செய்வது சரியா? தவறா?

யார் இந்த உமா சங்கர் ஐ.ஏ.எஸ்?

தமிழ்நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர்.இருபது ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் மற்றும் கடந்த இருபது ஆண்டுகளில் தன் நேர்மைக்காக பலமுறை பணியிட மாற்றம் என்ற தண்டனையால், அரசியல்வாதிகளால் பந்தாடப்பட்டவர். 

தமிழ்நாட்டில் கழக ஆட்சிகள் இரண்டுமே ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதற்கு,இவரது அதிரடி பணியிட மாற்றங்களும்,இவர் மீது பொய்யாக புனையப்பட்ட குற்றசாட்டுகளுமே சாட்சி.

உமாங்கர் மற்றும் சகாயம் போன்ற நேர்மையாளர்களின் பணிமாற்றம் கலைஞர் மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு ஊழல் அயோக்கியர்களின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டும்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துவதில் உமா சங்கரும்,சகாயமும் எவ்விதத்திலும் சளைக்காதவர்கள்.பணியிட மாற்றத்தை கண்டு பயந்து ஒருபோதும் வளைந்து நெளிபவர்களோ அல்லது கூனிக் குறுகி நிற்பவர்களோ அல்ல.

உமாசங்கரின் நேர்மைக்கு சாட்சியாக இதோ சில உதாரணங்கள்!
சமீப காலத்தில் தமிழ்நாட்டின் மிக மிக கேவலமான ஊழல் எதுவென்று எண்ணிப் பார்த்தால், அது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடைபெற்ற சுடுகாட்டு கூரை ஊழல் தான்.அந்த கேடுகெட்ட ஊழலை செய்த நபர் (அ)டிமைகள் திமுகவில் இருந்த செல்வகணபதி என்ற அமைச்சர்.

அவரே இறுதியாக கலைஞரின் குடும்ப திமுகவில் ஐக்கியமாகி, பின்பு சுடுகாட்டு கூரை ஊழலுக்கான தண்டனையும் பெற்று,அதன் காரணமாகவே தன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பறிகொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர்.

இதில் சுவராஸ்யம் என்னவென்றால்,(அ)டிமைகள் திமுகவின் சுடுகாட்டு ஊழலை சந்தி சிரிக்க வைத்தவர் உமாசங்கர் என்பதற்காக,அவரது பணியில் இருந்து தூக்கி எறியப்பட்டு,உப்பு சப்பு இல்லாத ஒரு துறைக்கு அவரை அதிகாரியாக நியமித்தார் தற்போதைய ஊழல் குற்றவாளியும்,சிறைக் கைதியுமான ஜெயலலிதா.

ஆனால் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும், பணி உயர்வைக் கொடுத்து கூடவே புதிதாக உருவாக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராகவும் உமாசங்கரை நியமித்தார் தாத்தா.. இது எதோ தாத்தா கலைஞர் ரொம்ப நேர்மையானவர் போலவும்,அதனால் தான் உமாசங்கர் என்ற நேர்மையான அதிகாரியை மீண்டும் தன் ஆட்சியில் பதவி உயர்வு கொடுத்து கொண்டு வந்தார் என்பது போலவும் திமுகவினர் பில்டப் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள்.

ஆனால் எதிரியின்(ஜெயலலிதாவின் சுடுகாட்டு ஊழல்)எதிரி நமக்கு நண்பன் என்பது மட்டும் தான் தாத்தாவின் கணக்கே தவிர, மற்றபடி தாத்தா ஒன்றும் ஊழலை வெறுத்தவரும் அல்லர் அல்லது அவரும்,அவர் குடும்பமும் ஊழலில் திளைக்காதவர்களும் அல்ல.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து தாத்தாவோடு வந்து நின்ற லடாய்.
மதுரை தினகரன் அலுவலக எரிப்பில்,தாத்தா மற்றும் மாறன் சகோதரர்கள் முட்டிக் கொண்டதில்,கடுப்பான தாத்தா கலைஞர் என்ற புதிய தொலைக்காட்சி சானலை உருவாக்கினார், அந்த நேரத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி உருவாக உமாசங்கருக்கு ஒப்புதலும் தந்தார்.

அரசு கேபிளை உமாசங்கர் உருவாக்கிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து சிக்கல்களை உருவாக்கிய கேடி(மாறன் பிரதர்ஸ்)சகோதரர்களின் சுமங்கலி கேபிளை அரசுடமையாக்க வேண்டும் என்ற உமாசங்கரின் கோரிக்கை வலுக்கும் நேரத்தில், தாத்தாவின் கண்கள் பனிக்க, கேடிகளும், தாத்தாவும் ஒன்று சேர, அரசு கேபிள் அப்படியே முடங்கிப் போனது.

அரசு கேபிள் விடயத்தில் உமாசங்கரின் நடவடிக்கைகள் இன்னும் துரிதமாகவும்,கூடவே எல்காட்டின் எழுநூறு கோடிக்கும் அதிகமான ஊழலை உமாசங்கர் வெளிக்கொண்டு வரவும், பொறுக்க முடியாத தாத்தாவால் உமாசங்கர் பந்தாடப் பட்டது மட்டும் அல்லாமல்,அவரது ஐ.ஏ.எஸ் பணிக்கே வேட்டு வைக்கும் வேலையை செய்தவர் கருணாநிதி. போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக பொய் குற்றம் சுமத்தி உமாசங்கரை பணி நீக்கமே செய்தார் தாத்தா.

ஐ.ஏ.எஸ் தேர்வாகும் போது தலித் என்று போலி சான்றிதழ் கொடுத்து உமாசங்கர் பணியில் சேர்ந்ததாக தாத்தாவின் குற்றசாட்டு.
தான் ஒரு இந்து தலித் தான் என்பதை சட்டத்தின் துணையோடு நீதிமன்றத்தில் நிரூபித்தார் உமாசங்கர்.ஆகவே அவரது பணி நீக்கம் தவறு என்று நீதிமன்றம் சொல்லி,அதன் மூலம் கருணாநிதி முகத்தில் கரியைப் பூசினார் உமாசங்கர்.

அப்படிப்பட்ட நேர்மைக்கும்,துணிச்சலுக்கும் சொந்தக்காரன். வளைந்து,நெளிந்து இருந்திருந்தால் உயர் பதவிகள் வாய்த்திருக்கும்.பெரிய பணக்காரனாக உலா வந்து இருக்கலாம் உமாசங்கர்..

வேற என்ன செஞ்சு இருக்கார் உமா சங்கர்? ஊழல் ஒழியும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் E-Governance மூலம் பட்டா,சிட்டா, சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ்,முதியோர் ஓய்வூதியம் போன்ற அனைத்தையும் இணைய மயமாக்கியதோடு, ஊழலை ஒழிக்கும் புதிய முறையை உருவாக்கிக் காட்டினார்.

அனைத்து சான்றிதழ்களும், குறிப்பிட்ட தினங்களுக்குள் மக்களுக்கு போய் சேர வேண்டிய கட்டாயம், இதன் மூலம் இடைத்தரகர்களை ஒழித்தார், தீர்வுகளை எளிமையாக்கினார்.

அடுத்து நியாவிலைக் கடைகளில் நடக்கும் அட்டூழியங்களை ஒழிக்கும் விதமாக,புதிய எந்திரம் ஒன்றை குறைந்த விலையில் உருவாக்க சொல்லி,கூடவே ஜிபிஎஸ் கருவியோடு இணைத்து கடைகளை கண்காணித்து, நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் அளவுகள்,கையிருப்பு,போன்ற அனைத்தையும் கணினி மயமாக்கும் பணியையும் செய்து முடித்தார்.ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதற்கு முன் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இப்படி மக்கள் சேவைக்காக இரவு பகலாக உழைத்தவர். இன்றைய இளைஞர்கள் சொல்லும்,கணினி மயமாக்கினால் ஊழல் ஓரளவுக்கு குறையும் என்பதை,அப்படியே நடைமுறைப் படுத்திக் காட்டியவர் உமாசங்கர். இணைய மயமாக்கலில் திருவாரூர் மாவட்டத்தை இந்தியாவுக்கே முன் உதாரணமாக எடுத்துக் காட்டிய நேர்மையான மற்றும் இளமையான சிந்தனைகளோடு வலம் வந்தவர் தான் உமாசங்கர்.

இப்படிப்பட்ட நேர்மையான சகாயம், உமாசங்கர் போன்றவர்கள் தற்போது வகிக்கும் பதவிகளைப் பார்த்தீர்கள் என்றால் உப்புக்கு சப்பான பதவிகள்.

இருபத்து மூன்று ஆண்டு கால பணியில் இருபது நான்கு முறை பணி மாற்றம் செய்யப்பட்டவர் சகாயம் என்றால், முப்பத்தொரு ஆண்டு கால பணியில் ஐம்பது இரண்டு முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு பந்தாடபட்டவர் இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜித் சௌத்ரி. இந்தியாவில் நேர்மைக்கு கிடைத்த தண்டனை இது தான். இது தான் இந்த தேசத்தின் லட்சணம்.

சரி உமாசங்கர் மீதான தற்போதைய குற்றச்சாட்டுக்கு வருவோம்.
உமாசங்கர் ஒரு கிறிஸ்தவர்,அவர் போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தார் என்கிறார்கள்.

ஆனால் அவர் ஒரு தலித் குடும்பத்தை சேர்ந்தவர். தாயார் கிறிஸ்தவர். தந்தை இந்து. ஆகவே அவர் தலித் இந்து என்று சான்றிதழ் வாங்கி இருப்பதில் எந்த தவறும் இல்லை.

இங்கே விமர்சிக்கப் பட வேண்டியது அரசாங்கத்தை தான். காரணம் என்னவென்றால்,ஒரு தலித் “இந்து”வாக இருந்தால் பட்டியல் சாதி(SC) சலுகைகள் அனுபவிக்கலாம், ஆனால் அதே தலித் கிறிஸ்தவராக மதம் மாறி விட்டால்,அவருக்கு பட்டியல் சாதி சலுகைகள் எதுவும் கிடையாது என்பது என்ன விதமான கொடுமை?

அது மட்டுமல்ல தலித் கிறிஸ்தவர்கள்,பட்டியல்(SC)சாதியில் இருந்து இரண்டு அடுக்குகள் மேலே தள்ளப்பட்டு பிற்படுத்தப் பட்டோர்(BC)பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.இது என்ன நியாயம்?அப்படியானால் மதத்தின் பெயரால் சாதிய சலுகைகளை, தீர்மானிக்கும் இந்திய அரசின் சட்டம் தவறு என்பது தான் இங்கே விமர்சிக்கப் பட வேண்டிய ஒன்று.

ஒரு தலித் இந்து, கிறிஸ்தவனாக மாறி விட்டால் அவனது பொருளாதாரம், மற்றும் உரிமைகள் எல்லாம் மாறி விடுமா என்ன? இன்று வரைக்கும் இந்த கேள்விக்கு விடை இல்லை.

ஆக உமாசங்கர் பிறப்பால் ஒரு தலித் இந்து என்பதால் அவர் மீதான பொய் குற்றசாட்டு அடிபட்டுப் போனது.

அடுத்து,அதெப்படி உமாசங்கர் ஐ.ஏ.எஸ் என்னும் ஒரு அரசு அதிகாரி மதப் பிரச்சாரம் செய்யலாம்?

(வெங்கடாச்சலம்)இறையன்பு என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நீண்ட காலமாக இந்து மத சொற்பொழிவு ஆற்றுகிறார். ஏன் இதுவரை எவனும் வாயே திறக்கலை? எத்தனையோ புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒரு அரசு அதிகாரி எப்படி புத்தகம் எழுதலாம், அதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றும் கேள்வி வரும் அல்லவா?

பேசுவது தனி மனித சுதந்திரம் என்று சட்டம் சொல்கிறது. இல்லை இல்லை. ஒரு அரசு அதிகாரி தனது மத அடையாளங்களையோ, மத பிரச்சாரத்தையோ பொது வெளியில் செய்யக் கூடாது என்கிறார்கள் ஒரு சிலர்.

என்ன காரணம் என்றால் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மதத்தை தூக்கிப் பிடித்தால்,அவர்கள் ஒரு சார்பாக செயல்பட நேரிடும் என்கிறார்கள். இன்னொரு கூட்டம் சொல்கிறது, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் சொல்லும் விடயங்களை,மக்கள் எளிதாக ஏற்பார்கள். எனவே உமாசங்கர் போன்ற உயர் அதிகாரிகளின் தாக்கம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இந்திய விண்வெளிக்கு செயற்கை கோள்களை, ராக்கெட்டை அனுப்பும் போது, திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் வைத்து பூஜை, புனஸ்காரங்கள் செய்கிறார்கள்.ராக்கெட் உருவாகும் போது அதன் தளத்தின் ஒவ்வொரு மூலையிலும்,இந்துக் கடவுள்களின் உருவ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. ராக்கெட்டில் ஓம் என்று எழுதி வைக்கிறார்கள்.

ஏன் இஸ்ரோ என்பது இந்துக்களுக்கு மட்டுமே ஆன நிறுவனமா என்ன? செயற்கை கோள்,ராக்கெட் உருவாக்கத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களின் உழைப்பும் இருக்கிறது,ஏன் மத நம்பிக்கை இல்லாத மனிதர்களின் உழைப்பும் இருக்கிறது.இதில் இந்துக்கள், இந்துக்கள் அல்லாத நம் அனைவரின் வரிப்பணமும் சேர்ந்தே தான் இருக்கிறது.அப்படியானால் வெங்கடாச்சலபதி கோயிலில் மட்டும் ராக்கெட்டின் மாடலை வைத்து பூஜை செய்வது என்ன நியாயம்?

ராக்கெட் கிளம்புவதற்கு முன், திருநீறு, தேங்காய் பழம் உடைத்தும், பூசித்தும் அனுப்ப வேண்டிய காரணம் என்ன?அங்கே உங்கள் மதப் பிரச்சாரம் என்ற விவாதம் என்ன ஆனது?

இஸ்ரோவின் தலைவராக எவர் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவரது நம்பிக்கை அவரது வீட்டுக்குள் தானே இருக்க வேண்டும். அதை எதற்கு வேலை தளங்களில் கொண்டு வருகிறார்கள்? இஸ்ரோ என்று மட்டும் அல்ல, டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்தியாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது தான் நடக்கிறது.

ஏன் அரசு அலுவலக வளாகங்களில் இந்து கோயில்கள் மட்டும் இடம் பெறுகின்றன,இந்து பண்டிகைகள் மட்டும் கொண்டாடப் படுகின்றன?அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? இந்துக் கடவுள்கள் மட்டுமே அரசு அலுவலகங்களின் முகப்புகளை தாங்கி நிற்க வேண்டிய அவசியம் என்ன?

உமாசங்கர், இதற்கு முந்தைய காலங்களில்,இந்துக் கோயில்களின் தேர் திருவிழா நேரங்களில்,தேர் வடத்தை எடுத்துக் கொடுத்து துவக்கி வைத்தாரே,அப்போது ஒருவரும் அரசு அதிகாரி எப்படி தேர்வடம் இழுக்கலாம் என்று கேள்வி கேட்கவில்லையே ஏன்?

அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றால், மற்ற மத வழிபாடுகளில், விழாக்களில் கலந்து கொள்ளாதது ஏன் என்று யாராவது விமர்சித்தது உண்டா?

இன்றைக்கு கிறிஸ்தவராக அறியப்படும் உமாசங்கர், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகவோ,ஒரு சார்பு நிலையாகவோ செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால்,இங்கே தாராளமாக விவாதிக்கலாம்.அவர் நேர்மையாக செயல்படாத பட்சத்தில் கட்டாயம் விவாதத்துக்கு உட்படுத்தலாம். அவரது பணியில் குறைபாடுகள் இருந்தால் கேள்வி கேட்கலாம்.

அரசு பதவிகளில் இருக்கும் எத்தனையோ பேர், பலதரப்பட்ட விவாதங்களில், சொற்பொழிவுகளில் பங்கு பெறுகிறார்கள், பட்டிமன்றங்களில் பங்கு பெறுகிறார்கள், கம்பராமாயணம் என்கிறார்கள், மகாபாரதம், பகவத் கீதை என்றெல்லாம் பேசாமலா இருக்கிறார்கள்?

உமாசங்கர் தன் பணி நேரத்தில், பணி செய்யாமல் அலுவகத்துக்கு வருவோர் போவோருக்கெல்லாம் இயேசுவைக் குறித்து பிரசங்கம் பண்ணினால் கேள்வி கேட்கலாம். ஒரு கட்சியில் சேர்ந்து பணியாற்றினால் கேள்வி கேட்கலாம்.

அதை விட்டு விட்டு, வாரக் கடைசியில் அவர் மத பிரச்சாரம் செய்கிறார், மத துவேசம் செய்கிறார், அதனால் கலவரம் வரலாம் என்று வராத கலவரத்தை எல்லாம்,அவர் தான் தூண்டுவதாக கற்பனை செய்து கொண்டால் அந்த கற்பனை நோய்க்கு உலகில் மருந்து எங்கும் இல்லை.

இந்தியாவில் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகளை விடவா, பெரிய மதக் கலவரத்தை உமாசங்கர் உருவாக்கி விடுவார்?
குஜராத் மாநிலத்தின் அனைத்து மக்களையும்,எவ்வித பாகுபாடும் இன்றி சமமாக நடத்துவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, முதலைமச்சர் பதவி ஏற்றுக்கொண்ட மோடி செய்த படுகொலைகளை விடவா,உமாசங்கர் பெரிய மதக் கலவரத்தையும், படு கொலைகளையும் செய்து விட்டார்.

ஒரிசாவில் காரில் தூங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டேயின்ஸ் மற்றும் அவரது சின்னஞ்சிறு குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங் அமைப்பை சேர்ந்த தாராசிங் போன்றவர்கள் செய்தது போன்ற கொடூரங்களையா மக்களுக்கு செய்து விட்டார் உமாசங்கர்.

