செவ்வாய், 20 ஜனவரி, 2015

ரொம்ப நாளா ஒரு சந்தேகம்!



இடதுசாரி எழுத்தாளர்கள் vs தமிழீழம்.

கடந்த பத்து ஆண்டுகளாக இணையம்,பிரபலமான பலரது வலைப்பூக்கள் என்று தேடித் தேடித் படித்தாயிற்று.கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முகநூலில் பிரபலமான மற்றும் ஓரளவுக்கு நியாயமான எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என்று பலரது பக்கங்களை,அவர்களின் பதிவுகளையெல்லாம் தொடர்ந்து படித்து வந்த போதிலும்,ஒரே ஒரு விடயம் மட்டும் ரொம்ப நெருடலாக உணர்கிறேன்.

ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.

உலக நாடுகளில் நடக்கும் அனைத்து பிரச்சினைகள்,அது மட்டுமல்ல இந்தியா, தமிழ்நாடு என்று இங்கு நடக்கும் அனைத்து அரசியல் சிக்கல்களிலும், தங்கள் கருத்துக்களை,எதிர்ப்புகளை,சாதக பாதங்களை மிக விளக்கமாகவும், வெளிப்படையாகவும் எழுதும் இடதுசாரி,மார்க்சிய கம்யூனிச என்று பல அடையாளங்களைத் தாங்கி நிற்கும் பெரும்பாலான எழுத்தாளர்கள்,ஈழ விடுதலை குறித்தோ,ஈழப் போர் குறித்தோ, ஈழப் போர்குற்ற காணொளிகள் குறித்தோ, இனப்படுகொலை குறித்தோ,எந்தப் பதிவுகளையும் எழுதியது போல் எனக்குத் தெரியவில்லை.அதற்கான எந்த கண்டனங்களையும் கூட அவர்கள் பதிவு செய்ததில்லை அல்லது அதை ஒரு பெரிய சிக்கலாக எண்ணியது போலவும் தோன்றவில்லை.பல நேரங்களில் பூசி மெழுகிக் கொண்டு போய் விடுவதும் உண்டு.

பிரான்ஸ்,அமேரிக்கா போன்ற உலக நாடுகள் குறித்து எழுதுகிறார்கள். இன விடுதலைக்காக போராடிய, போராடிக் கொண்டிருக்கிற பல நாடுகள் குறித்து எழுதுகிறார்கள்.ஆனால் தமிழீழம் குறித்து எழுதுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல்?

இவர்களது சிக்கல் தனித்தமிழ் ஈழமா அல்லது விடுதலிப் புலிகளா? விடுதலைப் புலிகள்,ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள் என்பது தான் சஇவர்களின் சிக்கலா?அப்படிப் பார்த்தால் ஆயுதம் தாங்கிப் போர் நடத்திய கம்யூனிச நாடான கியூபாவையும், பிடலையும், சேகுவேராவையும் தான் ஏற்கக் கூடாது.ஏன் சீனாவின் மாவோவையும் தான் ஏற்கக் கூடாது. ஆனால் அவர்களையெல்லாம் ஏற்கத் தானே செய்கிறார்கள்.

இடது சாரித் தலைவர்கள் ஈழப் போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடு எடுப்பதும், இடதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக எழுதாமல்,சாதுர்யமாய் நடந்து கொள்வதாய் எண்ணிக் கொண்டு கள்ள மௌனம் காத்தாலும்,இவர்களின் செயல்பாடுகள்/கள்ள மௌனம் எல்லாம் ஊரறிந்த ரகசியம் தான்.

பாலச்சந்திரன் படுகொலையை கண்டித்த இடதுசாரி எழுத்தாளர்களை முகநூலில்/இணையங்களில் பார்க்க முடியவில்லை. இசைப்ரியாவின் படுகொலையை கண்டித்த இடதுசாரி எழுத்தாளர்களை இணையங்களில் காண இயலவில்லை. வன்னிப்போரின் கொடூரங்களை கண்டித்து எழுதிய இடதுசாரி எழுத்தாளர்களை காண இயலவில்லை.

உலகமே இனப்படுகொலை என்று சொன்ன பிறகும் கூட, ஈழ விடுதலை குறித்து மௌனம் காத்த,காத்துக் கொண்டிருக்கிற இடதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள்,அப்படி ஒரு கள்ள மௌனம் காக்க என்ன காரணம்?

விடுதலைப் புலிகள் இடதுசாரிகளாக இல்லை என்பதாலா? ஒருவேளை கியூபாவின் பிடலிடம் ஆலோசனை பெற்றவர்களாக விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் ஈழ விடுதலை குறித்து எழுதி இருப்பார்களோ?

என்ன காரணமாக இருக்கும் என்று ரொம்ப யோசித்து யோசித்து பார்த்து நமக்கு என்ன காரணம்னு கடைசி வரைக்கும் புரியல.அதான் தெரிஞ்சவங்க யாராவது காரணம் இருந்தா சொல்லுங்கப்பா!

இன்னும் ஒரு சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஈழம் குறித்து மேலோட்டமாய் பேசுவார்கள்,ஆனால் மற்ற பிரச்சினைகளில் அவர்கள் காட்டும் தீவிரத்துக்கும்,ஈழம் பற்றி பேசும் போது அவர்களின் பேச்சுக்கும் நமக்கு வித்தியாசம் தெரியாதா என்ன?

ஒரு சில இடதுசாரித் தலைவர்கள் விடுதலைப் புலிகள் குறித்து மிகக் கேவலமாக பேசிய பேச்சுக்களையும்,கட்டுரைகளையும் கூட வாசிக்க நேர்ந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கூட உ.வாசுகி என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கார அம்மா புலிகள் குறித்து அப்படி ஒரு மோசமான கட்டுரை எல்லாம் எழுதி இருந்தார்கள்.

இடதுசாரிகளுக்கும், ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அப்படி என்ன தான் பிரச்சினை? விவரம் தெரிஞ்சவங்க கொஞ்சம் வெளக்கமா தான் சொல்லுங்களேன். உங்களுக்கு கொஞ்சம் புண்ணியமாப் போகும்.

**நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்,இடதுசாரி எழுத்தாளர்கள் என்று உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் எண்ணுகிற எழுத்தாளர்களின் முகநூல் பக்கங்களை/இணையத்தை சரி பார்த்துக் கொள்ளலாம்**

-ஆன்டனி வளன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக