புதன், 29 ஜனவரி, 2014

பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்களா?


பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்களா? 

பொதுவாகவே மதம் சார்ந்த விவாதங்கள்,அனைத்து மதங்களின் மத குருமார்கள் செய்யும் தவறுகள் சார்ந்த விவாதங்களில் பங்கு பெறுவதில்லை.அதில் எவ்வித விருப்பமும் இல்லை. 

ஆனால் கடந்த பல மாதங்களாக மோடி மீதும்,பாரதியஜனதா மீதும் வைக்கும் விமர்சனங்களில்,அது சார்ந்த விவாதங்களில் நம் கேள்விகளுக்கு நியாயமான பதிலை சொல்ல இயலாத பலர்,அடுத்த அஸ்திரமாய் நம்மீது கிறித்துவர்கள் எல்லாம் அந்நிய கைக்கூலிகள் என்றும்,பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி மதம் மாற்றுபவர்கள் என்றும்,அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்றும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து போய் விடுவதுண்டு! 

பொதுவாகவே நேர்மையான வாதங்களில் பங்கு கொள்ள விரும்பாதவர்கள் அல்லது இயலாதவர்களின் அடுத்த அஸ்திரம் ஒன்று சாதியாகவோ, அல்லது மதமாகவோ தான் தொடர்ந்து இருந்து வருகிறது!

எதோ வெளிநாடுகளில் இருந்து அரசு சாரா உதவி நிறுவனங்கள் அனுப்பும் பணத்தால் தான், இங்கே கிறித்துவர்கள் வாழ்வது போலவும், அந்த பணத்தை எல்லாம் மதம் மாற்ற பயன்படுத்தப்படுவது போலவும்,அப்பாவி மக்களை மூளை சலவை செய்து ஏமாற்றித் தான் கிறித்துவ மதத்துக்கு மாற்றுகிறீர்கள் என்றும், சம்மந்தம் இல்லாமல்,தொடர்ந்து சிலர் நம்மை நோக்கி விமர்சனம் வைப்பதால்,ஒன்றிரண்டு விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்.

எனக்கு இந்த காசு கொடுத்து மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விடயத்தில் உடன்பாடு இல்லை.அப்படி யாராவது செய்தால் அது தவறு.வெறுமனே எண்ணிக்கையில் **பெயர்* கிறித்துவர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று வேதாகமம் எதையும் சொல்லவில்லை.
அப்படியான கட்டாயம் எதுவும் இல்லை.நீங்கள் போய் உலகத்தில் உள்ள சகல மனுஷர்களுக்கும்,சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று தான் வேதாகமத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்,அப்படி ஏற்றுக் கொள்பவன் தான் உண்மையான கிறித்துவன் என்பது தான் கிறித்துவத்தின் அடிநாதம்.அப்படி சொந்த ரட்சகாராக ஏற்றுக் கொள்வதும் கூட,எவருடைய நிர்பந்தமும் இன்றி,முழு மனதோடு ஏற்றுக் கொண்டதாய் இருக்க வேண்டும். இது தான் கட்டளை!

அப்படியானால் பிறருடைய நிர்பந்தத்தின் பேரிலோ அல்லது பணம் கொடுத்து எங்களை மதம் மாற சொல்கிறார்கள் என்பதாலோ,ஒருவேளை சிலர் மதம் மாறுகிறார்கள் என்று வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, அப்படியான மனிதர்கள் எல்லோரும் கிறித்துவர்கள் ஆகி விட மாட்டார்கள்.காரணம் உள்ளத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கிறவர் தேவன் என்றே வேதாகமம் சொல்கிறது.

மற்ற மதங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவற்றின் மதிப்பீடுகள் குறித்தும் எதுவும் தெரியாது.ஆனால் நான் அறிந்த கிறித்துவத்தின் மதிப்பீடுகள் உயரமானவை என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்,உணர்கிறேன்.! காரணம்,ஒவ்வொரு மனிதனின் செயல்பாட்டையும் விட, அதை செய்யும் போது அவன் மன நிலை என்னவாக இருந்தது,அதாவது அதை மகிழ்வோடு செய்தார்களா இல்லாவிட்டால்,வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக செய்தார்களா என்பதைப் பொறுத்தே அதன் பலன் அல்லது உள்ளத்தின் உண்மையான, நிலைப்பாட்டை தான் தேவன் பார்க்கிறார் என்றே வேதாகமம் சொல்கிறது!

இதற்கு ஆதாரமாய் பல உதாரணங்களை சொல்லலாம். ஆயினும் ஒரு சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆலயத்தில் இருவர் காணிக்கை செலுத்துகிறார்கள். ஒருவர் வசதியானவர். இன்னொருவர் ஏழை விதவைப் பெண். பணக்காரர் காணிக்கை போடுகிறார். அவரைப் பொறுத்தவரையில் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார். ஏழை விதவையோ தன்னிடம் இருந்த சில்லறை காசுகள் அனைத்தையும் காணிக்கையாக போடுகிறார்.

தேவன் யாருடைய காணிக்கை பெரிது என்கிறார் என்றால்,ஏழை விதவையின் சில்லறை காசுகள் தான் பெரிது என்கிறார். அதற்கு காரணம் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் முழுமையாக தேவனுக்கு அர்பணிக்க வேண்டும் என்று எண்ணியே அவள் காணிக்கை செலுத்தினாள்.பணம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல.அதனால் அந்த காணிக்கை உயர்ந்தது என்று சொல்கிறார்.

சாதாரணமாக பார்த்தால் பணக்காரர் நூறு ரூபாய் போட்டு இருக்கிறார் என்று எண்ணிக் கொள்ளலாம்.ஏழைப் பெண் ஒரு ரூபாய் போட்டு இருக்கலாம். கணக்கின் படி பார்த்தால் பணக்காரர் தான் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார் என்றே நாம் சொல்ல இயலும். ஆனால் ஒரு செயலை அல்ல,அந்த செயலின் பல காரணிகளை,சூழல்களை, உள்ளத்தின் நினைவுகளை சீர் தூக்கி பார்த்து நியாயம் சொல்பவர் தேவன் என்று வேதாகமம் சொல்கிறது!

இப்படியாக பல மதிப்பீடுகளின் உயர்வை சொல்ல இயலும்.ஒரு தவறான பெண்ணோடு அல்லது ஒரு பெண்ணோடு வேசித்தனத்தில் ஈடுபட்டால் தான் அது விபச்சாரம் என்பதில்லை.
ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால், அதுவே விபச்சாரம் தான் என்கிறது வேதாகமம்.

ஆலயத்துக்கு போகிறோம், தேவனை தரிசிக்கிறோம் என்கிறோம். அப்படி உண்மையாக தேவனை தரிசிக்க விரும்பினால்,முதலில் சண்டை போட்டு இருக்கும் உன் சொந்த சகோதரனோடு போய் சமாதானம் ஆன பின்பு,என் ஆலயத்துக்கு வா, வந்து காணிக்கை செலுத்து அப்பொழுது நான் அதை ஏற்பேன். அது இல்லாமல் சும்மா நானும் ஆலயத்துக்கு போனேன், ஆண்டவரை தரிசித்தேன், காணிக்கை செலுத்தினேன் என்று சொல்வாய் என்றால் அதை தேவன் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார். சக மனிதர்களை, சொந்த சகோதரர்களை நேசிக்காத மனிதன் எப்படி கடவுளை நேசிப்பான் என்பதற்கான செய்தி அது!

பல நேரங்களில் நாம் உள்ளத்தில் என்ன எண்ணுகிறோம் என்பது வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் உள்ளத்தின் நினைவுகளை வைத்தே சரியா தவறா என்று பார்ப்பது தான் கிறித்துவத்தின் மதிப்பீடு.

ஆக வெறும் புற அடையாளங்களை வைத்து 
மனிதனை மதிப்பிடுபவர் அல்ல கிறிஸ்து. அப்படி இருக்கும் போது பணத்துக்காகவோ,அல்லது வேறு நிர்பந்தங்களுக்காகவோ மதம் மாறினால்,
அதை ஒரு போதும் கிறிஸ்து ஏற்கமாட்டார். அப்படி மாறுபவர்கள் கிறித்துவர்களும் அல்ல.
கிறித்துவம் என்பது வெறும் புற அடையாளங்களால் ஆனது அல்ல.அது வாழ்வியல்!

வெறும் பெயர் மட்டுமே கிறிஸ்துவம் என்பதன் அடையாளம் ஆகி விடாது.இன்னும் சொல்லப்போனால் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை முழு மனதோடு ஏற்றவர்கள் தான் கிறிஸ்துவர்கள்.

ஒன்றும் தெரியாத ஏழை அப்பாவி மக்களைத் தான் இப்படி கிறித்துவர்களாக மதம் மாற்றுகிறார்கள் அல்லது பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு ஒரு சிறு உதாரணம்.

எல்லோருக்கும் நடிகர் சாருஹாசனைத் தெரிந்திருக்கும். யார் இந்த சாருஹாசன்? நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த சகோதரன். சுஹாசினி அவர்களின் தந்தை.மணிரத்தினத்தின் மாமனார். இவரது சிறப்பு அம்சம் என்னென்ன என்று கேட்பீர்கள் என்றால், சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நீதிமன்றங்களில் முப்பது** ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர்.அப்படியானால் ஒரு தலைமுறைக்கு முன்பே கல்வி அறிவு கொண்ட மூத்த கல்வியாளர். பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தால் வேதங்கள் நான்கையும் முறையாக கற்றுத் தேறியவர் மட்டுமல்ல சில காலங்களுக்கு முன்புவரை அதை பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தவர்.

சமஸ்கிரித மொழியை முறையாக கற்றுத் தேறிய பண்டிதர் மட்டுமல்ல நீண்ட நெடிய காலமாக சமஸ்கிரித ஆசிரியராக இருந்து வகுப்புகள் நடத்துபவர். கோயில் வழிபாடுகளில் உள்ள அத்தனை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் உண்மையான அர்த்தம் தெரிந்தவர். திரைப் படங்களில் அவர் ஏற்கும் வேடங்களில் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கோவில் அர்ச்சகராக அல்லது வேதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக,சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக எதோ ஒரு வகையில் மதம் சார்ந்த பாத்திரமாகவே ஏற்று நடிப்பார்.அப்படியான பாத்திரங்களையே அவர் விரும்புவார் என்றும் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். சிறந்த நடிப்புக்காக மாநில மற்றும் தேசிய விருது வாங்கியவர்.

இந்து மத வழிபாட்டை,வேதங்களை எல்லாம் முறையாக பயிற்றுவிப்பவர் என்று மட்டுமல்லாது அதையே வாழ்வியலிலும் கடைபிடித்து வந்த மனிதர். கமலஹாசனைக் குறித்தும் அவரது வாழ்வைக் குறித்தும் குறிப்பாக அவரது திருமண சச்சரவுகள் குறித்தும் எப்போதும் கடுமையான விமர்சனங்கள் கொண்ட மனிதர்.அதாவது அவரைப் பொறுத்த வரையில் ஒழுக்கம் என்பதற்கு ஒரு வரையறையை வைத்திருந்த மனிதர்.இவர் அடிப்படையிலேயே நல்ல வசதியானவர் தான். பணத்துக்கான தேவை என்பது அதிகம் இவருக்கு கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு பூர்வீகத்தை கொண்ட மனிதர்,அதுவும் ஒரு பிராமண குடும்பதை சேர்ந்த தீவிரமாக மத கோட்பாடுகளை கடைபிடிப்பவர், கொஞ்ச காலத்துக்கு முன்பு கிறித்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவரை யாராவது ஏமாற்றி மதம் மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது அப்படி யாராவது வித விதமாய் பேசி ஏமாற்ற நினைத்தாலும்,
ஏமாறும் மனிதரா அவர்?

கடந்த ஆண்டு இவர் எப்படி கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொண்டார் என்ற சாட்சி ஒன்றை பார்க்க்க நேர்ந்தது.உண்மையில் மிகுந்த நெகிழ்வான சாட்சியாக அது இருந்தது.வேதாகமத்தை மிக ஆழமாக வாசித்து வந்திருக்கிறார்.கிறித்துவத்தை உடனே எல்லாம் அவர் ஏற்கவில்லை. அதை ஏற்பதற்கு முன் பல ஆண்டுகளாக வேதாகமத்தை வாசித்து வந்திருக்கிறார். அதில் தெளிவு கிடைக்காமல் அவர் கிறித்துவத்தை ஏற்கவில்லை என்கிறார்.

சாதாரணமாக கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களுக்கு கூட இந்த அளவுக்கு வேதாகமத்தை குறித்த வாசிப்பு அனுபவம் இருக்குமா என்பது சந்தேகமே! அந்த அளவுக்கு ஆழ்ந்து வாசித்து, வேதகாம வார்த்தைகளை ஞாபகத்தோடு பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு பேசுகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஒரு தொலைக்காட்சி நாடகம் போலவே கதை வசனம் எழுதி தயாரித்தும் இருக்கிறார். கோவில்கள் சொல்லப்படும் சமஸ்கிரித ஸ்லோகங்கள் பலவற்றுக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்ன, அவை எதைக் குறிக்கின்றன,பரிசுத்த வேதாகமத்துக்கும் இந்த ஸ்லோகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை எல்லாம் மிக தெளிவாக விளக்கி சொல்கிறார்.பலவேறு ஆச்சயர்யமான விடயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஒருவேளை அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தெரிந்த நண்பர்கள், அவர் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் சரிதானா ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவராக மாறிவிட்டால் பெயர்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. அப்படி பெயர்மாற்றினால் தான் கிறித்துவர் என்ற நிபந்தனையும் கிடையாது.

அவரது சாட்சி குறுந்தகடாகவும் வெளி வந்து இருக்கிறது. யூடியூபிலும் கூட காணக் கிடைக்கிறது.பார்க்க வாய்ப்புள்ளவர்கள் பார்த்துக் கொள்ளலாம். இவரைப் போன்ற பலர் இப்படியாக கிறித்துவை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.பெரும் பெரும் பணக்காரர்கள்,
எவ்வித பொருளாதார நெருக்கடிக்கோ, துன்பங்களுக்கோ ஆட்படாத மனிதர்கள் பலர் மாறி இருக்கிறார்கள். சாருஹாசன் ஒரு பிரபலமான மனிதர் என்பதால் உங்களிடம் சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது!இந்த வயதில் அவர் கிறித்துவராக மாற வேண்டிய அவசியம் என்ன? பணத்துக்காகவா?

பிரபலம் இல்லாத பலர் இருக்கிறார்கள். சினிமாவில் இன்னொருவரை உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பழைய ஏ.வி.எம் ராஜனை சொல்லலாம். அவரும் கூட பல திரைப் படங்களில் கோவில் அர்ச்சகராக, அல்லது கடவுள் பயம் போன்ற விடயங்களை சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர். காசு பணத்துக்கு பஞ்சம் இல்லாத மனிதர் தான்.

ஆக நான் சொல்லவரும் செய்தி என்னவென்றால் இங்கே எல்லோரும் பணம் கொடுத்து தான் மதம் மாற்றுகிறார்கள்/மாறுகிறார்கள் என்ற குற்றசாட்டை முழுமையாக ஏற்க இயலாது.
அப்படி செய்வதாக இருந்தால் சாருஹாசன் போன்ற பின்னியை கொண்ட மனிதர்கள் எல்லாம், ஏசுவை ஏற்றுக் கொண்டிருக்க்கவே முடியாது. ஒருவேளை அப்படி யாராவது பணம் கொடுத்து மதம் மாற்றுவார்கள் என்றால் அது தவறு. அப்படி பணத்துக்காக மாறுபவர்கள் உண்மையான கிறித்துவர்களாகவும் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்!

இத்தனை நாள் இந்துவாக இருந்த போது,இந்தியராக கருதப்பட்ட சாருஹாசன், கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட படியால்,இனி அவரும் அந்நிய நாட்டு கைக்கூலி,அமெரிக்க அடிமை என்றெல்லாம் புதுப்பட்டம் வாங்குவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

இங்கே யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், மதமும் கடவுளை இல்லை என்றோ வேண்டாம் என்று கூட சொல்லலாம். அதுவல்ல பிரச்சினையும்,விவாதமும்!

ஸ்லோகங்களும்,அதற்கான விளக்கங்களும் குறித்த சாருஹாசனின் காணொளி இணைப்பு ஒன்று கீழே!

http://www.youtube.com/watch?v=iqBtFoO7sFE

நன்றி !

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன் 

திங்கள், 27 ஜனவரி, 2014

அரசியல் தரகராகிப் போன, ஒரு போலி காந்தியவாதி!


விகடனில் ஆம் ஆத்மி குறித்தும்,கேஜ்ரிவால் குறித்தும் கடுமையாக விமர்சனம்(??) வைத்திருக்கிறார் மணியன் அவர்கள்! அதை விமர்சனம் என்று சொல்வதை விட,மணியனின் வயிற்று எரிச்சலும்,கடுப்பும் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்!அந்த அளவுக்கு ஆம் ஆத்மி மீது கொலை வெறி!

அய்யா மணியன் அவர்கள் நல்ல பேச்சாளர். மிகச்சிறந்த சொற்பொழிவாளர்! இது எல்லோருமே அறிந்த ஒன்று தான்! அவர் காவிகளுக்கு காவடி தூக்கி,கொலை வெறிப்பாதையில் மாறும் வரை அவரது பேச்சுக்கள் ஓரளவுக்கு நமக்கும் உவப்பே!ஆனால் பொதுவாக நல்ல சொற்பொழிவாளர்கள் பலர்,தாங்கள் வாய் கிழிய பேசும் பேச்சுக்கும்,அவர்களின் செயலுக்கும் சற்றும் சம்மந்தம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள் என்பது தான் எதார்த்தம்! நடைமுறையில் தமிழ்நாட்டு அரசியலில் நல்ல உதாரணங்கள் அய்யா மணியனும், வைகோவும்!

நாஞ்சில் சம்பத் நன்றாக பேசக் கூடியவர். அவரது இன்றைய அம்மா அடிவருடி பேச்சுக்கள் நமக்கு ஒவ்வாதவை!ஆனால் முந்தைய கால கட்டங்களில் அவரது மேடை பேச்சுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.

சென்னையில் முதுநிலை பொறியியல் படித்த கால கட்டம் அது. சுமார் பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு! செமஸ்டர் தேர்வுக்கு முந்தின நாள்,மாலையில் தேர்வுக்கு தேவையான பேனா பென்சில் போன்ற பொருட்களை வாங்குவதற்காக ஆதம்பாக்கத்தில் கடை வீதிக்கு சென்று விட்டு அரை மணி நேரத்தில் வந்து விடலாம் என்று போய்க் கொண்டு இருந்தேன். மாலை ஏழு மணி இருக்கும். போகிற வழியில் பார்த்தால் நாஞ்சில் சம்பத் ஒரு மேடையில் அரசியல் பேசிக் கொண்டு இருக்கிறார். பேச்சைக் கேட்டதும் நான் நகரவே இல்லை.அப்படியே அந்த இடத்தில் ஒன்பதரை மணி வரைக்கும் நின்று அவரது பேச்சைக் கேட்டு விட்டே நகர்ந்த ஞாபகம். தேர்வுக்கு முந்தின நாள் இரண்டரை மணி நேரம் நாஞ்சில் சம்பத் பேச்சுக்காக செலவழித்ததும்,அவர் அந்த மேடையில் ஜெயலலிதா குறித்து என்னவெல்லாம் பேசினார் என்பதும் இன்று வரை ஞாபகம் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களைக் கவரும் பேச்சு.

தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த பேச்சாளர்களில் அய்யா வைகோவும்,மணியன் அவர்களும் எப்போதும் உண்டு.அய்யா வைகோ அவர்கள் மிகுந்த உணர்சிகரமாக பேசக் கூடியவர்.ஆனால் மணியன் அவர்களின் பேச்சு வேறு வகை. அதீத உணர்ச்சி பெருக்கோடு எல்லாம் பேச மாட்டார். ஆனால் மற்றவர்களை கவரும் விதமாக பேசக் கூடியவர்.

அவரது பேச்சில் உள்ள உண்மை,பொய்களை அல்லது காலத்துக்கேற்ப  அவர் கையில் எடுக்கும் சந்தர்ப்பாவாத உதாரணங்களை எல்லாம் நான் புறம் தள்ளி விடுவதுண்டு.அய்யா வைகோ அவர்கள் உகாண்டா,எத்தியோப்பியா கியூபா சூடான் அமேரிக்கா ஐரோப்பா என்று கடைசியில் தமிழ் ஈழம் என்று முடிப்பார். மணியன் அவர்களோ காந்தியம் காந்தியம் காந்தியம் என்று பேசி,ஆங்கில பழமொழிகள்,சில மேற்கோள்கள் என்று சொல்லி முடிப்பார்.

ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராளிகளை ஒருபோதும் ஏற்காதவர் மணியன்.ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர் வைகோ. நிறைய முரண்கள் இருந்த இவர்கள் ஒன்றுபட்டு நிற்கும் இடம் மோடி என்ற இனப்படுகொலையாளனை பிரதமர் ஆக்கியே தீர வேண்டும் என்ற புள்ளியில்!

அய்யா மணியன் அவர்கள் சமீப காலமாக பேசும் பேச்சுக்கள் அனைத்தும் நியாயம் தானா,அவரது பேச்சில் உண்மை இருக்கிறதா அல்லது வெறும் சந்தர்ப்பவாத பேச்சுக்களா,காந்தியத்துக்கு ஒவ்வும் கருத்துக்களா என்பதை எல்லாம் அவரது சமீபத்திய மோடி நிலைப்பாடுகளில் இருந்தே விளங்கி கொள்ளலாம்!

ஒரு தேர்ந்த அரசியல்வாதி, நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் அய்யா மணியன் அவர்கள்.
ஆனால் ஒரு புதிய ஆட்சியை விமர்சிக்க,குறைந்த பட்சம் ஒரு ஆறுமாத காலமாவது வேண்டும் என்று சொன்னார் அய்யா காமராசர். ஆனால் மணியன் அவர்கள் அவசர குடுக்கைத் தனமாக விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்.

காங்கிரசை படுதோல்வி அடைய செய்து விட்டு, திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற போது, திமுக குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போது,அய்யா காமராசர் சொன்ன வார்த்தைகள் தான் "ஒரு ஆறுமாத காலத்துக்கு நான் அவர்களை விமர்சனம் செய்ய மாட்டேன்".

ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை காமராசர் காமராசர் என்று பேசும் அய்யா மணியன் அவர்களால், எப்படி வெறும் மூன்று வார காலம் மட்டுமே டெல்லியில் ஆட்சி நடத்தும் கேஜ்ரிவால் கட்சி மீது,இத்தனை கடுமையான விமர்சனங்களை வைக்க முடிகிறது அல்லது ஏன் எதிர் கட்சிகள் கூட வைக்காத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை மணியன் வைக்கிறார் என்பதற்கு,அவரது சமீபத்திய பாரதிய ஜனதா/மோடி ஆதரவையும் சேர்த்தே கணக்கிட வேண்டி இருக்கிறது!

அய்யா வைகோ தான் அரசியல் கட்சி நடத்துகிறார். அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தேர்தல் கூட்டணி மட்டும் தான், கொள்கை கூட்டணி இல்லை என்று அவர் என்னென்ன சொன்னாலும், கூட்டணி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக மாறி விடும் இயல்பு அவருடையது. அது அவரது கட்சிக்கு ஏதாவது ஒரு பலனைத் தரும் என்பது அவரது எண்ணம். ஆனால் அரசியல் கட்சியாக இல்லாமல்,வெறும் இயக்கம் நடத்தும் மணியன் அவர்களும் மோடியின் கொள்கை பரப்பு செயலாளராக மாற வேண்டிய அவசியம் என்ன? அய்யா வைகோவிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பாரோ!

எப்போது பார்த்தாலும் காந்தியம், கொள்கை அது இதுவென்று மூச்சு முட்ட பேசும் அய்யா மணியனுக்கு, காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஆதரிப்பதும், குஜராத் மண்ணில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற இனப்படுகொலையாளன் மோடி என்ற மோசமானவனை ஆதரிப்பதும் தான் காந்தியம் கற்றுக் கொடுத்ததா? குஜராத்தில் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் பாதுகாப்பாக வாழ மோடி தான் காரணம் என்று பேசுகிறார்.ஏற்கனவே நடந்த படுகொலை கணக்கை விட்டு விட்டார் போலும்!

மணியன் அவர்களுக்கு இந்த மறதி எல்லாம் இருப்பது இயல்பு தானே! காலம் காலமாக இதைத் தானே அவர் செய்கிறார்! ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?

எண்பதுகளில் இந்திய அமைதிப்படை,தமிழீழ மண்ணில் செய்த அட்டூழியங்களை எல்லாம் வாய் திறந்து பேசி இருக்கிறாரா? இந்திய இராணுவத்தையோ அல்லது, அதை அனுப்பிய ராஜீவ் காந்தியையோ கண்டித்ததுண்டா? தவறு என்று பேசியதுண்டா? ஆனால் விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்ப்பார்.ராஜீவ் படுகொலைக்காக புலிகளை கடுமையாக விமர்சிக்கும் மணியனுக்கு ஏன் ராஜீவ் அனுப்பிய ராணுவம் ஈழ மண்ணில் செய்த பாலியல் வன்முறைகள் படுகொலைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமல் போனது? பிரதம வேட்பாளர் உயிர் மட்டும் தான் உயிரா? தமிழீழ மண்ணில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான உயிர்கள் எல்லாம் மயிருக்கு சமமா?

2009 இல் நடந்த இனப்படுகொலை காலம் வரை காங்கிரசின் அத்தனை செயல்பாடுகளையும் ஆதரித்த ஒரு மனிதன்,எப்படி ஒரு நியாயமான மனிதனாக இருப்பான்? ஏன் இனப்படுகொலை நடந்த போது மட்டும் தான் காங்கிரஸ் மோசமாக நடந்து கொண்டதா? 2009 இல் நடந்த இனப்படுகொலையின் ஆரம்பம் என்பது 2004 இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து உடனேயே ஆரம்பித்து விட்டது என்பதை சிறு குழந்தை கூட அறியும்.

ராணுவப் பயிற்சி, ராடார், ஆயுதங்கள் என எல்லாவற்றையும் இலங்கைக்கு கொடுத்தது இந்திய ராணுவம் என்பதை அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள். இனப்படுகொலை நடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்பே வைகோ அவர்கள் பலமுறை கண்டித்து பேசி இருக்கிறார்.

அப்போதெல்லாம் மணியன் அவர்களுக்கு தெரியவில்லையா காங்கிரஸ் தவறு செய்கிறதென்று? அமைதிப் படை அட்டூழியங்களையே சகித்துக் கொண்டிருந்த மனிதன் என்ன நியாயம் பேசி விடப் போகிறார்?

வாழ்க்கை முழுவதையும் காங்கிரசில் கழித்து விட்டு, இன்று கடைசி காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இல் சேர்ந்து விட்டார் போலும்! இன்றுவரை விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பவர், ராஜீவ் கொலை குறித்து காங்கிரஸ்காரர்கள் பேசுவது போலவே இன்றுவரை பேசுபவர்! நோய் நாடி நோய் முதல் நாடி என்று காரணத்தை தேடி போய் பார்க்க மணியன் அவர்களுக்கு துணிவு இருக்கிறதா?

ராஜபக்சே ஒரு இனப்படுகொலையாளன் என்று சொல்லத் தெரிந்த அய்யா மணியனுக்கு மோடி மட்டும் எப்படி இந்தியாவை மீட்க வந்த மீட்பனாக தெரிகிறார்? சிறுபான்மை என்ற ஒரே காரணத்துக்காக இங்கே ஆயிரக்கணக்கான உயிர்களை கொல்லத் துணிந்த மோடி, மணியனுக்கும் வைகோவுக்கும் மீட்பனாக தெரியும் போது, இலங்கையில் ராஜபக்சே சிங்களனுக்கும் மீட்பனாக தானே தெரிவான்! இதைக் கேட்டால் இந்த ஒப்பீடு எப்படி சரியாகும் என்று வித விதமான கேள்விகளை முன் வைப்பார் அய்யா மணியன். பதில் சொல்ல இயலாத கேள்விகள்!

காந்தியம் இதைத் தான் கற்றுக் கொடுத்து இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் ஹிட்லரை ஆதரிக்கலாம், முசோலினியை ஆதரிக்கலாம், ராஜபக்சேவை ஆதரிக்கலாம், கூடவே மோடியை ஆதரிக்கலாம்!

கொலைகாரனையும், கொள்ளைகாரனையும் ஆதரிக்க துணிந்த அய்யா மணியன் அவர்களிடம், இதற்கான விளக்கம் கேட்டால்,பத்து மணி நேரம் பேசிப் பேசி விளக்கம் சொல்வார். ஆனால் அது ஏற்கும் விதமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் முடிவு செய்வது? நாம் தான் முடிவு செய்ய வேண்டும்! கட்டாயம் மனசாட்சி உள்ளவன் ஏற்க மாட்டான்!

மோடியை ஆதரிக்க போலியான வளர்ச்சி, மோடி அலை, காங்கிரஸ் எதிர்ப்பு, ஈழப் படுகொலை என்று என்னென்ன காரணங்களை தன்னுடைய வசீகர வார்த்தைகளால் அய்யா மணியன் வைத்தாலும், காந்தியம் பேசும் ஒரு மனிதர் கொலைகாரன் மோடியை ஆதரிப்பதை விட அயோக்கியத்தனம் வேறென்ன இருக்க முடியும்?

கேட்டால் இது கொள்கை கூட்டணி இல்லை, தேர்தல் கூட்டணி என்பார்கள். வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமே என்று நீங்கள் விளக்கம் சொல்வீர்கள் என்றால், மோடியின் குற்றங்களை மற்றவர்கள் குறை சொல்லும் போது நீங்கள் மூடிகிட்டு இருக்கணும்! வக்கலாத்து வாங்கக் கூடாது! தேர்தல் கூட்டணி தான் என்றால்,ஒரு கொலைகாரனின் தனி மனித குற்றங்களை கேள்வி கேட்கும் போது, நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே! வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்.