மசூதி இடிப்பின் மூலம் இந்திய இறையாண்மையை கேலிக்குள்ளாக்கி, ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி,அனைத்து ரயில் நிலையங்கள்,பேருந்து மற்றும் விமான நிலையங்கள், கடைத் தெருக்கள் அனைத்திலும் மோப்ப நாய்களைக் கொண்டு,மோந்து பார்த்து திரியும் அளவுக்கு,இந்த தேசத்தின் மீது தீவிரவாத பயத்தை திட்டமிட்டு உருவாக்கிய,கேடுகெட்ட வேலையையா செய்து விட்டார் உமாசங்கர்?

இயேசு நாதர் பிறப்பை கேலிக்குள்ளாக்கும் எத்தனையோ பிஜேபி எம்பிகள் இருக்கிறார்கள்,பொறுப்பற்ற கட்சித் தலைமைகள் இருக்கின்றன. இந்த நாட்டில் இந்துக்கள் அல்லாதவர்கள்,முறை தவறி பிறந்தவர்கள் என்று சொல்லும் கேடு கெட்ட பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருக்கிறார்கள். என்ன பெரிய தண்டனை கொடுத்தீர்கள்? கண்டித்தீர்களா?

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கிறிஸ்துவத்தின் மீது விமர்சனம் வைத்தால் கூட ஏற்கலாம்.ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும், பிஜெபிகள் கிறிஸ்தவத்தின் மீது விமர்சனம் வைப்பது தான் கேலிக்குரியது.

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து கேலி பேசுகிறீர்களே! உங்கள் மத கடவுள்கள், அவர்களின் பிறப்புகள், வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து நூறு அல்ல ஆயிரம் கேலிக்குரிய கேள்விகளை என்னால் கேட்க முடியும்.ஆனால் எவருடைய நம்பிக்கையையும் கேலிக்குள்ளாக்குவது நம் நோக்கம் அல்ல.

அரசு அதிகாரிகள் என்று மட்டும் அல்ல, தனி மனிதர்கள் கூட எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற சுய தணிக்கை/கட்டுப்பாடு வேண்டும்.

யாரோ ஒரு ஹெச்.ராஜா போன்ற கேடு கெட்ட மத துவேசிகளுக்கு பதில் சொல்வதாய் எண்ணிக்கொண்டு,இந்து மதத்தை பின்பற்றும், என் சக நண்பனின் நம்பிக்கையை நான் கேலிக்குள்ளாக முடியாது.

பிரம்மாவின் காலில் இருந்து பிறந்ததால் சூத்திரன் என்றும் வைசியன் என்றும்,அவன் தாழ்த்தப்பட்டவன் என்றும்,தலையில் இருந்து பிறந்தவன் பார்ப்பனன்,அவன் உயர்ந்தவன் போன்ற அடிப்படை பிற்போக்குத் தனங்கள்,தேவதாசி முறை,உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றுக்கே இங்கே எவராலும் பதில் சொல்ல இயலாது. இதுல பிற மதங்களின் நம்பிக்கையை கேலிக்குள்ளாக்க கிளம்பிட்டானுங்க!

இங்கே யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பரப்பட்டும். விருப்பம் உள்ளவன் ஏற்கப் போகிறான். விருப்பம் இல்லாதவன் விலகிப் போகிறான்.

ஐயோ ஏழைகளுக்கு காசு கொடுத்து தான்,கிறிஸ்தவர்கள் அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற உங்களின் நீண்ட கால கற்பனைக்கு சவாலாகவே சொல்கிறேன், இன்னமும் வறுமையில் உழலும் எத்தனையோ கிறிஸ்தவ கிராமங்கள் இருக்கின்றன.ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியிடம் இல்லாத பணமா?

அணு உலைக்கு எதிராக போராடும் மக்களைப் பார்த்தும் வெளிநாட்டுப் பணம் வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள்,அமெரிக்க கைக்கூலிகள் என்கிறார்கள். அதைக் கடைசி வரை நிரூபிக்க இயலாமல் போனது ஒரு பக்கம்.

ரஷ்ய அணு உலையை எதிர்த்தால், அமெரிக்க கைக்கூலி என்று கூவும் தேசிய கட்சிகளே, இன்றைக்கு ஒபாமாவோடு,உங்க மோ(ச)டி அமெரிக்க அணு ஒப்பந்தம் போட்டு இருக்கிறாரே! அப்படியானால் இங்கே யார் அமெரிக்க கைக்கூலி என்று சொல்ல முடியுமா?

வாதிட முடியவில்லை என்றால்,அந்நிய நாட்டு கைக்கூலி என்பதைத் தவிர வேறேதும் பேசத் தெரியாத குழந்தைகளிடம் எதைப் பற்றி பேச?ஒருவேளை அமெரிக்க அணு உலைகளை எதிர்த்தால்,ரஷ்ய நாட்டின் கைக்கூலிகள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

ஏழை மோடி ஒரு நாள் கூத்துக்கு அணியும் கோர்ட் சூட்டின் விலையே பத்து லட்சம் என்கிறார்கள்.தேர்தல் செலவுக்கும், உங்கள் கேடித் தனத்துக்கும் பல்லாயிரம் கோடி செலவு செய்ததாக கணக்கு சொல்கிறார்கள். அம்பானி, அதானி போன்ற பண முதலைகள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

சாகித்திய விருதுக்காகவும்,இன்ன பிற நலன்களுக்காகவும் உண்மைக்கு புறம்பாக, சந்தர்ப்பவாதம் பேசி “தாய் மதத்துக்கு திரும்புங்கள்” என்று பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசும் ஜோடி.க்ரூஸ் போன்ற பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பணத்துக்காக தான் ஏழை இந்து மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார்கள் என்றால்,நீங்களும் உங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து, வறுமையில் வாடும் கிறிஸ்தவ குடும்பங்களை, இந்துக்களாக மாற்றுங்களேன். முயற்சித்து பாருங்களேன்,யார் வேண்டாம் என்று சொன்னது?

இந்த தேசத்தில் எண்பது சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் பெரும்பான்மை இந்துக்களை,வெறும் மூன்றே மூன்று சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் கிறிஸ்தவர்கள் அவர்களோடு நைசாக பேசி, பணம் கொடுத்து மதம் மாற்றி விட முடியும் என்று நீங்கள் நம்புவீர்கள் என்றால்,பெரும்பான்மையான நீங்கள் ஏன், இந்த வெறும் மூன்றே மூன்று சதவிகித கிறிஸ்தவ மக்களை,எவ்வித வன்முறையும் இன்றி,இந்துக்களாக மாற்ற முயற்சிக்கலாமே! எண்பது சதவிகித மக்களை விட மூன்று சதவிகித மக்களை மாற்றுவது எளிதான விடயம் தானே!

கரசேவை என்ற பெயரில் செய்யும் மசூதி இடிப்பு மற்றும் தேவாலய இடிப்புக்கு பதிலாக இந்து மதம் உயர்ந்த மதம், உன்னதமான மதம், இதன் கோட்பாடுகளை நீங்கள் கடைபிடியுங்கள் என்று மக்களிடம் போய் பேசுங்களேன். அவர்கள் உங்களையும், உங்கள் மதத்தையும் ஏற்றுக் கொள்ளட்டும்.

அதுக்கு முன்னாடி இந்த அரசு அலுவலகங்களில் இருக்கும் இந்து சாமி படங்களை அகற்றுங்கள், அரசு அலுவலக வளாகங்களில் இருக்கும் இந்து கோவில்களை அகற்றுங்கள். ராக்கெட் அனுப்பும் போது, தேங்காய் உடைப்பதையும்,ராக்கெட் மாடலை வெங்கடாச்சலபதி கோவிலில் வைத்து பூஜை செய்வதையும் நிறுத்துங்கள்.

இங்க சில தம்பிமார்கள், அலுவலக நேரம் தவிர, மோடி விடுமுறை நாட்களிலும், மாலை ஆறு மணிக்கு மேலும் இந்து மதப் பிரச்சாரம் செய்தால் எப்படி இருக்கும் என்று எதோ உலக மகா கேள்வி ஒன்றை முன் வைக்கிறார்கள். அடேய் யப்பா ராசாக்களா!
இப்ப மட்டும் என்ன வாழுது?

மோடி ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு மாசமா முழு நேர வேலையா, மதப் பிரச்சாரம் தானே நடக்கிறது. சமஸ்கிருதம் வளர்ப்போம், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்போம்,மதசார்பற்ற நாடு என்ற வார்த்தை வேண்டுமா என்று விவாதிப்போம்,இந்துக்கள் அல்லாதார் முறை தவறி பிறந்தவர்கள், இந்தியாவை இந்து நாடாக அறிவிப்போம் என்று தினம் தினம் இந்த வேலையை மட்டும் தானே பார்க்கிறார். இதுல என்ன பகுதி நேரம் வேண்டிக் கிடக்கு:)

ஊருக்கு உபதேசம் சொல்றதுக்கு முன்னாடி நம்ம யோக்கியனா இருக்கணும்.

சட்டத்தின் துணையோடு, தன் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் உமாசங்கரின் செயல்களை வேடிக்கை மட்டும் பாருங்கள்.

உமாசங்கர் பேசுவது எல்லாம் சரி என்றோ, அல்லது தவறு என்பதோ அல்ல என் வாதம். அவரது பேச்சுரிமை சார்ந்தது மட்டுமே!

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு சொன்ன வார்த்தைகளை மட்டும் இங்கே பதிகிறேன்.

நீதியரசர் சந்துரு:

கோர்ட்கள் முதல்கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் பூஜை நடத்தி பிரசாதம் தரப்படுகிறது. அலுவலக வளாகங்களில் கோவில்கள், பூஜைகள் எல்லாம் உண்டு. வெள்ளிக் கிழமைகளில் தொழ முஸ்லீம்களுக்கு அனுமதியும் தனி இடமும் உண்டு. இதெல்லாம் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது அலுவல் நேரமற்ற நேரத்தில், தனிப்பட்ட ஒரு கூட்டத்தில் பேசும் உமாசங்கரைக் குறிவைக்க காரணம் என்ன?



-ஆன்டனி வளன்

கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் அடுத்து?


கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் அடுத்து?
கடந்த மூன்று ஆண்டுகளாக,மிகப் பெரிய அளவில் கடுமையான தொடர் போராட்டம் மற்றும் எண்ணற்ற புதிய போராட்ட வழிமுறைகள் பின்பற்றப் பட்டாயிற்று.
லட்சக் கணக்கான வழக்குகளை அந்த மக்கள் சந்தித்து ஆயிற்று. கடந்த மூன்று ஆண்டுகள் கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று. ஆயிரக்கணக்கான மக்களின் பாஸ்போர்ட் இன்று வரை முடங்கிப் போய் கிடக்கிறது.
மிகப்பெரிய அளவில்,ஊடகங்களில் இந்த அணு உலை போராட்டம் குறித்து விவாதிக்கப் பட்டாயிற்று, எழுதப் பட்டாயிற்று..உச்ச நீதிமன்றங்களில், உயர் நீதி மன்றங்களில் அணு உலைக்கு எதிரான வலுவான வழக்குகளையும் நடத்திப் பார்த்தாயிற்று.
அரசு அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கொடுத்தாயிற்று. அணு உலையின் தீமைகள் குறித்து மக்களுக்கு பலதரப்பட்ட விழிப்புணர்வு முறைகளை ஏற்படுத்தி ஆயிற்று.
மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என்று அனைத்து கட்சித் தலைமைகளையும், மூத்த அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்து, விளக்கம் கொடுத்தாயிற்று.
நாடு தழுவிய அணு உலை எதிர்ப்பு பிரச்சாரமும் செய்தாயிற்று. அண்டை மாநில முதல்வர்களையும், கட்சிகளையும் கூட சந்தித்து இதற்காக பேசியாயிற்று.
இன்று வரை அணு உலை வேலையே செய்யவில்லை என்பதை நாடே அறியும். அணு உலை நிர்வாகம் சொல்வதெல்லாம் பொய் என்பதையும் நிரூபித்து ஆயிற்று.
டீசலுக்காக பல கோடிகள் செலவு செய்து,அந்த டீசலை வைத்து தான் மின்சாரம் தயாரித்து கோல்மால் செய்கிறார்கள் என்பது வரை விவாதித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தாயிற்று.
தகவல் அறியும் உரிமை சட்டம், தமிழ்நாடு மின்சார வாரியம் கூறிய தகவல்கள் அடிப்படியில் கூடங்குளம் அணு உலை மின்சாரம் என்ற ஒன்று வரவே இல்லை என்று ஊர்ஜிதம் செய்தாயிற்று.
அணு உலைக்கான பொருட்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்தாயிற்று. கூடங்குளம் அணு உலைக்கு பொருட்கள் வழங்கிய பொடாஸ்கி என்ற ரஷ்ய நிறுவனம் ஊழல் செய்ததால் ரஷ்ய நாட்டு சிறையில் களி தின்கிறார்கள் என்பது வரை நிரூபித்தாயிற்று.
சந்தர்ப்பவாத அப்துல் கலாம் சொன்னது, ஆண்டிபட்டியார் சொன்னதெல்லாம் டுபாக்கூர் என்பதும் நிரூபிக்கப் பட்டாயிற்று.
சட்டமோ, நீதி மன்றங்களோ,ஆட்சியாளர்களோ, அரசு அதிகாரிகளோ, திட்டங்களை தீர்மானிக்கிறவர்களோ, கீழ்த் தரமான அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளோ, அதன் தலைமைகளோ, பெரும்பான்மை மக்களோ, வியாபார ஊடகங்களோ இதற்கும் மேல் இது குறித்து எதுவும் பேசுவதாய் இல்லை.
செய்ய வேண்டிய அனைத்து வழி முறைகளையும்,போராட்ட உத்திகளையும் செய்து பார்த்தாயிற்று. ஆனால் இன்னமும் அணு உலை நிர்வாகம் முன்பு சொன்ன அதே பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதாய் இல்லை.இந்த நாடும் தன் அணுக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதாய் உத்தேசம் இல்லை.மாறாக இன்னும் அதிக அணு ஒப்பந்தங்களில் தான் முனைப்பு காட்டுகிறது.நீதி மன்றங்களும் வாய் திறக்கப் போவதில்லை.
அடுத்து என்ன தான் செய்வது?
யாரை நொந்து கொள்ள? இந்த தேசத்தையும்,ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும்,மக்களையும் சபிப்பதை தவிர?
-ஆன்டனி வளன்

ஐடி ஊழியர்களின் தார்மீக சமூக கடமை.



ஐடி ஊழியர்களின் தார்மீக சமூக கடமை.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து இருபத்தைந்தாயிரம் மூத்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்,சென்னை நோக்கியா நிறுவனத்தை மூடுகிறார்கள் என்றதும் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சிகள் என்று பல தரப்பட்ட எதிர் குரல்களை பார்க்க முடிகிறது.
உங்களுக்கென்று ஒரு தொழிலாளர் நல சங்கத்தை உருவாக்குங்கள் என்ற ஆலோசனைகள் வருகின்றன. அரசுகள் இந்த சிக்கலை கையிலெடுக்க வேண்டும் என்ற குரல்களை கேட்க முடிகிறது. தொலைக்காட்சி விவாதங்களை பார்க்க முடிகிறது. சமூக ஆர்வலர்கள் பலரது கருத்துக்களை படிக்க முடிகிறது.

ஐடி ஊழியர்கள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள், சமூகம் குறித்து எந்த கவலையும் அக்கறையும் அவர்களுக்கு கிடையாது என்று பரவலான ஒரு பேச்சு உண்டு,அது ஓரளவுக்கு உண்மையும் கூட.
அதற்காக ஐடி ஊழியர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் சமூகத்தை கண்டும் காணாமல் அவர்கள் கடந்து செல்வதைப் போன்று சமூகம் அப்படி கடந்து சென்று விடுவதில்லை என்பதை நினைவு படுத்திக் கொள்வது நல்லது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களே கூட, இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களில்,கலந்து கொள்கிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க,மற்ற அமைப்புகள் தான் தீவிரமாக இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுகிறார்கள்.
இந்த சமூகத்தில் எது நடந்தால் எனக்கென்ன,சமூகம் குறித்து எனக்கு எந்த அக்கறையும் இல்லை, என்று சமூக அநீதிகளை கண்டும் காணாமல் புறம் தள்ளி செல்வதை தவிர்த்து விட்டு,அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதும், போராட்டங்களில் பங்கெடுப்பதும்,தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் கடமை என்பதை இந்த நேரத்திலாவது உணர்ந்து கொள்வது உத்தமம்.
நாம் எல்லோரும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம், நமக்கென்று சில தார்மீக கடமைகள் இருக்கின்றன என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தால் நலம்..
-ஆன்டனி வளன்

குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்!



குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்!
ஒரு குறிப்பிட்ட மாணவனுடன் அதிக நேரத்தை செலவிடுவதாக, தலைமை ஆசிரியை,பதினைந்து வயது மாணவியை பள்ளியில் வைத்து பலமுறை கண்டித்து இருக்கிறார்.ஆனால் அந்த மாணவி கேட்ட பாடில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு,அந்த மாணவியின் பெற்றோரை நேரில் அழைத்து,உங்கள் மகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்லி இருக்கிறார் தலைமை ஆசிரியை.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து, தனது மகளிடம் அது குறித்து விசாரித்து இருக்கிறார் அந்த பெண்ணின் தாய்..தாய்க்கும் மகளுக்கும் வாய் தகராறு வர, அடுக்கு மாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் அந்த மாணவி.பெங்களூரில் நேற்றைய செய்தி.
ஒரே மகள். தகப்பனார் பெங்களூரின் பிரபல மருத்துவமனையில் புகழ்பெற்ற இதய மருத்துவராகவும், தாயார் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகவும் பணியாற்றுகிறார்களாம்.
அப்படியே அடுத்த பக்கத்தை திருப்பினால்,பதினாறு வயது மாணவன் பள்ளியில் தேர்வுசரியாக எழுதவில்லை என்பதற்காக கைத்துப்பாக்கியால் சுட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்டான் என்ற செய்தி.தகப்பானர் முன்னாள் ராணுவ அதிகாரி.தாய் தந்தை இருவருமே பணிக்கு சென்ற பிறகு வீட்டில் நடந்த சம்பவம். இதுவும் பெங்களூரில் தான்.
பள்ளியில் குழந்தைகளை கண்டிக்க கூடாது என்று ஒரு கூட்ட மக்கள் சொல்வார்கள்.தேர்வு முறை மிகக் கடினம் அதை மாற்ற வேண்டும் என்றும் இன்னொரு கூட்ட மக்கள் சொல்வார்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக,குழந்தைகளுக்கு சரியான அன்பு கிடைக்க வேண்டும். அவர்களோடு மனம் விட்டுப் பேச வேண்டும். பருவ கோளாறுகளை எப்படி கையாளுவது,அவர்களோடு எப்படி பொறுமையாக உரையாடுவது போன்றவற்றை பெற்றோர்கள் உணர வேண்டும்.
அந்தப் பருவம்,உளவியல் ரீதியான, பாலியல் ரீதியான சிக்கல்களை கடந்து வரும் மிகவும் சிக்கலான கால கட்டம் என்பதை எல்லாப் பெற்றோரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அந்த விடலைப் பருவத்தில் நாம் கோபம் கொண்டால்,தவறு என்று கடுமையாக கண்டித்தால், விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அல்ல அதீத பக்குவமாய் தான் பேச வேண்டி இருக்கிறது.
வெற்றி தோல்விகளை எளிதாய் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை நாம் தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். போட்டியான எண்ணங்களை தவிர்க்கும் விதமாக அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்.
அலைபேசி வாங்கித் தரவில்லை, இரு சக்கர வாகனம் வாங்கித் தரவில்லை, கார் வாங்கித் தரவில்லை என்று சின்ன சின்ன சிக்கல்களுக்கெல்லாம் தவறான முடிவை எடுக்கும் எத்தனையோ செய்திகளை பார்க்கிறோம்.
ஆக இந்த காலத்து குழந்தைகளை மிகவும் கவனத்தோடு, கையாள வேண்டிய கட்டாயம் பெற்றோரிடம் இருக்கிறது.அவர்களோடு அதிக நேரம் செலவிடுவது,உரையாடுவது மிக முக்கியம்.
-ஆன்டனி வளன்

வாழ்த்துகள் சசிரேகா!





வாழ்த்துகள் சசிரேகா!பெண் ஊழியரை டிஸ்மிஸ் செய்த உத்தரவை வாபஸ் பெற்றது டி.சி.எஸ்.குரோம்பேட்டையைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரியான சசிரேகா டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை பணி நீக்கம் செய்து கடந்த மாதம் 22ம் தேதி உததரவு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்ற படியேறி, தற்போது வெற்றி பெற்றுள்ளார் சசிரேகா.

இருபத்தைந்தாயிரம் மூத்த ஊழியர்களை நிறுவனத்தை வெளியேற்றும் எண்ணம் கொண்டது டிசிஎஸ் மட்டுமல்ல,டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து,இன்னும் பல பிரபலமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களையும் வெளியேற்றும் எண்ணத்துடனேயே இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போதைய நீதிமன்ற நடவடிக்கை,ஊடக விவாதங்கள்,

இயக்கங்களின் போராட்டங்கள் போன்றவற்றையெல்லாம் பார்த்து கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றன அந்த ஐடி நிறுவனங்கள்.

நீதிமன்ற படியேறிய சசிரேகாவின் முயற்சி உண்மையில் பாராட்டத்தக்க முயற்சி மட்டுமல்ல பலருக்கு முன் உதாரணமும் கூட.


லட்ச லட்சமாய் சம்பாதிப்பாதாக சொல்லிக் கொண்டாலும் கூட, பணிக்கான எந்த பாதுகாப்பும் உத்தரவாதமும் இல்லாத மற்றும் சிக்கலான நேரங்களில் குரல் கொடுக்க எந்த ஒரு வலுவான தொழிற்சங்கங்களும் இல்லாத ஐடி துறையினர், இதற்கான ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவது நல்லது.


முந்தைய காலங்களில் இது போன்று பணி இழந்த ஆயிரக் கணக்கானோர் சசிரேகா போன்று எதிர்த்து நிற்க முடியாமல் அல்லது அந்த வழி தெரியாமல் அல்லது மிகப் பெரும் தொழில் நிறுவனங்களை எதிர்த்து போடப்படும் நீதிமன்ற வழக்குகள் எவ்வித பயனும் அளிக்காது என்று கடந்து சென்ற நிலையில்,சசிரேகாவின் இந்த வெற்றி பலருக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த சிக்கலை மிகப் பெரிய அளவில் ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்திய அனைத்து அமைப்புகளுக்கும் கூடுதல் நன்றி சொல்ல வேண்டியது நமது கடமை.-ஆன்டனி வளன்

செவ்வாய், 20 ஜனவரி, 2015

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா?


**(கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு)***
மதங்களை எல்லாம் கடந்து தமிழர்களாக அனைத்து மக்களும் பொங்கல் கொண்டாடி வரும் மகிழ்ச்சியான தருணத்தில், கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா என்றொரு கேள்வியையும் பரவலாகப் பார்க்க முடிகிறது.
பொங்கல் என்பது இந்துக்கள் பண்டிகை அல்ல மாறாக அது ஒட்டு மொத்த தமிழர்களுக்கான பண்டிகை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து பொங்கல் கொண்டாடலாம் என்று வேதாகமத்தில் சொல்லி இருக்கிறாரா?என்று வேதாகமத்தின் பக்கங்களை புரட்டி புரட்டி வசனங்கள் தேட வேண்டியதில்லை.இயேசு கிறிஸ்து, தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் வேட்டி, சட்டை, சேலை தான் அணிய வேண்டும் என்று வேதாகமத்தில் எங்காவது சொல்லி இருக்கிறாரா?
**தேசத்தில் பயிரிடப்பட்ட அறுவடை செய்யும் போது, அறுப்பின் முதற் பலனாகிய ஒரு கதிர்க்கட்டை தேவாலயத்திற்குக் கொண்டு வந்து கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்" (லேவியராகமம் 23:10,11)**
மதங்களைத் தாண்டி இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு அனைத்திற்கும் உடபட்டவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது. காரணம் இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் எவரும் அமெரிக்க, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் அல்லர்.
மேற்கத்திய கலாச்சாரம் என்று சொல்லப்படும் எத்தனையோ விடயங்களை, உடைகளை,பழக்க வழக்கங்களை கேள்விகளே கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள்,தன் மண் சார்ந்த பாரம்பரிய பண்டிகைகளுக்குள் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
நீங்கள் பொங்கல் கொண்டாடுவீர்களா?ஆம் நாங்கள் பொங்கல் கொண்டாடுவோம்.என் பண்பாட்டு,கலாச்சாரத்தில் எந்த முரண்பட்ட கேள்விகளும் எனக்குள் இல்லை.
ஆனால் எங்கள் பொங்கல் கொண்டாட்ட முறை என்பது வேறு. அது என்ன முறை?
பொதுவாக இங்கே பல கிறிஸ்தவர்கள் சாப்பிடும் போது,ஒரு சிறிய ஜெபம் செய்யும் பழக்கம் உண்டு.ஆண்டவரே இந்த உணவை எங்களுக்குத் தந்ததற்காய் உமக்கு நன்றி, இந்த உணவை சமைத்த கரங்களை நீர் ஆசிர்வதியும் என்று ஓரிரு வரிகளாய் இருக்கும் ஜெபங்கள்.
சமைத்த கரங்களை ஆசிர்வதியும் என்பதைப் போலவே அறுவடைப் பண்டிகையான் எங்கள் பொங்கல் விழாவின் போது, ஆண்டு முழுவதும் எங்கள் உணவுக்காக உழைக்கும் விவசாயியை எண்ணிப் பார்த்து,ஆண்டவரே நீர் அவர்களை ஆசிர்வதியும், அவர்களுக்கு நல்ல மழையைக் கொடும், அவர்கள் விவசாயத்துக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலைகளை உருவாக்கிக் கொடும், அவர்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலையைக் கொடும், அவர்கள் பொருளாதார தேவைகளை எல்லாம் நீர் ஆசிர்வதியும்,நல்ல சுக பெலன் ஆரோக்கியம் கொடும், அழிந்து வரும் விவசாயத்தை நீர் பாதுகாத்துக் கொள்ளும் என்றும், கடந்த ஆண்டு நீர் அவர்களின் விவசாயத்தை ஆசிர்வதித்தற்காய் நன்றி என்றும்,படைப்பின் காரண கர்த்தாவான இறைவனிடம் உள்ளத்தில் வேண்டிக் கொள்ளுவோமே ஒழிய ஒரு போதும் இயற்கையை வழி பட மாட்டோம்.
நம் விவசாயிகள்,அவர்களின் விவசாயத்துக்கு நன்றி சொல்லும் விதமாக சூரியனையோ, மழையையோ,இயற்கையையோ என்று எதற்கு வேண்டுமானாலும் நன்றி சொல்லிக் கொள்ளட்டும்.
ஆனால் நம்மைப் பொறுத்த வரைக்கும் படைப்பையோ, இயற்கையையோ அல்ல,மாறாக படைத்தவன் ஒருவனே ஆராதனைக்கும், போற்றுதலுக்கும், வழிபடுவதற்கும் உரியவன் என்ற எண்ணமும்,தெளிவும் என் மனதில் இருக்கும் வரை,பொங்கல் கொண்டாடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
எத்தனையோ இந்து மதத்தை சார்ந்த நண்பர்கள் வீடுகளில் திருவிழா காலங்களில் சாப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் அங்கே சாப்பிடுவதற்கு முன், நீங்கள் உங்கள் கடவுளுக்கு படைக்காத உணவு என்றால் சாப்பிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று வெளிப்படையாக சொல்லி,அவர்கள் கடவுளுக்கு படைக்காத உணவை வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.படைக்கப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது என்ற கிறித்துவ போதனையின் தெளிவு உண்டு.அதற்காக உங்கள் வீடுகளில் சாப்பிட மாட்டேன் என்று அடுத்தவர் மனதை புண்படுத்தும் எண்ணம் ஒருபோதும் இல்லை. பண்டிகை நாளில் நம் வீட்டுக்கு வந்த ஒருவர் நம் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் நமக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்? அதைப் போலத் தானே மற்ற மனிதர்களும். உடன்படாத விடயங்களை வெளிப்படையாக சொல்லி விட்டால் சிக்கல் இல்லை.படைக்கப்பட்ட உணவை சாப்பிட மாட்டேன் என்று சொல்லி விட்டால் சிக்கல் தீர்ந்தது.
தன்னை நேசிப்பது போல சக மனிதனை நேசிப்பதும், ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்பதும்,அடுத்தவர் மனங்களை காயப்படுத்தாத வகையில் நடந்து கொள்வதையும் விட பெரிய கிறித்துவ போதனை வேறெதுவும் இருக்க முடியாது.
கிறிஸ்தவம் என்பது வேதாகமத்தில் இருக்கும் வெறும் போதனைகள் மட்டுமே அல்ல.அது நம் வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய வாழ்வியல் என்ற புரிதல் வேண்டும்.
வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை உள்ள அனைத்துப் பகுதிகளையும் மனப்பாடமாக வைத்திருப்பவர்கள், எந்த கேள்வி கேட்டாலும் வேதாகம வசனத்தோடு சரியான விளக்கம் அளிக்கும் நபர்களில் எத்தனை பேர், தங்கள் ஆண் மகன்களுக்கு திருமணம் செய்யும் போது,பெண்ணைப் பெற்ற தகப்பன்மார்களை கஷ்டப்படுத்தி,கொடுமைப் படுத்தி, அழ வெச்சு வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துள்ளீர்கள்?
எத்தனை கிறித்துவ ஆண் மக்கள்,தன் பெற்றோர் கேட்கும் வரதட்சணை என்பது தவறு,இப்படி அடுத்த குடும்பத்தை அழ வைப்பது மிகப் பெரிய பாவம் என்பதை உங்கள் பெற்றோருக்கு சொல்லி புரிய வைத்து இருக்கிறீர்கள்? அது தான் நடைமுறை வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய மிகப்பெரிய போதனை.
நியாயப் பிரமாணத்தையும்,அதன் சட்டங்களையும் மட்டுமே பிடித்துக் கொண்டு,அதை மட்டுமே வைத்தே அடுத்தவரை குற்றம் கண்டுபிடித்து, அன்பை மறந்து அலைந்த பரிசேயர்கள் என்னும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல அல்லாமல், கிறிஸ்துவின் அன்பை நிலை நிறுத்துவோம்.
வெளிப்புற அடையாளங்களில் அல்ல,.மாற்றம் உங்கள் உள்ளான(ஆத்மா) மனுஷனுக்குள் வர வேண்டும்.
-ஆன்டனி வளன்

உணர்ச்சி வசப் படாதீங்கப்பு


“அகரம்” “அகரம்” என்று சூர்யாவின் கல்வி அறக்கட்டளை பற்றிவிஜய் தொலைக்காட்சியில் போட்ட காட்சிகளைப் பார்த்து,மக்கள் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்காங்க!
கோடி கோடியாய் சம்பாதிக்கும் அவன் உதவி செய்தானா,இவன் உதவி செய்தானா,சூர்யாவைப் போன்ற உன்னத மனிதர்கள் உலகில் உண்டா என்று வீர வசன தொனிகளைக் கேட்க முடிகிறது.
ராசாக்களா ரொம்ப பொங்காதீங்க, உணர்ச்சி வசப் படாதீங்க.அதற்கு பின்னால் இருக்கும் விடயங்களை எல்லாம் கொஞ்சம் தேடித் தேடி படிங்க ராசா! சும்மா ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது ஆமா.
ஊடகங்கள் சொல்லும் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பிட்டு பொங்கிடக் கூடாது. ஊடக அரசியல் தான் இன்றைக்கு மிகப் பெரிய அரசியல். பொய்யும் புரட்டும் நிறைந்த அரசியல்.
ஆகவே அகரம் அறக்கட்டளை சார்ந்து நிறையப் படிங்க. மொத்தத்துல ஒவ்வொரு விடயத்துக்கும் ஆதரவா, எதிரா எழுதுற பல தளங்களைப் படிங்க. அப்புறமா ஒரு முடிவுக்கு வாங்க!
என்னய்யா எல்லாத்தையும் குறை சொல்லிட்டே இருக்கான் மனுஷன் அப்டின்னு உங்களுக்கு என் மேல கோவம் வரத் தான் செய்யும்.என்ன செய்யட்டும்?
உண்மையில் உங்களால் முடிந்த உதவிகள் சிறிதாயினும், பெரிதாயினும், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் சத்தமே இல்லாமல், உங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செய்து கொண்டு போயிட்டே இருங்க.அது தான் உத்தமம்.
ஒரே ஒரு சின்ன செய்தி சொல்ல வேண்டும் என்றால் சூர்யா கேட்டதும், ஏழை மாணவர்களுக்கு இலவசமாய் கல்வி தருவதாய் சொன்ன கல்லூரிகள், நீங்களும் நானும் போய், அப்படிப்பட்ட தகுதியான ஏழை மாணவர்களுக்கு இலவசமாய் இடம் தரச் சொல்லி கேட்டால் தருவார்களா? கட்டாயம் பெரும்பான்மை கல்லூரிகள் தரப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
என்ன காரணம்? உதவி செய்வது தான் கல்வியாளர்களின் நோக்கம் என்றால் சூர்யா போய் கேட்டால் என்ன, அல்லது நீங்களோ நானோ போய் அதே தகுதியான ஏழை மாணவனுக்கு(தேவையான வருமான ஆவணங்களோடு) கேட்டால் என்ன? சூர்யா கேட்டால் சரி என்று சொல்லும் நிறுவனங்கள், நீங்கள் கேட்டால் ஏன் தர மறுக்கின்றன?
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. எல்லாருக்கும் இங்கே ஒரு விளம்பரம் தேவைப் படுகிறது. ஆமா!
அதுமட்டுமல்ல இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வித் தந்தைகளை விட மிகப் பெரிய பகல் கொள்ளைக்காரர்கள் வேறு எவரும் இல்லை. கொள்ளையடித்தாலும் பரவாயில்லை, ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கல்வியாளர்களின் மனசப் பாருங்க சார், என்று நாயகன் பட வசனத்தை தூக்கிட்டு வந்துடாதீங்க:)
ஆமா இந்த கல்வியாளர்களுக்கும், உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சூர்யாவுக்கும் என்ன சம்மந்தம்? நெறைய சம்மந்தம் இருக்கு, எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்படி?நீங்களே படிச்சுக்கோங்க. அது தான் சரியாக இருக்கும். மொத்தத்துல ஊடகங்களிடம் கொஞ்சம் சூதானமா இருங்கப்பு! ஆமா அம்புட்டு தான் சொல்ல முடியும்.
நமக்குத் தெரிந்து,நமது நண்பர்கள் சிலர் சத்தமே இல்லாமல் இது போன்ற கல்வி உதவிகளை, தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாய் செய்து வருகிறார்கள்.இது தான் நிஜம்.
விளம்பரமே இல்லாமல்,எந்த பிரதிபலனும் இல்லாமல் சொந்தப் பணத்தில் உதவி செய்யும் இவர்கள் தான் போற்றப் பட வேண்டியவர்கள்.
திட்டுறவங்க திட்டிக் கொள்ளலாம்:)
-ஆன்டனி வளன்

அண்ணா ஹசாரே டுபாக்கூர் கூட்டம்


ஹசாரே கூட்டமே,ஒரு அயோக்கியக் கூட்டம் தான் என்று ஆரம்பத்திலேயே எத்தனையோ பேர் படிச்சு படிச்சு சொன்னாங்க! இவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி யின் பி டீம் என்று சொல்லிப் பார்த்தார்கள். 

அது மட்டுமல்ல அண்ணா ஹ்சாரே ஒரு உலக மகா டுபாக்கூர் என்றும், அண்ணா ஹசாரேயின் சொந்த ஊரான ராலேசித்தியில் பாலும்,தேனும் ஓடுவதாக ஊடக அயோக்கியர்கள் வியாபாரம்(விபச்சாரம்)செய்த போது, இல்ல இல்ல அது ரொம்ப பஞ்சத்துல அடிபட்ட,வளர்ச்சி அடையாத,அடிப்படைப் பிற்போக்குத் தனங்கள் நிறைந்த, மிக சாதாரண ஊரு.

அங்க குடி கும்மாளம் எல்லாம் உண்டு.சாராயமும் இருக்கு,புகைப் பழக்கமும் இருக்கு. மற்றபடி ஊடகங்கள் சொல்வது போல சொர்க்க பூமி எல்லாம் இல்லை என்று,நேரடியாகவே சென்று கள ஆய்வுகள் செய்து உண்மையை பதிவு செய்த எழுத்தாளர்களையும் அறிவேன்.

வெறுமனே ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப் பட்ட, போலியான அந்த டுபாக்கூர் ஹசாரே பலூனை, இதோ புரட்சி வந்து விட்டது என்று நம்பி ஏமார்ந்த கூட்டம் இங்கே ஏராளம் உண்டு.ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த சினிமாக்காரனுங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இவிங்க மொதல்ல இவிங்க வாங்குற சம்பளத்துக்கு முறையான வரி கட்டுறதும் இல்லை.உண்மையான சம்பளத்தை கணக்கில் காட்டாமல், கறுப்புப் பணமாய் வாங்கி சுருட்டுவதும் இவிங்க தான் என்பது தனிக்கதை.

தமிழனின் பிரச்சினைகளுக்கு,ஏன் இனப்படுகொலைக்கே மௌனம் காத்த பல அறிவாளிகள்,பல ஐ.டி ஊழியர்கள் பெரும்பான்மை ஆண்கள்,பெண்கள் இங்கே எதோ புரட்சி வந்து விட்டதாய் அண்ணா ஹசாரேவுக்கு கொடி பிடித்து,தங்கள் நிறுவனங்களுக்கு முன்பு ஊர்வலம் நடத்திய கதைகள் ஏராளம் உண்டு. உடனே ஐடி ஊழியர்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையா என்றெல்லாம் கேள்விகளைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

அண்ணா ஹசாரேவை அடுத்த காந்தியாக எண்ணி,மெழுகுவர்த்தி ஏந்தி,நான் தான் ஹசாரே என்று கோமாளித்தன தொப்பி அணிந்து, வரிந்து கட்டிக் கொண்டு பேசி,மொத்தமாய் ஏமார்ந்த கூட்டத்தைப் பற்றி இங்கே பேசுகிறேன்.இந்த கார்ப்பரேட் பூர்ச்சி கூட்டத்திடம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது நமது கடமை.

எவன் பூர்ச்சியாளன், எவன் டுபாக்கூர் என்ற வித்தியாசத்தை உணர கால அவகாசம் எடுத்து,சிந்தித்து நிதானித்து அறிந்து கொண்டு,அதன் பிறகு செயல்படுவது உத்தமம்.

ஊழலை ஒழிக்கப் பிறந்த(????) கிரண்பேடி அன்னா ஹசாரேவின் பின்னாடி நின்று கொண்டு தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு நின்றது, இந்தா இப்ப கொடி மட்டும் மாறி இருக்கு.அடுத்து இந்தா சாசியா இல்மி கல்மி என்று இதுவும் ஹசாரே அயோக்கியக் கூட்டத்தின் அடுத்த சாம்பிள்.

எல்லாம் கழிசடைகளாத் தான் இருந்திருக்கும் போல. சூடு சொரணை எல்லாம் இருக்குமா? சந்தேகமா இருக்கு.

மொத்தத்துல ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கபப்டும், இந்த போலி பூர்ச்சி பலூன்களில், ரொம்ப நாளைக்கு காத்து தங்காது. சீக்கிரம் புஸ் ஆகிடும்.ஆமா...

-ஆன்டனி வளன்

பெருமாள் முருகனுக்கு செய்ய வேண்டிய கடமை


மாதொருபாகன் நாவலின் மின்னூல் இணைப்பு, இணையங்களில் இலவசமாக கிடைப்பதாக பெரும்பாலானோர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். வாசிக்க விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து கட்டாயம் இதை வாசியுங்கள்,பயமின்றி பகிருங்கள் என்றெல்லாம் செய்தி வருகிறது.
ஆனால் பெருமாள் முருகன் என்ற மனிதனின் உழைப்புக்கான சன்மானம்?
புத்தகத்தின் விலை குறைந்த பட்சம் ரூபாய் இருநூற்று ஐம்பது இருக்கும் என்பது என்அனுமானம்.
பெருமாள் முருகன் அவர்கள் மன அழுத்தத்தில் வெறுப்பில்,
கோபத்தில்,நெருக்கடியில் என் புத்தகங்கள் அனைத்தையும் திரும்ப பெறுகிறேன்,நட்டம் இருந்தால் பதிப்பாளருக்கு அதைத் தந்து விடுகிறேன் என்று சொல்வது கடுமையான விரக்தியில்.
ஆனால் தரவிறக்கம் செய்யும் நாமோ, குறைந்த பட்ச மனசாட்சியோடு புத்தகத்துக்கான முழுத்தொகை கொடுக்க வேண்டாம்,ஆனால் குறைந்த பட்சம் அவரவரால் எவ்வளவு கொடுக்க இயலுமோ அதை அவருக்கு கொடுத்து படித்தால்,கொஞ்சம் மன நிம்மதியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு படைப்பாளிக்கு உறுதுணையாய் நிற்க நாம் செய்யும் கடமையாக,பேருதவியாக,நம்பிக்கையாக அது இருக்கும்.
பெருமாள் முருகன் கல்லூரிப் பேராசிரியர் தானே, அவருக்கு இதனால் பெரிய நட்டம் இல்லை,இப்படிப் பணம் கொடுப்பதை வாங்கும் நிலையில் அவரும் இல்லை,மட்டுமல்ல அவரே அதை இலவசமா தருகிறேன் என்று சொல்லும் போது எதற்கு பணம்? இந்த புத்தகத்தை எல்லோரும் படிப்பதே அவருக்கு செய்யும் பெரிய உதவி தான் என்றெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் இந்த சர்ச்சைக்கு முன் அவர் இந்த புத்தகத்தை இலவசமாக தருவதாக எங்கும் சொல்லவில்லை. ஒரு நெருக்கடியில், வேறு வழியில்லாமல் சொல்லி இருக்கிறார். ஆனால் நமக்கு ஒரு மனசாட்சி வேணும்ல:)
அடுத்தவர் உழைப்பு,அதற்கான ஒரு விலை.
-ஆன்டனி வளன்

கட்ஜு அப்படி என்ன தான் சொன்னார்?


மார்க்கண்டேய கட்ஜு காத்ரீனா கைப்- ஐ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிறார்.நடிகைகளை அரசியல் பதவிகளில் உட்கார வைப்பது நாட்டுக்கு நல்லது என்று சொல்லி இருக்கிறார்.இவரெல்லாம் மனுஷன் தானா, இவர் வயசுக்கும் பொறுப்புக்கும் இப்படி பேசலாமா, இந்த வயசுலயும் இவர் போடுற ஆட்டத்தைப் பார்த்தியா என்றெல்லாம் கோஷங்களைப் பார்க்க முடிகிறது.
ஆனால் கட்ஜு சொன்ன கேலியான விடயத்தின் முதல் பகுதியை விட்டு விட்டார்கள்.தங்களுக்கு தேவையான இரண்டாம் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு போட்டுத் தாக்குகிறார்கள்.
அதாவது இந்த நாட்டின் அரசியல்வாதிகளெல்லாம் வானத்தை இங்கே கொண்டு வந்து இறக்கிடுவேன்,நிலாவைப் பிடிச்சு பூமிக்கு கொண்டு வருவேன், உங்க வீட்டு குழாய்களில் எல்லாம் பாயாசம் வர வைப்பேன்,எல்லாருக்கும் வேலை தந்திடுவேன்,நாங்க மட்டும் ஆட்சிக்கு வந்தா சோறை சமைச்சு உங்க வீட்டுக்கே எடுத்து வந்து, உங்களுக்கு ஊட்டி விட ஆளையும் சேர்த்தே அனுப்பி வைப்போம் என்று வாயிலே வடை மட்டுமே சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட புழுகுணிகளால் நாட்டு நலனுக்கோ மக்களுக்கோ எந்த நலனும் இருக்கப் போவதில்லை. மக்கள் வெறுமனே ஏமார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆக வெறும் வடை சுடும் வேலையை மட்டுமே செய்யும் அரசியல்வாதிகளுக்கு பதிலாக,நடிகர் நடிகைகளை அரசியல்வாதிகளாக தேர்ந்தெடுத்தால்,குறைந்த பட்சம் அந்த அழகான நடிகைகளின் முகத்தைப் பார்த்தாவது மக்கள் சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்,அதுவாவது மிஞ்சுமே என்று மிக கேலியாக சொல்லி இருக்கிறார்.
கட்ஜு சொன்ன இந்த நகைச்சுவையில் எதுவுமே செய்யாத வெட்டி அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாட்டை அடி இருக்கிறது,அதைப் போலவே மக்கள்(கட்ஜுவை சேர்ப்பதும்,சேர்க்காததும் அவரவர் விருப்பம்)இன்னமும் நடிகர்/நடிகைகளைப் பார்த்தால் ஆ என்று வாய் பிளந்து உயிரை விடும் அளவுக்கு சினிமாக்காரர்களோடு நெருங்கி இருக்கும் மடத்தனத்தையும் கேலி செய்கிறது.அப்படித் தான் எடுத்துக் கொள்ள முடியும்.
சரி அதற்காக ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர், இப்படியெல்லாம் பேசலாமா என்றால்,எப்போதுமே இறுக்கமாகவே பேச வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?
அது மட்டுமல்ல இந்த பதிவு நான் மிகவும் கேலியாக சொன்னவிடயம் தான், ஆனாலும் சிலர் அதை தவறாக எண்ணி,விமர்சிக்கப்படும் அளவுக்கு சென்றதால்,அந்தப் பதிவுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன் என்றும் எழுதி இருக்கிறார்.
***எந்த ஒரு விடயத்தையும் அது சொல்லப்ப்ட்டதற்கான சூழல்,அதற்கு முந்தைய,பிந்தைய விடயங்களை எல்லாம் சேர்த்தே பார்ப்பது தான் சரியாக இருக்க முடியும்.நடுவுல சொன்ன நமக்கு சாதகமான ஏதாவது ஒரு வார்த்தையையோ, வாக்கியத்தையோ, கருத்தையோப் பிடித்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக கூச்சலிடுவது தவறு.
மாறாக முழுமையாய் படித்து புரிந்து கொண்ட பின்னர் விவாதிப்பதே சரியாக இருக்க முடியும் என்பதே நாம் சொல்ல வரும் செய்தி! ***
***குறிப்பு: பெருமாள் முருகனின் கதைக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.***
-ஆன்டனி வளன்

ரொம்ப நாளா ஒரு சந்தேகம்!



இடதுசாரி எழுத்தாளர்கள் vs தமிழீழம்.

கடந்த பத்து ஆண்டுகளாக இணையம்,பிரபலமான பலரது வலைப்பூக்கள் என்று தேடித் தேடித் படித்தாயிற்று.கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முகநூலில் பிரபலமான மற்றும் ஓரளவுக்கு நியாயமான எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என்று பலரது பக்கங்களை,அவர்களின் பதிவுகளையெல்லாம் தொடர்ந்து படித்து வந்த போதிலும்,ஒரே ஒரு விடயம் மட்டும் ரொம்ப நெருடலாக உணர்கிறேன்.

ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.

உலக நாடுகளில் நடக்கும் அனைத்து பிரச்சினைகள்,அது மட்டுமல்ல இந்தியா, தமிழ்நாடு என்று இங்கு நடக்கும் அனைத்து அரசியல் சிக்கல்களிலும், தங்கள் கருத்துக்களை,எதிர்ப்புகளை,சாதக பாதங்களை மிக விளக்கமாகவும், வெளிப்படையாகவும் எழுதும் இடதுசாரி,மார்க்சிய கம்யூனிச என்று பல அடையாளங்களைத் தாங்கி நிற்கும் பெரும்பாலான எழுத்தாளர்கள்,ஈழ விடுதலை குறித்தோ,ஈழப் போர் குறித்தோ, ஈழப் போர்குற்ற காணொளிகள் குறித்தோ, இனப்படுகொலை குறித்தோ,எந்தப் பதிவுகளையும் எழுதியது போல் எனக்குத் தெரியவில்லை.அதற்கான எந்த கண்டனங்களையும் கூட அவர்கள் பதிவு செய்ததில்லை அல்லது அதை ஒரு பெரிய சிக்கலாக எண்ணியது போலவும் தோன்றவில்லை.பல நேரங்களில் பூசி மெழுகிக் கொண்டு போய் விடுவதும் உண்டு.

பிரான்ஸ்,அமேரிக்கா போன்ற உலக நாடுகள் குறித்து எழுதுகிறார்கள். இன விடுதலைக்காக போராடிய, போராடிக் கொண்டிருக்கிற பல நாடுகள் குறித்து எழுதுகிறார்கள்.ஆனால் தமிழீழம் குறித்து எழுதுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல்?

இவர்களது சிக்கல் தனித்தமிழ் ஈழமா அல்லது விடுதலிப் புலிகளா? விடுதலைப் புலிகள்,ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள் என்பது தான் சஇவர்களின் சிக்கலா?அப்படிப் பார்த்தால் ஆயுதம் தாங்கிப் போர் நடத்திய கம்யூனிச நாடான கியூபாவையும், பிடலையும், சேகுவேராவையும் தான் ஏற்கக் கூடாது.ஏன் சீனாவின் மாவோவையும் தான் ஏற்கக் கூடாது. ஆனால் அவர்களையெல்லாம் ஏற்கத் தானே செய்கிறார்கள்.

இடது சாரித் தலைவர்கள் ஈழப் போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடு எடுப்பதும், இடதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக எழுதாமல்,சாதுர்யமாய் நடந்து கொள்வதாய் எண்ணிக் கொண்டு கள்ள மௌனம் காத்தாலும்,இவர்களின் செயல்பாடுகள்/கள்ள மௌனம் எல்லாம் ஊரறிந்த ரகசியம் தான்.

பாலச்சந்திரன் படுகொலையை கண்டித்த இடதுசாரி எழுத்தாளர்களை முகநூலில்/இணையங்களில் பார்க்க முடியவில்லை. இசைப்ரியாவின் படுகொலையை கண்டித்த இடதுசாரி எழுத்தாளர்களை இணையங்களில் காண இயலவில்லை. வன்னிப்போரின் கொடூரங்களை கண்டித்து எழுதிய இடதுசாரி எழுத்தாளர்களை காண இயலவில்லை.

உலகமே இனப்படுகொலை என்று சொன்ன பிறகும் கூட, ஈழ விடுதலை குறித்து மௌனம் காத்த,காத்துக் கொண்டிருக்கிற இடதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள்,அப்படி ஒரு கள்ள மௌனம் காக்க என்ன காரணம்?

விடுதலைப் புலிகள் இடதுசாரிகளாக இல்லை என்பதாலா? ஒருவேளை கியூபாவின் பிடலிடம் ஆலோசனை பெற்றவர்களாக விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் ஈழ விடுதலை குறித்து எழுதி இருப்பார்களோ?

என்ன காரணமாக இருக்கும் என்று ரொம்ப யோசித்து யோசித்து பார்த்து நமக்கு என்ன காரணம்னு கடைசி வரைக்கும் புரியல.அதான் தெரிஞ்சவங்க யாராவது காரணம் இருந்தா சொல்லுங்கப்பா!

இன்னும் ஒரு சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஈழம் குறித்து மேலோட்டமாய் பேசுவார்கள்,ஆனால் மற்ற பிரச்சினைகளில் அவர்கள் காட்டும் தீவிரத்துக்கும்,ஈழம் பற்றி பேசும் போது அவர்களின் பேச்சுக்கும் நமக்கு வித்தியாசம் தெரியாதா என்ன?

ஒரு சில இடதுசாரித் தலைவர்கள் விடுதலைப் புலிகள் குறித்து மிகக் கேவலமாக பேசிய பேச்சுக்களையும்,கட்டுரைகளையும் கூட வாசிக்க நேர்ந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கூட உ.வாசுகி என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கார அம்மா புலிகள் குறித்து அப்படி ஒரு மோசமான கட்டுரை எல்லாம் எழுதி இருந்தார்கள்.

இடதுசாரிகளுக்கும், ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அப்படி என்ன தான் பிரச்சினை? விவரம் தெரிஞ்சவங்க கொஞ்சம் வெளக்கமா தான் சொல்லுங்களேன். உங்களுக்கு கொஞ்சம் புண்ணியமாப் போகும்.

**நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்,இடதுசாரி எழுத்தாளர்கள் என்று உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் எண்ணுகிற எழுத்தாளர்களின் முகநூல் பக்கங்களை/இணையத்தை சரி பார்த்துக் கொள்ளலாம்**

-ஆன்டனி வளன்.