சனி, 31 ஜனவரி, 2015

கிறிஸ்தவம் சொல்லும்,வியாதியை சுகமாக்கும் வரம் உண்மையா?


கிறிஸ்தவம் சொல்லும்,வியாதியை சுகமாக்கும் வரம் உண்மையா?
ஆம். உண்மை தான்.
பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாடு காலத்தைப் போலவே,இன்றும் தேவனுடைய வரங்கள் கிரியை செய்கின்றன!காலங்கள் மாறுபட்டாலும், வரங்களுக்கெல்லாம் காரண கர்த்தாவான,தேவன் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று அனைத்துக் காலத்திலும் ஒருவரே!
பெரும்பான்மையான வேளைகளில் சுகமாக்கும் வரம் என்பது கேலியாக பார்க்கப் படுகிறது.
உடனடி கேள்வியாக என்ன கேட்பார்கள் என்றால்,நீங்கள் சொல்லும் சுகமாக்கும் வரம் உண்மையென்றால்,கான்சர் வியாதி உள்ள நபரை நான் உங்களிடம் அழைத்து வருகிறேன்,உங்கள் கடவுள் இயேசு கிறிஸ்து அவரை சுகமாக்கினால் நான் நம்புகிறேன் என்று நிரூபிக்க சொல்லிக் கேட்கிறார்கள்.ஆம் கேள்வி நியாயமான கேள்வி தான்.
ஆனால் அப்படி கேள்வி கேட்பவர்கள்,அடிப்படையான சில விடயங்களை மறந்து விடுகிறார்கள்.
இன்றைக்கு ஒரு நோயாளியை,சாதாரண காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் கூட,மருத்துவமனைகளில் பல பரிசோதனைகள் நடக்கின்றன.சில வியாதிகளைப் பற்றி மருத்துவர்கள் குறிப்புகள் எழுதவதற்கு,நோயாளியின் பரம்பரை குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.
நோயாளியின் உணவுப் பழக்கம்,மது அல்லது போதை வஸ்துக்கள் பழக்கம் அல்லது வேறு ஏதேனும் கெட்டப் பழக்கங்கள் உண்டா,உங்கள் தந்தை அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது இது போன்ற வியாதிகள் உண்டா என்று பல கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டி இருக்கு.என்ன காரணம்?
எதற்கு மருத்துவரே என் வியாதிக்கு சம்மந்தமே இல்லாத இது போன்ற கேள்விகள் எல்லாம்?என் வியாதிக்கு சரியான வைத்தியம் செய்ய உங்களுக்கு தெரியுமா,தெரியாதா? நீங்கள் வைத்தியம் செய்தால் கட்டாயம் எனக்கு சுகம் கிடைக்கும் என்று உங்களால் நிரூபிக்க இயலுமா?என்றெல்லாம் நாம் எந்த மருத்துவரிடமும் கேட்பதில்லை.
நாடெங்கும் பல போலி மருத்துவர்கள் நடமாடுகிறார்கள் என்று அடிக்கடி செய்திகளைப் பார்த்த பிறகும் கூட,நமக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர், உண்மையில் மருத்துவம் படித்தவர் தானா என்ற ஆதாரங்களைக் கூட நாம் அவரிடம் கேட்பதில்லை.தான் உண்மையான மருத்துவர் தான் என்பதற்கான(அரசு பதிவு பெற்ற பதிவு எண்)ஆதாரங்களை பெரும்பாலான மருத்துவர்கள் வெளிக்காட்டுவதும் இல்லை.அப்படி வெளிக்காட்டினாலும் அது உண்மையான பதிவு எண் தானா என்பதை மக்கள் எல்லோரும் உறுதி செய்த பிறகு தான் அந்த மருத்துவரிடம் செல்வதாகவும் சொல்ல இயலாது.
ஒரு நோயை சுகமாக்க வேண்டும் என்றால், முதலில் நோய்க்கான கூறுகளை கண்டறிய வேண்டும்,அது முக்கிய வேலை.அதனால் தான் மருத்துவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு.
அடுத்து நோயை மிக சரியாக கண்டுபிடித்து விட்ட பிறகு, சரியான மருந்துகளை கொடுக்க வேண்டியது மருத்துவரின் கடமை. கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்ளும் போது,பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகள்,மது அருந்தும் நபர்களாய் இருந்தால்,மதுவுக்கு தடை என்று பல விடயங்களை நோயாளிகள் கடை பிடிக்க வேண்டி இருக்கிறது..
