வியாழன், 12 டிசம்பர், 2019

காவல்துறையின் என்கவுன்டரை ஆதரிக்கலாமா?



கடந்த வாரம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொல்லப் பட்டார். அந்த செய்தியின் முழு நிகழ்வையும் படித்து பார்த்த போது மிகவும் பதை பதைத்து போகும் அளவுக்கு கொடூரம்.

சம்பவம் நடந்து ஒரு வார காலத்துக்குள் காவல்துறை நான்கு பேரை கைது செய்து என்கவுன்டர் செய்கிறது.

இந்த சம்பவத்தை ஆந்திர மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடுகிறது. இது சரியான அணுகுமுறை தானா இதை கொண்டாடலாமா என்ற கேள்வி மிக மிக முக்கியமானது.

பாதிக்கப் பட்ட பெண்ணின் மரணத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை..

குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை கூட உங்களோடு சேர்ந்து நானும் ஏற்கலாம்.

ஆனால் எப்போது என்றால் இவர்கள் நால்வரும் தான் உண்மையான குற்றவாளிகள் என்று நீதிமன்ற விசாரணைகளில்  முழுமையாக தெரிய வரும் போது..

 ஆனால் முறையான நீதிமன்ற விசாரணைகளே இல்லாமல் இன்று  உங்களுக்கும் எனக்கும் தெரியாது கொல்லப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்று.

ஒருவேளை கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகளாக இருந்து காவல்துறையால் ஜோடிக்கப்பட்ட நபர்களாக இருந்திருந்தால் இது எவ்வளவு பெரிய தவறாக கொடுமைாக இருக்கும்.

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் அதுவும் முறைப்படியான விசாரணை நடந்து உரிய தண்டனை பெற்று தண்டிக்க பட வேண்டும். அது தான் சரியான அணுகுமுறை. அதை தான் நாம் ஆதரிக்க வேண்டும். அது தான் ஜனநாயக வழிமுறை..

இல்லாவிட்டால் இந்தியாவில் எல்லா குற்றங்களையும் காவல்துறையே விசாரித்து இது போன்று என்கவுன்டர் மூலம் செய்து முடிக்கலாம் தானே...எதற்கு நீதிமன்றங்களும் விசாரணைகளும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய விசாரணை நடந்து அவர்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தானே இவர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்பதை கண்டறிய இயலும். அதற்ு தானே நீதிமன்றங்களும் சட்டங்களும் இந்த ஜனநாயக நாட்டில் இருக்கின்றன.

காவல்துறையின் விசாரணைகளை முற்றும் முழுமையாக நம்பும் நபரா நீங்கள். அப்படியானால் உங்களை பார்தது பரிதாப படுவதை தவிர ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒரு சில சமீபத்திய நிகழ்வுகளை மட்டும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

ராம்குமார் என்ற ஒரு  இளைஞன் சிறையில் காவல்துறையால் கொல்லப் படுகிறான். சுவாதி என்ற பெண்ணின் கொலை வழக்கில் எந்த விசாரணையுமே நடக்கவில்லை.

காவ்துறை ஒரு இளைஞனை நள்ளிரவில் கைது செய்கிறார்கள் . அவனை பேச விடாத படிக்கு அவன் கழுத்தில் உள்ள நரம்புகளை உடனே பிளேடால் அறுக்கிறது காவல்துறை. நெல்லை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் சிகிச்சை. அதோடு சிறை.

நீதிமன்றத்தில் வந்து அவன் தரப்பு வாதங்களை சொல்வதற்கு முன்பாகவே சிறையில் வைத்தே படுகொலை செய்யப் படுகிறான். 

சுவாதி கொலையின் உண்மைான குற்றவாளி ராம்குமார் தானா என்பதில் இன்று வரை சந்தேகம் இருக்கிறது.

உண்மையில் ராம்குமார் அப்பாவியாக இருந்து ஏன் தமிழக காவல்துறையால் கொல்லப் பட்டிருக்க கூடாது. அவன் தான் உண்மையான குற்றவாளியாக இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபித்து இருக்கலாம் தானே.

ஆனால் காவல்துறை அவனை ஒரு முறை கூட பேச விடவில்லை.வழக்கு நீதிமன்றத்தில் வருவதற்கு கூட காவல்துறைக்கு பொறுமை இல்லை என்றால் காவல்துறை மீது தானே சந்தேகம் வருகிறது...

நீதிமன்றத்தில் முறையான விசாரணைக்கு ஒரு முறை கூட அவனை நிறுத்தவில்லை.

அடுத்து
பேரறிவாளனை நினைவிருக்கிறதா...ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த இருபத்து ஏழு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

தூக்கு தண்டனை கைதியாக இருந்து பின்னர் ஆயுள் தண்டனை கைதியாக தண்டனை குறைப்பு பெற்றவர்.

 ஒருவேளை தண்டனை குறைப்பு பெற இயலாமல் போய் இருந்தால் இன்னேரம் தூக்கில் போடப்பட்டிருப்பார்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி தியாகராசன் சொல்கிறார் பேரறிவான் பேட்டரி வாங்கி கொடுத்தது உண்மை தான். ஆனால் அது என்ன காரணத்துக்காக என்பது அவருக்கே தெரியாது என்பது தான் உண்மை.

என்ன காரணத்துக்கு பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பது தெரியாது என்று குற்றப்பத்திரிக்கையில் எழுதி இருந்திருந்தால் அந்த வழக்கின்  தீவிரம் இல்லாமல் போய் இருந்திருக்கும். வழக்கு நீதிமன்றத்தில் நின்றிருக்காது.

வழக்கின் தீவிரத்திற்காக பேட்டரி வாங்கியதன் நோக்கம் அறிந்திருந்ததாக அதாவது பெல்ட் பாம் தயாரிப்பது தெரிந்து அதற்காகவே பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றப்பத்திரிக்கையில் எழுதி தவறு செய்து விட்டேன் என்று இன்று பாவ மன்னிப்பு கேட்கிறார் தியாகராசன்.

அதுவும் இருபத்து ஐந்து ஆண்டுகள் பேரறிவாளனின் சிறைவாசத்துக்கு பிறகு.

கிட்டத்தட்ட பேரறிவாளனின் வாழ்க்கையே தொலைந்து போன பிறகு. ஒருவேளை மரணதண்டனை உறுதி பண்ணப் பட்டு இருந்திருந்தால் பேரறிவாளன் இன்னேரம் சமாதி ஆகி ஆண்டுகள் பல ஆகி இருக்கும்.

எதற்கு இதை சொல்கிறேன் என்றால் காவல்துறையின் வழக்கு விசாரணையில் இப்படி ஏகப்பட்ட கோளாறுகளும் பொய்களும் பிராடுத்தனங்களும் உண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது.

ராம்குமார் மற்றும் பேரறிவாளன் உதாரணங்களை போல பல நூறு உதாரணங்கள் உண்டு.

விசாரணை என்ற திரைப்படத்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா..வெற்றிமாறன் இயக்கிய அந்த திரைப்படமே ஒரு மரண தண்டனை கைதியான சந்திரகுமார் தன் சிறை அனுபவங்களை அடிப்படையாய் கொண்டு எழுதிய லாக்கப் என்ற  நாவலின்  கதை தான் அது. காவல்துறை கொடூரங்களை வைத்து படத்தை தத்ரூபமாக எடுத்திருப்பார் வெற்றிமாறன். இந்திய மற்றும் தமிழக காவல்துறையின் நிலையும் அது தான் . அப்பாவிகள் பலர் உண்மை குற்றவாளிகளாக்கப் படுவதும் பணம் இருக்கும் வசதி படைத்த குற்றவாளிகள் தப்ப விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக யாரோ சில அப்பாவிகள் பலிகடா ஆக்கப் படுவதும் மிக மிக சாதாரணம்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய ஸ்னோலின் என்ற அப்பாவி இளம் பெண் உட்பட பதினைந்து அப்பாவிகளை வாயில் துப்பாக்கி வைத்தும் தலையில் துப்பாக்கி வைத்தும் சுட்டுக் கொல்லும் கொடூரர்கள் தான்  இந்த காவல்துறை. தூத்துக்குடி போராட்டத்தில் இந்த கேவலமான காவல்துறை உண்மையில் யாருக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும். போராடும் மக்களுக்கு ஆதவராக தானே நின்றிருக்க வேண்டும். ஆனால் அங்கும் அப்பாவி மக்களை தான் என்கவுன்டர் செய்தது தமிழக காவல்துறை.

ஒருவேளை போலியான காவல்துறை என்கவுன்டர்களை நாம் ஆதரித்து காவல்துறையை கொண்டாடுவோம் என்றால் நாளை ஏதோ ஒரு வழக்கில் உங்களையும் என்னையும் இந்த ஏவல்துறை சிக்க வைத்து எவ்வித வழக்கு விசாரணையும் இன்றி என்கவுன்டர் செய்ய இயலுமா இயலாதா என்பதை சிந்தித்து பாருங்கள்.

 வழக்குக்கு ஏற்ப ஆமைக்கறி சீமானை போல வாயில் வடைசுடும் திரைக்கதையை உருவாக்கி அந்த என்கவுன்டரை உங்கள் மீது நிகழ்த்தும் போது மக்களும் இன்று ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடுவதை போல மக்கள் கொண்டாடுவார்கள். நீங்கள் தான் உண்மையான குற்றவாளியா என்பதற்கான விசாரணையே இல்லாத போது யாரிடம் உங்கள் தரப்பை சொல்வீர்கள்...இந்த ஆபத்தை மக்கள் உணர வேண்டும்.

இன்றைக்கு மிகப்பெரிய பதவியில் உள்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் போன்ற ஆட்களையே வழக்கில் கைது செய்வதற்கான எந்த முகாந்திரமும் சரியாக இல்லாமலேயே கைது செய்து நூறு நாள் திகார் சிறையில் வைத்து விட முடியும் மிக மிக ஆபத்தான காலம் இது.

நீங்களும் நானும் மிகச் சாரதாரணமானவர்கள். ராம்குமாரை போல பேரறிவாளனை போல ஆயுள் சிறை அல்லது காவல் மரணம் எல்லாம் மிக மிக சாதாரணம்.

சூழலை உணர்ந்து கொள்ளுங்கள். குற்றவாளிகள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் தண்டிக்கப பட வேண்டும். அதில் மரண தண்டனை வழங்கப் பட்டால் கூட நாம் ஏற்கலாம். ஆனால் வழக்கின் விசாரணையே இன்றி குற்றம் சாட்டப்பட்டவன் தரப்பு வாதங்களையே கேட்காமல் என்கவுன்டரில் தண்டிப்பதும்  எல்லாவற்றை விடவும் இதை கொண்டாடும் வெகுசன மக்களின் கொடூரமும் சிந்திக்கப் பட வேண்டிய விசயம்..

என்னங்க நீங்க..நீதிமன்றம் விசாரணை எல்லாம்   சரியா நடக்குமா..அங்கே சரியான நீதி கிடைக்குமா என்ற உங்களின் அதே கேள்வியை தான் காவல்துறையை நோக்கியும் நீங்கள் எழுப்புங்கள் என்கிறேன்..

என்னங்க காவல்துறை மட்டும் யோக்கியமா விசாரிச்சி உண்மையான குற்றவாளிகளை தான் தண்டிச்சி இருக்குமா என்பதற்கு நூறு சதவிகித உத்தரவாதம் உண்டா...

இந்திய காவல்துறை நீதித்துறை மீதும் சரியான நம்பிக்கை இல்லை எனும் போது விசாரணைகளும் தீர்ப்பும் விலை பேசப்படும் மோசமான சூழலில் மரண தண்டனைகளை விட ஆயுள்தண்டனைகளே அதிக பட்ச தண்டனையாக இருக்கணும் என்பதே என் தரப்பு வாதம்.

அப்சல் குருவின் தூக்கு தண்டனை விசயத்திலேயே அந்த மரண தண்டனைக்கு பின் பல அரசியல் இருப்பதை உணர முடிகிறது.

பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு கூட அவன் தரப்பு வாதத்தை கேட்க வழக்குரைஞரை ஏற்பாடு செய்து குற்றம் நிரூபிக்கப் பட்டு்தண்டனை நிறைவேற்றும் சூழலில் அனைத்து வழக்கிலும் இதே நடைமுறை தான் ஜனநாயகத்துக்கு ஏற்றது.

எப்போதும் ஜனநாயக நடைமுறையை  தான் நாம் ஆதரிக்க வேண்டுமே ஒழிய அரசு மற்றும் அரசு துறையான காவல்துறையின் என்கவுன்டர் ரவுடி தனத்தை அல்ல.

ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக