வியாழன், 16 ஜனவரி, 2014

உலகம் இருபது குடும்பத்துக்கு சொந்தம்!



உலகம் இருபது குடும்பத்துக்கு சொந்தம்!

விமர்சனம் 1:

விகடன் பதிப்பகத்தில் இந்த மாதம் வெளிவந்திருக்கும் புத்தகம்!முதல் பதிப்பு! ஆசிரியர் திரு. வேங்கடம் அவர்கள்! விலை 105 ரூபாய்.

இந்த புத்தகம் பதிப்பித்து வெளி வந்த மறுகணமே, விரைவு தபாலில் அனுப்பி வைத்து,இதைப் படித்து பாருங்கள்,கட்டாயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று,நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார். அது மட்டுமல்லாது,செய்தி சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் என்னை நீங்கள் அலைபேசியில் அழையுங்கள் என்றுசொன்னதோடு,அவ்வாறு நான் அழைத்த போது, என்னுடைய பல கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதிலளித்த, அய்யா வீரராகவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அவர் சொன்னபடியே,இந்த புத்தகம் எனக்கு பல நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள உதவி இருக்கிறது!அதைப் போலவே உங்களுக்கும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை!

இந்த புத்தகம் குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது!

ஒன்று புத்தகம் குறித்த வெகு ஜன மக்களுக்கான விமர்சனம். அடுத்து இந்த புத்தகம் சொல்லும் விடயங்களுக்கும்,கிறித்துவத்துக்கும் அதாவது பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட விடயங்களுக்குமான தொடர்பை,இரண்டாவது விமர்சனமாக எழுதலாம் என்றும் தோன்றுகிறது!இரண்டாவது விமர்சனம் கிறித்துவத்தை நம்பும் நண்பர்களுக்கானதாக இருக்கும்!

உலகம் இருபது குடும்பத்துக்கு சொந்தம்என்ற தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது! புத்தகத்தை மேலோட்டமாக வாசித்த போது, எதோ உலக பணக்காரர்கள் பற்றிய புத்தகம் போல என்று எண்ணினேன்.மொத்தம் இருபது அத்தியாயங்கள்,இருநூற்று முப்பது பக்கங்கள்.முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசிக்கும் போது,வாசிக்கவே கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது.காரணம் சொல்லப்பட்ட விடயங்கள் ரொம்ப சுவராஸ்யம் இல்லாத விடயங்கள் போலவே தோன்றியது.ஆகவே முதல் மூன்று அத்தியாயங்களை படிக்க இரண்டு நாட்கள் ஆனது. ஆனால் அடுத்த பதினெட்டு அத்தியாயங்களையும்,ஒரே இரவில் படித்து முடிக்கும் அளவுக்கு சுவராஸ்யம் மிகுந்ததாகி போனது என்றால் மிகையாகாது!

அப்படி என்ன சுவராஸ்யம்? 

அதாவது ஒட்டு மொத்த உலகமும்,இருபது பணக்கார குடும்பங்களாலும்,நூற்றுக் கணக்கான ரகசிய குழுக்களாலும் தான் ஆளப் படுகிறது!இந்த குடும்பங்களை சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் ஆறாயிரம் பேருக்கு மிகாது என்று சொல்கிறது புத்தகம்.மட்டுமல்லாது அதை நிரூபிக்கும் வகையில்,பல்வேறு சம்பவங்களை தொடர்பு படுத்துகிறார் எழுத்தாளர்.

ஒவ்வொரு நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் அனைத்து விடயங்களும் இவர்களின் விருப்பப்படி தான் நடக்கிறது அல்லது அரங்கேற்றப் படுகிறது! இந்த குடும்பங்கள் தயாரிக்கும் பொருட்கள்,இந்த குடும்பங்களுக்கு சொந்தமான தனியார் வங்கிகள்,இவர்களுக்கு சொந்தமான பல உலக தொலைக்காட்சி சானல்கள் மற்றும் இவர்கள் உருவாக்கும் செய்திகள்,இவர்கள் தயாரிக்கும் கேளிக்கை மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளைத் தான் ஒட்டுமொத்த உலகமும் பார்க்கிறது! ஆக நாம் என்ன சிந்திக்க வேண்டும், என்ன பேச வேண்டும்,என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் இவர்கள் தான் என்று சொல்கிறது புத்தகம். 