ஆக ஒரு நோயைக் கண்டு பிடிக்க,அதற்கான மருந்தை தேர்வு செய்ய, மருந்தை உட்கொள்ள என்று ஒவ்வொரு கட்டத்திலும் பல நிபந்தனைகள் உண்டு.இந்த நிபந்தனைகள் அனைத்தையும் ஒரு மருத்துவர் சொன்னால்,அப்படியே கேட்டு நடக்கும் நாம்,தெய்வீக சுகம் மட்டும்,நாம் போன உடனேயே எந்த கேள்விகளும் இல்லாமல், நிபந்தனைகளையும் ஏற்காமல் உங்கள் கடவுள் தன்னை நிரூபிக்கட்டும் என்று வாக்குவாதமும்,குதர்க்கமும் பேசுகிறோம்.
மருத்துவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கிறோம், அவரது அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறோம், அவர் சத்தம் போட்டாலும் வாங்கிக் கொள்கிறோம், அவர் சொல்லும் உணவுக் கட்டுப்பாடுகளை கடை பிடிக்கிறோம்,வியாதிக்காக பணத்தை நாம் அள்ளிக் கொடுத்தாலும், வியாதி சரியாக வேண்டும் என்றால், நமது இஷ்டத்துக்கு நடக்க இயலாது.மருத்துவர் சொல்லும் விதிமுறைகளை எல்லாம் கேட்டுத் தான் ஆக வேண்டும்.
காசு கொடுத்து வைத்தியம் பார்த்தால்,மருத்துவர் சொல்வதையெல்லாம் கேட்கும் மக்கள்,இலவசமான சுகம் என்று சொல்லப் படும் வியாதி சுகமாக்கும் வரத்தை மட்டும் எப்படி கேட்கிறார்கள் என்றால், நான் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப் பட மாட்டேன், நீங்கள் சொல்லும் எதையும் நான் காது கொடுத்துக் கேட்க மாட்டேன்.ஆனால் உங்கள் கடவுள் தன்னை நிரூபிக்கட்டும் என்கிறார்கள். உங்களின் வியாதி சுகமாக வேண்டியது உங்களுக்கு முக்கியமா? அல்லது கடவுள் தன்னை கடவுள் தான் என்று நிரூபிக்க வேண்டியது முக்கியமா?
இங்கே எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. இலவசமாய் வியாதி சுகமாக வேண்டும் என்றால் அந்த வியாதியை சுகமாக்கும் முன் கடவுள் நம்மிடம் விரும்பும் மாற்றங்கள்/ விடயங்கள்/ நிபந்தனைகள் பல உண்டு.அப்படி நாம் கடைபிடித்தோம் என்றால் தெய்வீக சுகம் சாத்தியமே!
ஆனால் எந்த விதிகளையும் கடைபிடிக்க மாட்டேன்,உங்கள் கடவுள் மட்டும் உண்மையில் பலம் வாய்ந்தவர் என்றால்,என் வியாதியை சுகமாக்கட்டும் என்றால்,நீங்கள் சொல்வது போல உங்களிடம் நிரூபித்து தான்,கடவுள் தன்னை கடவுள் என்று காட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் அவருக்கு இல்லை.
அது மட்டுமல்ல விசுவாசம்/நம்பிக்கை இல்லாதவனுக்கு இது போன்ற அற்புதங்கள் நடக்கும் என்ற கட்டாயம் இல்லை.காசே இல்லாமல் இலவசமாய் கிடைக்கும் அற்புத சுகத்துக்கு அடிப்படையே விசுவாசம் தான்.கடவுள் நம்மிடம் விரும்பும் மாற்றம்/செயல் என்று இன்னும் பல கூடுதல் காரணங்கள் இருக்கலாம்.
முதலில் வியாதி ஏன் வருகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு!
வேதாகமத்தில் இயேசுநாதர் வியாதிகளை சுகப்படுத்தும் போது, வியாதிக்காரன் எல்லோரையும் பார்த்து உடனே சுகமாகு என்று சொல்லி அனுப்பவில்லை. மாறாக அவர் நோயாளிகளிடம் சில கேள்விகள் கேட்டார்,அவர்களின் பதில்களை எதிர்பார்த்தார்.