மாற்றம் குறித்து பேசும் ஒரு மனிதன் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் அயோக்கியர்கள் என்று பேச வேண்டுமே ஒழிய, மாறாக மோடி நல்லவர் என்று பேசும் ஒரு மனிதனின் வார்த்தைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பதை வேறு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

பாரதிய ஜனதாவை கடுமையாக ஆதரிக்கும் அய்யா மணியன் அவர்கள்,காங்கிரஸின் தற்போதைய எந்த கொள்கைகளில் பாரதிய ஜனதா மாறுபட்டு நிற்கிறது என்று சொல்ல முடியுமா என்றால் கட்டாயம் முடியாது. காரணம் பொருளாதார கொள்கை, வெளியுறவு கொள்கை, தமிழர் நலன்,ஊழல் எல்லாவற்றிலும் இரண்டு கட்சிகளுமே தராசில் வைத்தால் சரி சமமாக நிற்பார்கள். பிறகெப்படி மேடைக்கு மேடை மோடி புராணம் பாடுகிறார் என்பது அந்த காந்திக்கு தான் வெளிச்சம்:)

ஒரு பக்கம் கேஜ்ரிவால் கட்சியில் இத்தனை மோசமான மனிதர்களா என்று கேட்கிறார்! எல்லோருமே பதவி வெறி பிடித்தவர்கள் போலவும் பிதற்றுகிறார். கேஜ்ரிவால் அறிஞர் அண்ணாவைப் போல இருக்கட்டும், ஆனால் அவரது கட்சிக்காரர்கள் தற்போதைய திமுக வினரைப் போல இருப்பதாக குறைபட்டுக் கொள்கிறார் மணியன் அய்யா!

முதலில் மணியன் அய்யா எங்கு பேசினாலும்,தேர்தல் பாதை திருடர் பாதை என்று பெரியார் சொன்னதையும் சேர்த்தே சொல்லுகிறாரே! அப்படியானால் வைகோவும் அந்த திருடர் பாதையில் தான் வந்திருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்கிறாரா? அல்லது அய்யா மணியன் அவர்கள் அவர்களும்,காங்கிரஸ் என்ற திருடர் பாதையில் தான் வெகு காலம் குப்பை கொட்டினார் என்பதையும் சேர்த்தே ஒப்புக் கொள்வாரா?  காந்திய மக்கள் இயக்கம் அடுத்து ஒரு தேர்தல் அரசியல் இயக்கமாக மலரப் போவதாக சொல்கிறார்களே! அப்படியானால் நீங்களும் திருடர் பாதைக்கு தான் திரும்புகிறீர்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா?

எதற்கு இந்த தேவை இல்லாத திருடர்பாதை வாக்கியங்கள்?

சரி! அய்யா வைகோவை நீங்கள் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்களே! கேஜ்ரிவால் கட்சி ஆட்கள் எல்லாம் மோசமானவர்களாக சித்தரிக்க முயலும் உங்களிடம் ஒரு கேள்வி! (ம)ற்றுமொரு திமுக குறித்தும், அந்த கட்சியில் உள்ளவர்கள் குறித்தும் உங்கள் பார்வை என்ன? கட்சியில் இருக்கும் எவருக்கும் ஆட்சி அதிகார ஆசை இல்லையென்று சொல்ல வருகிறீர்களா? அல்லது மக்கள் சேவை ஒன்றுக்காக மட்டுமே மிக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்று புனைய வருகிறீர்களா?  

(ம)ற்றுமொரு திமுக வில் பலர் தாங்கள் திமுக வில் இருந்திருக்கலாமோ என்று இன்று வரை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். தன்னைப் போன்று கட்சியில் இருந்தவர்கள் எல்லாம்,திமுக வில் பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு இந்த கட்சியினால் எந்த பலனும் கிட்டவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் பலரை மணியன் அறியமாட்டார் போலும். வேட்டைக்கு காத்து நிற்கும் ஓநாய்களைப் போல பதவிக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் திமுக தொண்டர்கள் மீதும், அந்த கட்சி மீதும் வைக்கும் அதே விமர்சனங்கள் (ம)ற்றுமொரு திமுக மீதும் உண்டு என்பதை மணியன் அய்யா அறிவாரா? கடந்த காலங்களில் (ம)ற்றுமொரு திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அறியாதவரா நீங்கள்? மிகவும் நேர்மையானவர்களாக நடந்து கொண்டார்களா என்பதை எல்லாம் மணியன் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்!

கட்சி தலைமையகமான தாயகமே எங்களுக்கு தான், கட்சி பெயரும் எங்களுக்குத் தான் என்று கொடி பிடித்த, கேவலமாக சண்டையிட்ட (ம)ற்றுமொரு திமுக மூத்த தலைவர்களை எல்லாம் மணியன் அறிந்திருக்க மாட்டார் போலும். மாவட்ட செயலாளர்களின்/ஒட்டு மொத்த கட்சிக்குள் இருக்கும் ஜாதிய அரசியல், அதிகார அரசியல், கட்டப் பஞ்சாயத்து அரசியல், ஆட்டம் பாட்டம் எல்லாம் மணியனுக்கு யாராவது சொன்னால் உத்தமம்!

வைகோ ஒருவர் மட்டுமே ஊழலுக்கு எதிரானவராக இருக்கலாம்.ஆனால் ஒட்டு மொத்த கட்சியும் அப்படி இல்லை.இன்றும் கூட கட்டப்பஞ்சாயத்து அரசியல் செய்யும் எத்தனையோ மாவட்ட செயலாளர்கள் (ம)ற்றுமொரு திமுக வில் உண்டு.

அதிலும் குறிப்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக வருகின்ற தேர்தலில் களமிறங்க போகும்,மாவட்ட செயலாளர் ஜோயலின் முழு நேர வேலையே கட்டப் பஞ்சாயத்து அரசியல் தான் என்பதை,யாராவது மணியனுக்கு சொல்லுங்களேன். ஜோயலின் வக்கீல் தொழில் என்பது கட்டப் பஞ்சாயத்து அரசியலுக்கான கவசம்.இப்படி எண்ணற்ற உதாரணங்கள் சொல்ல இயலும்.

கடந்த மூன்று வாரங்களில் கேஜ்ரிவால் செய்த நல்ல விடயம் எதையாவது மணியன் அய்யா சொல்லி இருக்கிறாரா? கிடையாது..சொல்லவும் மாட்டார். காரணம் வரது நோக்கம் என்ன என்பதை நாங்கள் அறியாமல் இல்லை.

இருந்தாலும் சொல்கிறேன். மின்கட்டணத்தை பாதியாக குறைத்து இருக்கிறார். டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஆய்வு செய்ய சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார். அதிலிருக்கும் ஊழல்களை எல்லாம் வெளிக்கொணர நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.மாதம் இருபதாயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக தர வேண்டியது அரசின் தலையாய கடமை என்பதை தெளிவாக சொன்னதோடு,அதை நடைமுறைப் படுத்தி இருக்கிறார். இன்னும் சில நாட்களில் காமன்வெல்த் ஊழல், ஷீலாதீட்சித் மீதான ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொணர இருப்பதாக சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில் உறுதி அளித்திருக்கிறார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை டெல்லியில் அனுமதிக்க முடியாது என்று தடை விதித்து இருக்கிறார்.

குறிப்பாக மாநில முதல்வர் வருகிறார் என்றால் நூறு கார்கள் அணி வகுக்க வேண்டும்,அதீத பாதுகாப்பு வேண்டும், சிவப்பு விளக்கு கார்களில் தான் வலம் வர வேண்டும். அமைச்சர் வருகிறார் என்பதற்காக போக்குவரத்து சிக்னல்களில் மக்களை காத்திருக்க வைக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளை மாற்றியதோடு அதை செய்தும் காட்டி இருக்கிறார். ஆட்சியாளர்களின் பாதுகாப்பு செலவை கடுமையாக குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி இருக்கிறார்.

மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது! ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட அதீத மக்கள் கூட்டம் வந்ததால், அதுவும் முதல் தடவை என்பதால் சில
குறைபாடுகள் இருக்க வாய்ப்புண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது.ஆனால் மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என்ற அவரது நோக்கம் நல்ல நோக்கம். இனி வரும் காலங்களில் அந்த குறை சரி செய்யப்பட்டு மக்கள் குறை கேட்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்.

வெறும் மூன்று வார ஆட்சியில் வேறென்ன செய்து விட முடியும் சொல்லுங்கள்?

கேஜ்ரிவால் ஆட்சியில் இருக்கும்,சின்ன சின்ன குறைகளை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்து பெரிது படுத்தி மக்கள் மன்றத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன மணியனுக்கு?

 முதல்வர்கள் என்றால் எளிமையாக இருக்க வேண்டியதில்லை,மக்களை விட்டு விலகி தான் இருக்க வேண்டும்,மக்கள் எளிதாக அணுக கூடாத வகையில் தான் முதல்வர் இருக்க வேண்டும் என்று மணியன் அய்யா சொன்னாலும் சொல்வார் போலவே!

கேஜ்ரிவாலின் எளிமை என்பதெல்லாம் நாடகம் என்றும் சொல்லும் மணியன் அய்யாவின் எளிமையும் நாடகமாக தான் இருக்குமோ:)

ஊழல் இல்லாத ஆட்சியை விரும்பும் விஜயகாந்த் மோடியைத் தான் ஏற்பார் என்று அரசியல் ப்ரோக்கர் வேலை வேறு!.சொல்வதில் கொஞ்சமாவது உண்மை வேண்டுமே! பாரதிய ஜனதாவின் ஊழல் பட்டியலை கீழே இணைத்துள்ளேன். அதைப் பார்த்து விட்டு பாரதிய ஜனதா ஒரு ஊழலற்ற பரிசுத்தமான கட்சி தானா என்பதை மணியன் அவர்கள் உறுதி செய்து கொள்ளட்டும்!

சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதில்லையாம், அரைகுறையாக எழுதுகிறார்களாம். ஹ..ஹா..மணியன் அவர்களுக்கு பெரும் சிக்கல் என்னவென்றால்,அவர் மோடி குறித்தும் ,பாரதிய ஜனதா குறித்தும் சொல்லும் செய்திகளை எல்லாம் மக்கள் அப்படியே விமர்சனம் இன்றி ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். ஆனால் இங்கே அதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் கடுப்பில் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறார்!

ஈழத்தின் இனப்படுகொலை காலம் வரை தீவிர காங்கிரஸ்காரராக இருந்து மௌனம் காத்தவர், ஈழத்துக்கு ஆதரவாக அது வரை பேசாத காங்கிரஸ்காரர்:)
ஈழ விடுதலைக்கு பல தியாகங்களை செய்து, ஈழ விடுதலைப் போரை வலுவாக செய்த விடுதலைப் புலிகளை இன்று வரை ஏற்காதவர் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளை இன்றுவரை கடுமையாக விமர்சிப்பவர்!
காந்தியம் பேசிக் கொண்டே மோடியை ஆதரிப்பவர்!

இபப்டிப்பட்ட ஒருவர் கேஜ்ரிவால் குறித்து சொன்னால் சரியாகத் தான் இருக்கும்!

மோடி ஆதரவாளர்கள் கூட இத்தனை விமர்சனங்களை கேஜ்ரிவால் மீது வைத்திருக்கமாட்டார்கள்!

அரைவேக்காட்டு மோடியை எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்கும் மணியனுக்கு,கேஜ்ரிவால் மீது இந்த அளவுக்கு கடுப்பு இருப்பதென்பது இயல்பு தானே! மோடியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி என்று ஏற்றுக் கொண்ட பிறகு இதை எல்லாம் செய்து தானே ஆக வேண்டும்.

நாய் வேஷம் போட்டால் குரைத்து தானே ஆக வேண்டும்! தமிழ்நாட்டில் தற்போது பலர் நாய் வேஷம் போட்டு இருக்கிறார்கள்! தேர்தல் வரை குரைக்கட்டும்!

சேர்க்கை சரி இல்லை. வேறென்ன சொல்ல!

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்!

வாழ்த்துக்கள் அய்யா மணியன்:)


-ஆன்டனி வளன் 

வியாழன், 23 ஜனவரி, 2014

என்ன செய்யலாம் அணு உலை எதிர்ப்பு போராளி கெபிஸ்டனுக்காக?


என்ன செய்யலாம் அணு உலை எதிர்ப்பு போராளி கெபிஸ்டனுக்காக?

கடந்த மூன்று ஆண்டுகளாக இடிந்தகரையில் நடைபெறும் தொடர் போராட்டங்களில் முன்னணியில் நிற்கும் களப்போராளிகளில் ஒருவர்.மிக எளிமையான அதே நேரத்தில் மிகவும் உறுதியான மன நிலை கொண்ட போராளி. கடந்த ஒன்றரை ஆண்டு நேரடி பழக்கம். அலைபேசியில் பேசும் ஒவ்வொரு தருணங்களிலும் மிகுந்த வாஞ்சையோடு பேசும் ஒரு உற்ற சகோதரன்.கடந்த முறை போராட்ட களத்துக்கு சென்ற போது தான்,நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிட்டியது.ஆனால் ஒரு நீண்ட கால நண்பனைப் போல அத்தனை அன்பு!

இந்த அணு உலைப் போராட்டம் இன்றைக்கு உலகத் தளங்களில் எல்லாம் வெளிவருவதற்கு மிகப்பெரிய அளவில் எந்த ஊடகங்களும் நமக்கு துணை நிற்கவில்லை. பல்வேறு ஊடகங்கள் நமக்கு எதிராக தான் இன்று வரை நிற்கின்றன. ஆனால் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும்(**காவல்துறையின் பல்வேறு அடக்குமுறைகள் உட்பட) உலக தளங்களுக்கு, தன் பல்வேறு புகைப்படங்களால் கொண்டு சென்ற நண்பர் கெபிஸ்டன். ஒவ்வொரு நாளும் பந்தலில் போய் அமர்ந்து,போராட்டத்தில் பங்கெடுத்து,போராட்ட களங்களுக்கு வரும் நபர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை புகைப்படங்களாக, காணொளிகளாக தந்த பெருமைக்குரிய நபர்.

கூடங்குளம் அணு உலை நிகழ்வுகளை எந்த செய்தி தாள்களிலும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.கெபிஸ்டனின் பதிவுகள் போதுமானது.அந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஊடகவியலாளராக கடந்த மூன்று ஆண்டுகள் களத்தில் நிற்கிறார்.

சிங்கள அரசை கடுமையாக விமர்சித்த ஒரே காரணத்துக்காக,தன் இருபத்து ஐந்து ஆண்டு கால நெருங்கிய நண்பனான ராஜபச்கேவால் படுகொலை செய்யப்பட்ட புகழ்பெற்ற சிங்கள பத்திரிக்கையாளன் லசந்த விக்ரமதுங்க தன்னுடைய கடைசி கடித்ததில் இப்படியாக எழுதி வைத்தான்.

யார் உண்மையான மிக சிறந்த ஊடகவியலாளன் ?

தான் நேரடியாக பார்த்த விடயங்களை,தான் உணரும் விடயங்களை எவ்வித புனைவுகளும் இன்றி,எவருடைய அச்சுறுத்தலுக்கும்/பயத்துக்கும் அப்பார்ப்பட்டு உண்மையாய் அப்படியே பதிவு செய்பவன் தான் உண்மையான ஊடகவியலாளன் என்று எழுதி வைத்தான். அனைத்து பத்திரிக்கையாளர்களும்/ஊடகவியலாளர்களும் இவர் சொல்வது போல இருந்து விட்டால் எத்தனை நலமாக இருக்கும்!(கற்பனை தான்).

ஆக ஊடகவியலாளன் என்றால் கட்டாயம் பெரிய பெரிய கட்டுரைகள் எழுத வேண்டியதில்லை.
ஒற்றைப் புகைப்படம் போதும்,கண் முன் நடக்கும் அநியாயங்களை,நாம் சொலல் விரும்பும் செய்திகளை உலகுக்கு சொல்ல.புகைப்படங்களின் வலிமை குறித்து சொல்ல வேண்டுமானால், வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்தது ஒற்றைப் புகைப்படம் என்பார்கள். அது தான் அதன்  வலிமை!பல நேரங்களில் மிகப்பெரிய கட்டுரைகள், விவாதங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒற்றைப் புகைப்படம் செய்து விட்டு போகும்.

அந்த வகையில் இடிந்தகரை செய்திகளை மிக அருமையாக உலகின் பார்வைக்கு கொண்டு வந்த மாபெரும் ஊடகவியலாளன் கெபிஸ்டன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நேற்றைய செய்தியை கேள்விப்பட்டவுடன் மிகுந்த கவலை எனக்கு.ஏன்  தெரியுமா?
அணு உலை போராட்டத்தை குறித்து என்னென்ன எழுதினாலும், என்னென்ன விவாதித்தாலும்,
களப் போராளிகளைப் போல மக்களோடு மக்களாக நின்று போராட இயலவில்லையே என்ற இயலாமை எப்போதும் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும்! ஆயிரம் எழுதலாம், பேசலாம் ஆனால் சொந்த மண்ணில் மக்களோடு மக்களாக நின்று போராடுவது சாதாரணமான விடயம் அல்ல.

அணு உலை எதிர்ப்பு போராளிகள் ஒவ்வொருவரையும் மிகவும் ஆழமாக நேசிக்கிறேன். என்ன காரணம் தெரியுமா? தனக்கான குடும்பம், வாழ்க்கை, மகிழ்ச்சி என்று சுய நல விரும்பிகளாக எங்கு பார்த்தாலும் திரியும் பெரும்பான்மை மனிதர்களுக்கு மத்தியில், அதீத கல்வி, ஓரளவுக்கு வசதியான குடும்பம், வாழ்க்கை தேவைகளுக்காக எவரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமை, நல்லதொரு வேலை என எல்லாம் இருந்தும், அவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து  விட்டு, இந்த மண்ணுக்காக, மக்களுக்காக களத்தில் போராட துணிவதென்பது,அதுவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே களத்தில் நிற்பதென்பது உண்மையிலேயே எல்லோராலும் இயலாத ஒன்று. அந்த அர்ப்பணிப்பு பலருக்கு வாய்க்காது! பலர் விரும்ப மாட்டார்கள்!

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இங்கே நிற்கும் களப் போராளிகளைப் பார்த்து பல நேரம் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில்,அவர்களுக்கு உறுதுணையாய் நிற்கும் அவர்களின் குடும்பங்கள், மனைவி குழந்தைகளை எல்லாம் நினைத்து நெஞ்சம் பூரித்து போகிறது.காரணம் அவர்களின் ஆதரவு இல்லை என்றால் போராட்டம் என்பது கேள்விக் குறி! உலகில் யாரை வேண்டுமானாலும் பேசி புரியவைத்து சமாளித்து விடலாம். ஆனால் சொந்த குடும்பத்துக்கு பேசி புரியவைத்து சமாளிப்பது சாம்ன்யப் பட்ட வேலை கிடையாது!

தங்கள் குடும்பங்களை தற்காலிகமாக பிரிந்து நிற்கும் போராளி குடும்பங்களின் வலி எப்படி இருக்கும் என்பதையும் உணர இயலாமல் இல்லை. வார்த்தைகளால் சிலாகிக்க இயலாத உணர்வுகள் அவை.

கெபிஸ்டனின் கடைக்கு தீவைத்து விட்ட செய்தி கேள்விப்பட்டு நேற்று அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பேசுவதற்கு முன்பு இருந்த என் மனநிலை, அவரோடு பேசிய பின்பு இன்னும் அதீத கவலைக்குள்ளானது.

பிறக்கும் போதே நாம் ஒன்றும் பெரிய பணக்காரர்களாக பிறக்கவில்லை.குருவி சேர்த்தது போல கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சேர்த்து தான் இந்த கடையை நடத்துகிறேன். ஆனால் இப்போது அதற்கும் வேட்டு வைத்து இருக்கிறார்கள். அணு உலை போராட்ட எதிர்ப்பை தவிர வேறு எந்த மனிதர்களோடும் எனக்கு தனிப்பட்ட பகை கிடையாது. என்ன செய்வது? எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள பழக வேண்டும்! மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்ன போது, என்ன பதிலை அவருக்கு சொல்வதென்றே தெரியவில்லை.ஆறுதல் சொல்லி ஆசுவாசப் படுத்த எந்த வார்த்தைகளும் என்னிடம் இல்லை.

கடைக்கு ஏதாவது காப்பீடு எடுத்து இருக்கிறீர்களா என்று மட்டும் கேட்டேன். கடைக்கு(கட்டடம்) காப்பீடு  இருக்கிறது. ஆனால் கடையில் உள்ள பொருட்களுக்கு காப்பீடு எதுவும் எடுக்கவில்லை என்றார். எரிந்த பொருட்களில் அதிகம் அரைகுறையாக எரிந்து கிடக்கின்றன.அதை பயன்படுத்தவோ/ விற்கவோ முடியாது. இன்னொரு கொடுமை என்னன்னா,கடையில் ஐம்பத்து மூவாயிரம் ரூபாய் பணம் வைத்திருந்தேன்.அதுவும் நான் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய பணம்.கடை எரிவதற்கு முந்தின நாள் காலையில் வந்து என்னிடம் அந்த பணத்தை வாங்கி செல்வதாக சொன்னவர், அன்று வராததால் அதை அப்படியே கடையில் வைத்து விட்டேன். அவர் அன்று காலையிலேயே வந்து வாங்கி இருந்தால், அதுவாவது மிஞ்சி இருக்கும்! என்ன சொல்ல?

நடு இரவில் கடையை தீவைக்க,கடைக்கு மேலே தான் அவரது வீடு.தூக்கத்தில் இருந்த அவர்கள்,அந்த புகை மூட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓட, இத்தனைக்கும் இரவில் மின்சாரமும் கிடையாது.சின்னஞ்சிறு குழந்தைகள் மூவர்.அவர்கள் அனைவரின் மன உளைச்சலும் பதட்டமும் எப்படி இருந்திருக்கும் எண்ணிப் பாருங்கள்?உயிர் தப்ப வேண்டும் என்பதைத் தவிர!இதில் அதீதமாக பயந்து போனது அவரது குழந்தைகள் தான்!

இடிந்தகரை கிராமத்தில் இருக்கும் பெரியகடை கெபிஸ்டனுடையது.எப்போதும் ஒரு ஐந்து லட்ச ரூபாய் சரக்கு கடையில் இருக்கும்.இது தான் அவருடைய வாழ்வாதாரமே!நியாமான மக்கள் போராட்டத்துக்கு உறுதுணையாக நின்றதைத் தவிர வேறெந்த தவறும் செய்யாத மனிதன்.

காவல்துறை கண்ணியவான்களிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக சென்ற அவரது மனைவியிடம், வழக்கு பதிவு செய்ய இயலாது என்று சொன்னவர்கள்,பின்னர் பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். எரிந்து போன பொருட்கள் பட்டியலை இவர்கள் சொல்லுவதற்கு முன்பே காவல்துறை அதிகாரிகள் சொல்கிறார்களாம். அதிலும் முக்கியமாக மடிக்கணினி எரிந்து போய்விட்டதாமே என்று காவல்துறை அதிகாரி சொல்ல, இல்ல நாங்க அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று அவரது மனைவி சொல்ல, இல்ல எங்களுக்கு தெரியும் அவரது மடிக்கணினியும் எரிந்து போய் விட்டது என்று காவல்துறை அதிகாரிகள் சொல்கிறார்களாம்! என்ன ஒரு அழகான காவல்துறை. எங்க என்ன நடக்குதுன்னு முன் கூட்டியே எல்லாம் தெரிந்தும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை. மக்களை காக்க காவல்துறையா?அல்லது மக்களை துன்புறுத்தவும், மிரட்டவும், அழிக்கவும் காவல்துறையா?

வழக்கு சம்மந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் வேண்டும் என்று கேட்டதற்கு, வீட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்து இருக்கிறார்கள்.இல்ல அலைபேசி எண் தான் வேண்டும் என்றாராம் காவல்துறை அதிகாரி. அதாவது கெபிஸ்டன் என்ற தீவிரவாதி(??) அலைபேசி எண்ணை மடக்கி மடக்கி கேட்கிறார்களாம்! ஐயோ இறைவா! அதற்கு இன்னொரு காவல்துறை அதிகாரி! அய்யா! கெபிஸ்டன் அலை பேசி எண்ணை இன்னும் மாற்றவில்லை. அதே பழைய எண் தான் வைத்திருக்கிறார். அது ஏற்கனவே நம்மிடம் இருக்கிறது என்று சொன்னாராம்.
இந்த கொடுமையை எல்லாம் எங்க போய் சொல்ல?

ஏற்கனவே தீவிரவாதி அளவுக்கு அணு உலைப் போராளிகள் மீது போடப்பட்டு இருக்கும் நூற்றுக் கணக்கான வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள்! இது போதாதென்று அவர்கள் அனைவரும் தொலைபேசிகளும் அன்றாடம் ஒட்டு கேட்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அவர்கள் வழக்கு பதிவு வர்றதுக்கு முன்பு வரைக்கும் கெபிஸ்டனின் அலைபேசி அழைப்புகளையும் ஒட்டு கேட்டு இருப்பார்கள் காவல்துறை அதிகாரிகள். பிறகெதற்கு அவரது அலைபேசி எண்? காவல்துறை பெரிய காமெடி துறையால்ல இருக்கு!

அன்பார்ந்த தோழர்களே!

இந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த மாபெரும் பொருள் இழப்பு என்பது நமக்கு ஏற்பட்டு இருக்கும் இழப்பு! அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு நிகழும் இந்த துன்பத்தில் கட்டாயம் நமக்கும் பங்கு உண்டு. வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டால் போராட்டத்தை விட்டு ஓடி விடுவார்கள் என்று ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயல்படும் அனைத்து மனிதர்களும் (நாய்களும்) எலும்புத்துண்டுகளுக்காக வாலை ஆட்டி கொண்டு கனவு காண்கின்றன!

கெபிஸ்டனைப் பொறுத்தவரையில் அவர் போராட்டத்தில் இன்னும் வலுவாகவே செயல்படுவார்.
இப்படியான மிரட்டல்களில் இருந்து அவர் பின்வாங்கப் போவதில்லை. ஆயினும் ஒரு சாமானியனின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைக்கப்படும் போது, மனதின் ஓரத்தில் கவலைகள இல்லாமல் இருக்காது. காரணம் எல்லோரும் மனிதர்களே! இதே இடத்தில நம்மை பொருத்திப் பாருங்கள். நம் பொருளாதாரம் சிதைக்கப்பட்டால் நம் மனம் என்ன வேதனைப் படும் என்று. வெளியில் அவர் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் கூட, அவரது வலி நாம் உணராமல் இல்லை.

கெபிஸ்டனைப் பற்றிய இன்னொரு செய்தியையும் சொல்லி ஆக வேண்டும். தாது மணல் கொள்ளைக்கு எதிராக போராடியதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறை அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.அது மட்டுமல்ல மூன்று லட்சம் மதிப்புள்ள அவரது டிரக்கர் வாகனம் உவரி காவல்நிலையத்தாரால் சிறைபிடிக்கப்பட்டு ஆண்டுகள் ஏழெட்டு ஆகிவிட்டன.
இன்றும் கூட உவரி காவல்நிலையத்தின் முன்பு அவரது வாகனம் பாழடைந்து நிற்கிறது. இனி அந்த வாகனம் ஒருபோதும் இவரது கைக்கி வந்து சேராது!

இப்படியாக மக்கள் போராட்டத்துக்காக பல்வேறு பொருள் இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

அணு உலைக்கு எதிரான எண்ணம் கொண்ட அனைத்து அன்பான தோழர்களும்,(ஆயிரக்கணக்கான தோழர்கள் கூடங்குளம் செய்திகள், மற்றும் அணு உலைக்கு எதிரான பல முகநூல் பக்கங்களில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் இந்த செய்தியை கொண்டு சேர்ப்போம்) நம்மாலான பொருளுதவியை செய்து, துவண்டு போய் நிற்கும் கெபிஸ்டனுக்கு ஆதரவாக நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.இது களத்தில் நின்று போராடும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய சமூக கடமையும் கூட! 

அணுஉலைக்கு ஆதரவாக அரசின் எலும்புத்துண்டுகளுக்கு வாலை ஆட்டும் அத்தனை ஜந்துக்களுக்கும் நாம் சொல்ல வேண்டியது,அணு உலை எதிர்ப்பு போராளிகள் ஒன்றும் தனி நபர்கள் அல்ல. அவர்கள் எங்கள் சொந்த அண்ணன் தம்பிகள். அவர்களுக்கோ அவர்கள் பொருட்களுக்கோ சேதம் விளைவித்தால், எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்துவிட்டு அமைதியாக இருப்போம் என்று எண்ணிவிட வேண்டாம்.அவர்களோடு அனைத்து வகையிலும் உறுதுணையாய் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் சேர்த்தே பதிவு செய்வோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இடிந்தகரை மண்ணில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை வலுவாக செய்து வரும் அத்தனை அண்ணன்மார்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தின் இருந்து சொல்லும் ஆத்மார்த்த நன்றிகளோடு, உங்களுக்கு உறுதுணையாய் எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில் வலுவாக பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்!

அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நிற்கும் அனைவருக்கும், நல்ல உடல் சுக ஆரோக்கியத்தையும்,இன்னும் அதீத மன உறுதியையும் தர வேண்டும் என்றும்,எவ்வித அசம்பாவிதங்களோ,உயிரிழப்புகளோ மீண்டும் ஒருமுறை,அந்த மண்ணில் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும்,இறை நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் பிரார்த்தனைகளில் வேண்டிக் கொள்வோம்!

குறிப்பு:

கெபிஸ்டனுக்கான பொருளதவிகளை அண்ணன் உதயகுமார்/அண்ணன் சுந்தரராஜன்/அணு உலை போராட்ட குழுவில் உள்ள யாராகிலும் ஒருவர் ஒருங்கிணைத்தால் நலமாக இருக்கும்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்