*
உலக நாடுகளின் அரசியல் தலைவர்களை தீர்மானிப்பது யார்? 
*
நாடுகளுக்கிடையே சண்டையா,அதை தீர்மானிப்பது யார்? 
*
நாடுகளுக்கிடையேயான சண்டைகளை சமாதனம் செய்கிறேன் என்ற பெயரில்,மற்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது யார்?
*
போர் செலவுக்கு தேவையான பணத்தை/கடனை நாடுகளுக்கு வழங்குவது யார்?
*
உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, அரசாங்கங்கள் தவிக்கும் போது, நாடுகளுக்கே கடன் கொடுக்கும் தனி நபர்கள் யார்?
*
உலக நாடுகளின் பொருளாதார மந்த நிலையா,பண வீக்கமா,டாலர் விலை ஏற்றமா இறக்கமா அதை தீர்மானிப்பது யார்?
*
உலகின் ஒட்டுமொத்த பங்குச்சந்தை குறியீடுகளை தீர்மானிப்பது யார்?
*
அமெரிக்க டாலரை,பிரிட்டிஷ் புவுண்டை அச்சிடுவது யார்?
*
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை தீர்மானிப்பது யார்?
*
உலகின் அத்தனை வங்கிகளையும் நிர்வகிப்பது யார்?
*
ஒட்டு மொத்த உலகத்தையும்,நவீன விஞ்ஞான வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பங்கள் மூலம் கண்காணிப்பது யார்?

இப்படியான பல்வேறு கேள்விகளும் அதற்கான விடைகளும்,நம்மை மேலும் மேலும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது! சார் இந்த செய்தி எல்லாம் உண்மை தானா என்று நண்பரை தொடர்பு கொண்டு கேட்டேன்.செய்திகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறது என்று நண்பர் சொன்னார். 

இந்த இருபது குடும்பங்களில் முக்கியமான சில குடும்பங்களாக பிரித்தானிய ராணியின் குடும்பம்,ரோத் சைல்டு குடும்பம், ராக்பெல்லர் குடும்பம், லீகா சிங்க் குடும்பம்(ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனர்),காலின்ஸ் குடும்பம்,வால்ட் டிஸ்னி குடும்பம்,பண்டி குடும்பம், அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் குடும்பம் போன்றவை மிக முக்கியமான குடும்பங்களாக இருக்கின்றன.

இன்று வரைக்கும் காமன்வெல்த் நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐம்பத்து மூன்று நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார முடிவில்,பிரித்தானிய ராணியின் குடும்பத்துக்கு பெரும் பங்கு இருப்பதாக சொல்லப் படுகிறது. இந்த ஐம்பத்து மூன்று நாடுகளுக்கு என்ன ஒரு முடிவென்றாலும், நாடுகளுக்கு இடையே ஒரு போர் சூழல் உருவானால் கூட, அதில் முடிவெடுப்பது ராணியின் குடும்பம் தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு அதிகாரங்கள் இன்னும் அவர்களுக்கு இருக்கிறதாம். 

நாம் காலையில் பயன்படுத்தும், பற்பசை முதல், இரவு போர்த்தும் கம்பளி வரை நாம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும்,இந்த உலக பணக்காரர்களுக்கு எதோ ஒரு வகையில் சம்மந்தம் இருக்கிறதாம். 

தொலைக்காட்சியில் என்ன செய்தியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகட்டும்(உண்மை செய்தியாய் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை),உலக சினிமாவாக இருக்கட்டும், குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் படங்களாகட்டும்,அதை தயாரிக்கும் வால்ட் டிஸ்னி போன்ற பெரும் முதலாளிகள் தீர்மானிப்பதை தான்,நாம் பார்த்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். 

நம் குழந்தைகளின் சிந்தனைகளை வடிவமைப்பதில் அல்லது கட்டுப் படுத்துவதில், இந்த கார்ட்டூன் நிகழ்வுகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. குழந்தைகளின் குண நலன்களை தீர்மானிக்கும் வகையில், அல்லது கார்ட்டூன் நிகழ்வுகளுக்கு அடிமையாக கிடக்கும் அளவுக்கு நம் குழந்தைகள் மாற்றப்படுகிறார்கள். ஆக நம் குழந்தைகளின் சிந்தனை வரை,இந்த பெரும் முதலாளிகள் தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதாய் சொல்கிறார் ஆசிரியர். இதை நாம் அறியாமலேயே, நமக்கு மேலே யாரோ தீர்மானிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறார்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, அனைத்தும் வெளிநாடுகளின் தயாரிப்பு. உலக மயமாக்கல் மூலமாய் நாம் மீண்டும் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்கிறது புத்தகம்! சுருங்க சொல்லப் போனால், உலகமயமாக்கலுக்கு அடிமையாகி விட்ட நாம் இன்னும் சுதந்திரம் பெறவே இல்லை என்பது தான் நிதர்சனம். 

வங்கி எப்படி செயல்படுகிறது, கடன் வழங்குவதும், கடனட்டை வழங்குவதும், வட்டியை தீர்மானிப்பதும், வங்கி காசோலை விடயங்கள், நகை பாதுகாப்பு பெட்டகங்கள் அதற்கான கட்டணங்கள் இவை எல்லாம் எப்படி தீர்மானிக்கப் படுகிறது, இதை யார் முதன் முதலில் வடிவமைத்தது போன்ற பல சுவராஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.

தனியார் வங்கிகள் எப்படி ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது, அல்லது ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தில் அவற்றின் பங்கு என்ன போன்ற பல விடயங்கள் மிக எளிதாக விளக்கப் பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை, இந்த பெரும் பணக்காரர்கள் குடும்பம் எப்படி எல்லாம் மிரட்டியது, இறுதியில் அவர் ஏன் கொல்லப்பட்டார்,எப்படி கொல்லப்பட்டார் போன்ற செய்திகள் ஆச்சர்யமாக இருக்கிறது! கற்பனைக்கு எட்டாத அளவில் பல்வேறு உலக சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளது. கென்னடி ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்,அதற்கான காரணங்கள் என்ன போன்ற தகவல்கள் தலை சுற்ற வைக்கின்றன. லெனின் கூட இந்த உலக பணக்காரர்களால் புலம்பியதாக சொல்லப் படுகிறது.

உலகத்தை கண்காணிக்கும் மிகப்பெரும் உளவு நிறுவனம் தான் பென்டகன் என்று கூறுகிறது புத்தகம்.உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். எப்படியெனில் அது நமது வங்கி கணக்காக இருக்கலாம். நம் அலைபேசியாக இருக்கலாம், நம் கணினி மற்றும் இணையம் மூலமாக இருக்கலாம்,ஆதார் அட்டை மூலமாக, அமெரிக்காவை பொறுத்த வரையில் சோசியல் செக்யூரிட்டி நம்பர், கிரெடிட் கார்ட், கூகிள் எஞ்சினில் மக்கள் அதிகம் தேடும் விடயங்கள் என்ன, மக்கள் எதைக் குறித்து விவாதிக்கிறார்கள், என்ன சினிமாவை விரும்பி பார்க்கிறார்கள், சமூக வலையத் தளங்களில் என்னென்னே விடயங்கள் அதிகம் விவாதிக்கப் படுகிறது, மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று அனைத்து விடயங்களும் எதோ ஒரு வகையில் கண்காணிக்கப் பட்டு கொண்டே இருக்கிறது. 

சமீபத்தில் உலக நாட்டு தலைவர்களின் தொலை பேசிகள் அனைத்தும் அமேரிக்காவால் ஒட்டுக் கேட்கப்படுவதாக சொன்னார் ஸ்னோடென். அந்த அளவுக்கு கடுமையாக உலக மக்களை கண்காணிக்கிறார்கள். இந்தியாவில் எங்கு குண்டு வெடிக்கும் என்பதை அமெரிக்க உளவு நிறுவனம் சொல்லித் தான் இந்தியாவுக்கே தெரிய வேண்டிய சூழல்.இங்கே இதை எல்லாம் அமேரிக்கா தானே செய்கிறது என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அமெரிக்காவையும்,ஐ.நாவையும் கூட இந்த உலக பணக்காரர்கள் தான் நிர்வகிக்கிறார்கள் என்கிறது புத்தகம். ஏன் இந்த குடும்பங்கள் அப்படி கண்காணிப்பு செய்ய வேண்டும், அதற்கான தேவைகள் என்ன என்பதை எல்லாம் மிக விளக்கமாக சொல்கிறது புத்தகம். 

ஐரோப்பியன் யூனியன் ஏன் உருவானது, என்ன காரணம், அதைப் போலவே அடுத்து வட அமேரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் இணையும் காலமும் வரும், மட்டுமல்லாது ஆசிய நாடுகள் எல்லாம் ஒரு கூட்டாக சேரும், இறுதியாக உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழான ஆட்சிக்குள் கட்டாயம் வரும் என்றும், அதற்கான வேலைகள் மெதுவாக நடந்து கொண்டே இருக்கின்றன என்றும் பல தகவல்களை சொல்கிறது புத்தகம்!

இறுதியில் புத்தகத்தின் ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படியாக சொல்கிறார், இந்த மாதிரியான பல்வேறு விடயங்களை எல்லாம் அறிந்த பிறகு, அவற்றை உண்மை என்று உணர்ந்த பிறகு, என் பார்வை விரிவு பட்ட பிறகு, இந்திய/உலக தொலைக்காட்சிகளில் மக்கள் பிரச்சினை, தேசங்களின் எல்லை பிரச்சினை, பொருளாதார ஏற்ற இறக்கம், பண வீக்கம் போன்றவை குறித்து தொண்டை தண்ணி கிழிய கத்தி விவாதம் செய்பவர்களை பார்த்தால்,அல்லது அதற்கான காரணங்களாய் அவர்கள் சொல்லும் விடயங்களைப் பார்த்தால் எனக்கு கேலியாகவும்,அவர்கள் எல்லாம் எனக்கு கோமாளிகளாகவும் தெரிகிறார்கள் என்கிறார்.காரணம் பிரச்சினையின் சூத்திரதாரி யாரென்றே தெரியாமல், அல்லது தீர்வு எங்கிருந்து வர வேண்டும் என்பதே தெரியாமல் இவர்கள், இவர்களுக்கும் எதெதையோ பேசுவதும், சண்டையிடுவதும் மிகப்பெரிய காமெடி என்பதாய் எழுதுகிறார். 

பல பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கோ இருக்க, நாம் வெறும் அம்புகளை நொந்து கொண்டு இருக்கிறோமோ என்று கூட தோன்றுகிறது!

எது எப்படியாயினும் கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் வரும்! அதற்கான தேடல்களும் தொடங்கும்.புத்தகம் சொல்லும் செய்திகளை நம்பும் சூழல் உருவாகும்.உங்கள் பார்வை விசாலம் அடையும் என்பதற்கு நான் உத்தரவாதம்!கட்டாயம் இது ஒரு விழிப்புணர்வு புத்தகமாய் இருக்கும்!

நன்றி!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்


4 கருத்துகள்:

  1. அருமையான அலசல்.. இணையத்தில் பல்வேறு தளத்தில் இருந்து இந்த இல்லுமினாட்டிகளை பற்றி படித்திருந்தாலும், அதிகாரப்பூர்வமான புத்தகமாக வெளி வந்தது மிகவும் ஆச்சர்யமே.. இனி யாரும் இந்த விஷயங்களை ஏதோ கான்ஸ்பிரசி தியரி போல நிராகரிக்க முடியாது..

    ஆனால் புத்தகம் தீர்ந்துவிட்டதே.. எங்கே கிடைக்கும் ?

    பதிலளிநீக்கு
  2. எனது வலைப்பூவில் நான் இவர்களை பற்றி தான் எழுதிவருகிறேன்

    பதிலளிநீக்கு