சிலரை நீ இப்படி செய் என்று சொன்னார், சிலரைப் பார்த்து சுகமாக உனக்கு சித்தமா என்று கேட்டார்,சிலரிடம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன,நீ எழுந்து நட என்றார்.இன்னும் சிலரிடம் உன் விசுவாசம் உன்னை சுகமாக்கியது என்றார். ஆக வியாதிகள் ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
வியாதிக்காரன் ஒருவன் ஆண்டவரே என்னை சுகமாக்கும் என்று இயேசுநாதரிடம் கேட்டால்,அவரோ உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன என்கிறார்.அப்படியானால் இயேசுநாதர் சொல்லிய பாவம் மன்னிக்கப் பட்டதற்கும், மனிதனுடைய வியாதிக்கும் சம்மந்தம் இருக்கிறதா என்றால் கட்டாயம் இருக்கிறது.
உன் விசுவாசம் உன்னை சுகமாக்கியது என்று சொல்லும் போதே,வியாதி சுகமாவதற்கும், விசுவாசத்திற்கும் சம்மந்தம் உண்டா என்றால் கட்டாயம் உண்டு என்பது நமக்கு விளங்குகிறது.
வியாதியுடன் வந்த எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று அவர் சொல்லவில்லை.சிலருக்கு மட்டுமே சொன்னார். அதனால் தான் சொல்கிறேன் முதலில் வியாதிக்கான பல காரணங்களை நாம் விளங்கிக் கொள்ளாமல், வியாதியை சுகமாக்க முடியாது.நோய் சுகமாக வேண்டும் என்றால் நோயாளி மருத்துவர் சொல்வது போல கேட்டு மருந்து உட்கொள்ள வேண்டும்.
மருத்துவர் சொல்லும் ஆலோசனையை கேட்காதவர்கள்,வியாதி சுகமாகவில்லை என்று சொல்வது எப்படி அபத்தமோ,அதைப் போலவே இலவசமாய் தெய்வீக சுகத்தை எதிர்பார்க்கும் நபர்களிடமும், தேவன் விரும்பும் காரியங்களை அவர்கள் செய்யாமல்,எங்களுக்கு சுகமாகவில்லை என்று சொல்வதும் அபத்தம்.
இதெல்லாம் சும்மா கட்டுக் கதை என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் உங்களுக்கு அது கட்டுக் கதையாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
நமக்கு அவ்விதமான நேரடியான அனுபவங்கள் கிடைக்காதவரை,பல விடயங்கள் நமக்கு கட்டுக் கதையாகத் தான் தோன்றும்.உலக வரலாற்றிலே கூட, பல கால கட்டங்களில் அறிஞர்கள் பலர் சொன்ன பல விடயங்களை,உடனடியாக உலகம் நம்பவில்லை.ஆனால் மக்கள் அதை உண்மை என்று உணரும் காலம் வந்த பிறகு அதை ஏற்றுக் கொண்டார்கள்.
வியாதியை சுகமாகும் வரம் இன்றும் நடக்கிறது,அது உண்மை தான் என்று அனைத்து கிறிஸ்தவர்களும் நம்புகிறார்களா? அல்லது அப்படியான சுகமாக்கும் வரத்தை நேரடியாக உணர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகமானோர் இருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
இயேசு நாதரை முழுமையாக விளங்கிக் கொள்ளாமல்,அவரை வெறும் புரட்சியாளர் என்று மட்டுமே சொல்லிக் கொள்ளும்,கிறிஸ்தவ பெயரை மட்டுமே வெறும் அடையாளமாக தாங்கி நிற்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
பரிசுத்த வேதாகமத்தை தன் வாழ்வில் ஒருமுறை கூட முழுமையாக வாசிக்காமல்,கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்(வாசித்தால் தான் அவர்கள் கிறிஸ்தவர்களா என்ற வாதம் வேறொரு தலைப்பு).
இந்த வியாதி சுகமாகும் வரம் என்பது எதோ இயேசுநாதர் காலத்தில்,அவர் செய்த அற்புதம்.மற்றபடி இப்போதெல்லாம் எங்க சார் நடக்கிறது என்று, வெறுமனே வேதாகமத்தை கதை போல படித்து விட்டு கடந்து போகிற கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். உண்மையில் இது போன்ற அனுபவங்கள் கிடைத்த நண்பர்களும் இருக்கிறார்கள்.
மக்களில் பலருக்கு இந்த அனுபவம் கிடைக்கவில்லை அல்லது அது குறித்த சிந்தனையோ, அதற்கான சரியான இடங்களோ, வழிமுறைகளோ தெரிவதில்லை. சரியான கிறிஸ்தவ போதனைகள் பலருக்கு கிடைப்பதில்லை.காரணம் கிறிஸ்தவத்தை போதிப்பவர்களுக்கே சரியான கிறிஸ்தவம் புரியாத போது, அவ்விதமான அனுபவங்கள் கிடைக்காத போது, வரங்கள் இல்லாத போது, வரங்களுக்கான மெனக்கெடல் அல்லது ஆர்வம் இல்லாத போது,நம்பிக்கை இல்லாத போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு இதை சொல்லி புரிய வைப்பார்கள்.
இன்னொரு பக்கம்,வெகுஜன மக்கள் கேலியாக சொல்வதைப் போல,தமிழ்நாட்டில் இயேசுநாதர் பெயரை சொல்லி வியாதிகளைக் குணமாக்குகிறோம் என்று,பலர் நடத்தும் சுவிசேஷக் கூட்டங்களிளெல்லாம்,வியாதிகள் உண்மையில் சுகமாகிறதா என்பதற்கு நான் உத்தரவாதம் இல்லை.காரணம் இன்றைக்கு இயேசுநாதரை அப்பட்டமான வியாபாரமாக்கி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
அதற்காக தெய்வீக சுகம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொல்பவர்களின் கூற்றை கட்டாயம் மறுக்கிறேன்!
ஏன் அனைத்து கிறித்துவக் கூட்டங்களிலும் தெய்வீக சுகம் கிடைக்கிறது என்று சொல்ல நான் விரும்பவில்லை என்றால், உலகத்தில் எவ்வாறு நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்களோ அதைப் போலவே,போலி மருத்துவர்களும் அல்லது மருத்துவம் படித்திருந்தாலும்,முறையான வைத்தியம் செய்யாமல் உயிர்களைக் கொல்லும் மருத்துவர்கள் இருப்பதைப் போலவே,இங்கே உண்மையான கிறித்துவ ஊழியர்களும் இருக்கிறார்கள், போலியான கிறித்துவ ஊழியர்களும் இருக்கிறார்கள்.
எப்படி யார் நல்ல மருத்துவர்,உண்மையான மருத்துவர்,சரியான மருத்துவர் என்பதை பகுத்தறிந்து,சரியான வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது நோயாளிகளின் கடமையோ,அதைப் போலவே தெய்வீக சுகம் வேண்டும் நபர்களும், சரியான வழியை தேர்ந்தெடுக்க வேண்டியது அவரவர் கடமை.தேவன் நம்மிடம் விரும்பும் விதிமுறைகள், நிபந்தனைகள், கீழ்ப்படிதல், விசுவாசம் அனைத்தும் இருந்தால் சுகமாக்கும் வரம் என்பது சாத்தியமே.
சிலவற்றை நாம் அனுபவித்து உணராதவரை அது உண்மையா அல்லது பொய்யா என்பதை நம்மால் நம்ப இயலாது.
நம்மைப் பொறுத்தவரை தெய்வீக் சுகம் என்ற வரத்தை வேதாகமத்தில் படித்ததோடு நாம் நின்று விடவில்லை.அந்த வரத்தால் பலமுறை தெய்வீக சுகம் பெற்ற அனுபவப் பாடம் நமக்கு உண்டு.
தெய்வீக சுகம் என்பது கட்டாயம் பெரிய பெரிய கான்சர் வியாதியில் இருந்து மீண்டதாகத் தான் இருக்க வேண்டும்,அல்லது ஒரு இருதய நோயாளியாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல.
ஏன் உங்களால் சகித்துக் கொள்ள முடியாத, மிகக் கடுமையான ஒற்றைத் தலைவலியாக கூட இருக்கலாம், முதுகுவலியாக இருக்கலாம்,மருத்துவர் ஆலோசனைப் படி சரியான மருந்து உட்கொண்டும் கூட,பத்து நாள் சரியாகாத காய்ச்சலாக இருக்கலாம்,வேறு வியாதிகளாக இருக்கலாம்.
ஏன் அப்படியானால் பெரிய பெரிய வியாதிகளுக்கு எல்லாம் சுகம் கிடைக்காதா என்று கேட்பீர்கள் என்றால்,கட்டாயம் உண்டு.அப்படி வியாதிகள் சுகமான பலரை,அவர்களது சாட்சிகளை ஆதாரங்களை நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். ஆனால் இங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை .மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.
அது மட்டும் அல்ல,தலைவலியும்,முதுகுவலியும் மிகச் சாதாரண வியாதிகள் என்று ஒதுக்கி விட முடியாது.காரணம் cluster headache எனப்படும் ஒற்றைத் தலைவலியால் துடிக்கும் நபர்களிடம் போய் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய கொடூரம் என்று.
cluster headache என்பது பிரசவ வலியைப் போல பத்து மடங்கு வலி என்று விக்கிபீடியா தகவல் சொல்கிறது. அந்த வியாதியால் அவதிப்படும் நெருங்கிய நண்பர் எனக்குண்டு.
இன்றைக்கு முதுகுத் தண்டுவட வலி எனப்படும் கொடூர வலியால் நடப்பதற்கே அவதிப்படும்,எத்தனையோ நடுத்தர வயதுக்காரர்களை நான் அறிவேன். ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய முடியவில்லை, அல்லது அது ஒரு தற்காலிக வைத்தியம் மற்றும் பக்கவிளைவுகள் நிறைந்தது எனவே நிரந்தர தீர்வு வேண்டும் என்று சொல்லி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆயுர்வேத வைத்தியசாலைகளில், முதுகுவலிக்காக மாதக்கணக்காக வைத்தியம் செய்யும் பலரை நேரடியாக பார்த்து இருக்கிறேன்.ஆக இங்கே எந்த வியாதியையும் மிக சாதாரண வியாதி என்று ஒதுக்கி விட முடியாது,அது நமக்கு வராதவரை.
ஆக இயல்பான வாழ்வில் நமக்கு வந்த எந்த ஒரு சின்ன வியாதியாகவும்,பெரிய வியாதியாகவும் அதில் கிடைத்த தெய்வீக சுக அனுபவமாகக் கூட இருக்கலாம். அப்படிப்பட்ட நேரடியான அனுபவங்களைத் தான் நான் சொல்கின்றேன்.
கடந்த இருபது,முப்பது ஆண்டுகளாக, நோய்களுக்கான எந்த வைத்தியமும் செய்யாமல், மருந்து,மாத்திரை சாப்பிடாமல் தெய்வீக சுகம் ஒன்றை மட்டுமே நம்பி காத்திருக்கும் பலரை நேரடியாக நான் அறிவேன்.
முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஈழை நோய் எனப்படும் ஆஸ்துமா வியாதியால்(ஈழை நோய் எனபது எவ்வளவு கொடிய நோய் என்பதை விக்கிபீடியாவில் படித்து தெரிந்து கொள்ளலாம்)அவதிப்பட்ட ஒருவர்,தெய்வீக சுகத்தால் சுகமான பின்பு, இன்று வரை (அதாவது கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாக)அவருக்கான எந்த ஒரு வியாதிக்காகவும்,மருத்துவமனைகளுக்கு சென்றதில்லை. மருந்துகளையே அவர் உட்கொண்டதில்லை.
அவரது உடலில் வரும் வியாதிகளுக்கு,இன்று வரை தெய்வீக சுகம் ஒன்றையே நம்பி இருக்கிறார்.சாட்சி வேண்டும் என்றால் என்னோடு வாருங்கள்.நான் அவரிடம் கூட்டி செல்கிறேன்.அதற்காக எல்லோரும் தெய்வீக சுகத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்றோ,மருந்து மாத்திரைகள் சாப்பிடக் கூடாது என்றோ அவர் யாரையும் அவர் கட்டாயப் படுத்துவதில்லை.கடவுள் மீதான அவரது விசுவாசம், நம்பிக்கை அந்த அளவுக்கு அதீதமாய் இருக்கிறது. (ஐயோ சித்தர்கள் அப்படி மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் தான் ஒரு காலத்தில் இங்கே இருந்தார்கள் போன்ற உதாரணங்கள் தற்போதைய நடைமுறையில் அரிது மட்டும் அல்ல,இன்றைக்கு சாதாரண மனிதர்கள் வாழ்வில் அது எதார்த்தம் அல்ல)
வியாதி சுகமாகுறது எல்லாம் சும்மா டுபாக்கூர், அதெல்லாம் நடக்காத ஒன்று, நிரூபிக்க முடியுமா என்று இறை நம்பிக்கை அற்றவர்கள் கேட்பதைக் கூட,ஒரு வகையில் அவர்களின் கேள்வி நியாயம் என்று ஏற்கலாம்.
ஆனால் யாகம் வளர்ந்தால் மழை வரும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள், பாட்டு பாடினால் மழை வரும் என்று நம்புகிற மக்கள் இங்கே இருக்கிறார்கள், கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை வரும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள்,வீட்டில் சுப காரியங்கள் தடைபட்டால்,பரிகாரம் என்ற பெயரில் என்னென்னவோ செய்தால் சரியாகி விடும் என்று,யாராரோ சொல்வதை எல்லாம் கேட்டு அதன்படி சரியாகி விடுகிறது என்று நம்பும் மக்கள் இருக்கிறார்கள். கடவுளுக்காக தன் உடலைக் கிழித்துக் கொண்டால் நல்லது நடக்கும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள்.
முடி காணிக்கை (வேளாங்கண்ணி தேவாலயம் உட்பட)செலுத்தினால் நன்மைகள் நடக்கும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள் மண்சோறு சாப்பிட்டால் சரியாகி விடும் என்று நம்புகிற மக்கள் இருக்கிறார்கள். நிர்வாண சாமியார்களின் ஆணுறுப்புகளை வணங்கும் மக்கள் இருக்கிறார்கள்,குறிப்பிட்ட சில நதிகளில் குளித்தால் பாவங்கள் எல்லாம் நீங்கி அனைத்தும் சரி ஆகி விடும் என்று நம்பும் மக்கள் இருக்கிறார்கள்,இந்த நிறம் தான் தனக்கு உகந்தது,இந்த குறிப்பட்ட நேரத்தில் தான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்,இதை செய்யவேண்டும்,இது தான் நல்ல நேரம், இது கெட்ட நேரம் என்று ஒரு நாளின் அனைத்து வேலைகளையும்,ஏன் சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிப்பது வரை, ஜோஷியக்காரனை நம்பி அவன் சொல்வதைக் கேட்டு கேட்டு செய்யும் நம்பிக்கை கொண்ட மக்கள் இருக்கிறார்கள்.
உங்கள் நம்பிக்கையை நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை, பகுத்தறிவு வாதத்துக்கு உட்படுத்தவும் இல்லை,அப்படி செய்யவும் மாட்டேன்.அது உங்கள் நம்பிக்கை.நான் கேள்வி கேட்க இயலாது.
ஆனால் இப்படி மேலே சொன்ன விடயங்களை எல்லாம் கேள்வியே கேட்காமல் நம்பும், நடைமுறைப் படுத்தும் மக்கள் நம்மைப் பார்த்து பகுத்தறிவு இருக்கா என்று கேட்கிறார்கள், கிறிஸ்தவம் சொல்லும் வியாதி சுகமாகும் வரம் என்பது டுபாக்கூர் என்று கேலி செய்கிறார்கள். ஹ..ஹா..இது தான் உச்ச பட்ச காமெடியே!முதலில் உங்கள் நம்பிக்கையை, பகுத்தறிவை நீங்களே கேள்வி கேளுங்கள்.
இதென்னய்யா எங்க ஊரு கோடாங்கியும்,குறி சொல்லுகிறவனும் தான் இது போன்ற பல விடயங்களை செய்கிறார்கள். அதென்ன உங்க இயேசுநாதர் தான் இதெல்லாம் செய்கிறார் என்று எப்படி நம்புகிறீர்கள்?
பல விடயங்களை விளக்கி சொல்வதை விட அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்வதும்,வித்தியாசப் படுத்திப் பார்க்க தெரிந்து கொள்வதும் உத்தமம்!
மத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களை சுகமாக்குங்கள். குஷ்டரோகிகளை சுத்தம் பண்ணுங்கள்.இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்!
மத்தேயு 24:35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
***(இறை நம்பிக்கை உள்ள நபர்களுக்கான பதிவு)***
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

2 கருத்துகள்:

  1. அன்பு நண்பரே.ரத்னசுருக்கமாக உள்ளது மக்கள். மனதில்பதிய தொடர்ந்து இதுபோல்இன்னும் பல எழுதுங்கள் நாம்நமது மக்களளுக்காக தேவனிடம் மன்றாடுவோம்

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பரே.ரத்னசுருக்கமாக உள்ளது மக்கள். மனதில்பதிய தொடர்ந்து இதுபோல்இன்னும் பல எழுதுங்கள் நாம்நமது மக்களளுக்காக தேவனிடம் மன்றாடுவோம்

    பதிலளிநீக்கு